Tuesday 2 September 2014

7.) கடவுள்...!!!


அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

         என்முன் நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட கேள்வி, "எனது பதிவுகளின் முற்பகுதியில் பதிவிடுவதாகக் கூறப்பட்ட 'கடவுள் ', 'வேற்றுக்கிரகவாசி ' போன்ற விஷயங்களின் பதிவுகள் எங்கே?" என்பதே. நண்பர்களே, உண்மையில் அவ்விஷயத்தை நான் மறக்கவில்லை. உலகில் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையின்படி, கடவுள் 6 நாட்களில் உலகைப் படைத்து, 7-ம் நாள் ஓய்வெடுத்தார் என்பதே. இது எனது 7-வது பதிவு. ஆகவே 7-ம் நாள் ஓய்வில் இருக்கும் அவரை எனது 7-வது பதிவிற்கு அழைக்கலாம் என காத்திருந்தேன்!

         கடவுள் = கட + உள். 'உள்ளத்தைக் கடந்து உணரவேண்டிய ஒரு சக்தி' என்ற நோக்கில் வைக்கப்பட்ட பெயர். இருக்கிறாரோ இல்லையோ தெரியாது; ஆனால், மனிதர்களுக்கு திட்டவும், புகழவும் தேவைப்படும் ஒரு நபர். எல்லோரும் கைவிட்ட பின் மனித மனம் நாடும் ஒரு மகா சக்தி; (அதுவரைக்கும் தேடவே மாட்டோம்) நம்பிக்கையின் உச்சம். சரி, ஆன்மீகப் பாதையில் இருந்து சற்று விலகி, பின் தொடர்வோம்.

         யானையைத் தடவும் குருடர்களைப் போல, கடவுளை பலவாறாக உலகின் அனைத்து மதங்களும் சித்தரிக்கின்றன.(பௌத்த மதத்தைத் தவிர. அவர்கள் நம்பிக்கையின்படி, இப்பிறவியில் நீ நல்லவனாக வாழ்ந்தால், மறுஜென்மம் இருக்காது; முக்தி கிட்டும். இதுவே பௌத்தத்தின் சாராம்சம். அதில் கடவுளுக்கு வேலை இல்லை.) 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் கூறிய வசனம்போல, "யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி,  'மதம்' பிடித்துப் போனால், தொல்லைதான்!". உண்மையில் மதங்கள் உருவான காரணமே, மனிதனை நெறிபடுத்தத்தான். ஆனால் இன்று, அநேக மதங்களின் மீது பூசப்பட்ட சாயங்கள் அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டன; நோக்கத்தையும் புதைத்துவிட்டன.

          மதத்தின் பெயரால் வாழ்வை இழந்த, அவமானத்தை பரிசாகப் பெற்ற, மரணத்தை முத்தமிட்ட விஞ்ஞானிகள் உலகில் ஏராளம். அதில் உலகையே புரட்டிப் போட்ட ஒரு கண்டுபிடிப்பின் எஜமானர் "சார்லஸ் டார்வின்"(CHARLES DARWIN). பரிணாமக் கொள்கை (EVOLUTION THEORY)-யின் தந்தை என, உலகில் தற்போது வரையிலும் போற்றப்படும் ஒரு விஞ்ஞானி. 'மனிதன் குரங்கிலிருந்துதான் பிரிந்தான் 'எனக்கூறிய போது, உலகமே அவரை அவமானப்படுத்தியது. (அப்பறம்...எவன் 'என் தாத்தா ஒரு குரங்கு'-னு சொல்ல விரும்புவான்..?!) "இவரது வம்சம் குரங்கிலிருந்து வந்ததாம்" என உலகமே எள்ளி நகையாடியது. அவரது "The Origin of the Species" என்கிற ஆராய்ச்சிப் புத்தகம், கடும் கண்டனங்களுக்கும், விமரசனங்களுக்கும் ஆளானது. அவ்வாறு அவரை பலவாறாக அவமானப்படுத்தியதற்கு, சில வருடங்களுக்கு முன்தான் தற்போது பதவியிலுள்ள 'போப்'(POPE)-பிற்கு முன்னர் பதவி வகித்த போப்பாண்டவர், மன்னிப்பு கோரினார். (டார்வின் இறந்தது 1882-ல்!)




(பரிணாம வளர்ச்சி)


(டார்வினை அவமானப்படுத்தும் நோக்கில் வரையப்பட்ட கேலிச்சித்திரம்)

          கடவுள் சித்தாந்தத்தில் நம்பிக்கையுள்ள மக்கள், இவற்றை எதிர்க்கக் காரணம், அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டால், கடவுள் மனிதனை மனிதனாகவே படைத்தார் என்கிற சித்தாந்தம் பொய்யாகிவிடும் என்கிற பயம். களிமண்ணால் படைக்கப்பட்டதாக அவர்களால் நம்பப்படும் மனிதன் அடைமழையிலும் கரைவதில்லை! மேலும், களிமண்ணின் மூலக்கூறுகளான 'Silica'-வின் பங்கு, மனித உடலில் மிகவும் குறைவு.


(உடலிலுள்ள மூலக்கூறுகளின் சதவிகிதம்)

         இத்தனைக்கும் டார்வின் "கடவுள் இல்லை" என்றுகூட சொல்லவில்லை. "கடவுள் மனிதனை, மனிதனாகப் படைக்கவில்லை" என்றுதான் கூறினார்; ஆதாரங்களையும் அடுக்கினார். இருப்பினும் அப்போது அவரது கூற்றை ஏற்க மக்கள் தயங்கினர். காரணம், நமது நம்பிக்கை பொய்ப்பதை உளவியல் ரீதியாக ஒருவரும் விரும்புவதில்லை! எப்படியேனும் அதை மெய்ப்பிக்க போராடுகிறோம். (நான் உட்பட!)

         டார்வினிஸ மறுப்பாளர்கள் கேட்கும் இன்னொரு, யோசிக்கத்தூண்டும் கேள்வி, "ஒருவேளை மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தால், இன்று குரங்கினமே இல்லாமல் போயிருக்குமே!" என்பது! நண்பர்களே, டார்வின், "மனிதன் குரங்கிலிருந்து பிரிந்தான்" என்றுதான் சொன்னார்; "பிறந்தான்" என சொல்லவில்லை. மேலும் குரங்கினத்திலிருந்து (சற்று மாறுதலோடு) பிரிந்த ஒரு இனமே மனித இனம் என்றார். ஆகவே அவ்வாறு பிரிந்த கிளை முழுவதுமே தற்போது மனித இனமாக வீற்றிருக்கிறது.

இதை மறுப்பவர்களிடம் சில கேள்விகள் :
  • உண்மையில் கடவுள் மனிதனை மனிதனாகப் படைத்திருந்தால், 'குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணமித்தான்' என்பதற்கு ஆதாரமாக ஆய்வாளர்கள் காட்டும் மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் யாரினுடையது? எங்கிருந்து வந்தது?
          [ படங்களின் எண்ணிக்கை அதிகம்தான், பொறுத்துக்கொள்ளவும். "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்" என்கிற நெப்போலியன் போனபார்ட் (NAPOLEON BONAPARTE)-ன் வார்த்தைகளை நினைவில் கொள்ளவும்.]





(அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட, மனித பரிணாமத்தை மெய்ப்பிக்கும் ஆதாரங்களாகக் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகள்)

  • "மனிதன் படைக்கப்பட்டதே கடவுளை தொழுவதற்காகவே" என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். உண்மையில் கடவுள் இவ்வாறு சொல்லியிருப்பரா? (கடவுளுக்குக் கீழான நிலையிலிருப்பதாக நம்பப்படும் மனித இனமாகிய நாமே, ஒரு இயந்திர மனிதனை (ROBOT) உருவாக்கினால், அதனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முயற்சிப்போமே தவிர, "தினமும் எனக்கு நீ SALUTE அடிக்கணும்; அப்பதான் நீ நல்ல ROBOT"-னு சொல்லுவோமா?)
  • உண்மையில் நமக்காக மட்டுமே இப்பூமியும் நாம் வாழும் இப்பிரபஞ்சமும் படைக்கப்பட்டிருந்தால், நமது கண்களுக்கு எட்டா வண்ணம் இத்தனை பிரம்மாண்டமான, நமக்கு தேவையே இல்லாத (முக்கியமாக, கடவுளைத் தொழ) விஷயங்களை இவ்விண்வெளியில் உலவவிட்டதன் அவசியம் என்ன? அவரது சக்தியின் மூலம் இத்தகு பிரம்மாண்டத்தைக் காட்டித்தான் அவர் நமக்கு 'கடவுள்' என்பதை உணர்த்த வேண்டும் என்பதில்லையே! நமது பிரபஞ்சத்தில் நமது பூமியின் இருப்பிடத்தை எடுத்துக்கொண்டால், ஒரு மாபெரும் கடற்கரையிலிருந்து ஒரு மணல் துகளை நோக்குவதற்குச் சமம். அதற்கான ஆதாரமாக கீழே இணைக்கப்பட்டுள்ள Video பதிவைக் காண்க.

          

          "உண்மையில் நாம் இங்கே படைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறோம்". இதை நான் இங்கு உறுதியாகவே கூறுகிறேன். (இதற்கான விளக்கத்தை வரும் பதிவுகளில் காண்போம்).

          ஒருவேளை 'கடவுள்' என்ற ஒருவர் பெரும்பாலானோரின் நம்பிக்கையின்படி, ஆதாமையும், ஏவாளையும் முதல் மனிதர்களாகப் படைத்திருந்தால், உலகின் முதல் Test-tube baby ஆதாமே ஆவார்! மேலும், எனது நண்பர் திரு.ஷங்கர் என்பவருடன் உரையாடும்போது கிடைத்த ஒரு தகவல். 'ஆதாம்' என்கிற பெயர் உட்பட அக்கதைகளில் (அல்லது நம்பிக்கையில்) வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் பெயர்களும் தமிழிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆதாரமாக, உலகின் முதல் மனிதன் என்பதால், உலகில் முதலில் தோன்றும் சூரியனின் பெயரான, "ஆதவன்" (Adam) என்பதை அடிப்படையாகக் கொண்டும், அவனிடம் இருந்து பிரித்து எடுக்கப்பட்டதால் அவள் "Eve" (ஏவாள்) {ஈவு - கணிதத்தின் வகுத்தலில் வரும் ஈவு (Quotient), மீதி (Remaining) போன்றவற்றை நினைவு கூர்க } என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.

[இதுகுறித்து ஒரு புத்தகம் இருப்பதாகக் கூறினார். ஆனால், அது இன்னும் கைகளில் சிக்கவில்லை; அவருக்கும் கூட!]

  • மேலும், இப்பிரபஞ்சத்திலேயே மனித இனம் மட்டுமே உயர்ந்தது என்கிற கூற்றும் உண்டு. அத்துடன் வேறங்கும் உயிரினங்கள் கிடையாது என்றும் மதவாதிகளால் நம்பப்படுகிறது. சற்று சிந்தித்துப் பாருங்கள்; இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் வாழ்கிறோம் என்றால் அத்தனை பெரிய அதிர்ஷ்டம் மனித இனத்திற்கு மட்டும் இருக்குமா? 

          இறுதியாக, இப்பிரபஞ்சத்தில் நமது மனித இனமும், நமது பூலோக உயிர்களும் மட்டும் தனியாக இல்லை என்பதே உண்மை! (வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் !)

         "அப்போ நம்மள கடவுள் படைக்கல-னு சொல்றியா?" என்கிற உங்கள் கேள்விக்கு எனது பதில்.

         Darwin சொன்னதுபோலத்தான். கடவுள் நம்மை மனிதனாகப் படைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் உள்ளது போல நமது ஆரம்பத்திற்கும் ஒரு காரணகர்த்தா, ஒரு சூத்திரதாரி தேவைப்படுகிறார். ஆன்மீகப் பெரியோர்கள் கடவுளையும், பகுத்தறிவுப் பெரியார்கள் இயற்கையையும் அதற்கு(படைப்பிற்கு)க் காரணம் என நம்புகின்றனர். ஏனெனில், இப்பிரபஞ்சத் தோற்றத்தின் முதல் கணம் மட்டுமே, இன்னும் விளக்க இயலாதவாறு  'பிரம்மாவின் கையெழுத்து' போல் குழப்பமாக, தெளிவின்றி உள்ளது. அதற்கடுத்த கணம் முதல், சகலத்தையும் தற்போதைய விஞ்ஞானத்தால் நிச்சயமாக விளக்கமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

[இப்டித்தான்...! கடைசிவரைக்கும் எந்த பக்கமும் சாயாம, அப்டியே 'நீயா-நானா' கோபிநாத் மாதிரி பஞ்சாயத்து பண்ணி வச்சுட்டு போய்கிட்டே இருக்கணும்...எங்கயும் சிக்கிடவே கூடாது...!]

"அப்போ நம்மள படைச்சது யாரு?!" என்கிற உங்களின் அடுத்த கேள்விக்கான பதிலை நாம் அடுத்த வாரம் காண்போம்.

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க :

http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
http://en.wikipedia.org/wiki/Composition_of_the_human_body


Photo Courtesy : Google.


Video Courtesy : YouTube.

2 comments: