Tuesday 7 October 2014

12.) நாமும் நாடோடிகளா...???!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...!

          எனது கடந்த பதிவு, இதற்குமுன் நான் பதிவிட்ட மற்ற பதிவுகளை விட அதிகம் பிரபலமடைந்துள்ளது. வழக்கம்போல் விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒருங்கே வந்துசேர்ந்தாலும், குறிப்பிடத்தக்க ஒரு இன்ப-அதிர்ச்சி என்று எடுத்துக்கொண்டால், தூர்தர்ஷனின் பிரபல தொகுப்பாளரான திரு.சுமந்த் ராமன் அவர்களின் வருகையும் (எனது பதிவிற்கு), வாழ்த்தும் (முகநூலில்). இதுபோன்ற, நான் ரசித்த பிரபலங்களின் தொடர்பும், வாழ்த்தும் எனது அன்பார்ந்த ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு கிடைப்பதென்பது, நான் கனவிலும் எதிர்பார்க்காததோர் வரம் என்றே கூறலாம்.

           நான் கடந்த பதிவில் குறிப்பிட்டபடி, நாம் தோன்றியிருப்பதற்கான சாத்தியக்கூறுள்ள வகைகளில் ஒவ்வொன்றாக, இனிவரும் பதிவுகளில் காண்போம்; ஆதாரங்களுடனும், சாத்தியக்கூறுகளுடனும்.

            'நாடோடிகள்'. இவ்வகையையைப் பற்றி விளக்கும் முன், பிரபல சித்திரக்கதையின் சாகாவரம் பெற்ற கதாப்பாத்திரங்களுள் ஒன்றான "சூப்பர் மேனின்" (Super Man) குழந்தைப்பருவ நிகழ்வைப் பற்றிக் காண்போம். இது கற்பனையாக இருந்தாலும், பல்வேறு அறிவியல் உண்மைகள், நிரூபிக்கப்படும்முன், இத்தகைய கற்பனைகளில்தான் 'குளிர்கால உறக்கத்தை' (Hibernation) ('குளிர்கால உறக்கம்' பற்றி, பின்னர் வரும் பதிவுகளில் காண்போம்) மேற்கொண்டிருந்தன என்பது எனது நம்பிக்கை.

            அக்கதையின்படி, சூப்பர் மேன் கைக்குழந்தையாக இருக்கும்போது, அவர் வாழும் கிரகமான "கிரிப்டான்" (Krypton), அழியக்கூடிய அபாயத்தை சந்திக்கிறது. எனவே, சூப்பர் மேனின் தந்தை, "தனது குழந்தையாவது பிழைக்கட்டும்" என்கிற நோக்கில், ஒரு சிறிய அதிவேக விண்கலத்தில், கைக்குழந்தையான சூப்பர் மேனையும், அவரது உண்மையான குடும்பப் பதிவுகள் அடங்கிய ஒரு ஆதார ஆவணத்தையும் மட்டும் வைத்து அனுப்புகிறார். அக்கலம் தரையிறங்கும் (மோதும்) இடம்தான், நமது பூமி. (இதுக்கு மேலயும் கதை தெரியணும்னா, "வார்னர் பிரதர்ஸ்" (Warner Bro's) உருவாக்கின "சூப்பர் மேன்" (Super Man) கார்ட்டூன பாருங்க...!)
             
(சூப்பர் மேன் சித்திரக்கதையின் சில காட்சிகள், தெளிவுபடுத்தலுக்காக)







         இதுவும் ஏறக்குறைய நமது மகாபாரதத்திலுள்ள சில படலங்களைத் தழுவி எடுக்கப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, மகாபாரதத்தில், குந்திதேவி, கர்ணனை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விடுவார்; இங்கு, ஜோரேல்-லும் (Jor-El), லாரா-வும் (Lara) ( சூப்பர் மேனின் தந்தை மற்றும் தாய்) சூப்பர் மேன்-ஐ ஒரு விண்கலத்தில் வைத்து விண்ணில் செலுத்துகின்றனர். பேழையும், விண்கலமும் 'ஒரு குழந்தையை' வைக்குமளவிற்கு மட்டுமே கொள்ளளவு கொண்டுள்ளது. கர்ணனும், சரியாக, குழந்தைப் பேரற்ற தம்பதியினரின் (அதிரதன் - ராதை) கையில் சேர்வான்; சூப்பர் மேனும் அப்படியே (ஜோனதன் - மார்த்தா கென்ட் (Jonathan - Martha Kent))! இதைவிட ஓர் ஆச்சர்யமான ஒற்றுமை, கர்ணன் - சூரிய புத்திரன்; சூப்பர் மேன் வலுவிழக்கும்போது, சூரியக்கதிர்களால் மட்டுமே அவ்வலுவிழப்பைத் தடுத்து சக்தியை மீட்டெடுக்கச் செய்ய இயலும் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பர்.


(குந்திதேவி, கர்ணனை பேழையில் வைத்து ஆற்றில் விடும் காட்சி)


(அதிரதனும், ராதையும் கர்ணனைக் கண்டெடுக்கும் காட்சி)


(ஜோனதனும், மார்த்தா கேன்ட்டும் குழந்தை சூப்பர் மேனைக் கண்டெடுக்கும் காட்சி)


(கர்ணனும் - சூப்பர் மேனும், ஒரு ஒப்பீடு) 


          நான் எனது ஆரம்பப் பதிவுகளில் குறிப்பிட்டதுபோல், நம்மைச் சுற்றியும் ஏராளமான துப்புகள், மறைமுகக்குறியீடுகளாகவும், கர்ண-பரம்பரைக் கதைகளாகவும் உள்ளன. (இங்கு குறிப்பிடப்படும் 'கர்ண-பரம்பரை', கர்ணனின் பரம்பரையை குறிக்கவில்லை. கர்ணம் = காது. அதாவது, செவி-வழிக் கதைகளாகும். கர்ணனனுக்கு, 'கர்ணன்' எனப் பெயர் வரக் காரணம், அவன் பிறக்கும்போது உடலில் கவசத்துடனும், காதில் குண்டலத்துடனும் பிறந்ததால்.) இக்கதையை ஒரு குழந்தைத் தொடராக மட்டுமே இதுநாள்வரை கண்ட நமக்கு, அதன் பின்னணியில் ஒளிந்திருந்த நமது தேசத்தின் காப்பியம், சற்று தாமதமாகவே தெரியவந்துள்ளது. இதேபோல், இக்கதையில் வருகின்ற கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய மறைமுகக் குறியீடு என்னவெனில், "ஓர் உலகம் அழியும் வேளையிலும், பத்திரமாகக் கலத்தில் வைக்கப்பட்டு, நமது கிரகமான பூமிக்குக் கடத்தப்படும், உயிர் !"

         என்னைப்போல் சிந்திக்கும் பலரின் யூகம் (அல்லது கருத்து) என்னவெனில், "நமது மனித இனம் உட்பட பல உயிர்களும் (கவனிக்கவும், 'பல உயிர்களும்'; "அனைத்து உயிர்களும்" அல்ல) ஏன் இதுபோன்ற ஒரு காரணத்தால் இவ்வுலகில் தோன்றியிருக்கக் கூடாது" என்பதே. இது ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் சங்கடமாகவோ அல்லது நம்புவதற்கு சற்று சிரமமாகவோ இருந்தாலும், நிச்சயம் இது சாத்தியமாக வாய்ப்புடைய ஓர் வாதம்தான்.

         ஒருவேளை, என் போன்றவர்களின் கூற்று உண்மையெனில், "பேன்ஸ்பெர்மியா கொள்கை" (Panspermia Theory) விளக்கும் கூற்றின் மூலமே, இவ்வுலகில் நாமும், நம்மைச் சேர்ந்த பல உயிர்களும் உருவாகியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

          மேலும், அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நமது உயிர் மூலம், "நீண்ட கால உறக்கம்" அல்லது "குளிர்கால உறக்கம்" போன்ற ஒரு பதப்படுத்தப்பட்ட சூழலிலும், உறையவைக்கப்பட்ட அமைப்பிலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம். (இதற்கான ஆதாரங்கள் நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் தந்துவிட்டேன். இப்படி ஒரு கோர்வையில் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, வேகக்குறைப்பாக அவ்விஷயங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதுநாள்வரையிலான பதிவுகளில் அவ்விஷயங்களை விளக்கினேன்.)

          ஒருவேளை, அவ்வாறு நாம் பூமிக்கு வேறொரு கிரகத்திலிருந்து வந்திருப்போமேயானால், நான் முன்னரே குறிப்பிட்டவாறு, உயிர்பிழைக்க தஞ்சம்புகுந்த  நாடோடிகளாகவோ அல்லது அத்தகைய சூழ்நிலையின் காரணமாக பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்ட மீதமுள்ள சந்ததிகளாகவோ (சூப்பர் மேன் மாதிரி), அல்லது அவ்வாறு பல கிரகங்களுக்கு அனுப்பப்பட்டது போல், பூமிக்கும் அனுப்பி வைக்கப்பட்ட பலவற்றுள் ஒன்றாக அமைந்த, ஒரு உயிர்த் துணுக்குகளாகவோகூட இருக்கலாம்.

           அவ்வாறு சாத்தியக்கூறுள்ள கிரகம் ஏதேனும் உண்டா, என நோக்கும்போது, நமது செவ்வாய்க்கிரகம் அச்சந்தேகத்தைத் தீர்த்தது. ஏனெனில், செவ்வாயின் இன்றைய தோற்றம், நம் பூமியின் நாளைய தோற்றத்தைப் போல் (ஒருவேளை அழிந்தால்) உள்ளது. அதேபோல், நமது பூமியின் தோற்றம், நேற்றைய செவ்வாயைப்போல உள்ளது என சொல்லுமளவிற்கு, தன்னிடத்தில் சுவடுகளைக் கொண்டுள்ளது. இதுபற்றியும் நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் கண்டோம்.

           இத்தகைய காரணங்கள், செவ்வாய்க்கிரகம் பற்றிய இத்தகைய கோணத்தை மேலும் வலுப்படுத்தியது. ஒருவேளை இக்காரணம் சாத்தியமில்லையெனில் ஒருவேளை நாம் நம்மை அவர்களது அறிவை சோதிக்க அனுப்பப்பட்ட பரிசோதனை முடிவாகவோ (நாம இங்க  ரோபோ (Robot), குளோனிங்-னு (Cloning) பண்ற மாதிரி) அல்லது அவர்களின் வசதிக்கேற்றவாறு (பின்னாளில் வசிக்க), இவ்வுலகை மாற்ற அனுப்பப்பட்ட, மண்புழுவின் பணியையொத்த உயிரினங்களாகவோ இருக்கலாம். 

            இவ்வாறான எண்ணங்கள் மேலோங்கக் காரணம், நமது சுற்றுச்சூழல் மாசுபாடும், உலக வெப்பமயமாதலும். ஒருவேளை, இறுதியில் இச்சூழ்நிலையை வலுப்படுத்தத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோமா? ஏனெனில், இத்தகைய சூழ்நிலையில் உயிர்வாழக்கூடிய உயிரினமாக நம்மை அனுப்பிய அந்த மேம்பட்ட உயிரினம் இருந்தால்? (அதாவது, நாம் முன்னரே பார்த்த, "ஆர்ச்சியா"-வைப் (Archaea) போல!) இன்னும் இதுபோல் குழப்பமான கேள்விகள் ஏராளம்.

          அப்படி ஒன்றும் இருக்க வாய்ப்பே இல்லை என மறுப்பவர்களுக்கு, நான் கூறும் ஒரே பதில், "இப்படியான (அவர்கள் பார்வையில்) பொருந்தாத பல காரணங்கள் 'வேற்றுகிரகவாசிகள் இல்லை' என மறுப்பதற்குக் காரணமாக அவர்களால் சொல்லப்பட்டாலும், வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பதே உண்மை!" ஏனெனில், இப்பிரபஞ்சத்தில் உயிர் வாழ்வதற்கான தகுதி, நம் மனித இனத்திற்கு மட்டுமே அடித்த அதிர்ஷ்டக் குலுக்கல் (Jackpot) அல்ல, என்பது எனது திண்ணமான நம்பிக்கை.

          அதோடு, தலைப்பை சரியாக வாசிக்காதவர்களுக்காக மீண்டும் இங்கு ஒரு நினைவூட்டல். "நாமும் நாடோடிகளா?" அப்படியெனில், ஏற்கனவே வேறு நாடோடிகள் உள்ளனரா? வாய்ப்புகள் உள்ளன. பிரபல விண்வெளி ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) அவர்கள், வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் தங்கள் கிரகங்களில் வளத்தை இழந்துவிட்டு (அல்லது அழித்துவிட்டு), தற்போது வேறு கிரகங்களை நோக்கிப் படையெடுப்பவர்களாகவும் இருக்கக்கூடுமெனவும்; அவ்வாறு அவர்களின் கண்களில் பூமி சிக்கினால், நம்மிடமிருந்து அவர்களால் உறிஞ்சப்படும் முதல் வளம் நீராகத்தான் (Water) இருக்கும் என்பது அவரது கணிப்பு. (இங்க நமக்கே தண்ணி இல்ல. இதுல அவங்க வேறயா?!) 

           இவ்வாறு கணித்த அவர் ஒன்றும் சாதரணமான ஆள் இல்லை. இப்பிரபஞ்சத்தின் வயதை சரியாகக் கணக்கிட்டவர்; தனது தளராத மனதினாலும், விடா முயற்சினாலும் 'இயலாமை' என்ற வார்த்தையை இயலாமை ஆக்கியவர்; விஞ்ஞான உலகமே புருவம் உயர்த்தும் அபூர்வ மனிதர்; சொல்லபோனால் தற்போது உலகிலுள்ளவர்களில் மிகச்சிறந்த அறிவாளி எனப் போற்றுமளவிற்குத் தகுதி பொருந்திய மாபெரும் மேதை, ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். 


(Stephen William Hawking)

           மேலும் அவர், அத்தகைய நாடோடிகளான வேற்றுக்கிரகவாசிகளை நட்போடு அணுகுவது அத்தனை நல்லதல்ல, எனவும் எச்சரித்துள்ளார். ஒருவேளை இவர் கூற்று உண்மையாக இருந்தால், அவர்கள் நேரடியாக போரில் இறங்காமல், வஞ்சக நட்போடு பழகி, பின் நமது வளத்தை அபகரிக்கவும் செய்யலாம். (வெள்ளையர்கள் நம் முதுகில் குத்தி, பின் அதே முதுகில் 200 ஆண்டுகள் குதிரை சவாரி செய்ததுபோல!) எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பதே நலம்.

           சரி. இவ்வாறான யூகங்கள் பல இருக்கலாம்; ஆதாரங்கள் ஏதும் உண்டா? என நீங்கள் கேட்கலாம். ஆதாரங்கள் வரும் பதிவுகளில் தரப்படும்; நம்புவதற்குத் தயாராகுங்கள்!


அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy : Google.

No comments:

Post a Comment