Tuesday 30 September 2014

11.) மாயாவி...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          எனது கடந்த பதிவுவரை நான் குறிப்பிட்ட விஷயங்கள் கோர்வையாக இன்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பதைப் போல உணர்வதாக எனது நட்பு வட்டாரத்திலிருந்து விமர்சனங்கள் வந்தன. நண்பர்களே, நான் கையிலெடுத்துள்ள விஷயம் சற்று சிக்கலானது. ஒரு மரத்தை வரைவது போலத்தான் இதுவும். வேரில் தொடங்கி, கிளையின் நுனிவரை சென்று, மீண்டும் திரும்பி, மற்றொரு கிளையில் பயணத்தைத் தொடர்வதைப்போல. எனவேதான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன், இவை சில அடிப்படையான விஷயங்கள் எனவும், சில சமயம் நமது இலக்கு திசை திரும்புவது போலவும் தோன்றலாம் என்று. மேலும் ஓர் முக்கியமான விஷயம். இனிதான் நாம் நமது பதிவின் நோக்கத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறோம், ஒருவழியாக!

         கடந்த பதிவுவரை நாம் கடந்த பதிவுகள், நமக்கு உணர்த்துவது போல தோன்றும் ஒரு விஷயம், "நாம் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பின் கீழ் வடிவமைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்பதே. ஆனால், அதைத் தாண்டிய குழப்பம் எதுவென்றால்,
  • அந்த வடிவமைப்பாளர் யார்?
  • அந்த மாயாவி ஒருவரா? இல்லை பலரா?
  • அவ்வாறு நம்மை உருவாக்கியதன் நோக்கம்? 
         விடைகள் இன்றுவரை மர்ம மௌனம் காக்கின்றன..!


         ஒருமுறை ஒரு கருத்து எழுந்தது. மனித இனம் உருவானதே, "நாம் ஏன் படைக்கப்பட்டோம்?", "நம்மைப் படைத்தவர்கள் யார்?" என்கிற கேள்விகளைக் கேட்கத்தான் என்று விளக்கியது அக்கருத்து. சரி, இதை உண்மையென வைத்துக்கொண்டால், நாம் அந்த இலக்கைத் தற்போது (அவர்கள் கருத்துப்படி) அடைந்துவிட்டோம், அதன்பின்னும் இதே நிலையில்தான் இருக்கிறோம். "அது ஏன்?" என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அதாவது ஒரு சாதாரண விளையாட்டில் கூட, இலக்கை அடைந்தபின் நிச்சயம் அவ்விளையாட்டு முடிந்துவிடும்; இல்லையேல் இன்னொரு தளத்திற்கு நம்மைக் கொண்டுசெல்லும். ஆனால், இங்கு அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே அக்கருத்து அதளபாதாளத்திற்குத் தள்ளப்பட்டது.

         சரி. அப்படியெனில் நாம் யார்?

         எனது நம்பிக்கையின்படி, நாம் பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளதாக, எனக்குத் தோன்றுகிறது. அவை,
  1. உயிர் பிழைக்க, தஞ்சம் புகுந்த நாடோடிகள்.
  2. பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு இனத்தின் மீதமுள்ள அல்லது பிரித்தனுப்பப்பட்ட சந்ததிகள்.
  3. பலகட்ட சோதனைகளுக்குப் பின், இக்கிரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட உயிருள்ள தபால்.
  4. இவ்விடத்தை, நம்மை அனுப்பியவர்களின் வசதிக்கேற்ப செம்மைப்படுத்த விதைக்கப்பட்ட மண்புழுக்கள்.
         "தம்பி...என்ன ஆச்சு உங்களுக்கு..?!" என்று நீங்கள் பதறும் அளவிற்கு நான் பிதற்றவில்லை, தெளிவாகவே கூறுகிறேன்.

          நான் இப்போது கூறும் வார்த்தைகளை கடைசிவரை நினைவில் கொள்ளுங்கள், நிச்சயம் ஒரு நாள் இவை நிரூபணமாகும்...!!!
  • "இவ்வுலகில் 'மனித இனம் மட்டும்' உச்சபட்ச அறிவுஜீவிகளாக இல்லை".
  • "இப்பிரபஞ்சத்தில் மனித இனத்தைவிட(அறிவிலும், தொழில்நுட்பத்திலும்) மேம்பட்ட இனங்களும், நம்மை விட அறிவில் குறைந்த (விலங்குகளை ஒத்த [உண்மையில் விலங்குகள் நாம் நினைக்கும் அளவிற்கு அறிவில் நமக்கு சளைத்தவை அல்ல,அவற்றை பின்னர் காணலாம்!]) இனங்களும் உள்ளன."
  • "நாம் வெளியில் தேடும் வேற்றுக்கிரகவாசிகள், நமது பூமியில் நமக்குத் தெரியாமல் நம்முடனே வாழ்வதற்கு வாய்ப்புள்ளது"(இதில் நான் MIB [Men In Black] படத்தைப் பற்றிப் பேசவில்லை)
  • "நாம் இக்கிரகத்தில் கடைசிவரை (அதாவது மனித இனம் அழியும் சூழ்நிலை வந்தால், அதுவரை) இருப்பது சந்தேகமே!"
          இவ்வாறு பட்டியலிடுமளவிற்கான விவரங்கள் இன்னும் ஏராளம். இவையனைத்தையும், எனக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமும்,  நான் கற்றதன் மூலம் பெற்ற ஆராய்ச்சி முடிவுகளின் மூலமும், இனிவரும் பதிவுகளில் விளக்க முயல்கிறேன். ஆனால், இவையனைத்திற்கும் முன்னதாக, நாம் யாராக இருக்க வாய்ப்புள்ளது என முதலில் காண்போம்.


         "Men are from Mars, Women are from Venus" என்றொரு புத்தகம் உண்டு. ஆண்-பெண் புரிதல் சம்பந்தமான புத்தகம். இருபாலரின் குணநலன்களும் வெவ்வேறானவை என்பதைக் குறிக்க இத்தகைய தலைப்பை சூட்டியிருக்கிறார், அப்புத்தகத்தின் ஆசிரியரான "ஜான் கிரே" (John Gray). கிரேக்க புராணத்தின்படி, "Mars"(செவ்வாய்) ஆண் கடவுள் - போரைக் குறிப்பவர்; "Venus" (வெள்ளி) பெண் கடவுள் - அழகைக் குறிப்பவர்.


(Mars with his horses 'Phobos' & 'Deimos')


(Venus)


          கிரேக்க புராணப்படி, மார்ஸ் கடவுளிற்கு இரு குதிரைகள் உண்டு. அவற்றின் பெயர், 'போபோஸ்' (Phobos) மற்றும் 'டெய்மோஸ்'(Deimos). ஆச்சர்யப்படத்தக்க வகையில், செவ்வாய் கிரகத்திற்கும் இரு நிலவுகள் உண்டு. எனவே அவற்றுக்கு, அக்குதிரைகளின் பெயரையே வைத்துவிட்டனர். இவையெல்லாவற்றையும் விட ஓர் ஆச்சர்யம் என்னவெனில், தொலைநோக்கி இருந்திருக்க வாய்ப்பில்லாக் காலம் என நாம் நம்பும் காலத்திலேயே, நாம் நமது கோவில்களில் நவக்கிரகம் வைத்து வழிபட்டுள்ளோம், அதுவும் சூரியனை மையப்படுத்தி பிற கிரகங்கள் சுற்றிவரும் வண்ணம். அதில் செவ்வாய்க் கிரகத்தின் நிறத்தைக் கூட சரியாகக் கணித்து "செவ்வாய்" என பெயரிட்டுள்ளோம். அதோடு, அவ்விக்கிரகத்திற்கு அணிவிக்கப்படும் வஸ்திரத்தின் நிறம் கூட சிவப்புதான்(!) செவ்வாயின் மறுபெயர், "அங்காரகன்". "கோபக்காரன்" எனப் பொருள். நிச்சயம் போருக்கு செல்பவனின் மனநிலை, பெரும்பாலும் அவ்வாறுதான் இருக்கும் என நம்பலாம். இந்த தொலைவுகள் கடந்த, கண்ணுக்குக்குத் தெரியாததோர் பிணைப்பும் ஆச்சர்யம்.


(செவ்வாயின் நிலவுகள்)


(நவக்கிரக விக்கிரகங்கள்)

          இதைக்காட்டிலும் இன்னுமோர் ஆச்சர்யம், வெள்ளி கிரகத்தை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட "பயோனியர்" (Pioneer Venus II), வெள்ளியின் வளிமண்டலத்தை ஆய்வுசெய்தபோது அங்கு நிலவிய ஒலிகளைப் பதிவு செய்தது. அவ்வொலி வீணையின் இசையை ஒத்திருந்தது. வீனஸ்-பெண் தெய்வம் - வீணை ஓசை, இத்தகைய பிணைப்பு நம்கண்முன் இணைய தோன்றும் உருவம், "சரஸ்வதி". (அடப்பாவிகளா... இவ்ளோ நாள் பாட்டி நிலாவுல வடை சுடுதுனுதானே சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க...இப்போ சரஸ்வதி வீணை வாசிக்குதுன்னு சொல்றீங்க-னு நீங்க சிரிக்கிறது எனக்குப் புரியுது. ஆனா, நான் சொல்ல வர்றது அது இல்ல. அந்த பாட்டி கதையையும் அவ்ளோ சாதாரணமா சொல்ல முடியாது. சொல்லப்போனால், எனக்குத் தெரிந்தவரையில் அதுதான் உலகின் முதல் அறிவியல் புனைகதை (Science-Fiction). அதிலும் தமிழன்தான் முன்னோடி!)


         மேலும், வீணையின் அமைப்பு, பெண்ணின் உருவ அமைப்பை ஒத்திருப்பதையும் நினைவுகூர்க. அத்துடன், அவ்வாறு வெள்ளியில் உருவான ஒலிக்குக் காரணம், அங்கு நிலவும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களேயாகும். ('அதெல்லாம் இருக்கட்டும். ஆனா, இது ரெண்டுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்குறமாதிரி தெரியலியே'-னு  தானே கேக்குறீங்க?! எனக்கும்தான் தெரியல!!! அமைதி...அமைதி...அமைதி... ஆனால், நிச்சயம் இவையனைத்திற்கும் ஏதேனுமோர் தொடர்பிருக்கும் என உள்மனதில் தோன்றியது. அதனால் தான் கூறினேன்!)

          இப்போது செவ்வாய்க்கு வருவோம். நமது பூமியின் இரட்டைச் சகோதரன் என அழைக்குமளவுக்குப் பொருத்தமான இடங்களில் ஒருங்கே அமைந்துள்ளது, பூமியுடன் செவ்வாய். இவ்வாறு அது அழைக்கப்படக் காரணம், நீரை நீர்ம நிலையில் தாக்குப்பிடிக்கும் தூரம் (சூரியனிலிருந்து), இவ்விரு கிரகங்களுக்கு மட்டுமே (இன்று நமக்குத் தெரிந்தவரையில்) உள்ளது. மேலும், ஒரு காலத்தில் செவ்வாயும், நம் பூமியைப் போன்ற சூழ்நிலையைப் பெற்றிருந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஒருவேளை அங்கு நமது பூமியைப் போன்ற சூழ்நிலை நிலவியிருந்தால், நிச்சயம் அங்கு உயிர்கள் உருவாகியிருக்கக் கூடும். 'அவ்வாறு உயிர்கள் உருவாகியிருந்தால் இப்போது அவையெல்லாம் எங்கே?' என்கிற கேள்விக்கு பதில்தான், நான் இப்பதிவின் முற்பகுதியில் குறிப்பிட்ட, சில செய்திக் கூறுகள்.


(பூமி - செவ்வாய் : ஒரு ஒப்பீடு)


          அங்கு நீர்நிலைகள் இருந்தமைக்கு ஆதாரமாக, உலர்ந்த ஏரிகளும், துருவப்பகுதிகளில் காணப்படும் பனிக்கட்டிகளும் விளங்குகின்றன. எனவே, உயிரின் ஆதாரம் என நம்மால் நம்பப்படும் விஷயம் அங்கிருக்கிறது, இன்றும். இது செவ்வாய்க்கிரகவாசிகள் பற்றிய ஆர்வத்தை மேலும் கிளர்ச்சியூட்டுகிறது. 

          அத்துடன், "நீர் இருந்தால், அங்கு உயிர்கள் இருக்கும் என்கிற அவசியம் இல்லை". அதேபோல், "நீர் இருந்தால்தான் அங்கு உயிர்கள் இருக்கும் என்கிற அவசியமும் இல்லை". இதற்கான ஆதாரங்கள் என்னென்ன என்பதை, இதுநாள்வரை எனது பதிவுகளைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். 


(செவ்வாயின் துருவப் பகுதியில் காணப்படும் பனிப்படலம்)

           மேலும், "உலகில் முதலில் தோன்றிய மனிதன் ஆண்" எனக்கூறும், வேதம் ஓதும் நல்லோர்களின் வாக்கும், "Men are from Mars" என்கிற வாசகமும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையான, ஒரு "அனுமான காரணத்திற்கு" (Hypothetical Syllogism) என்னை இட்டுச்செல்கிறது. அதாவது, "உலகில் முதலில் தோன்றிய மனிதனான ஆண், செவ்வாயிலிருந்து வந்தவன்" என்பதுபோல! இவையெல்லாம் உண்மை எனக்கருதுவோம், (நம் மனம் ஏற்கும்வரை). சரி, 
  1. அப்படியானால், இப்போது அவர்கள்  எங்கே? அழிந்துவிட்டார்களா?
  2. இல்லை, வேறெங்காவது சென்றுவிட்டார்களா?
  3. அவ்வாறு சென்றிருந்தால், அவ்விடம் அவர்கள் வாழத்தகுந்த இடமா?
          பலரது பதில், 'இருக்கலாம்' அல்லது 'தெரியாது'.

          ஆனால் எனது பதில், அவர்கள் இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், நாம், நான் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வகையில் வர வாய்ப்புள்ளது. அதற்கான ஆதாரங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் இனிவரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம். அத்துடன், நாம் அனுப்பியுள்ள "மங்கள்யான்" எத்தகைய தகவல்களைக் கொண்டுவரப் போகிறது, என்பதிலும் ஆர்வமாய் எதிர்நோக்குவோம். 

          அதுவரையிலும் காத்திருங்கள். அடுத்தவாரம், மங்கள்யான் தகவல் தந்தாலும், தராவிட்டாலும், நிச்சயம் அயலான் தகவல் தருவான்.

அதுவரை நன்றிகளுடன்,
                       - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:


Photo Courtesy : Google.

3 comments:

  1. romba nalla visayangal ji..nala thoguthu potrukeenga...really knowledgeable...super ji

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா...தங்களின் ஆதரவுக்கும், பாராட்டுகளுக்கும்...!!!

      Delete
  2. மிக்க நன்றி நண்பரே...!

    ReplyDelete