Tuesday 26 August 2014

6.) சூட்சுமம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

         சென்ற பதிவில் ஆர்ச்சியாவையும், சயனோ பாக்டீரியாவையும் கண்டோம். இன்று மேலும் நுணுகிக் காண்போம்; நுண்ணோக்கியின் துணையின்றி..!

         உயிர். இன்றளவிலும், யாராலும் இங்குதான் உள்ளது என அறுதியிட்டுக் கூறமுடியாத (கடவுள், பேய், அமானுஷ்யம், அதிசயம், வேற்றுகிரக உயிரினங்கள், இதுபோல இன்னும் பல) விஷயங்களுள் முக்கியமான ஒன்று. சரி. அந்த உயிரைப் பற்றி சிறிது பார்த்துவிட்டு, பின் Jurassic Park-க்கு போகலாம்.

          இன்றைய விஞ்ஞானம் காண இயலா உண்மைகளைக் கண்டவர்கள், நம்மவர்கள். உயிர் எங்கிருக்கிறது எனத்தெரியாது அறிவியலுலகம் விழிக்கும்போது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருமூலர் தனது பாடலில்,

"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
 கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
 மேவியது கூறது ஆயிரமானால்
 ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே"

         என்று கூறியுள்ளார். இதன் பொருள், ஒரு பசுவின் முடியை, நூறாகக் கூறிட்டு, அதில் ஒன்றை எடுத்து அதையும் ஆயிரமாகக் கூறிட்டு, அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து அதையும் நூறாயிரமாக(லட்சம்)க் கூறிட்டபின் அதிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரே ஒரு கூறின் அளவே இவ்வுயிரின் அளவு எனக் கூறியுள்ளார். (இத வச்சுக்கிட்டே நாம இவ்ளோ ஆட்டம்...!)

         தற்கால அறிவியல் கண்டறிந்த ஒரு விஷயம், ஒரு மனிதன் இறந்த பின் அவனது எடையிலிருந்து 21 கிராம் குறைகிறதாம். இதுவே உயிரின் எடையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதைக் கண்டறிந்து, உலகிற்கு வெளிக்கொணர்ந்தவர், அமெரிக்க உயிரியலாளர், Dr.டங்கன் மேக்டக்கல் (Dr.Duncan MacDougall) இவரது முழுப்பெயர் Dr.Duncan "Om" MacDougall. (இதுலயும் "ஓம்"-ஆ...?!). மற்றபடி, ஆன்மா, சொர்க்கம், நரகம் இவற்றையெல்லாம் அறிவியலுலகம் இன்னும் ஏற்கவில்லை.



( Dr.Duncan MacDougall )



( உயிரின் எடை குறித்த ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளின் ஒரு பகுதி )

         நாம் அவ்வாறு கண்டறிந்து கூறிய, இன்றைய நானோ டெக்னாலஜி (Nano Technology)-யின் முன்னோடியான விஷயங்களைப் பற்றி மேலும் அறிய, எனது நண்பர் திரு.செந்தில் குமரனின் வலைத்தளமான "www.vetrupakkam.com"-ஐப் பார்வையிடவும்.

         இன்றைய விஞ்ஞானம், ' "உயிர்" இதில் இருக்க வாய்ப்பு அதிகம்' என சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், DNA (De-oxyribo Nucleic Acid). இவற்றை மேலும் பிரித்தால் கிடைப்பது வெறும் அமினோஅமிலங்கள் (Amino Acids). ஒரு வீட்டில் செங்கல்லின் அடிப்படைப் பணியைப் போன்றது, ஒரு DNA-ல் அமினோஅமிலத்தின் பணி; அதாவது இதுவே DNA உருவாக்கத்தின் மூலம். மொத்தம் 21 அமினோ அமிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


( DNA )



( அமினோ அமிலத்தின் வகைகள் )

         இத்தகைய அமினோ அமிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாவது, கொலாஜென் (Collagen). இது ஒரு எளிய வகைப் புரோட்டீன். இதை உருவாக்க, 1055 அமினோ அமிலங்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்பாடு செய்ய வேண்டும். Statistics விதிகளின்படி, இவ்வாறு ஒரு ஒழுங்கமைவில் உருவாவதற்கான வாய்ப்பு, 1-க்குப் பின் 260 சைபர் போடுங்கள். அத்தனை சாத்தியக்கூறுகளில் ஒன்று...!!! (தலையில் அதிகம் முடி இருப்பவர்கள் இந்தத் தொகைக்கு ஒரு பெயர் வைத்து எனக்குக் கூறவும்...!) இது பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

         நமது ரத்தத்தில் உள்ள "ஹீமோகுளோபின்" ஒரு புரோட்டீன். இதை உருவாக்க, 146 அமினோஅமிலங்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே கூட எந்த அளவிற்கு அரிதான சாத்தியக்கூறு என்றால், 'ஒரு காயலான் கடையில் புயல் காற்று அடித்து, தானாக ஒரு "கார்" உருவாவதைப் போல...!'

        இத்தகைய DNA-வில்தான், ஒரு மனிதனின் உயிரியல் ஜாதகமே உள்ளது. இவற்றை ஜீன்கள் (Genes) என்பர். இதைப்பற்றிய படிப்பு, "ஜெனடிக்ஸ்" (Genetics) என்றழைக்கப்படுகிறது. இதில்தான் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின், நிறம், குணம், நோயின் அறிகுறி, ஆயுள், போன்று ஜோசியக்காரன் கூறும் அனைத்தும் அடக்கம். (ஆனா, இந்த Coding-அ உருவாக்கின Programmer யாருன்னுதான் இன்னும் தெரியல..!) 

         அவற்றை நான்கே எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட ஒரு மிகப்பெரிய நாவலாக இன்றைய அறிவியல் உலகம் காண்கிறது. அவை A, T, C மற்றும் G ஆகும். இதில் A, T-யோடு மட்டும்தான் சேரும். அதேபோல, C, G-யோடு மட்டும்தான் சேரும். (காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஈர்ப்பது போல அல்லது ஒரு Zip போல.) இதிலுள்ள A, T, C ,G எவ்வகை அமிலங்களைக் குறிக்கும் என்பதைப் பின்வரும் படங்களில் காண்க.

          இத்தகைய DNA-க்கள் ஒரு செல் உயிரினம் பிரிந்து, பல ஒரு செல் உயிரினங்கள் உருவாகக் காரணமாகின்றன. இது "இரட்டிப்பாதல்" (Replication) எனப்படுகிறது.




(  DNA இரட்டிப்பாதல் )

   [ இவற்றைப் பற்றி ஆழமாக ஆராயாமல் அடுத்த பகுதிக்குச் செல்வோம். ]

("இப்போ என்னதான்யா சொல்ல வர்ற...?" அப்டின்னு நீங்க புலம்புறது எனக்கு கேக்குது...!)

         காரணம் இருக்கிறது. இந்தத் தற்செயல் எவ்வாறு சாத்தியமானது? 'அதிசயம்தான்' என்று மட்டுமே பதிலளிக்கிறது அறிவியல். காரணம், இத்தகைய அமினோ அமிலங்களை நாம் செயற்கையாக உருவாக்க முனைந்தாலும், உருவாக்க இயலாது. ஏனெனில், அப்போதைய சூழ்நிலையை ஒருவரும் அறியார். அத்தகைய சூழ்நிலையை, மனித மனத்தின் அனுமானம் கொண்டு உருவாக்க இயலாது என்றே தோன்றுகிறது.

          சரி, 'இதில் நமது பதிவிற்கு சம்பந்தமான விசித்திரம் ஏதேனும் உண்டா?' என நோக்கும்போது, இவ்வாறு முறுங்கிய நூலேணி போல உள்ள ஒரே ஒரு மனித DNA-வை நீட்டினால், சராசரியாக 6 அடி நீளம் வருமாம். [ ஒரு மனிதனின் சராசரி உயரமாகக் கொள்ள உகந்த அளவு ]. அதே போல, ஒரு மனிதனின் உடலிலுள்ள அனைத்து DNA-க்களையும் இதேபோல நீட்டினால் வரும் நீளம், 15 கோடி கிலோ மீட்டர். [ சூரியனுக்கும், நமது பூமிக்கும் இடையே உள்ள தொலைவு ]. இது ஏதோ திட்டமிட்ட கணக்கீடு போலவே (எனக்குத்) தோன்றுகிறது. அச்சூட்சுமத்தை விரைவில் அறிவோம்; வரும் பதிவுகளில்.


          'நமது பிரபஞ்சம் முழுவதுமே கணக்கீடுகளால் ஆனவை' என்பன சார்ந்த பதிவுகளில் இவற்றைப் பற்றி மேலும் அறிவோம். இவற்றை விட மேலானதோர் ஆச்சர்யம், ஜுராசிக் யுகத்தில் காத்திருக்கிறது. அதையும் காண்போம் அடுத்த வாரம்.

அதுவரை நன்றிகளுடன்,
                 - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



துணைநின்ற நூல்கள்:

உயிரின் ரகசியம்.    --சுஜாதா.


Photo Courtesy : Google.


No comments:

Post a Comment