Tuesday 28 October 2014

15.) வேற்றுலக விருந்தினர்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

              எனது கடந்த பதிவின் பாராட்டுகள் அனைத்தும் திரு.மதன் அவர்களையே சேரும். காரணம், அவர் எழுதிய "மனிதனும் மர்மங்களும்" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துகளே அவை. சரி, கடந்த பதிவில் நான் அளித்த வாக்கின்படி, இன்றைய பதிவு, நமது பூமிக்கு வந்து நம்மோடு வாழ்ந்து மறைந்த, வேற்றுலுகவாசிகள் வருகைப் பதிவின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.


(திரு.மதன்)

[கடந்த பதிவின் எல்லாப் புகழும் இந்த ஒருவருக்கே]


              கடந்த பதிவில், விண்ணிலிருந்து விழும் வினோத பொருட்கள் குறித்து கண்டோம். அவ்வாறு, ஒரு சரக்குந்து (Lorry) மணலை சரிப்பதுபோல மழையாய் விழும் அசாதாரண நிகழ்வைப் பற்றி எண்ணும்போது, நம்முள் எழும் மிக முக்கியமான கேள்வி, "நம்மால் (மனிதர்களால்) விமானம் போன்ற பறக்கும் ஊர்திகளால், விண்ணிலிருந்து அத்தகைய பொருட்கள் விழவில்லை எனில், அவ்வாறு விழச் செய்வது யார்? ஒருவேளை அது வேற்றுகிரகவாசிகளாக இருக்க வாய்ப்புண்டா?" காணலாம் வாருங்கள்.

              நீர் ஒழுகாமல் சென்ற தண்ணீர் லாரியும், எண்ணெய்யை ஒழுகவிட்டுச் செல்லும் எண்ணெய் லாரியும் (சரக்குந்து-னு போட்டா, ரைமிங்கா (Rhyming) வரமாட்டேங்குது.) நம் ஊரில் இல்லை என்று சொல்லுமளவிற்கு அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கண்டுணர்கிறோம். இரண்டும் அத்தியாவசியப் பொருட்களே. இருப்பினும் ஒரு பொருளில் மட்டும் அலட்சியப்போக்கு எதற்கு என எனக்கு இன்னும் புரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களாக.  சரி, நாம் நம் விஷயத்திற்கு வருவோம். ஒருவேளை, வேற்றுக்கிரகவாசிகள் நமது பூமிக்கு கிரகசஞ்சாரம் மேற்கொள்ளும்போது, நம்மூர் தண்ணீர்-உந்து போல, (அவ்விநோத மழைப்பொருட்களை) வழிநெடுக ஒழுக விட்டுவிட்டனரா? காரணம், அவர்களும் 'பறக்கும்தட்டு' (UFO) என்கிற வானூர்தியில் பயணிப்பதாகவே பன்னெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒருவேளை அவ்வாறு அவர்கள் பறக்கும்போது, கதவு திறந்திருந்தால், அதிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் கொட்டியிருக்கும்தானே. ஆனால், இது நம்பத்தகுந்ததாக இல்லை. சரி முதலில் வேற்றுக்கிரகவாசிகள் நமது கிரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்களா என காண்போம்.

              சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்து நாட்டின் "ஸஃபோல்க்" (Suffolk) என்ற இடத்திற்கு அருகேயுள்ள "வுல்பிட்" (Woolpit) என்ற ஊரின் ஒரு தெருவில் ஒரு சிறுவனும் சிறுமியும் அழுதுகொண்டே சென்றுகொண்டிருந்தனர். (இதென்ன பெரிய உலக அதிசயமா? எனக் கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்) அவர்கள் நம்மைப்போன்று இருக்கவில்லை. அவர்களின் தோல் பச்சை நிறத்தில் இருந்தது! மேலும் அவர்கள் அணிந்திருந்த உடை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. (அக்காலத்தில் உள்ள உடைகளுடன் ஒப்பிடும்போது அப்படி வித்தியாசமாக இருந்திருக்கிறது. இப்போது எப்படியோ தெரியாது.) நம் உலகில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமல்லாது, வேறு சில பொருட்களை உபயோகித்தும் அவ்வுடை உருவாக்கப்பட்டிருந்தது.


              அக்கம்பக்கம் இருந்தவர்கள், அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். அவர்களுக்கு நம் மொழியும் புரியவில்லை; நமக்கு அவர்கள் மொழியும் புரியவில்லை. (வெளங்கிடும்!) ஏதோ புதுமொழியில் பேசிக்கொண்டனர். நம்முடைய உணவை அவர்களால் சாப்பிட முடியவில்லை. கடைசியில் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்கள் பீன்ஸ் காய்களை மட்டும் சாப்பிட்டனர். (அவங்க கலருக்கு மேட்சா எடுத்து சாப்டிருக்காங்க பாருங்க!)


                போதுமான உணவு கிடைக்காத காரணத்தால் சிறிது நாட்களில் அச்சிறுவன் இறந்து போனான். அச்சிறுமியோ கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உணவுகளையும் சாப்பிடப் பழகிக்கொண்டாள். (Survival of the Fittest - தக்கன பிழைக்கும்!) அவளுடைய தோலின் நிறமும் சற்று இளஞ்சிவப்பாக மாறத் தொடங்கியது. மேலும், கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில மொழியையும் புரிந்துகொள்ளத் தொடங்கினாள். பின், தட்டுத்தடுமாறியேனும் ஆங்கிலத்தில் பேசுமளவிற்குக் கற்றுக்கொண்டாள். 

                 பூமிக்கடியில் இருக்கும் ஒரு புதிய இடத்திலிருந்து இங்கு வந்ததாகத் தெரிவித்தாள். மேலும், அவ்வுலகில் சூரிய ஒளியையே கண்டதில்லை என்றும், அங்கு எல்லாமே பச்சை நிறத்தில்தான் இருக்கும் என்றும் அவள் கூறினாள். பூமிக்கடியிலிருந்த பெரிய குகையின் வழியாக அவள் வந்ததாகவும் தெரிவித்தாள். இத்தகவல்கள், அக்காலகட்டத்தில் வாழ்ந்த "வில்லியம் ஆஃப் நியூபர்க்" (William of Newburgh - 1189) மற்றும் "ரால்ஃப் ஆஃப் கோக்கஷால்" (Ralph of Coggeshall -1220) போன்றவர்கள், நேரில் கண்டதாகப் பதிவிட்டிருக்கும் குறிப்புகளிலிருந்து இத்தகவல்கள் அறியப்படுகின்றன. இச்சிறுவர்களின் ஞாபகமாக இன்றும் அவ்வூரின் வரவேற்புக் கம்பத்தில் இருவரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன; அதுவும் அச்சிறுவர்களின் உருவங்கள் பச்சை நிறத்தில் இருப்பது போன்று!



             இதே போல் 1887-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. "பேன்ஜோஸ்" (Banjos) என்ற இடத்தினருகே இருந்த குகையிலிருந்து பச்சை நிறத்தோலை உடைய சிறுவனும், சிறுமியும் வெளியே வந்தார்கள். இவர்களுக்கும் அவர்களைப் போல் நமது மொழி தெரியவில்லை; உணவை உட்கொள்ள முடியவில்லை; இங்கும் அச்சிறுவன் உணவை உட்கொள்ளாத காரணத்தால் இறந்துவிட்டான்; அச்சிறுமி 5 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்தாள். ஸ்பானிஷ் மொழி பேசத் தொடங்கினாள். மணல் என்பதே இல்லாத ஒரு இடத்தில் அவள் வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்தாள். ஒரு புயல் காற்று தன்னையும், தனது சகோதரனையும் ஒரு குகைக்குள் தள்ளிவிட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அக்குகையைக் கடந்து இங்கு வந்து சேர்ந்ததாகவும் அவள் குறிப்பிட்டாள்.

             உலகில் இது போன்ற சம்பவங்கள் பத்துக்கும் அதிகமாக நடந்துள்ளன. இதில் மேற்கூறிய இரண்டும் மிகப் பிரபலமானவை. இவை இரண்டையும் படிக்கும்போது ஏதோ பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்ற இரு கதைகளை சொல்வது போலத் தோன்றலாம். இதில் இரண்டாவது சம்பவத்தின் நம்பகத்தன்மையும் முன்கதையையொத்த சம்பவங்களின் நிகழ்வுகள் காரணமாக, சற்று சர்ச்சைக்குரியதாக உள்ளது. காரணம் இரண்டிற்கும் அவ்வளவு ஒற்றுமை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது, முதலில் தோன்றிய சிறுமி, மணமுடித்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்தாள்; ஆனால், இரண்டாவது பெண் 5 ஆண்டுகளில் இறந்து போனாள், என்பதே. (அந்த பொண்ணோட வாரிசு யாராவது இப்பவும் இருந்தா தெரியப்படுத்துங்க!) உலகில் பெருகிவிட்ட மோசடிகளின் தாக்கம் உண்மைகளை நம்மிடமிருந்து பிரித்து வெகு தொலைவு கொண்டுசென்றுவிடுகிறது.

           {"வேற்றுக்கிரகவாசிகள்" என்றதும் 'பச்சைநிறத்தோல்' என பெரும்பாலானவர்களுக்கு நினைவிற்கு வரக்காரணம் இவர்கள்தான் என்றால் மிகையாகாது. உதாரணமாக, "டிராகன் பால் ஜீ" (Dragon Ball - Z) ஒளிச்சித்திரக் கதையில் (Cartoon) வரும் "பிக்கலோ" (Piccolo) என்கிற கதாப்பாத்திரம் ஒரு வேற்றுகிரகவாசி. "நாமிக்" (Namek) எனும் கிரகத்தைச் சேர்ந்த பச்சை நிற மனிதன்.}



(Piccolo)

           மேலும், இவர்களின் கதைகள், "E.T. - The Extra Terrestrial" மற்றும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட  "கோய் மில் கயா" (KOI MIL GAYA) போன்ற படங்களை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அவற்றில், ஒரு வேற்றுகிரகவாசியை, திரும்பிச்செல்லும் அவசரத்தில், அதன் சகாக்கள் தவறவிட்டுவிடுவர் என்பதுபோல் கதை செல்லும்.

         

(E.T. படத்தில் ஒரு காட்சி)


             மேலும் இப்பதிவில் உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளுள் ஒன்று, "அப்படியெனில் இப்பதிவுகள் உண்மையா? இல்லையா?" என்பது. காரணம், இதை மறுப்பவர்களும் உண்டு. (அதற்கான இணைப்பையும், கீழே இணைத்துள்ளேன்.) இதைப்பற்றி என்னிடம் கேட்டால், வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நம்புபவர்கள் இவை உண்மையென நம்பலாம். மற்றவர்கள் இது கதை என எடுத்துக்கொள்ளலாம். காரணம் அவர்கள் இல்லை என்பதன் நமது மறுப்பு, அவர்களின் இருப்பைத் தடுக்கப்போவதும் இல்லை. அவர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை (மட்டும்), அப்படி ஒரு ஜீவராசிகளை விண்வெளியில் உற்பத்தி செய்யப் போவதுமில்லை. (யச்சச்ச யச்சச்ச, கச்சச்ச கச்சச்சா..!)

              இதை நம்புபவர்களுக்கும் எழக்கூடிய மற்றுமொரு கேள்வி, "அதெப்படி இரு வெவ்வேறு சம்பவங்களும் ஒரே போல் இருக்க முடியும்?" என்பது. எனது அடுத்த பதிவு, உங்கள் இதயத்துடிப்பை நிச்சயம் அதிகரிக்கச் செய்யும். காரணம், அவ்வாறு ஒரே போல் நடந்த வெவ்வேறு நிகழ்வுகள் உலகில் ஏராளம். அவை என்னென்ன என்பதை அடுத்த வாரம் காண்போம்.

அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.



துணை நின்ற நூல்:

உங்களுக்குத் தெரியாத செய்திகள் - எம்.பி.அழகியநாதன்.


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Green_children_of_Woolpit
http://brian-haughton.com/ancient-mysteries-articles/green-children-of-woolpit/
http://en.wikipedia.org/wiki/William_of_Newburgh
http://en.wikipedia.org/wiki/Ralph_of_Coggeshall
http://www.todayifoundout.com/index.php/2014/02/green-children-woolpit/
http://mysterynewstory.blogspot.in/2013/10/children-of-woolpit.html
http://cassiopaea.org/forum/index.php?topic=7302.0
http://www.jasoncolavito.com/blog/the-green-children-of-banjos-another-case-of-false-evidence-and-outright-lies


Photo Courtesy: Google.

Tuesday 21 October 2014

14.) விண்ணிலிருந்து விழும் பொருட்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          நமது கடந்த பதிவில் மேலோட்டமாகக் குறிப்பிட்ட 'Fafrotsky' பற்றிய தொடர்ச்சியை, இப்பதிவில் காண்போம். பொதுவாக வானிலிருந்து நீர் மழையாய்ப் பொழியும். அரிதாக ஆலங்கட்டி மழை (நமது பகுதிகளில்) பொழியும். மிஞ்சிப்போனால் விண்கற்கள் அல்லது எரிகற்கள் போன்றவை விழும். அவ்வளவுதான் இயல்பாக விண்ணிலிருந்து விழும் பொருட்கள்; நாமறிந்த வரையில். சரி வானிலிருந்து வேறு ஏதாவது மழைபோல் பொழிந்தால்? "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்" என்பார்கள். அவ்வாறு கொடுக்கும் தெய்வம் காசு மழை பொழியச் செய்தால்?! "என்ன? கதை விடுறியா? என்பதுபோல் நீங்கள் என்னை நோக்கலாம். ஆனால் அத்தகைய வினோத மழைகளும் இப்பூவுலகில் பொழிந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இந்த வாரம் நனைவோம், வாருங்கள்.

         இத்தகு விண் ஆச்சரியங்கள் தற்காலத்தில் நமது பூமிக்குப் புதிதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர் "அதானாசியஸ்", ஏதென்ஸ் நகரில் மீன் மழை கொட்டியது பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். பைபிளில் கூட வெட்டுக்கிளி மழை பற்றியும், பாலைவனத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்தவுடன், வானிலிருந்து உணவுப் பொருட்கள் விழுந்தன (Manna from Heaven) போன்ற பதிவுகளும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. (இது குறித்த சில திருப்பமான தகவல்களை வரும் பதிவுகளில் காண்போம்)



         தற்காலத்தில், சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழ்ந்த "சார்லஸ் ஃபோர்ட்" என்கிற பத்திரிகையாளர், உலகிலுள்ள, அவ்வளவாக விஞ்ஞானிகள் கண்டுகொள்ளாத ஆச்சரியங்களைக் குறித்து சேகரிக்க ஆரம்பித்தார்.1916-லிருந்து 1932 வரை பல இடங்களுக்குப் பயணித்து, தகவல்கள் சேகரித்தார்.லண்டன், நியூயார்க் போன்ற முக்கிய இடங்களிலுள்ள லைப்ரரிகளிலுள்ள நாளிதழ்களை கவனமாகப் படித்து விஷயங்கள் பல திரட்டினார். அவ்வாறு அவர் திரட்டிய விஷயங்களுள் (ஏறத்தாழ 4 பகுதிகளைக் கொண்ட என்சைக்ளோபீடியாக்கள்) அதிகளவு தகவல்கள், வானத்திலிருந்து விழும் பொருட்கள் பற்றியது. சரி. அப்படி எந்த மாதிரி மழை தான் பொழிந்திருக்கிறது என்று பார்த்தால், பட்டியல் நீள்கிறது. அவை,
  1. தவளை மழை,
  2. மீன் மழை,
  3. சிவப்பு மழை,
  4. சிலந்திவலை மழை,
  5. சில்லறை மழை,
  6. குருவி மழை,
  7. வாத்து மழை,
  8. காய்கறி மழை,
  9. பனிப்பாறை மழை,.....
          இது, இதுவரை பெய்த இத்தகைய வினோத மழைப் பொழிவுகளில், எனக்குக் கிடைத்த மிகக்குறைந்த வகைகள் பற்றிய பட்டியல் மட்டுமே. இனி, இதில் சிலவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
தவளை மழை:

          இது பற்றிய ஒரு உதாரணத்தை கடந்த பதிவின் இறுதியில் கண்டோம். மேலும் சில, இங்கே.



மீன் மழை:

           22.2.1994-ல் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியிலுள்ள டன்மாரா என்கிற சிற்றூரில், ஆயிரக்கணக்கான மீன்கள் மழையாகப் பொழிந்தன. அவற்றில் முக்கால்வாசி மீன்கள் வாலை ஆட்டியவாறு உயிரோடிருந்தன. அப்பகுதி மக்கள் செய்தியறிந்து வந்து மீன்களை அள்ளிக்கொண்டு சென்றனர், சமைப்பதற்கு! அதே இடத்தில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மீன் மழை. சென்ற வாரம் 3 அங்குல மீன்கள். இந்த வாரம் 6 அங்குல மீன்கள். (என்ன ஒரு முன்னேற்றம்..?!)



          மேலும் சில, பட விளக்கங்களுடன்.



பனிப்பாறை மழை:

          ஆலங்கட்டி மழை (Hail Storm) பார்த்திருப்போம். மக்கள் மீது கல் எறிவது போல் பனிக்கட்டிகள் விழுந்தால்? அவ்வாறு பாறை போன்ற பனிக்கட்டிகள் பெய்யத்தான் செய்திருக்கின்றன. 1800-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை (ஒரு யானை அளவு!), கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரெங்கப்பட்டினத்தில் விழுந்தது. இதை சார்லஸ் ஃபோர்டும், நேரில் வந்து பேட்டி எடுத்தும், விசாரித்தும் உறுதிப்படுத்திக் கொண்டார்.


(ஆலங்கட்டி மழை)


(சிறிய பனிப்பாறை மழை)
காய்கறி மழை:

          1971-ல் பிரேசில் நாட்டின் 'ஜோவோ பெஸ்ஸோ' எனும் ஊரில் நான்கு லாரிகள் கொள்ளுமளவிற்கு அவரைக்காய்கள் மழையாகப் பொழிந்தன. (நம்ம நாட்டுல காய்கறி விளையுறதுக்குக் கூட மழையைக் காணோம்...!)

சில்லறை மழை:

          பிரிட்டனில் மான்செஸ்டர் அருகேயுள்ள செயின்ட் எலிசபெத் தேவாலயத்தின் அருகே 28.5.1981-ல் சில்லறை மழை (Pennies) பொழிந்தது. பாதிரியார் கிரகாம் மார்ஷலுக்குக் கிடைத்த தொகை மட்டும் ஏறத்தாழ 2 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள்! (நம்ம ஊர்லலாம் இப்படி பெய்யமாட்டேங்குதே..!)

சிலந்திவலை மழை:

         பிரான்சிலுள்ள 'ஓலோரோன்' என்கிற ஊரில் 17.10.1952-ல், பலமீட்டர் நீளத்திற்கு வெள்ளியைப்போல் மின்னும் மெல்லிய நூல்கள், மெதுவாக கீழே விழுந்து சில நொடிகளில் மறைந்தன. ஒருவேளை வேற்றுகிரகவாசிகளின் வாகனக் கழிவோ? (நம் ஊர் வாகனப்புகை போல), என பலர் விழிபிதுங்கி நிற்கையில், ஒருவகை சிலந்தியின் (பலூன் சிலந்தி) வலைதான் அவ்வாறு மழையாகப் பொழிந்தது என விளக்கப்பட்டது.


         அதெப்படி சிலந்திவலை மழையாகக் கொட்டும். இது மட்டுமல்ல, இதற்கு முன் கூறப்பட்ட வினோத மழைகளுக்கும் காரணங்களாகக் கூறப்பட்ட சில விளக்கங்கள் என்னவெனில்,
  • விமானங்களிலிருந்து விழுந்திருக்கலாம்,
  • புயல் காற்றினால் சேகரிக்கப்பட்டு மழையாகப் பொழிந்திருக்கலாம்,
  • வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம்.
           இதில் முதல் இரண்டு கருத்துகள், 'இயற்கை சக்தி' (Natural); கடைசி கருத்து 'இயற்கையையும் மீறிய சக்தி' (Super Natural)

            மேற்கூறிய முதல் காரணம் (விமானங்கள்) நம்பப்படக் காரணம், 1995-ல் பிரிட்டனின் எடின்பரோ நகரில் "பிரவுன்" வண்ணத்தில் மழை பொழிந்தது. சோதனையில் அது மனிதக் கழிவு (!) எனத்தெரிந்தது. (குருநாதா...என்ன குருநாதா உங்களுக்கு வித்தியாசமான ஐட்டமா எறிஞ்சிருக்காங்க...!!!)

             இதேபோல், கனடாவில் பொழிந்த நீலவண்ண பனிக்கட்டியை சோதனை செய்தபோது, அது கழிவறைகளில் சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் ஒருவகை கிருமி நாசினியுடன் கூடிய மனித சிறுநீர் எனத் தெரியவந்தது. (இதப்படிக்கிற உங்களுக்கே இவ்ளோ கோபம் வருதே. அதை சோதனை பண்ணினவன் நிலைமைய கொஞ்சம் நெனச்சுப்பாருங்க!)

             ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நேரத்தில் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என ஆய்வறிக்கைகள் கைவிரித்தன. ஒருமுறை இதுபோன்ற ஒரு மழை (!) பொழிந்தபோது ஒரு விமானம் பறந்தது. அது இறங்கியதும் சோதனையிட்டனர். ஆனால் அதன் கழிவறையில் எவ்வித கோளாறும் இல்லை. (அப்போ எவன் பாத்த வேலை டா இது..??!!)

              அடுத்ததாக புயல் காற்று நீர்நிலைகளைக் கடந்து வரும்போது மீன், தவளை போன்ற உயிரினங்களை மழையாகப் பொழியச்செய்கிறதோ, என்கிற நோக்கில் ஆய்வு செய்யப்பட்டது. காரணம், புயல், சமயங்களில் ஆடு மாடுகளைக் கூட அலேக்காகத் தூக்கும் வல்லமையுடையது. (ஆனால், மீன், தவளை போன்றவற்றை மட்டும் எப்படி தனித்தனியாக சேகரித்து மழை போல பொழிய வைக்க முடியும்?!)



         இந்தக்கருத்தையும் முறியடிக்க ஒரு சம்பவம் நடந்தது. 1986-ல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே 1000 மைல்களுக்கு அப்பால் கைரிபட்டி (காரியாபட்டி இல்ல) எனும் தீவுகளுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் வழிதெரியாமல் நடுக்கடலில் 4 மாதங்கள் சிக்கிக்கொண்டனர். அரசாங்கமும் அவர்களைத் தேடும் படலத்தைக் கைவிட்டது. அங்கு சுறாமீன்கள் மட்டுமே உலவும் எப்படியோ போராடி, சுறா மீன்களை வேட்டையாடி, அத்தனை நாட்கள் பச்சையாக உண்டு உயிர் பிழைத்தனர். ஒரு நாள் மூவரும் மண்டியிட்டு, "கடவுளே, சுறா மீன் எங்களுக்கு அலுத்துப் போய் விட்டது. வேறு எதாவது சாப்பிடத் தரமாட்டாயா?" என அச்சூழலிலும் தமாஷாக வேண்டினர். ஒருமணிநேரம் கழித்து சடசடவென மீன் மழை பொழிந்தது. அவையனைத்தும் தேர்ந்த மீனவர்களால் கூட பிடிக்க இயலாத கருப்பு நிறமுடைய, கடலுக்கடியில் 800 அடி ஆழத்திற்குக் கீழ் வசிக்கக்கூடியவை. இது நடந்த இரு தினங்களுக்குள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டனர். அப்போது இவர்கள் கையோடு கொண்டு  சென்ற மீன்களைப் பார்த்து அக்கப்பலிலிருந்த அனைவரும் அதிசயித்தனர். ஒரு புயல் கடலின் 800 அடி ஆழத்தில் வாழும் மீனை உறிஞ்சி எடுத்து, தேக்கி பின் மழையாகப் பொழிய வைக்க முடியுமா? (அதுவும் அவர்கள் பிரார்த்தித்த அதே நேரத்தில்!) இது, 'புயல்' கருத்தை வலுவிழக்கச் செய்தது. ('பிரார்த்தனைகள் பலிக்குமா?' என்பது பற்றியும் வரும் பதிவுகளில் காண்போம்)

         அத்தோடு, முன்னர் கண்ட சிலந்திவலை மழை போல், 28.10.1988-ல் இங்கிலாந்தின் ஆங்கிலக் கால்வாயை ஒட்டிய ஓர் ஊரில் முப்பது சதுர மைல் அளவிற்கு, ஐம்பதடி உயரத்தில் சிலந்திவலை நூல்கண்டாலான பிரம்மாண்ட மேகம் மிதந்துகொண்டிருந்தது. "அந்த அளவிற்கு சிலந்தி வலைகள் பிய்ந்து, பின்று ஒன்றுபட்டு, ஒரு மாபெரும் உருண்டையாக மாறி எப்படி மிதக்கமுடியும்?" என இன்றுவரை விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். "ஒருவேளை அமேசான் போன்ற அடர்ந்த காடுகளிலுள்ள லட்சக்கணக்கான சிலந்திவலைகளின் தொகுப்பாக இருக்குமோ?" என கேட்கத் தோன்றினாலும், "எவ்வாறு அந்த சிலந்திவலைகள் மட்டும் சேகரிக்கப்பட்டன?", "அவ்வாறு திரட்டப்பட்ட உருண்டையிலிருந்து எவ்வாறு ஒவ்வொரு நூலாகப் பிரிந்து மழையாகப் பொழியும்?" போன்ற எதிர்க்கேள்விகள் ஆராய்ச்சியாளர்களை இன்னும் குழப்புகின்றன.

          அப்படியெனில் இது வேற்றுகிரகவாசிகளின் செயலா? என நோக்கும்போது, கிடைத்தது ஒரு விஷயம்.

சிவப்பு மழை:

           சமீபத்திய ஆண்டுகளில் கேரளா, இலங்கை போன்ற நாடுகளில் பெய்த சிவப்பு நிற மழை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவற்றின் சிவப்பு நிறத்திற்குக் காரணம், ஒரு சில பாக்டீரியாக்கள் என காரணங்கள் விளக்கப்பட்டாலும், ஒரு சில தகவல்கள் சற்று உதறலைக் கொடுத்தது. ஆம். அதில் ரத்த சிவப்பணுக்கள் காணப்பட்டன. இதில் இன்னுமோர் அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில், அந்த சிவப்பணு, தற்போது பூமியில் கண்டறியப்பட்டுள்ள எந்தவொரு உயிரினத்தின் ரத்த மாதிரியுடனும் ஒத்துப்போகவில்லை என்பதே!



          'உங்களுக்குத் தெரிந்தவர்களை இடி தாக்கியிருக்கிறதா?'  எனக்கேட்டால், பெரும்பாலும் பதில், "இல்லை" என்றுதான் வரும். அதற்காக 'உலகில் இடி தாக்கி உயிர் இழப்பவர்களே இல்லை' என்பது பொருள் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். "இதெல்லாம் செல்லாது செல்லாது...நாங்க நம்ப மாட்டோம்" என்று சொல்பவர்களுக்கு ஏதாவது மனிதன் வானத்திலிருந்து குதித்தால்தான் உண்டு.


          இப்போதும்கூட குதிக்கிறார்கள்; பாராசூட்டின் உதவியோடு! சரி. 'அப்படியெனில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு உண்மையா?' (இதத்தானய்யா ஆரம்பத்துல இருந்து கேக்குறோம்-னு நீங்க கோரஸ் பாடுறது எனக்குக் கேக்குது) அடுத்தவாரம், நமது பூமிக்கு வந்து, நம்மோடு வாழ்ந்து மறைந்த வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்போம்.

          தற்போது மழைக்காலம் வேறு; எதுவேண்டுமானாலும் மழை போல் விழலாம். எதற்கும் தயாராக இருங்கள்! அடுத்தவாரம் 'அவர்களை' அழைத்து வருகிறேன்; காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
                       - அயலான்.



துணை நின்ற நூல்:

மனிதனும் மர்மங்களும் - மதன்.


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Rain_of_animals
http://thebiggeststudy.blogspot.in/2012_08_01_archive.html
http://en.wikipedia.org/wiki/Red_rain_in_Kerala
http://thewatchers.adorraeli.com/2012/11/18/sri-lanka-red-rain-mistery-solved/


Photo Courtesy : Google.

Tuesday 14 October 2014

13.) உறையும் உயிர்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          'எனது பதிவுகள், எனக்கு என்ன பலனைக் கொடுத்தது' என என்னைச் சுற்றியுள்ள பலரும் வினவினர். அவர்களுக்கு எனது ஒரே பதில், "நான் இதுவரை பெற்ற அத்தனை பலனையும் கொடுத்தாலும் கூட கிடைக்காத நண்பர்களை எனக்குக் கொடுத்தது". கடந்த வாரம் கூட ஒரு புதிய நண்பர், திரு.பழனிகுமார் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு, தனது நட்பை உறுதி செய்தார். மேலும், எனது முதல் பதிவில் குறிப்பிட்ட, திரு.ராஜ் சிவா அவர்கள் என்னை, தனது முகநூல் நண்பராக ஏற்றுக் கொண்டார். உண்மையில் இதுபோன்ற நல்லோர்களின் கூட்டணி, எதிர்காலத்தில் உருப்படியாக ஏதேனும் சாதிக்க நிச்சயம் உதவும்; அதுவரை எங்கள் அனைவரின் தேடல்களும் தொடரும், என்று தெரிவித்துக்கொண்டு, இன்றைய பதிவை தொடர்வோம்.

         கடந்த பதிவில் நம்மைப் போன்ற உயிர்களின் மூல-வித்து விண்வெளியிலிருந்து உறைய வைத்து அல்லது பதப்படுத்தப்பட்டு பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின் பரப்பப்பட்டிருக்கலாம் என்கிற ஒரு கருத்தை முன்வைத்திருந்தேன். 'உயிரினத்தை அவ்வாறு நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தி, பின் உயிருடன் எழுப்ப முடியுமா?' "ஜீவசமாதியில் உறையும் மகான்கள், அவர்கள் விரும்பினால் உயிரோடு எழுவர்", என நம்பும் மக்கள் இதையும் தாராளமாக நம்பலாம். இம்முறை, கோமாவில் இருக்கும் நபர் மீண்டு எழுவதைப் போல் அல்ல. இதன் பெயர், "குளிர்கால உறக்கம்" (Hibernation). (நமது கணினியிலுள்ள 'Hibernate' வசதியை நினைவில் கொள்க)

        இதனை நமது நிகழ்கால உயிரினங்களைக் கொண்டு விளக்கவேண்டுமெனில், நமது பயணத்தை துருவத்தை நோக்கி திருப்ப வேண்டும். துருவப் பகுதிகளில் வாழக்கூடிய 'பனிக்கரடிகள்' அல்லது 'துருவக்கரடிகள்' (Polar Bear), குளிர் காலத்தில் இத்தகைய நிலைக்குத் தயாராகின்றன. (நமக்கு மித வெப்ப காலத்தில்கூட அங்கு குளிர் அதிகம், எனில், நமக்கு குளிர் காலத்தின் போது அங்கு நிலவும் உறையவைக்கும் குளிரை சற்று கற்பனை செய்து பாருங்கள்!) அவைகளோ மாமிச பட்சிணிகள் (Carnivorous), அடிக்கும் குளிருக்கு ஒரு விலங்கும் வளைவிட்டு வெளிவராது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், குளிர்காலம் முடியும்வரை தொடர்ச்சியான தூக்கத்திற்கு இவ்வகை விலங்கினங்கள் குடும்பம்-குட்டிகளோடு ஆயத்தமாகின்றன.



(பனிக்கரடிகளின் குளிர்கால உறக்கம்)



          "அத்தகைய நீ...ண்...ட உறக்கத்தில் அவை கனவு காணுமா?" வாய்ப்பிருக்கிறது! நாய், எலி,பூனை போன்ற வீட்டு விலங்குகள் கனவு காண்பதை, தற்போதைய விஞ்ஞான உலகம் மெய்ப்பித்திருக்கிறது. வீட்டு விலங்குகளுக்கு வரும்போது, காட்டு விலங்குகளுக்கும் வர வாய்ப்பிருக்கலாம் அல்லவா?


          கனவுகளைப் பற்றி பின்னர்வரும் பதிவுகளில் காண உள்ளதால்,நாம் மீண்டும் வந்தவழி தொடர்வோம். இத்தகைய உறக்கத்தில் வீழும் இவ்வுயிரினங்கள், சரியாக அவ்வுறைபனிக்காலம் முடியும் தருவாயில் துயிலெழுகின்றன. பனிக்கரடியை, இவ்வாறு நீண்ட கால உறக்கத்தில் வீழும் பல உயிரினங்களுக்கு முன்மாதிரியாகவே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதே போல 'மோனார்க் வண்ணத்துப்பூச்சி'களும் (Monarch Butterfly) கூட இத்தகைய குளிர்கால உறக்கத்தை அனுபவிக்கின்றன.



         ஆனால் இவை, தனது குடும்பம், குட்டி என பாராமல், திருவிழாக்கூட்டம் போல், காடுகளிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் இலைகளாக இவற்றை ஓட்டவைத்ததுபோல் தொங்கிக்கொண்டு, தூங்கத்தொடங்குகின்றன. இது ஏறத்தாழ, நம்மூரின் பேருந்துப்பயணம் போல் மிக நெரிசலான இடமாகவே தோன்றுகிறது. இவைகள் மாமிச பட்சிணிகள் இல்லை என்றாலும், இவைகளின் உணவும், வாழும் சூழலும் இவை உயிர் பிழைக்கத் தகுந்தவாறு இல்லாததால், இவைகளும் இத்தகு விந்தையை நிகழ்த்துகின்றன. இங்கு இந்த விஷயம்தான், நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.


(மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் குளிர்கால உறக்கம்)


         மேலும், இவைகளும் பனிக்கரடிகளைப் போலவே, அக்குளிர்காலம் முடிந்ததும், விழிக்கின்றன. இத்தகு பருவநிலை உணர்த்தியை அவற்றுள், அவை சுயநினைவை இழந்த பின்னும் செயல்படும் தருவாயில், உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் திறன், உண்மையில் அசாத்தியமானது. அதே சமயம், அது மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்று. அவைகள் இயற்கையோடு ஒன்றி இருப்பதால், அவற்றால், இப்போதும் மிகச் சிறப்பாக செய்ய முடிகிறது. நாம் இயற்கையை தேவைக்கேற்றாற்போல் மாற்றுவதால், இத்திறன் நம்முள் மழுங்கிவிட்டது. இப்போதும் கூட விடியற்காலையில், கால-உணர்த்தி (Alarm) ஏதுமின்றி, இத்தனை மணிக்கு எழவேண்டுமென எண்ணி உறங்கினால், நிச்சயம் ஏறத்தாழ அச்சமயத்தில், நமக்கு விழிப்பு ஏற்படும். {இவ்வாறு நம்முள் உள்ள இயற்கை உணர்த்தியைப் பற்றி ஆராய ஒரு தனி குழுவே, நமது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்குகிறது (Human Isolation Chamber)}. இவை உறங்கும்போதுமட்டுமல்ல, விழித்திருக்கும்போதும் கூட செயல்படும்.

        இத்தகைய உணர்த்தியின் உச்சநிலை மூலமே, நிலநடுக்கம் முதலிய இயற்கைப் பேரிடர்களை மனிதனைத் தவிர்த்து, பிற உயிரினங்களால் எளிதில் உணர முடிகிறது என்றே தோன்றுகிறது. நாமும் காடுகளில் வாழ்ந்தபோது, இவைகள் நமக்கும் கைவந்தகலையாக இருந்திருக்கும். சரி, நாம் நமது விஷயத்திற்கு வருவோம். உயிரை அவ்வாறு ஆழ்ந்த, மயக்கநிலை போன்றதொரு நிலைக்குக் கொண்டுசெல்ல முடியுமா? அவ்வாறு கொண்டுசென்றாலும் அதே சுயநினைவுடன் மீண்டும் எழுப்ப முடியுமா? இது சாத்தியமாயின், அவ்வுயிரினம், முட்டை பொரிந்து உள்ளிருந்து வெளிவரும் குஞ்சு போல எழலாம்; அல்லது நாமே அவற்றை எழுப்பவும் செய்யலாம். இவை பற்றி எளிதில் விளக்க, ப்ரோமீதியஸ் (Prometheus) படத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.


        அக்கதையில் மனிதர்களையும் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தி, பலவருடங்கள் கழித்து எழுப்பப்படுவது போல காட்டப்படும். (அவதார் (Avatar) படத்திலும் இத்தகைய காட்சிகள் வரும்) அதேபோல், அதில்வரும் வேற்றுக்கிரக வாசிகளும்கூட பல யுகங்கள் கழித்து எழுப்பப்படுவதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கும். மேலும், உயிரின் மூலம் ஒரு குடுவையில், உறைநிலையில் பாதுகாக்கப்பட்டிருப்பது போலக் காட்டுவர்.


('ப்ரோமீதியஸ்' படத்தில் காட்டப்படும், மனிதர்களின் உறைநிலை உறக்கக்காட்சி)


('ப்ரோமீதியஸ்' படத்தில் காட்டப்படும், வேற்றுக்கிரகவாசிகளின் உறைநிலை உறக்கக்காட்சி)


(உயிர்மூலக் குடுவை)



('அவதார்' படத்தில் காட்டப்படும், மனிதர்களின் உறைநிலை உறக்கக்காட்சி)

           நான் படத்தைப்பார்த்து கதை சொல்பவன் போல் உங்களில் பலருக்குத் தோன்றலாம். ஆனால், இத்தகைய புனைகதை, தற்போது நிஜக்கதை ஆகியிருக்கிறது. ஆம். NASA தற்போது இத்தகைய ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு அத்தனை முக்கியத்துவம் தர காரணம் என்ன? இதற்கு பதில், மிக சுலபம். நாம் உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு பசி எடுப்பதில்லை. காரணம், நமது உடல் பாகங்கள் அப்போது ஓய்வில் இருக்கும். அதேபோல் நமது உடலுறுப்புகளுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதன்மூலம், நீண்டகாலத்திற்கு பசியின்றி உயிர்வாழ இயலும். நீண்ட தூர விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்கு, இது உகந்ததாகவும், உதவியாகவும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.


(விண்வெளித் துயில்நிலை)

          சரி. இவ்வாறு உறங்கச் செய்து மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் உண்டென வைத்துக்கொள்வோம். அவ்வாறு உரைநிலையிலிருந்து உயிர்த்தெழுந்த உயிரினங்கள் ஏதேனும் உண்டா? எனத் தேடும்போது கிடைத்த விஷயம்தான், "FAFROTSKY". 'Falls From The Sky' என்பதன் சுருக்கமே, இந்த 'Fafrotsky'. அதாவது, 'ஆகாயத்திலிருந்து விழும் அசாதாரணமான பொருள்', என்று பொருள். அதென்ன அசாதாரணம்? சாதாரணமாக ஆகாயத்திலிருந்து நீர் மழையாக விழும், இல்லையேல், சமயங்களில் எரிகற்களோ, விண்கற்களோ சற்று அரிதாக விழும். இவற்றைத்தாண்டி, எந்தவொரு பொருள் விழுந்தாலும், அது மேற்கூறிய 'Fafrotsky' வகையில் சேரும்.

         அப்படி என்னதான் வித்தியாசமாக விழுந்திருக்கிறது, என்பதை அடுத்தவாரம் காண்போம். அதற்கு முன், அடுத்த வார தொடரின் பதிவையும், இந்தவார தொடரையும் இணைக்கும் பொருட்டு ஒரு சிறு தகவல்.

         1987, அக்டோபர் 23-ல் பிரிட்டனிலுள்ள கிளவுசெஸ்டர்ஷையர் என்கிற ஊரில் ஆலங்கட்டிமழை பெய்தது. (இது ஒரு அதிசயமா? என்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்) அவ்வாறு பெய்த பனிக்கட்டிகளின் உள்ளே லேசான ரோஸ் நிறத்தில் தவளைகள் இருந்தன. அவ்வளவு உயரத்திலிருந்து மழையாய் பொழிந்தபோதும், அவற்றில் முக்கால்வாசி தவளைகள் உயிரோடிருந்தன; தத்தித் தத்தித் தப்பித்தன, பனி உருகியதும்!

         இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன், அடுத்தவாரம் சந்திப்போம்.

அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Hibernation
http://en.wikipedia.org/wiki/Polar_bear
http://en.wikipedia.org/wiki/Monarch_butterfly
http://en.wikipedia.org/wiki/Prometheus_(2012_film)
http://en.wikipedia.org/wiki/Avatar_(2009_film)
http://newswatch.nationalgeographic.com/2013/08/21/how-the-alaska-wood-frog-survives-being-frozen/
http://motherboard.vice.com/read/nasa-is-getting-serious-about-space-hibernation


Photo Courtesy : Google.

Tuesday 7 October 2014

12.) நாமும் நாடோடிகளா...???!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...!

          எனது கடந்த பதிவு, இதற்குமுன் நான் பதிவிட்ட மற்ற பதிவுகளை விட அதிகம் பிரபலமடைந்துள்ளது. வழக்கம்போல் விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒருங்கே வந்துசேர்ந்தாலும், குறிப்பிடத்தக்க ஒரு இன்ப-அதிர்ச்சி என்று எடுத்துக்கொண்டால், தூர்தர்ஷனின் பிரபல தொகுப்பாளரான திரு.சுமந்த் ராமன் அவர்களின் வருகையும் (எனது பதிவிற்கு), வாழ்த்தும் (முகநூலில்). இதுபோன்ற, நான் ரசித்த பிரபலங்களின் தொடர்பும், வாழ்த்தும் எனது அன்பார்ந்த ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு கிடைப்பதென்பது, நான் கனவிலும் எதிர்பார்க்காததோர் வரம் என்றே கூறலாம்.

           நான் கடந்த பதிவில் குறிப்பிட்டபடி, நாம் தோன்றியிருப்பதற்கான சாத்தியக்கூறுள்ள வகைகளில் ஒவ்வொன்றாக, இனிவரும் பதிவுகளில் காண்போம்; ஆதாரங்களுடனும், சாத்தியக்கூறுகளுடனும்.

            'நாடோடிகள்'. இவ்வகையையைப் பற்றி விளக்கும் முன், பிரபல சித்திரக்கதையின் சாகாவரம் பெற்ற கதாப்பாத்திரங்களுள் ஒன்றான "சூப்பர் மேனின்" (Super Man) குழந்தைப்பருவ நிகழ்வைப் பற்றிக் காண்போம். இது கற்பனையாக இருந்தாலும், பல்வேறு அறிவியல் உண்மைகள், நிரூபிக்கப்படும்முன், இத்தகைய கற்பனைகளில்தான் 'குளிர்கால உறக்கத்தை' (Hibernation) ('குளிர்கால உறக்கம்' பற்றி, பின்னர் வரும் பதிவுகளில் காண்போம்) மேற்கொண்டிருந்தன என்பது எனது நம்பிக்கை.

            அக்கதையின்படி, சூப்பர் மேன் கைக்குழந்தையாக இருக்கும்போது, அவர் வாழும் கிரகமான "கிரிப்டான்" (Krypton), அழியக்கூடிய அபாயத்தை சந்திக்கிறது. எனவே, சூப்பர் மேனின் தந்தை, "தனது குழந்தையாவது பிழைக்கட்டும்" என்கிற நோக்கில், ஒரு சிறிய அதிவேக விண்கலத்தில், கைக்குழந்தையான சூப்பர் மேனையும், அவரது உண்மையான குடும்பப் பதிவுகள் அடங்கிய ஒரு ஆதார ஆவணத்தையும் மட்டும் வைத்து அனுப்புகிறார். அக்கலம் தரையிறங்கும் (மோதும்) இடம்தான், நமது பூமி. (இதுக்கு மேலயும் கதை தெரியணும்னா, "வார்னர் பிரதர்ஸ்" (Warner Bro's) உருவாக்கின "சூப்பர் மேன்" (Super Man) கார்ட்டூன பாருங்க...!)
             
(சூப்பர் மேன் சித்திரக்கதையின் சில காட்சிகள், தெளிவுபடுத்தலுக்காக)







         இதுவும் ஏறக்குறைய நமது மகாபாரதத்திலுள்ள சில படலங்களைத் தழுவி எடுக்கப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, மகாபாரதத்தில், குந்திதேவி, கர்ணனை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விடுவார்; இங்கு, ஜோரேல்-லும் (Jor-El), லாரா-வும் (Lara) ( சூப்பர் மேனின் தந்தை மற்றும் தாய்) சூப்பர் மேன்-ஐ ஒரு விண்கலத்தில் வைத்து விண்ணில் செலுத்துகின்றனர். பேழையும், விண்கலமும் 'ஒரு குழந்தையை' வைக்குமளவிற்கு மட்டுமே கொள்ளளவு கொண்டுள்ளது. கர்ணனும், சரியாக, குழந்தைப் பேரற்ற தம்பதியினரின் (அதிரதன் - ராதை) கையில் சேர்வான்; சூப்பர் மேனும் அப்படியே (ஜோனதன் - மார்த்தா கென்ட் (Jonathan - Martha Kent))! இதைவிட ஓர் ஆச்சர்யமான ஒற்றுமை, கர்ணன் - சூரிய புத்திரன்; சூப்பர் மேன் வலுவிழக்கும்போது, சூரியக்கதிர்களால் மட்டுமே அவ்வலுவிழப்பைத் தடுத்து சக்தியை மீட்டெடுக்கச் செய்ய இயலும் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பர்.


(குந்திதேவி, கர்ணனை பேழையில் வைத்து ஆற்றில் விடும் காட்சி)


(அதிரதனும், ராதையும் கர்ணனைக் கண்டெடுக்கும் காட்சி)


(ஜோனதனும், மார்த்தா கேன்ட்டும் குழந்தை சூப்பர் மேனைக் கண்டெடுக்கும் காட்சி)


(கர்ணனும் - சூப்பர் மேனும், ஒரு ஒப்பீடு) 


          நான் எனது ஆரம்பப் பதிவுகளில் குறிப்பிட்டதுபோல், நம்மைச் சுற்றியும் ஏராளமான துப்புகள், மறைமுகக்குறியீடுகளாகவும், கர்ண-பரம்பரைக் கதைகளாகவும் உள்ளன. (இங்கு குறிப்பிடப்படும் 'கர்ண-பரம்பரை', கர்ணனின் பரம்பரையை குறிக்கவில்லை. கர்ணம் = காது. அதாவது, செவி-வழிக் கதைகளாகும். கர்ணனனுக்கு, 'கர்ணன்' எனப் பெயர் வரக் காரணம், அவன் பிறக்கும்போது உடலில் கவசத்துடனும், காதில் குண்டலத்துடனும் பிறந்ததால்.) இக்கதையை ஒரு குழந்தைத் தொடராக மட்டுமே இதுநாள்வரை கண்ட நமக்கு, அதன் பின்னணியில் ஒளிந்திருந்த நமது தேசத்தின் காப்பியம், சற்று தாமதமாகவே தெரியவந்துள்ளது. இதேபோல், இக்கதையில் வருகின்ற கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய மறைமுகக் குறியீடு என்னவெனில், "ஓர் உலகம் அழியும் வேளையிலும், பத்திரமாகக் கலத்தில் வைக்கப்பட்டு, நமது கிரகமான பூமிக்குக் கடத்தப்படும், உயிர் !"

         என்னைப்போல் சிந்திக்கும் பலரின் யூகம் (அல்லது கருத்து) என்னவெனில், "நமது மனித இனம் உட்பட பல உயிர்களும் (கவனிக்கவும், 'பல உயிர்களும்'; "அனைத்து உயிர்களும்" அல்ல) ஏன் இதுபோன்ற ஒரு காரணத்தால் இவ்வுலகில் தோன்றியிருக்கக் கூடாது" என்பதே. இது ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் சங்கடமாகவோ அல்லது நம்புவதற்கு சற்று சிரமமாகவோ இருந்தாலும், நிச்சயம் இது சாத்தியமாக வாய்ப்புடைய ஓர் வாதம்தான்.

         ஒருவேளை, என் போன்றவர்களின் கூற்று உண்மையெனில், "பேன்ஸ்பெர்மியா கொள்கை" (Panspermia Theory) விளக்கும் கூற்றின் மூலமே, இவ்வுலகில் நாமும், நம்மைச் சேர்ந்த பல உயிர்களும் உருவாகியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

          மேலும், அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நமது உயிர் மூலம், "நீண்ட கால உறக்கம்" அல்லது "குளிர்கால உறக்கம்" போன்ற ஒரு பதப்படுத்தப்பட்ட சூழலிலும், உறையவைக்கப்பட்ட அமைப்பிலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம். (இதற்கான ஆதாரங்கள் நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் தந்துவிட்டேன். இப்படி ஒரு கோர்வையில் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, வேகக்குறைப்பாக அவ்விஷயங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதுநாள்வரையிலான பதிவுகளில் அவ்விஷயங்களை விளக்கினேன்.)

          ஒருவேளை, அவ்வாறு நாம் பூமிக்கு வேறொரு கிரகத்திலிருந்து வந்திருப்போமேயானால், நான் முன்னரே குறிப்பிட்டவாறு, உயிர்பிழைக்க தஞ்சம்புகுந்த  நாடோடிகளாகவோ அல்லது அத்தகைய சூழ்நிலையின் காரணமாக பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்ட மீதமுள்ள சந்ததிகளாகவோ (சூப்பர் மேன் மாதிரி), அல்லது அவ்வாறு பல கிரகங்களுக்கு அனுப்பப்பட்டது போல், பூமிக்கும் அனுப்பி வைக்கப்பட்ட பலவற்றுள் ஒன்றாக அமைந்த, ஒரு உயிர்த் துணுக்குகளாகவோகூட இருக்கலாம்.

           அவ்வாறு சாத்தியக்கூறுள்ள கிரகம் ஏதேனும் உண்டா, என நோக்கும்போது, நமது செவ்வாய்க்கிரகம் அச்சந்தேகத்தைத் தீர்த்தது. ஏனெனில், செவ்வாயின் இன்றைய தோற்றம், நம் பூமியின் நாளைய தோற்றத்தைப் போல் (ஒருவேளை அழிந்தால்) உள்ளது. அதேபோல், நமது பூமியின் தோற்றம், நேற்றைய செவ்வாயைப்போல உள்ளது என சொல்லுமளவிற்கு, தன்னிடத்தில் சுவடுகளைக் கொண்டுள்ளது. இதுபற்றியும் நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் கண்டோம்.

           இத்தகைய காரணங்கள், செவ்வாய்க்கிரகம் பற்றிய இத்தகைய கோணத்தை மேலும் வலுப்படுத்தியது. ஒருவேளை இக்காரணம் சாத்தியமில்லையெனில் ஒருவேளை நாம் நம்மை அவர்களது அறிவை சோதிக்க அனுப்பப்பட்ட பரிசோதனை முடிவாகவோ (நாம இங்க  ரோபோ (Robot), குளோனிங்-னு (Cloning) பண்ற மாதிரி) அல்லது அவர்களின் வசதிக்கேற்றவாறு (பின்னாளில் வசிக்க), இவ்வுலகை மாற்ற அனுப்பப்பட்ட, மண்புழுவின் பணியையொத்த உயிரினங்களாகவோ இருக்கலாம். 

            இவ்வாறான எண்ணங்கள் மேலோங்கக் காரணம், நமது சுற்றுச்சூழல் மாசுபாடும், உலக வெப்பமயமாதலும். ஒருவேளை, இறுதியில் இச்சூழ்நிலையை வலுப்படுத்தத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோமா? ஏனெனில், இத்தகைய சூழ்நிலையில் உயிர்வாழக்கூடிய உயிரினமாக நம்மை அனுப்பிய அந்த மேம்பட்ட உயிரினம் இருந்தால்? (அதாவது, நாம் முன்னரே பார்த்த, "ஆர்ச்சியா"-வைப் (Archaea) போல!) இன்னும் இதுபோல் குழப்பமான கேள்விகள் ஏராளம்.

          அப்படி ஒன்றும் இருக்க வாய்ப்பே இல்லை என மறுப்பவர்களுக்கு, நான் கூறும் ஒரே பதில், "இப்படியான (அவர்கள் பார்வையில்) பொருந்தாத பல காரணங்கள் 'வேற்றுகிரகவாசிகள் இல்லை' என மறுப்பதற்குக் காரணமாக அவர்களால் சொல்லப்பட்டாலும், வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பதே உண்மை!" ஏனெனில், இப்பிரபஞ்சத்தில் உயிர் வாழ்வதற்கான தகுதி, நம் மனித இனத்திற்கு மட்டுமே அடித்த அதிர்ஷ்டக் குலுக்கல் (Jackpot) அல்ல, என்பது எனது திண்ணமான நம்பிக்கை.

          அதோடு, தலைப்பை சரியாக வாசிக்காதவர்களுக்காக மீண்டும் இங்கு ஒரு நினைவூட்டல். "நாமும் நாடோடிகளா?" அப்படியெனில், ஏற்கனவே வேறு நாடோடிகள் உள்ளனரா? வாய்ப்புகள் உள்ளன. பிரபல விண்வெளி ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) அவர்கள், வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் தங்கள் கிரகங்களில் வளத்தை இழந்துவிட்டு (அல்லது அழித்துவிட்டு), தற்போது வேறு கிரகங்களை நோக்கிப் படையெடுப்பவர்களாகவும் இருக்கக்கூடுமெனவும்; அவ்வாறு அவர்களின் கண்களில் பூமி சிக்கினால், நம்மிடமிருந்து அவர்களால் உறிஞ்சப்படும் முதல் வளம் நீராகத்தான் (Water) இருக்கும் என்பது அவரது கணிப்பு. (இங்க நமக்கே தண்ணி இல்ல. இதுல அவங்க வேறயா?!) 

           இவ்வாறு கணித்த அவர் ஒன்றும் சாதரணமான ஆள் இல்லை. இப்பிரபஞ்சத்தின் வயதை சரியாகக் கணக்கிட்டவர்; தனது தளராத மனதினாலும், விடா முயற்சினாலும் 'இயலாமை' என்ற வார்த்தையை இயலாமை ஆக்கியவர்; விஞ்ஞான உலகமே புருவம் உயர்த்தும் அபூர்வ மனிதர்; சொல்லபோனால் தற்போது உலகிலுள்ளவர்களில் மிகச்சிறந்த அறிவாளி எனப் போற்றுமளவிற்குத் தகுதி பொருந்திய மாபெரும் மேதை, ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். 


(Stephen William Hawking)

           மேலும் அவர், அத்தகைய நாடோடிகளான வேற்றுக்கிரகவாசிகளை நட்போடு அணுகுவது அத்தனை நல்லதல்ல, எனவும் எச்சரித்துள்ளார். ஒருவேளை இவர் கூற்று உண்மையாக இருந்தால், அவர்கள் நேரடியாக போரில் இறங்காமல், வஞ்சக நட்போடு பழகி, பின் நமது வளத்தை அபகரிக்கவும் செய்யலாம். (வெள்ளையர்கள் நம் முதுகில் குத்தி, பின் அதே முதுகில் 200 ஆண்டுகள் குதிரை சவாரி செய்ததுபோல!) எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பதே நலம்.

           சரி. இவ்வாறான யூகங்கள் பல இருக்கலாம்; ஆதாரங்கள் ஏதும் உண்டா? என நீங்கள் கேட்கலாம். ஆதாரங்கள் வரும் பதிவுகளில் தரப்படும்; நம்புவதற்குத் தயாராகுங்கள்!


அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy : Google.