Tuesday 16 September 2014

9.) மனிதன், தனியனா...?!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

         எனதன்பு ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் நற்செய்தி. இனி, எனது பதிவுகளின் கீழ், தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய, பதிவாளர் கணக்கு (Blogger Account) இருக்கவேண்டிய அவசியம் இல்லை; மின்னஞ்சல் கணக்கு (G-Mail Account) இருந்தாலே போதுமானது. தங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

          இதுவரை பதிவேற்றப்பட்ட பதிவுகளில், கடவுளின் துணை தேவையற்ற நிலைகளைக் கண்டோம். இன்றைய பதிவு, சற்று மாறுதல்களோடு ஆரம்பமாகிறது.

          இன்றளவிலும் உலகில் ஏற்பட்ட முக்கியமான பல மாற்றங்கள், மதங்கள் என்ற பூதங்கள் காக்கும், உண்மையில் மதங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு பொதுவான புதையலான "வேதங்கள்" மூலம், ஒவ்வொரு விஞ்ஞானிகளின் தூண்டுதலின் பேரில் வெளிக்கொணரப்பட்டவயே! (அடேங்கப்பா...எவ்ளோ பெரிய வாக்கியம்...!)

           "அவையனைத்தையும் நமது முன்னோர்கள் தருவித்தார்கள்" என பெருமைபடக் கூறினாலும், அவர்களும் இறுதியில் கூறும் ஒரு விஷயம், "உச்சத்தில் ஒரு சக்தி நிச்சயம் உண்டு" என்பதே! எனக்கும் தனிப்பட்ட முறையில் சில நம்பிக்கை என்பதைத் தாண்டிய, ஆசைகள் உண்டு. நாம் இன்றளவிலும் நம்பும் அந்த உச்ச சக்தி கடவுளாக இருந்தால், "நாம் ஏமாறவில்லை; நமது நம்பிக்கை பொய்க்கவில்லை" என சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.

           சரி உண்மையில் இந்த நாகரீகத்தை மனிதகுலத்திற்குக் கற்றுக்கொடுத்தது யார்?

           கடவுளா?
           இல்லை நாகரீகத்தை நமக்கு முன் கண்டறிந்த ஓர் இனமா?

           மீண்டும் கடவுளிலிருந்தே தொடங்குவோம். (இதுவும் 'கன்னித்தீவு' போல நீண்டுகொண்டுதான் செல்கிறது). ஏற்கனவே, நமது முந்தைய பதிவுகளில் அலசியபடி, கடவுள் நம்மை நேரடியாகப் படைத்திருந்தால், படைத்தபின், நிர்வாணமாக வாழ அனுமதித்திருக்க மாட்டார். மேலும், ஒரு தாயிலிருந்தே நாம் படைக்கப்பட்டோமேயானால், சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்யும் அபத்தத்தைக் கடவுளாகப்பட்டவர் நிச்சயம் செய்திருக்க மாட்டார்.

           ஒருவேளை நம்மை உருவாக்கியது, நம்மை விட மேம்பட்ட இனமாக இருந்தால்?

           அதற்கு முதலில் நாம் "பேன்ஸ்பெர்மியா" கோட்பாட்டைப் (Panspermia Theory) புரிந்துகொள்ள வேண்டும். இதை எளிமையாகப் புரிந்துகொள்ள நாம் "Evolution" படத்தைப் பார்த்தல் போதுமானது.


          இதன்படி, பூமியில் மோதிய ஒரு விண்கல் (Asteroid) அல்லது எரிகல்லின் (Meteorite) உள்ளிருந்து வெளியாகும் நுண்ணுயிரிகள், அபரிமிதமான வேகத்தில் பரிணாமமடைந்து, பின் இவ்வுலகையே வசப்படுத்த முயற்சிப்பது போலக் காட்சிப்படுத்தியிருப்பர். (நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும், முடிவில் Shampoo விளம்பரம் போல முடித்திருப்பது, சற்று உறுத்தலாக இருக்கும்.)

          பேன்ஸ்பெர்மியா கோட்பாடும் இதையேதான் குறிக்கிறது. அதாவது, உயிர் மூலங்கள் நமது பூமியில் உருவாகவில்லை. மாறாக, எங்கிருந்தோ நமது பூமிக்கு எரிகல் மூலம், தபால் போல அனுப்பப்பட்டது. 'பெறுநர்' பூமி என்றாலும், 'அனுப்புநர்'-ன் விலாசம்தான் இன்னும் மர்மமாகவே உள்ளது.


(பேன்ஸ்பெர்மியா கோட்பாட்டை விளக்கும் படம்)

          ஒருவேளை இக்கொள்கை உண்மையாக இருந்தால், நிச்சயம் நம்மை ஒரு மேம்பட்ட இனம் இப்பூமிக்கு அனுப்பியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

          இப்பதிவிற்கான விமர்சனமாக, முதலில் எழும் வழக்கமான, அதேசமயம்  புத்திசாலித்தனமான ஒரு கேள்வி, "இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?" என்பதே.

           அப்படி ஒரு எரிகல் பூமியைத் தாக்கியிருந்தால், நிச்சயம் அக்காலத்தில் நாம் இருந்திருக்க மாட்டோம்; ஒருவேளை இருந்திருந்தாலும் அத்தகைய எரிகல்லின் தாக்கத்திற்குப் பின் (உயிருடன்) இருந்திருக்க மாட்டோம். ஏனெனில், நாம் நமது பழைய பதிவுகளின் மூலம் அறிந்தவாறு, 'ஒரு எரிகல்லோ, வால்நட்சத்திரமோ நமது பூமியின் மீது மோத முற்படுமாயின், நமது பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தின் அடர்த்தி காரணமாக சாம்பலாகிவிடும். ராட்சச அளவுள்ள கற்கள் கூட, மிகச்சிறு கற்களாக நொறுங்கிப்போகும்' என்பதே. இத்தகைய பாதுகாப்பையும் மீறி ஒரு கல் பாதுகாப்பாக, அதுவும் உயிர் மூலக்கூறுகளின் வித்துக்களை உள்ளடக்கியவாறு பூமியில் பத்திரமாக தரையிறங்குவது என்பது சாதாரண காரியமல்ல.
           

(பூமியின் மீது மோத முற்படும் விண்கல்)

         'இதற்கு வலுசேர்க்கும் ஆதாரமாக ஏதேனும் கிடைக்குமா?' என, விஞ்ஞானிகள் விண்ணில் தங்கள் Telescope கண்களால் தேட ஆரம்பித்தனர். ஏற்கனவே, நமது சூரியக்குடும்பத்தில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஏகப்பட்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன அவை, Asteroid Belt எனப்படுகின்றன. அவை யாவும் ஒரு கோளாக மாறும் முயற்சியில் தோல்வியடைந்து, கருச்சிதைவுற்ற கிரகங்களே. 'அதில் ஏதேனும் உயிர் மூலக்கூறுகளுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா?' எனத் தேடினர். இதுவரையில் எதுவும் கிட்டவில்லை. 'சரி விண்ணின் பிற வெளியிலாவது ஏதேனும் இருக்க வாய்ப்புண்டா?' எனவும் துழாவினர்; இதுவரையில் நேர்மறையான ஆதாரங்கள்  எதுவும் சிக்கவில்லை.
         

(Asteroid Belt)


(விண்வெளி மூலக்கூறுகள்)

         'சரி விண்ணில்தான் எதுவும் கிடைக்கவில்லை; மண்ணிலாவது எதாவது கிடைக்கிறதா என பார்ப்போம்' என தேடியவர்களுக்குக் கிடைத்தது ஒரு பொக்கிஷம். ANSMET project என்கிற பெயரில், 1984-ம் ஆண்டு அண்டார்டிகாவிலுள்ள ஆலன் மலைத்தொடரில் (Allen Hills), எரிகற்கள் குறித்து ஆராயும் ஒரு அமெரிக்கக் குழுவினர் டிசம்பர் 27-ம் தேதி கண்டறிந்த  ALH84001 என்றழைக்கப்படும் எரிகல்தான் அது.


(Allan Hills-லிருந்து கண்டெடுக்கப்பட்டதால், ALH84001 என்றழைக்கப்படும் எரிகல்)

         அதுநாள்வரை தேடப்பட்டு வந்த உயிர் மூலக்கூறு ஒருவழியாக அதில் கிடைக்கப்பெற்றது! இங்கு உங்களுக்கு ஓர் சந்தேகம் எழலாம்."ஏம்பா...அதுல இருந்து வந்த உயிரினமெல்லாம் பரிணாமமடஞ்சிருச்சுனு சொன்ன...இதுல மட்டும் எப்புடி உயிர் மூலக்கூறு பரிணாமமடையாம அப்டியே இருந்துச்சாம்?" இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன.

          1. 'இது பரிணாமத்தைத் தோற்றுவித்த அதே கல்' என யாரும் சொல்லவில்லை. அதைப்போன்ற ஒன்று. பேன்ஸ்பெர்மியா கொள்கைக்கு வலுசேர்க்கும்வண்ணம் கிடைத்த ஆதாரம். அவ்வளவே.

          2. இது கிடைக்கப்பெற்ற இடம் "அண்டார்டிக்கா" (Antartica). அங்கு நிலவும் கடும் குளிர் பரிணாமத்தைத் தடை செய்திருக்கலாம். இதற்கு ஆதாரமாக குளிர்சாதனப் பெட்டியைக் (Refrigerator) கூறலாம். வெளியில் உருவாகும் பூஞ்சைகளின் வளர்ச்சி, குளிர்சாதனப் பெட்டியினுள் நிலவும் குளிரினால் தடுக்கப்பட்டு, உணவு பாதுகாக்கப்படுகிறது. மேலும், 'பரிணாம வளர்ச்சிக்காலத்தில் நிலவிய தட்பவெப்பத்தையும், சூழ்நிலையையும் தற்காலத்தில், நினைத்தாலும் உருவாக்க முடியாது' என பழைய பதிவுகளிலேயே கண்டோம்.

          

(ALH84001-ல் காணப்பட்ட உயிர் மூலக்கூறு)

         உண்மையில் இப்பரிணாமத்தைத் தோற்றுவித்த சக்தி உச்சத்தில் இருந்துதான் (விண்வெளி) வந்துள்ளது.

         "கல் கிடைத்துவிட்டது; ஆனால் இது எங்கிருந்து வந்தது?" எனத் தேடும்போது அகப்பட்டதுதான், நமது பூமியின் இரட்டைச் சகோதரனான "செவ்வாய்" (Mars). ஆம், இக்கல்லின் மூலக்கூறுகள் செவ்வாயிலிருந்து பெறப்பட்ட கற்களின் மூலக்கூறுகளுடன், (சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற கற்களை விட) கச்சிதமாகப் பொருந்தியது.

         அப்படியானால், நாம் செவ்வாய்வாசிகளா?
         இல்லை அவர்கள் சந்ததிகளா?
         அனுப்பப்பட்ட நாம் இங்கிருக்கிறோம்; (ஒருவேளை நாம் அவர்களால் அனுப்பப்பட்டிருந்தால்!) அனுப்பிய அவர்கள் எங்கே சென்றார்கள்?
         இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நம்மோடு உரையாட ஒரு இனம் உள்ளதா?

          இதுபோன்று எத்தனை கேள்விகள் எழுகின்றதோ, அத்தனையுடனும் காத்திருங்கள், அடுத்தவாரம் வரை!

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy: Google.

3 comments:

  1. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Mlife Casino & Spa: Gaming, Dining, Dining and More
    Mlife 안성 출장샵 is 김천 출장마사지 an innovative, high-tech, 안동 출장마사지 world-class gaming brand, 울산광역 출장마사지 and the 이천 출장마사지 ultimate destination for gaming, entertainment, dining and

    ReplyDelete