Tuesday 9 September 2014

8.) மெய்ப்பொருள் காண்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          எனது பதிவுகள் சமீபத்தில் ஆயிரம் முறைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. உண்மையில் இது, நானே கூட எதிர்பார்க்காத ஆச்சர்யமான வெற்றி. இதன் முழுமுதற்காரணமான எனது அன்பார்ந்த ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள். இது உங்களால் மட்டுமே சாத்தியமானது.

          எனது கடந்த பதிவில், கடவுளைப்பற்றி கலந்துரையாடினோம். உண்மையில், இதுவரை எனது எந்தவொரு பதிவிற்கும் இல்லாத அளவிற்கு, இந்த பதிவிற்கு, எனது பக்கத்தின் பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்கள் வந்திருந்தது; பெரும்பாலானவை தனிப்பட்ட முறையில். இதில் எத்தனை பேர் என்னை தொடர்புகொள்ள நினைத்து முடியாமல் போனதோ தெரியவில்லை. ஆகவே, என்னைத் தொடர்புகொள்ளத் தேவையானவற்றை இப்பதிவின் இறுதியில் தருகிறேன்.

           சென்ற வாரம், நாம் "கடவுள்" கோட்பாட்டின் பின்னால் உள்ள விஷயங்களை சற்று பார்த்தோம். இந்த வாரமும் நான் அவரை விடுவதாய் இல்லை. நான் எதிர்பார்த்தது போலவே, எனக்கு தேவையான விஷயங்கள் எனக்கு வந்த விமர்சனங்கள் மூலமும், என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும் "தற்செயல்கள்" மூலமும் கிடைத்தன.

            அதில், கடவுள் நம்பிக்கையாளரான எனது நெருக்கமான தோழர் ஒருவர் எனக்கு ஒரு இணையதள இணைப்பு ஒன்றை, முகநூல் வாயிலாக அனுப்பினார். அதில், பரிணாம வளர்ச்சியை 'பொய்' என நிரூபிப்பதற்க்கான காரணங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் அவர்கள் சொன்ன முதல் விஷயம்,


          1. பரிணாமம் ஒரு விதி அல்ல. காரணம் அது டார்வினின் அனுமானத்தின் மூலம் எழுதப்பட்டது.

          நண்பர்களே, நாங்களும் அதை விதி என்று கூறவில்லை; "கோட்பாடு" அல்லது "கொள்கை" என்றே குறிப்பிடுகிறோம். காரணம், விதிகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டவை. கோட்பாடுகள் என்பவை, ஆதாரங்களை நிரூபிக்க தகுந்த சூழல்கள் இல்லாதபோது, ஒரு விடுபட்ட பிணைப்பை சேர்க்க உதவும் ஒரு பிணைப்பு போன்றது. ஆனால், இரண்டுமே மாறுதலுக்குட்பட்டவைகளே! ஆன்மீகத்தைப் போல, மாற்றக்கூடாத அல்லது மாற்ற இயலாத விதிகள் என்று அறிவியலில் எதுவும் இல்லை.

          கலிலியோ கலிலி (Galileo Galilei)-ன் காலத்தில் அவரை அவர் செய்த ஆராய்ச்சிக்காக துன்புறுத்தியவர்கள் மதகுருமார்கள் மட்டுமல்ல. அவருக்கு முன் கோட்பாடுகளிலும், விதிகளிலும் கொடிகட்டிப் பறந்த அரிஸ்டாட்டி(Aristotle)-லின் ஆதரவாளர்களும்தான். இத்தனைக்கும் அரிஸ்டாட்டில் கி.மு.வில் வாழ்ந்தவர். இருப்பினும் அத்தகைய ஆராய்ச்சியாளர்கள், கலிலியோவை துன்புறுத்தக் காரணம், அரிஸ்டாட்டிலின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், குரு பக்தியும் என்றே கூறலாம்.


(கலிலியோ கலிலி)


(அரிஸ்டாட்டில்)

          அவ்வாறு கலிலியோ விசாரிக்கப்படும்போது, "நீ கடவுள் கொள்கைகளுக்கு எதிராக ஆராய்ச்சி செய்திருக்கிறாய். (கடவுள் இப்டிலாம் செய்யதீங்கனு உங்ககிட்ட சொன்னாரா..?!) மேலும், நீ சூரியனை  பூமி சுற்றுவதாகக் கூறியுள்ளாய். அதை நீ மறுத்தால், உன்னை விடுவிக்கிறோம்" என்றனர். அதற்கு கலிலியோ, "நான் மறுத்தாலும் பூமி அவ்வாறுதான் சுற்றும்" என்றார். (நானும் அப்படித்தான் கூறுகிறேன்!)


          2. பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், பனிப்பிரதேசத்தில் வாழும் மக்களின் உடலில், பனிக்கரடி போன்ற விலங்குகளுக்கு குளிரைத்தாங்க ஏதுவாக ரோமங்கள் உள்ளதே, அது போல் ஏன் அமையவில்லை?

          நல்ல கேள்விதான். ஆனால் இதன் பதில் எளிது! ஆரம்பகாலத்தில், நமது உடல் சூழலுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டது. ஆனால் இப்போது, நாம் நமது தேவைக்கேற்ப சூழலை மாற்றியமைக்கும் திறன் பெற்றுவிட்டோம். ஆகவே பரிணாமம் தடைபட்டு விட்டது. பலநூறு ஆண்டுகளாக மனித மூளை, அளவில் பெரிதாகாமல் இருக்க இதுவும் ஒரு காரணம். பனியில் இருந்து தற்காத்துக் கொள்ள, அங்குள்ள எஸ்கிமோக்கள் (Eskimos), கம்பளியை பயன்படுத்தத் தொடங்கினர்; ரோமங்கள் அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது.

         "அப்படியானால் மற்ற மிருகங்களில் ஒன்றுகூடவா இதுவரை பரிணமிக்கவில்லை?" என்கிற உங்கள் கேள்விக்கு, டார்வின் தனது "Survival of the Fittest" என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறார். அதன்படி, "சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் எந்தவொரு உயிரினமும் இவ்வுலகில் வாழத் தகுதிபெறும்" என்பதே இதன் சாராம்சம். (உதாரணம், மனிதன்!)

          இருப்பினும், எந்த ஒரு விஷயமும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகிறது. அந்த பொறுப்பான பணி, தற்போது என் தோளில் என்பதால், அதை அட்லஸ்(Atlas)-ஐப் போல ஒழுங்காகத் தாங்கும் கடமை என்னுடையது.ஆகவே, 'என்ன செய்யலாம்?' என அச்சமயம் நான் விழித்துக்கொண்டிருந்தபோது, நான் முன்னர் குறிப்பிட்ட, நான் நம்பும் அந்த "தற்செயல்" எனக்கு உதவியது. அது என்னவென நீங்களே பாருங்கள்!


          இவ்வாறாக, மனிதன் பரிணாமத்தையும் பழக்கமாக மாற்ற ஆரம்பித்துவிட்டான்!


          3. கறுமைநிறத்தோல் மற்ற நிறத்தோலை விட சூரிய ஒளியை அதிகம் ஈர்க்கும். ஒருவேளை பரிணாமம் உண்மையாக இருந்தால், துருவப்பிரதேசத்தில் வாழ்பவன் கருப்பாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்பவன் வெள்ளையாகவும் அல்லவா இருக்கவேண்டும்.

          அட மேதைகளே! அவன் நிறம் கறுத்ததர்க்குக் காரணமே, நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலவும் வெயில்தானே! (அப்பறம் எப்டியா வெள்ளையாவான்?!) 


        4. துருவக்கரடிகள் போன்ற பனிப்பிரதேச உயிரினங்களைப் போல, வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் விலங்குகளுக்கும் ரோமங்கள் உள்ளதே!

        நிச்சயம் இல்லை. இரண்டின் ரோம அடர்த்தியிலும் வித்தியாசம் உண்டு. மேலும், காடுகளில் இரவுநேர குளிரை சமாளிக்க அந்த ரோமங்கள் உதவி புரிகின்றன. (காட்டுல, நைட்டு நேரத்துல எப்டி குளிரும்னு Man Vs. Wild-ல வர்ற Bear Grylls-ட்ட கேட்டு பாருங்க.)

        இன்னும் பல ஆதாரங்களை பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக அடுக்கியிருந்தனர். அவை அனைத்திற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனால், அக்கொள்கையை நிரூபிப்பது அயலானின் நோக்கமல்ல. ஆகவே, இத்துடன் பரிணாமத்தை நிறுத்தி வைப்போம். தேவைப்பட்டால் மீண்டும் கையிலெடுப்போம். நமது இலக்கு, 'நம்மைவிட மேம்பட்ட அல்லது நமக்கு இணையான நாகரீகம் இப்பிரபஞ்சத்தில் இருக்குமா?' என்பதே.


(மழையில் நனையாமலிருக்க இலையால் குடை பிடிக்கும் இத்தவளைக்கு, பரிணாமத்தால் பகுத்தறிவு வந்திருக்குமோ...?!)

          சரி. இது போன்ற பரிணாமக் கோட்பாட்டைக் குறிக்கும் விஷயங்கள் ஏதேனும் நமது நாட்டிலுள்ள குறிப்புகளில் காணப்படுகிறதா என்று பார்த்தால், நான் முன்னரே குறிப்பிட்டபடி, அறிவியல் இந்தியாவில் ஆன்மிகம் வாயிலாக பரப்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக நாம் முன்வைப்பது, "தசாவதாரம்". (கமல்ஹாசன் படம் இல்ல!)


(தசாவதாரம்)
          

(தசாவதாரமும் - டார்வினிசமும்)

       இதன்படி,
  • மச்சாவதாரம்   -   மீன் உருவம்   -   நீரில் வாழ்வன.
  • கூர்மாவதாரம்   -   ஆமை உருவம்   -   நீரிலும், நிலத்திலும் வாழ்வன.
  • வராக அவதாரம்   -   பன்றி உருவம்   -   நிலத்தில் வாழ்வன. ஆனால், சிறிய உருவம்.
  • நரசிம்ம அவதாரம்   -   சிங்கமும், மனிதனும் சேர்ந்த கலவை   -   ஏறத்தாழ பாதி மனித நிலை, ஆனால் மிருக குணம்.
  • வாமனாவதாரம்   -   குள்ள மனித உருவம்   -   ஏறக்குறைய ஒரு மனிதன்.
  • பரசுராம அவதாரம்   -   கையில் ஆயுதத்துடன் உள்ள மனிதன்   -   கற்கால மனிதர்கள்.
  • ராமாவதாரம்   -   வில்-அம்புடன் உள்ள மனிதன்   -   உலோகக் கால மனிதன்.
  • பலராம அவதாரம்   -   கையில் கலப்பையுடன் உள்ள மனிதன்   -   விவசாயத்தைக் கண்டறிந்த காலம்.
  • கிருஷ்ணாவதாரம்   -   கால்நடைகளுடன் நிற்கும் உருவம்   -   மனிதன் கால்நடைகளை பழக்கிய காலகட்டம்.
  • கல்கி அவதாரம்   -   கடலால் சூழப்பட்ட உலகத்தில் பறக்கும் வெள்ளைக் குதிரையின் மேல், கையில் ஆயுதத்துடன் உள்ள மனிதன்   -   (இந்த அவதாரம் இன்னும் நிகழவில்லை என நம்பப்படுகிறது) ஒருவேளை இது சுனாமி போன்ற இயற்கைப்பேரிடரால் உலகம் அழிந்த பின்பு மக்கள் ஆயுதம் பொருந்திய (வெள்ளைக்) கப்பல்களில் வசிப்பர் என்பதுபோலக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
          இதுமட்டுமல்லாது,

          "புல்லாகிப் பூண்டாகிப் புட்களாகி..." எனத்தொடங்கும் ஒரு தமிழ்ப்பாடலும், நவராத்திரி தினத்தில் வைக்கப்படும் கொலு பொம்மைகளும், டார்வினிசத்தைக் குறிப்பதுபோலவே எனக்குத் தோன்றுகிறது. அவற்றை வரிசைப்படுத்தியிருக்கும் விதத்தைக் கீழிருந்து மேலாகக் கவனிக்கவும். ஆனால், அதற்க்கு அவர்கள் கூறும் தத்துவார்த்தமான காரணங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம்.


          சரி. இதற்குப் பின்னும் இவர்கள் டார்வினிசத்தை வன்மையாக எதிர்க்கக் காரணம்..?!

          பரிணாமத்தை ஏற்றுக்கொண்டால், வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ வழி உண்டு என நம்ப வேண்டி வரும். இது அவர்களது நம்பிக்கைக்கு முரணானதாக மாறும் என்பதால் மட்டுமே.
அப்படியானால், வேற்றுகிரகவாசிகளின் இருப்பு நிரூபிக்கப்பட்டால்..?!
அவர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால்...?!

          விளைவுகளைக் காண அடுத்தவாரம்வரை காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.




மேலும் விவரங்களுக்கு, காண்க : 



Photo Courtesy : Google & Facebook.



To Contact Me :

Mail ID       : jayanth.leonoswin@gmail.com
Facebook  : Jayanthi Nathan
Twitter       : Jayanthinathan@ayalaan007



3 comments: