Tuesday 30 September 2014

11.) மாயாவி...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          எனது கடந்த பதிவுவரை நான் குறிப்பிட்ட விஷயங்கள் கோர்வையாக இன்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பதைப் போல உணர்வதாக எனது நட்பு வட்டாரத்திலிருந்து விமர்சனங்கள் வந்தன. நண்பர்களே, நான் கையிலெடுத்துள்ள விஷயம் சற்று சிக்கலானது. ஒரு மரத்தை வரைவது போலத்தான் இதுவும். வேரில் தொடங்கி, கிளையின் நுனிவரை சென்று, மீண்டும் திரும்பி, மற்றொரு கிளையில் பயணத்தைத் தொடர்வதைப்போல. எனவேதான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன், இவை சில அடிப்படையான விஷயங்கள் எனவும், சில சமயம் நமது இலக்கு திசை திரும்புவது போலவும் தோன்றலாம் என்று. மேலும் ஓர் முக்கியமான விஷயம். இனிதான் நாம் நமது பதிவின் நோக்கத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறோம், ஒருவழியாக!

         கடந்த பதிவுவரை நாம் கடந்த பதிவுகள், நமக்கு உணர்த்துவது போல தோன்றும் ஒரு விஷயம், "நாம் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பின் கீழ் வடிவமைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்பதே. ஆனால், அதைத் தாண்டிய குழப்பம் எதுவென்றால்,
  • அந்த வடிவமைப்பாளர் யார்?
  • அந்த மாயாவி ஒருவரா? இல்லை பலரா?
  • அவ்வாறு நம்மை உருவாக்கியதன் நோக்கம்? 
         விடைகள் இன்றுவரை மர்ம மௌனம் காக்கின்றன..!


         ஒருமுறை ஒரு கருத்து எழுந்தது. மனித இனம் உருவானதே, "நாம் ஏன் படைக்கப்பட்டோம்?", "நம்மைப் படைத்தவர்கள் யார்?" என்கிற கேள்விகளைக் கேட்கத்தான் என்று விளக்கியது அக்கருத்து. சரி, இதை உண்மையென வைத்துக்கொண்டால், நாம் அந்த இலக்கைத் தற்போது (அவர்கள் கருத்துப்படி) அடைந்துவிட்டோம், அதன்பின்னும் இதே நிலையில்தான் இருக்கிறோம். "அது ஏன்?" என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அதாவது ஒரு சாதாரண விளையாட்டில் கூட, இலக்கை அடைந்தபின் நிச்சயம் அவ்விளையாட்டு முடிந்துவிடும்; இல்லையேல் இன்னொரு தளத்திற்கு நம்மைக் கொண்டுசெல்லும். ஆனால், இங்கு அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே அக்கருத்து அதளபாதாளத்திற்குத் தள்ளப்பட்டது.

         சரி. அப்படியெனில் நாம் யார்?

         எனது நம்பிக்கையின்படி, நாம் பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளதாக, எனக்குத் தோன்றுகிறது. அவை,
  1. உயிர் பிழைக்க, தஞ்சம் புகுந்த நாடோடிகள்.
  2. பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு இனத்தின் மீதமுள்ள அல்லது பிரித்தனுப்பப்பட்ட சந்ததிகள்.
  3. பலகட்ட சோதனைகளுக்குப் பின், இக்கிரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட உயிருள்ள தபால்.
  4. இவ்விடத்தை, நம்மை அனுப்பியவர்களின் வசதிக்கேற்ப செம்மைப்படுத்த விதைக்கப்பட்ட மண்புழுக்கள்.
         "தம்பி...என்ன ஆச்சு உங்களுக்கு..?!" என்று நீங்கள் பதறும் அளவிற்கு நான் பிதற்றவில்லை, தெளிவாகவே கூறுகிறேன்.

          நான் இப்போது கூறும் வார்த்தைகளை கடைசிவரை நினைவில் கொள்ளுங்கள், நிச்சயம் ஒரு நாள் இவை நிரூபணமாகும்...!!!
  • "இவ்வுலகில் 'மனித இனம் மட்டும்' உச்சபட்ச அறிவுஜீவிகளாக இல்லை".
  • "இப்பிரபஞ்சத்தில் மனித இனத்தைவிட(அறிவிலும், தொழில்நுட்பத்திலும்) மேம்பட்ட இனங்களும், நம்மை விட அறிவில் குறைந்த (விலங்குகளை ஒத்த [உண்மையில் விலங்குகள் நாம் நினைக்கும் அளவிற்கு அறிவில் நமக்கு சளைத்தவை அல்ல,அவற்றை பின்னர் காணலாம்!]) இனங்களும் உள்ளன."
  • "நாம் வெளியில் தேடும் வேற்றுக்கிரகவாசிகள், நமது பூமியில் நமக்குத் தெரியாமல் நம்முடனே வாழ்வதற்கு வாய்ப்புள்ளது"(இதில் நான் MIB [Men In Black] படத்தைப் பற்றிப் பேசவில்லை)
  • "நாம் இக்கிரகத்தில் கடைசிவரை (அதாவது மனித இனம் அழியும் சூழ்நிலை வந்தால், அதுவரை) இருப்பது சந்தேகமே!"
          இவ்வாறு பட்டியலிடுமளவிற்கான விவரங்கள் இன்னும் ஏராளம். இவையனைத்தையும், எனக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமும்,  நான் கற்றதன் மூலம் பெற்ற ஆராய்ச்சி முடிவுகளின் மூலமும், இனிவரும் பதிவுகளில் விளக்க முயல்கிறேன். ஆனால், இவையனைத்திற்கும் முன்னதாக, நாம் யாராக இருக்க வாய்ப்புள்ளது என முதலில் காண்போம்.


         "Men are from Mars, Women are from Venus" என்றொரு புத்தகம் உண்டு. ஆண்-பெண் புரிதல் சம்பந்தமான புத்தகம். இருபாலரின் குணநலன்களும் வெவ்வேறானவை என்பதைக் குறிக்க இத்தகைய தலைப்பை சூட்டியிருக்கிறார், அப்புத்தகத்தின் ஆசிரியரான "ஜான் கிரே" (John Gray). கிரேக்க புராணத்தின்படி, "Mars"(செவ்வாய்) ஆண் கடவுள் - போரைக் குறிப்பவர்; "Venus" (வெள்ளி) பெண் கடவுள் - அழகைக் குறிப்பவர்.


(Mars with his horses 'Phobos' & 'Deimos')


(Venus)


          கிரேக்க புராணப்படி, மார்ஸ் கடவுளிற்கு இரு குதிரைகள் உண்டு. அவற்றின் பெயர், 'போபோஸ்' (Phobos) மற்றும் 'டெய்மோஸ்'(Deimos). ஆச்சர்யப்படத்தக்க வகையில், செவ்வாய் கிரகத்திற்கும் இரு நிலவுகள் உண்டு. எனவே அவற்றுக்கு, அக்குதிரைகளின் பெயரையே வைத்துவிட்டனர். இவையெல்லாவற்றையும் விட ஓர் ஆச்சர்யம் என்னவெனில், தொலைநோக்கி இருந்திருக்க வாய்ப்பில்லாக் காலம் என நாம் நம்பும் காலத்திலேயே, நாம் நமது கோவில்களில் நவக்கிரகம் வைத்து வழிபட்டுள்ளோம், அதுவும் சூரியனை மையப்படுத்தி பிற கிரகங்கள் சுற்றிவரும் வண்ணம். அதில் செவ்வாய்க் கிரகத்தின் நிறத்தைக் கூட சரியாகக் கணித்து "செவ்வாய்" என பெயரிட்டுள்ளோம். அதோடு, அவ்விக்கிரகத்திற்கு அணிவிக்கப்படும் வஸ்திரத்தின் நிறம் கூட சிவப்புதான்(!) செவ்வாயின் மறுபெயர், "அங்காரகன்". "கோபக்காரன்" எனப் பொருள். நிச்சயம் போருக்கு செல்பவனின் மனநிலை, பெரும்பாலும் அவ்வாறுதான் இருக்கும் என நம்பலாம். இந்த தொலைவுகள் கடந்த, கண்ணுக்குக்குத் தெரியாததோர் பிணைப்பும் ஆச்சர்யம்.


(செவ்வாயின் நிலவுகள்)


(நவக்கிரக விக்கிரகங்கள்)

          இதைக்காட்டிலும் இன்னுமோர் ஆச்சர்யம், வெள்ளி கிரகத்தை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட "பயோனியர்" (Pioneer Venus II), வெள்ளியின் வளிமண்டலத்தை ஆய்வுசெய்தபோது அங்கு நிலவிய ஒலிகளைப் பதிவு செய்தது. அவ்வொலி வீணையின் இசையை ஒத்திருந்தது. வீனஸ்-பெண் தெய்வம் - வீணை ஓசை, இத்தகைய பிணைப்பு நம்கண்முன் இணைய தோன்றும் உருவம், "சரஸ்வதி". (அடப்பாவிகளா... இவ்ளோ நாள் பாட்டி நிலாவுல வடை சுடுதுனுதானே சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க...இப்போ சரஸ்வதி வீணை வாசிக்குதுன்னு சொல்றீங்க-னு நீங்க சிரிக்கிறது எனக்குப் புரியுது. ஆனா, நான் சொல்ல வர்றது அது இல்ல. அந்த பாட்டி கதையையும் அவ்ளோ சாதாரணமா சொல்ல முடியாது. சொல்லப்போனால், எனக்குத் தெரிந்தவரையில் அதுதான் உலகின் முதல் அறிவியல் புனைகதை (Science-Fiction). அதிலும் தமிழன்தான் முன்னோடி!)


         மேலும், வீணையின் அமைப்பு, பெண்ணின் உருவ அமைப்பை ஒத்திருப்பதையும் நினைவுகூர்க. அத்துடன், அவ்வாறு வெள்ளியில் உருவான ஒலிக்குக் காரணம், அங்கு நிலவும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களேயாகும். ('அதெல்லாம் இருக்கட்டும். ஆனா, இது ரெண்டுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்குறமாதிரி தெரியலியே'-னு  தானே கேக்குறீங்க?! எனக்கும்தான் தெரியல!!! அமைதி...அமைதி...அமைதி... ஆனால், நிச்சயம் இவையனைத்திற்கும் ஏதேனுமோர் தொடர்பிருக்கும் என உள்மனதில் தோன்றியது. அதனால் தான் கூறினேன்!)

          இப்போது செவ்வாய்க்கு வருவோம். நமது பூமியின் இரட்டைச் சகோதரன் என அழைக்குமளவுக்குப் பொருத்தமான இடங்களில் ஒருங்கே அமைந்துள்ளது, பூமியுடன் செவ்வாய். இவ்வாறு அது அழைக்கப்படக் காரணம், நீரை நீர்ம நிலையில் தாக்குப்பிடிக்கும் தூரம் (சூரியனிலிருந்து), இவ்விரு கிரகங்களுக்கு மட்டுமே (இன்று நமக்குத் தெரிந்தவரையில்) உள்ளது. மேலும், ஒரு காலத்தில் செவ்வாயும், நம் பூமியைப் போன்ற சூழ்நிலையைப் பெற்றிருந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஒருவேளை அங்கு நமது பூமியைப் போன்ற சூழ்நிலை நிலவியிருந்தால், நிச்சயம் அங்கு உயிர்கள் உருவாகியிருக்கக் கூடும். 'அவ்வாறு உயிர்கள் உருவாகியிருந்தால் இப்போது அவையெல்லாம் எங்கே?' என்கிற கேள்விக்கு பதில்தான், நான் இப்பதிவின் முற்பகுதியில் குறிப்பிட்ட, சில செய்திக் கூறுகள்.


(பூமி - செவ்வாய் : ஒரு ஒப்பீடு)


          அங்கு நீர்நிலைகள் இருந்தமைக்கு ஆதாரமாக, உலர்ந்த ஏரிகளும், துருவப்பகுதிகளில் காணப்படும் பனிக்கட்டிகளும் விளங்குகின்றன. எனவே, உயிரின் ஆதாரம் என நம்மால் நம்பப்படும் விஷயம் அங்கிருக்கிறது, இன்றும். இது செவ்வாய்க்கிரகவாசிகள் பற்றிய ஆர்வத்தை மேலும் கிளர்ச்சியூட்டுகிறது. 

          அத்துடன், "நீர் இருந்தால், அங்கு உயிர்கள் இருக்கும் என்கிற அவசியம் இல்லை". அதேபோல், "நீர் இருந்தால்தான் அங்கு உயிர்கள் இருக்கும் என்கிற அவசியமும் இல்லை". இதற்கான ஆதாரங்கள் என்னென்ன என்பதை, இதுநாள்வரை எனது பதிவுகளைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். 


(செவ்வாயின் துருவப் பகுதியில் காணப்படும் பனிப்படலம்)

           மேலும், "உலகில் முதலில் தோன்றிய மனிதன் ஆண்" எனக்கூறும், வேதம் ஓதும் நல்லோர்களின் வாக்கும், "Men are from Mars" என்கிற வாசகமும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையான, ஒரு "அனுமான காரணத்திற்கு" (Hypothetical Syllogism) என்னை இட்டுச்செல்கிறது. அதாவது, "உலகில் முதலில் தோன்றிய மனிதனான ஆண், செவ்வாயிலிருந்து வந்தவன்" என்பதுபோல! இவையெல்லாம் உண்மை எனக்கருதுவோம், (நம் மனம் ஏற்கும்வரை). சரி, 
  1. அப்படியானால், இப்போது அவர்கள்  எங்கே? அழிந்துவிட்டார்களா?
  2. இல்லை, வேறெங்காவது சென்றுவிட்டார்களா?
  3. அவ்வாறு சென்றிருந்தால், அவ்விடம் அவர்கள் வாழத்தகுந்த இடமா?
          பலரது பதில், 'இருக்கலாம்' அல்லது 'தெரியாது'.

          ஆனால் எனது பதில், அவர்கள் இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், நாம், நான் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வகையில் வர வாய்ப்புள்ளது. அதற்கான ஆதாரங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் இனிவரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம். அத்துடன், நாம் அனுப்பியுள்ள "மங்கள்யான்" எத்தகைய தகவல்களைக் கொண்டுவரப் போகிறது, என்பதிலும் ஆர்வமாய் எதிர்நோக்குவோம். 

          அதுவரையிலும் காத்திருங்கள். அடுத்தவாரம், மங்கள்யான் தகவல் தந்தாலும், தராவிட்டாலும், நிச்சயம் அயலான் தகவல் தருவான்.

அதுவரை நன்றிகளுடன்,
                       - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:


Photo Courtesy : Google.

Tuesday 23 September 2014

10.) காரணகர்த்தாவும், சூத்திரதாரியும் ...!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          கடந்த வாரம் ஒரு பதிவராக எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத வாரம். காரணம் பல இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது, இந்திய அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியான திரு.சுந்தரராமன் (விண்வெளி ஆராய்ச்சியாளர், பெங்களூர்) அவர்கள், எனது பதிவுகளைப் பார்வையிட்டபின், என்னை அலைபேசிமூலம் தொடர்புகொண்டு பாராட்டினார். அவர், பிரபல எழுத்தாளர்கள் திரு.சுஜாதா, திரு.புஷ்பா தங்கதுரை மற்றும் 'தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம்' என வர்ணிக்கப்படும் திரு.யூகி சேது போன்றவர்களின் நண்பரும் கூட. மேலும் ஒரு தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளர், நான் எழுதும் விண்வெளி விஷயங்களைப் பற்றிப் பாராட்டுவதென்பது, "வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது போல". (இதுக்கு என்ன அர்த்தம்-னு என்கிட்ட கேக்காதீங்க, அதைச் சொல்றதுக்கு "யாத்ரீகன்"-னு ஒருத்தன் சீக்கிரம் வருவான்! அவன் வர்ற வரைக்கும் கொஞ்சம் காத்திருங்க.)

[இவ்விஞ்ஞானியின் தொடர்பு ஏற்பட காரணமாக இருந்த, நான் பணிபுரியும் அறக்கட்டளையின் நிறுவனரும், இயக்குனருமான திரு.சிவராஜா அவர்களுக்கும், அவரது ரத-சாரதி திரு.திருப்பதி அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.]

          இரண்டாவது காரணம், எனது சமீபத்திய பதிவு, கடந்த ஒரு வார காலத்தில், இருநூறு முறைகளுக்கு மேல், சராசரியாக பத்து நாடுகளில் பார்வையிடப்பட்டுள்ளது. இதுவரையிலும் எனது பதிவுகள் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து ஐநூறு முறைகளுக்கு மேல் பார்வயிடப்பட்டுள்ளது. ஆஸ்காரையும் மிஞ்சும், (எனது எழுத்தின் ஆர்வலர்களின்) விருது இது.

          {முன்பெல்லாம் பதிவர்கள் மட்டுமே, கருத்துகளை எனது பதிவில் வெளிப்படுத்த வசதி இருந்தது. தற்போது G-Mail கணக்கு இருந்தாலே போதுமானது என்ற அளவில் வசதிகள் மாற்றப்பட்டுள்ளது. இருந்தும் கருத்துப் பதிவுகளும், கலந்தாய்வுக் கேள்விகளும் வந்தபாடில்லை என்பதே என் ஒரே கவலை!}

          இது என் பத்தாவது பதிவு. ஒரு பதிவராக என்னை நீங்கள் அனைவரும் அங்கீகரித்த பின் உணர்ந்த ஒரு உண்மை, "பின் தூங்கி முன் எழுவது, பத்தினிகள் மட்டுமல்ல. பதிவர்களும் தான்!" ஆனாலும் கூட நீங்கள் தரும் ஆதரவுகளும், எதிர்பார்ப்புகளும், உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றாலும், அச்சத்திற்கும் உட்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் எதிர்பார்ப்புகள் வீண்போகாது என நம்பலாம். உங்களின் ஆதரவுடனும், கடவுளின் ஆசியுடனும் (அப்படி ஒருவர் இருந்தால்) இன்றைய பதிவுகளைத் தொடர்கிறேன்.

          'பகுத்தறியும் ஒரு விஞ்ஞானி, கடவுள் பற்றிப் பேசுகிறானே?' என்கிற கேள்வி உங்களுள் எழலாம். காரணம் இருக்கிறது. ஏனெனில், இத்தனை நாட்கள் கடவுளின் தேவையற்ற தன்மையை ஆராய்ந்த காரணத்தால், நம்மோடு வாழும் கடவுள் நம்பிக்கையுள்ள நண்பர்கள் பலருக்கும் 'நான் எந்த பக்கம்?' என்கிற சந்தேகம் சமீப காலங்களில் எழுந்துள்ளது. உங்களுக்கு எது சவுகரியமாகப் படுகிறதோ, அதில் என்னைப் பொருத்திக்கொள்ளுங்கள். சரி, இன்றைய பதிவில், 'கடவுள் என்றோரு சக்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உண்டா?' எனக் காண்போம். (வழக்கம் போல இதிலும் நான் எதையும் "தீர்ப்பு" போல சொல்லவில்லை. யதார்த்தமான கருத்துப்பதிவு மட்டுமே. முடிவுகள் உங்கள் விருப்பத்திற்கே விடப்படுகிறது)

          முன்னரே குறிப்பிட்டபடி, இது எனது பத்தாவது பதிவு. "10", இவ்வெண்ணிலுள்ள இருவேறு துருவ எண்கள், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் இரும எதிர்நிலைகளைக் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதாவது, ஒளி - இருள், மேடு - பள்ளம், விஞ்ஞானம் - அஞ்ஞானம் ('மெய்ஞானம்', விஞ்ஞானத்தின் எதிர்ப்பதம் அல்ல) அதுபோல, விஞ்ஞான விளக்கங்களுக்கும் அப்பாற்பட்ட சில மர்மமான, அமானுஷ்ய விஷயங்களும் நம் உலகில் உலவுவது விஞ்ஞானப்பூர்வமாகக் கூட மறுக்க முடியாத உண்மை.

           உதாரணமாக, நமது சூரியக்குடும்பத்தை எடுத்துக்கொண்டோமானால், புதனிலிருந்து(Mercury) செவ்வாய்க் கிரகம் (Mars) வரை பாறைகளால் ஆன கோள்கள். வியாழனிலிருந்து நெப்டியூன் வரை வாயுக்களால் ஆன கோள்கள். இரண்டையும் சமகூறாய்ப் பங்கிட்டதைப் போல(!) நடுவில் விண்கற்களின் வளையம் (Asteroid Belt). ('இதில் புளுட்டோ வரவில்லையே!' என நீங்கள் கேட்கலாம். அது இவ்விரு பிரிவிலும் சேராத, பனிக்கட்டிகளால் ஆன கோள். 'இது ஒரு கோளின் தகுதியைப் பெற்றிருக்கவில்லை' எனப் பலமுறைப் புறக்கணிக்கப்பட்டு, பல சர்ச்சைகளைத் தாண்டி இன்று ஒருவாறாக, "கோள்" என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.)


(சூரியக்குடும்ப உறுப்பினர்களின் உண்மையான அளவுகள், ஒரு ஒப்பீடு)
(Family Photo)


(Asteroid Belt)

          ("போன பதிவுல செவ்வாய்கிரகவாசி, அது இது-னு 'பில்டப்' பண்ணிட்டு, இன்னைக்கு வண்டிய எங்க ஓட்டிட்டு போற?"-னு நீங்க கேக்குற நியாமான கேள்வி எனக்கு கேக்குது. ஆனா, அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கிறது அவசியம்னு எனக்குத் தோணுச்சு!)

          நான் முன்னரே குறிப்பிட்ட இரும-எதிர்நிலைகள் பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன்னரே கூட இருந்திருக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கை. காரணம், பிரபஞ்சம் தோன்றும் வரை அங்கு அப்படி ஒன்று இல்லை, அதாவது "௦". அதன்பின் பிரபஞ்சம் இருந்தது, அதாவது "1". இந்த இரட்டை எதிர்நிலை மட்டுமே அனைத்திற்கும் அடிப்படை. அதனால்தான் ஃபிபோனாசி வரிசை (Fibonacci Series)-யிலிருந்து, இன்று கணினியின் மூலமான இருமக்குறியீடுகள் (Binary Codes) வரை சகலமும் இவ்விரு எண்களில் அடங்கும்.


          'அனைத்தும் தோன்றும் முன்னரே கணிதம் இருந்தது' என்கிற கணிதவியலாளர்களின் கருத்துகளை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு மனிதனின் உயிர் மூலக்கூற்றின் (DNA) ஒட்டுமொத்த நீளத்திற்கும், பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவிற்குமான தொடர்பை முந்தைய பதிவுகளிலேயே பார்த்தோம். அதனினும் ஓர் ஆச்சர்யமான விஷயம், "விட்ருவியன் மனிதன்" (Vitruvian Man) என்றழைக்கப்படும் ஓவியம் கூறும் சூசகமான உண்மை.


(Vitruvian Man)

         கி.மு.முதலாம் நூற்றாண்டளவில் ரோமாபுரியில் வாழ்ந்த கணித அறிஞரான "விட்ருவியஸ்" (Vitruvius) என்பவர் "மனிதன் கணித அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கலாம்" என்கிற கருத்தை முன் வைத்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 15-ம் நூற்றாண்டில், இத்தாலியில் வாழ்ந்த பன்முகத் திறமையாளரான, "லியோனார்டோ டாவின்சி" (Leonardo DaVinci) என்பவர் ஓவியமாக வரைந்து, விட்ருவியசின் கருத்திற்கு வலுசேர்த்தார். இவ்வோவியத்தின்படி, ஒரு மனிதனின் அதிகபட்ச அசைவுகளை, ஒரு வட்டம், ஒரு சதுரம் - இவற்றினுள் அடக்கிவிடலாம். இது, "மனிதன் கணித அடிப்படையில் உருவானவனோ?" என்கிற கேள்வியை நம்முள் எழுப்புகிறது.


(Vitruvius)


(Leonardo DaVinci)

          மேலும் நம்மைச் சுற்றிலும் காணப்படும் இயற்கையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களிலும் இக்கணிதத்துவம் இருப்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக, சூரியகாந்திப் பூவின் விதைகள் அமைந்துள்ள விதம், நத்தை ஓட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம், பிரபஞ்ச சுழற்சி போன்றவை மிக முக்கியமான, அதே சமயம் சாமானியராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய விஷயம். இந்த "ஃபிபோனாசி வரிசை"யை கி.பி. 12-ம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த, "லியோனார்டோ ஃபிபோனாசி" (Leonardo Fibonacci) என்பவர் கண்டறிந்தார்.


(Leonardo Fibonacci)


(நத்தை ஓட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்)


(சூரியகாந்திப் பூவின் விதையமைப்பு)


("குழந்தை கருவாக இருக்கும் அமைப்பு" மற்றும் "பிரபஞ்ச சுழற்சி" போன்றவை ஃபிபோனாசி வரிசையில் வரையப்பட்ட வரைபடத்தை ஒத்திருப்பதைக் காட்டும் ஒரு ஒப்பீடு)

          இவைமட்டுமல்லாது, சூரியக்குடும்பத்தின் கோள்கள், சூரியனிலிருந்து அமைந்திருக்கும் தொலைவின் அளவுகளில் மறைந்துள்ள ஃபிபோனாசி தொடர்கள் பின்வருமாறு,


(இதில் 'AU' என்று குறிப்பிடப்படும் அலகு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவை அடிப்படை அளவாகக் கருதும் ஒரு தூர அளவை முறையாகும்.)

           மேலும், நமது வளிமண்டலத்தில் காணப்படும் மந்தவாயுக்களின் அணு எண்ணிற்கும், அதற்கு ஏற்ற (அருகாமை) ஃபிபோனாசி வரிசையில் வரும் எண்ணிற்குமான ஒற்றுமை பின்வருமாறு,



          இவ்வாறாக எங்கும் கணிதம்,எதிலும் கணிதமாய்; தூணிலும் துரும்பிலும் இருப்பதாக நம்பப்படும் கடவுளுக்கு அடுத்த நிலையில், கணிதம் நம் வாழ்வியலோடு பிணைந்துள்ளது.

           அதேபோல், மனிதன் உருவாக ஒரு விந்தணுவும், கருமுட்டையும் இணைய வேண்டும். உலகிலேயே மிகச்சிறிய செல் "விந்தணு", மிகப்பெரிய செல் "கருமுட்டை". இவ்விருவேறு துருவங்கள் இணைந்தே நம் மனித இனம் தழைக்கிறது. இவ்விரு செல்களின் இருபரிமாணத் தோற்றங்களும் கூட பார்ப்பதற்கு "1" மற்றும் "௦" போல தோன்றுகிறது.


(விந்தணு - [Sperm])


(கருமுட்டை - [Ovum])

          எல்லாவற்றுக்கும் மேலாக, பைபிளின்படி, "கடவுள் உலகை ஆறு நாட்களில் படைத்தார்", என குறிப்பிடப்பட்டுள்ளது. "அது என்ன கணக்கு,ஆறு நாட்கள்?" என ஆராய்ந்தால், "6" ஒரு "ஆதர்ச எண்" (Complete Number). அதாவது ஒரு எண்ணை அந்த எண்ணைத் தவிர்த்து, அதைவிடக் குறைந்த எந்தெந்த எண்களாளெல்லாம் முழுமையாக வகுபடுமோ, அவ்வெண்களின் கூட்டுத் தொகை, நாம் தேர்ந்தெடுத்த எண்ணிற்குச் சமமாக வந்தால், அவ்வெண், "ஆதர்ச எண்" எனப்படும். ('ஒரு மண்ணும் புரியல'-னு நீங்க புலம்புறது எனக்கு கேக்குது!)கீழே கொடுக்கப்பட்டுள்ள படவிளக்கம், உங்களை தெளிவு படுத்தும் என நம்புகிறேன்.


          இது மட்டுமல்ல, இன்னும் பல ஆதர்ச எண்கள் இருந்தாலும், மிகச்சிறிய மதிப்புடைய ஆதர்ச எண் "6" மட்டுமே. 100 வரையிலான எண்களுக்குள் காணப்படும் மற்றுமொரு ஆதர்ச எண், "28". (இதுக்கு, நீங்க கணக்கு போட்டு பாருங்க!)

  "இயற்கையாகவே, இவ்வாறான ஒரு சூழ்நிலை, யாதொரு புற காரணிகள் அல்லது சக்தியின் துணையின்றி  உருவாக வாய்ப்புள்ளதா?" 

           பதில், "நிச்சயமாக" இல்லை; "யூகமாக" வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்பதே.

          அப்படியெனில்,
  • இந்த அளவிற்கு கணித முறைப்படி பிரபஞ்சத்தை இயக்கும் காரணகர்த்தா யார்? (அப்படி ஒருவர் இருக்கிறாரா?)
  • இத்தனை உயிர்களையும் ஏதோ ஒரு கணக்கீட்டைப் பயன்படுத்தி உருவாக்கிய சூத்திரதாரி யார்? (அவ்வாறு ஒருவர் இருக்க வாய்ப்புண்டா?)
  • கடவுளா? கடவுளராய்ப் பார்க்கப்படும் நம்மை விட மேம்பட்ட ஓர் உயிரினமா? (இவையனைத்தும் சாத்தியமா?)
காணலாம் அடுத்த வாரம்; காத்திருங்கள் நம்பிக்கையுடன்.

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy: Google & Facebook.


Tuesday 16 September 2014

9.) மனிதன், தனியனா...?!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

         எனதன்பு ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் நற்செய்தி. இனி, எனது பதிவுகளின் கீழ், தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய, பதிவாளர் கணக்கு (Blogger Account) இருக்கவேண்டிய அவசியம் இல்லை; மின்னஞ்சல் கணக்கு (G-Mail Account) இருந்தாலே போதுமானது. தங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

          இதுவரை பதிவேற்றப்பட்ட பதிவுகளில், கடவுளின் துணை தேவையற்ற நிலைகளைக் கண்டோம். இன்றைய பதிவு, சற்று மாறுதல்களோடு ஆரம்பமாகிறது.

          இன்றளவிலும் உலகில் ஏற்பட்ட முக்கியமான பல மாற்றங்கள், மதங்கள் என்ற பூதங்கள் காக்கும், உண்மையில் மதங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு பொதுவான புதையலான "வேதங்கள்" மூலம், ஒவ்வொரு விஞ்ஞானிகளின் தூண்டுதலின் பேரில் வெளிக்கொணரப்பட்டவயே! (அடேங்கப்பா...எவ்ளோ பெரிய வாக்கியம்...!)

           "அவையனைத்தையும் நமது முன்னோர்கள் தருவித்தார்கள்" என பெருமைபடக் கூறினாலும், அவர்களும் இறுதியில் கூறும் ஒரு விஷயம், "உச்சத்தில் ஒரு சக்தி நிச்சயம் உண்டு" என்பதே! எனக்கும் தனிப்பட்ட முறையில் சில நம்பிக்கை என்பதைத் தாண்டிய, ஆசைகள் உண்டு. நாம் இன்றளவிலும் நம்பும் அந்த உச்ச சக்தி கடவுளாக இருந்தால், "நாம் ஏமாறவில்லை; நமது நம்பிக்கை பொய்க்கவில்லை" என சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.

           சரி உண்மையில் இந்த நாகரீகத்தை மனிதகுலத்திற்குக் கற்றுக்கொடுத்தது யார்?

           கடவுளா?
           இல்லை நாகரீகத்தை நமக்கு முன் கண்டறிந்த ஓர் இனமா?

           மீண்டும் கடவுளிலிருந்தே தொடங்குவோம். (இதுவும் 'கன்னித்தீவு' போல நீண்டுகொண்டுதான் செல்கிறது). ஏற்கனவே, நமது முந்தைய பதிவுகளில் அலசியபடி, கடவுள் நம்மை நேரடியாகப் படைத்திருந்தால், படைத்தபின், நிர்வாணமாக வாழ அனுமதித்திருக்க மாட்டார். மேலும், ஒரு தாயிலிருந்தே நாம் படைக்கப்பட்டோமேயானால், சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்யும் அபத்தத்தைக் கடவுளாகப்பட்டவர் நிச்சயம் செய்திருக்க மாட்டார்.

           ஒருவேளை நம்மை உருவாக்கியது, நம்மை விட மேம்பட்ட இனமாக இருந்தால்?

           அதற்கு முதலில் நாம் "பேன்ஸ்பெர்மியா" கோட்பாட்டைப் (Panspermia Theory) புரிந்துகொள்ள வேண்டும். இதை எளிமையாகப் புரிந்துகொள்ள நாம் "Evolution" படத்தைப் பார்த்தல் போதுமானது.


          இதன்படி, பூமியில் மோதிய ஒரு விண்கல் (Asteroid) அல்லது எரிகல்லின் (Meteorite) உள்ளிருந்து வெளியாகும் நுண்ணுயிரிகள், அபரிமிதமான வேகத்தில் பரிணாமமடைந்து, பின் இவ்வுலகையே வசப்படுத்த முயற்சிப்பது போலக் காட்சிப்படுத்தியிருப்பர். (நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும், முடிவில் Shampoo விளம்பரம் போல முடித்திருப்பது, சற்று உறுத்தலாக இருக்கும்.)

          பேன்ஸ்பெர்மியா கோட்பாடும் இதையேதான் குறிக்கிறது. அதாவது, உயிர் மூலங்கள் நமது பூமியில் உருவாகவில்லை. மாறாக, எங்கிருந்தோ நமது பூமிக்கு எரிகல் மூலம், தபால் போல அனுப்பப்பட்டது. 'பெறுநர்' பூமி என்றாலும், 'அனுப்புநர்'-ன் விலாசம்தான் இன்னும் மர்மமாகவே உள்ளது.


(பேன்ஸ்பெர்மியா கோட்பாட்டை விளக்கும் படம்)

          ஒருவேளை இக்கொள்கை உண்மையாக இருந்தால், நிச்சயம் நம்மை ஒரு மேம்பட்ட இனம் இப்பூமிக்கு அனுப்பியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

          இப்பதிவிற்கான விமர்சனமாக, முதலில் எழும் வழக்கமான, அதேசமயம்  புத்திசாலித்தனமான ஒரு கேள்வி, "இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?" என்பதே.

           அப்படி ஒரு எரிகல் பூமியைத் தாக்கியிருந்தால், நிச்சயம் அக்காலத்தில் நாம் இருந்திருக்க மாட்டோம்; ஒருவேளை இருந்திருந்தாலும் அத்தகைய எரிகல்லின் தாக்கத்திற்குப் பின் (உயிருடன்) இருந்திருக்க மாட்டோம். ஏனெனில், நாம் நமது பழைய பதிவுகளின் மூலம் அறிந்தவாறு, 'ஒரு எரிகல்லோ, வால்நட்சத்திரமோ நமது பூமியின் மீது மோத முற்படுமாயின், நமது பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தின் அடர்த்தி காரணமாக சாம்பலாகிவிடும். ராட்சச அளவுள்ள கற்கள் கூட, மிகச்சிறு கற்களாக நொறுங்கிப்போகும்' என்பதே. இத்தகைய பாதுகாப்பையும் மீறி ஒரு கல் பாதுகாப்பாக, அதுவும் உயிர் மூலக்கூறுகளின் வித்துக்களை உள்ளடக்கியவாறு பூமியில் பத்திரமாக தரையிறங்குவது என்பது சாதாரண காரியமல்ல.
           

(பூமியின் மீது மோத முற்படும் விண்கல்)

         'இதற்கு வலுசேர்க்கும் ஆதாரமாக ஏதேனும் கிடைக்குமா?' என, விஞ்ஞானிகள் விண்ணில் தங்கள் Telescope கண்களால் தேட ஆரம்பித்தனர். ஏற்கனவே, நமது சூரியக்குடும்பத்தில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஏகப்பட்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன அவை, Asteroid Belt எனப்படுகின்றன. அவை யாவும் ஒரு கோளாக மாறும் முயற்சியில் தோல்வியடைந்து, கருச்சிதைவுற்ற கிரகங்களே. 'அதில் ஏதேனும் உயிர் மூலக்கூறுகளுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா?' எனத் தேடினர். இதுவரையில் எதுவும் கிட்டவில்லை. 'சரி விண்ணின் பிற வெளியிலாவது ஏதேனும் இருக்க வாய்ப்புண்டா?' எனவும் துழாவினர்; இதுவரையில் நேர்மறையான ஆதாரங்கள்  எதுவும் சிக்கவில்லை.
         

(Asteroid Belt)


(விண்வெளி மூலக்கூறுகள்)

         'சரி விண்ணில்தான் எதுவும் கிடைக்கவில்லை; மண்ணிலாவது எதாவது கிடைக்கிறதா என பார்ப்போம்' என தேடியவர்களுக்குக் கிடைத்தது ஒரு பொக்கிஷம். ANSMET project என்கிற பெயரில், 1984-ம் ஆண்டு அண்டார்டிகாவிலுள்ள ஆலன் மலைத்தொடரில் (Allen Hills), எரிகற்கள் குறித்து ஆராயும் ஒரு அமெரிக்கக் குழுவினர் டிசம்பர் 27-ம் தேதி கண்டறிந்த  ALH84001 என்றழைக்கப்படும் எரிகல்தான் அது.


(Allan Hills-லிருந்து கண்டெடுக்கப்பட்டதால், ALH84001 என்றழைக்கப்படும் எரிகல்)

         அதுநாள்வரை தேடப்பட்டு வந்த உயிர் மூலக்கூறு ஒருவழியாக அதில் கிடைக்கப்பெற்றது! இங்கு உங்களுக்கு ஓர் சந்தேகம் எழலாம்."ஏம்பா...அதுல இருந்து வந்த உயிரினமெல்லாம் பரிணாமமடஞ்சிருச்சுனு சொன்ன...இதுல மட்டும் எப்புடி உயிர் மூலக்கூறு பரிணாமமடையாம அப்டியே இருந்துச்சாம்?" இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன.

          1. 'இது பரிணாமத்தைத் தோற்றுவித்த அதே கல்' என யாரும் சொல்லவில்லை. அதைப்போன்ற ஒன்று. பேன்ஸ்பெர்மியா கொள்கைக்கு வலுசேர்க்கும்வண்ணம் கிடைத்த ஆதாரம். அவ்வளவே.

          2. இது கிடைக்கப்பெற்ற இடம் "அண்டார்டிக்கா" (Antartica). அங்கு நிலவும் கடும் குளிர் பரிணாமத்தைத் தடை செய்திருக்கலாம். இதற்கு ஆதாரமாக குளிர்சாதனப் பெட்டியைக் (Refrigerator) கூறலாம். வெளியில் உருவாகும் பூஞ்சைகளின் வளர்ச்சி, குளிர்சாதனப் பெட்டியினுள் நிலவும் குளிரினால் தடுக்கப்பட்டு, உணவு பாதுகாக்கப்படுகிறது. மேலும், 'பரிணாம வளர்ச்சிக்காலத்தில் நிலவிய தட்பவெப்பத்தையும், சூழ்நிலையையும் தற்காலத்தில், நினைத்தாலும் உருவாக்க முடியாது' என பழைய பதிவுகளிலேயே கண்டோம்.

          

(ALH84001-ல் காணப்பட்ட உயிர் மூலக்கூறு)

         உண்மையில் இப்பரிணாமத்தைத் தோற்றுவித்த சக்தி உச்சத்தில் இருந்துதான் (விண்வெளி) வந்துள்ளது.

         "கல் கிடைத்துவிட்டது; ஆனால் இது எங்கிருந்து வந்தது?" எனத் தேடும்போது அகப்பட்டதுதான், நமது பூமியின் இரட்டைச் சகோதரனான "செவ்வாய்" (Mars). ஆம், இக்கல்லின் மூலக்கூறுகள் செவ்வாயிலிருந்து பெறப்பட்ட கற்களின் மூலக்கூறுகளுடன், (சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற கற்களை விட) கச்சிதமாகப் பொருந்தியது.

         அப்படியானால், நாம் செவ்வாய்வாசிகளா?
         இல்லை அவர்கள் சந்ததிகளா?
         அனுப்பப்பட்ட நாம் இங்கிருக்கிறோம்; (ஒருவேளை நாம் அவர்களால் அனுப்பப்பட்டிருந்தால்!) அனுப்பிய அவர்கள் எங்கே சென்றார்கள்?
         இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நம்மோடு உரையாட ஒரு இனம் உள்ளதா?

          இதுபோன்று எத்தனை கேள்விகள் எழுகின்றதோ, அத்தனையுடனும் காத்திருங்கள், அடுத்தவாரம் வரை!

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy: Google.

Tuesday 9 September 2014

8.) மெய்ப்பொருள் காண்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          எனது பதிவுகள் சமீபத்தில் ஆயிரம் முறைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. உண்மையில் இது, நானே கூட எதிர்பார்க்காத ஆச்சர்யமான வெற்றி. இதன் முழுமுதற்காரணமான எனது அன்பார்ந்த ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள். இது உங்களால் மட்டுமே சாத்தியமானது.

          எனது கடந்த பதிவில், கடவுளைப்பற்றி கலந்துரையாடினோம். உண்மையில், இதுவரை எனது எந்தவொரு பதிவிற்கும் இல்லாத அளவிற்கு, இந்த பதிவிற்கு, எனது பக்கத்தின் பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்கள் வந்திருந்தது; பெரும்பாலானவை தனிப்பட்ட முறையில். இதில் எத்தனை பேர் என்னை தொடர்புகொள்ள நினைத்து முடியாமல் போனதோ தெரியவில்லை. ஆகவே, என்னைத் தொடர்புகொள்ளத் தேவையானவற்றை இப்பதிவின் இறுதியில் தருகிறேன்.

           சென்ற வாரம், நாம் "கடவுள்" கோட்பாட்டின் பின்னால் உள்ள விஷயங்களை சற்று பார்த்தோம். இந்த வாரமும் நான் அவரை விடுவதாய் இல்லை. நான் எதிர்பார்த்தது போலவே, எனக்கு தேவையான விஷயங்கள் எனக்கு வந்த விமர்சனங்கள் மூலமும், என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும் "தற்செயல்கள்" மூலமும் கிடைத்தன.

            அதில், கடவுள் நம்பிக்கையாளரான எனது நெருக்கமான தோழர் ஒருவர் எனக்கு ஒரு இணையதள இணைப்பு ஒன்றை, முகநூல் வாயிலாக அனுப்பினார். அதில், பரிணாம வளர்ச்சியை 'பொய்' என நிரூபிப்பதற்க்கான காரணங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் அவர்கள் சொன்ன முதல் விஷயம்,


          1. பரிணாமம் ஒரு விதி அல்ல. காரணம் அது டார்வினின் அனுமானத்தின் மூலம் எழுதப்பட்டது.

          நண்பர்களே, நாங்களும் அதை விதி என்று கூறவில்லை; "கோட்பாடு" அல்லது "கொள்கை" என்றே குறிப்பிடுகிறோம். காரணம், விதிகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டவை. கோட்பாடுகள் என்பவை, ஆதாரங்களை நிரூபிக்க தகுந்த சூழல்கள் இல்லாதபோது, ஒரு விடுபட்ட பிணைப்பை சேர்க்க உதவும் ஒரு பிணைப்பு போன்றது. ஆனால், இரண்டுமே மாறுதலுக்குட்பட்டவைகளே! ஆன்மீகத்தைப் போல, மாற்றக்கூடாத அல்லது மாற்ற இயலாத விதிகள் என்று அறிவியலில் எதுவும் இல்லை.

          கலிலியோ கலிலி (Galileo Galilei)-ன் காலத்தில் அவரை அவர் செய்த ஆராய்ச்சிக்காக துன்புறுத்தியவர்கள் மதகுருமார்கள் மட்டுமல்ல. அவருக்கு முன் கோட்பாடுகளிலும், விதிகளிலும் கொடிகட்டிப் பறந்த அரிஸ்டாட்டி(Aristotle)-லின் ஆதரவாளர்களும்தான். இத்தனைக்கும் அரிஸ்டாட்டில் கி.மு.வில் வாழ்ந்தவர். இருப்பினும் அத்தகைய ஆராய்ச்சியாளர்கள், கலிலியோவை துன்புறுத்தக் காரணம், அரிஸ்டாட்டிலின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், குரு பக்தியும் என்றே கூறலாம்.


(கலிலியோ கலிலி)


(அரிஸ்டாட்டில்)

          அவ்வாறு கலிலியோ விசாரிக்கப்படும்போது, "நீ கடவுள் கொள்கைகளுக்கு எதிராக ஆராய்ச்சி செய்திருக்கிறாய். (கடவுள் இப்டிலாம் செய்யதீங்கனு உங்ககிட்ட சொன்னாரா..?!) மேலும், நீ சூரியனை  பூமி சுற்றுவதாகக் கூறியுள்ளாய். அதை நீ மறுத்தால், உன்னை விடுவிக்கிறோம்" என்றனர். அதற்கு கலிலியோ, "நான் மறுத்தாலும் பூமி அவ்வாறுதான் சுற்றும்" என்றார். (நானும் அப்படித்தான் கூறுகிறேன்!)


          2. பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், பனிப்பிரதேசத்தில் வாழும் மக்களின் உடலில், பனிக்கரடி போன்ற விலங்குகளுக்கு குளிரைத்தாங்க ஏதுவாக ரோமங்கள் உள்ளதே, அது போல் ஏன் அமையவில்லை?

          நல்ல கேள்விதான். ஆனால் இதன் பதில் எளிது! ஆரம்பகாலத்தில், நமது உடல் சூழலுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டது. ஆனால் இப்போது, நாம் நமது தேவைக்கேற்ப சூழலை மாற்றியமைக்கும் திறன் பெற்றுவிட்டோம். ஆகவே பரிணாமம் தடைபட்டு விட்டது. பலநூறு ஆண்டுகளாக மனித மூளை, அளவில் பெரிதாகாமல் இருக்க இதுவும் ஒரு காரணம். பனியில் இருந்து தற்காத்துக் கொள்ள, அங்குள்ள எஸ்கிமோக்கள் (Eskimos), கம்பளியை பயன்படுத்தத் தொடங்கினர்; ரோமங்கள் அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது.

         "அப்படியானால் மற்ற மிருகங்களில் ஒன்றுகூடவா இதுவரை பரிணமிக்கவில்லை?" என்கிற உங்கள் கேள்விக்கு, டார்வின் தனது "Survival of the Fittest" என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறார். அதன்படி, "சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் எந்தவொரு உயிரினமும் இவ்வுலகில் வாழத் தகுதிபெறும்" என்பதே இதன் சாராம்சம். (உதாரணம், மனிதன்!)

          இருப்பினும், எந்த ஒரு விஷயமும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகிறது. அந்த பொறுப்பான பணி, தற்போது என் தோளில் என்பதால், அதை அட்லஸ்(Atlas)-ஐப் போல ஒழுங்காகத் தாங்கும் கடமை என்னுடையது.ஆகவே, 'என்ன செய்யலாம்?' என அச்சமயம் நான் விழித்துக்கொண்டிருந்தபோது, நான் முன்னர் குறிப்பிட்ட, நான் நம்பும் அந்த "தற்செயல்" எனக்கு உதவியது. அது என்னவென நீங்களே பாருங்கள்!


          இவ்வாறாக, மனிதன் பரிணாமத்தையும் பழக்கமாக மாற்ற ஆரம்பித்துவிட்டான்!


          3. கறுமைநிறத்தோல் மற்ற நிறத்தோலை விட சூரிய ஒளியை அதிகம் ஈர்க்கும். ஒருவேளை பரிணாமம் உண்மையாக இருந்தால், துருவப்பிரதேசத்தில் வாழ்பவன் கருப்பாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்பவன் வெள்ளையாகவும் அல்லவா இருக்கவேண்டும்.

          அட மேதைகளே! அவன் நிறம் கறுத்ததர்க்குக் காரணமே, நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலவும் வெயில்தானே! (அப்பறம் எப்டியா வெள்ளையாவான்?!) 


        4. துருவக்கரடிகள் போன்ற பனிப்பிரதேச உயிரினங்களைப் போல, வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் விலங்குகளுக்கும் ரோமங்கள் உள்ளதே!

        நிச்சயம் இல்லை. இரண்டின் ரோம அடர்த்தியிலும் வித்தியாசம் உண்டு. மேலும், காடுகளில் இரவுநேர குளிரை சமாளிக்க அந்த ரோமங்கள் உதவி புரிகின்றன. (காட்டுல, நைட்டு நேரத்துல எப்டி குளிரும்னு Man Vs. Wild-ல வர்ற Bear Grylls-ட்ட கேட்டு பாருங்க.)

        இன்னும் பல ஆதாரங்களை பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக அடுக்கியிருந்தனர். அவை அனைத்திற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனால், அக்கொள்கையை நிரூபிப்பது அயலானின் நோக்கமல்ல. ஆகவே, இத்துடன் பரிணாமத்தை நிறுத்தி வைப்போம். தேவைப்பட்டால் மீண்டும் கையிலெடுப்போம். நமது இலக்கு, 'நம்மைவிட மேம்பட்ட அல்லது நமக்கு இணையான நாகரீகம் இப்பிரபஞ்சத்தில் இருக்குமா?' என்பதே.


(மழையில் நனையாமலிருக்க இலையால் குடை பிடிக்கும் இத்தவளைக்கு, பரிணாமத்தால் பகுத்தறிவு வந்திருக்குமோ...?!)

          சரி. இது போன்ற பரிணாமக் கோட்பாட்டைக் குறிக்கும் விஷயங்கள் ஏதேனும் நமது நாட்டிலுள்ள குறிப்புகளில் காணப்படுகிறதா என்று பார்த்தால், நான் முன்னரே குறிப்பிட்டபடி, அறிவியல் இந்தியாவில் ஆன்மிகம் வாயிலாக பரப்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக நாம் முன்வைப்பது, "தசாவதாரம்". (கமல்ஹாசன் படம் இல்ல!)


(தசாவதாரம்)
          

(தசாவதாரமும் - டார்வினிசமும்)

       இதன்படி,
  • மச்சாவதாரம்   -   மீன் உருவம்   -   நீரில் வாழ்வன.
  • கூர்மாவதாரம்   -   ஆமை உருவம்   -   நீரிலும், நிலத்திலும் வாழ்வன.
  • வராக அவதாரம்   -   பன்றி உருவம்   -   நிலத்தில் வாழ்வன. ஆனால், சிறிய உருவம்.
  • நரசிம்ம அவதாரம்   -   சிங்கமும், மனிதனும் சேர்ந்த கலவை   -   ஏறத்தாழ பாதி மனித நிலை, ஆனால் மிருக குணம்.
  • வாமனாவதாரம்   -   குள்ள மனித உருவம்   -   ஏறக்குறைய ஒரு மனிதன்.
  • பரசுராம அவதாரம்   -   கையில் ஆயுதத்துடன் உள்ள மனிதன்   -   கற்கால மனிதர்கள்.
  • ராமாவதாரம்   -   வில்-அம்புடன் உள்ள மனிதன்   -   உலோகக் கால மனிதன்.
  • பலராம அவதாரம்   -   கையில் கலப்பையுடன் உள்ள மனிதன்   -   விவசாயத்தைக் கண்டறிந்த காலம்.
  • கிருஷ்ணாவதாரம்   -   கால்நடைகளுடன் நிற்கும் உருவம்   -   மனிதன் கால்நடைகளை பழக்கிய காலகட்டம்.
  • கல்கி அவதாரம்   -   கடலால் சூழப்பட்ட உலகத்தில் பறக்கும் வெள்ளைக் குதிரையின் மேல், கையில் ஆயுதத்துடன் உள்ள மனிதன்   -   (இந்த அவதாரம் இன்னும் நிகழவில்லை என நம்பப்படுகிறது) ஒருவேளை இது சுனாமி போன்ற இயற்கைப்பேரிடரால் உலகம் அழிந்த பின்பு மக்கள் ஆயுதம் பொருந்திய (வெள்ளைக்) கப்பல்களில் வசிப்பர் என்பதுபோலக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
          இதுமட்டுமல்லாது,

          "புல்லாகிப் பூண்டாகிப் புட்களாகி..." எனத்தொடங்கும் ஒரு தமிழ்ப்பாடலும், நவராத்திரி தினத்தில் வைக்கப்படும் கொலு பொம்மைகளும், டார்வினிசத்தைக் குறிப்பதுபோலவே எனக்குத் தோன்றுகிறது. அவற்றை வரிசைப்படுத்தியிருக்கும் விதத்தைக் கீழிருந்து மேலாகக் கவனிக்கவும். ஆனால், அதற்க்கு அவர்கள் கூறும் தத்துவார்த்தமான காரணங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம்.


          சரி. இதற்குப் பின்னும் இவர்கள் டார்வினிசத்தை வன்மையாக எதிர்க்கக் காரணம்..?!

          பரிணாமத்தை ஏற்றுக்கொண்டால், வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ வழி உண்டு என நம்ப வேண்டி வரும். இது அவர்களது நம்பிக்கைக்கு முரணானதாக மாறும் என்பதால் மட்டுமே.
அப்படியானால், வேற்றுகிரகவாசிகளின் இருப்பு நிரூபிக்கப்பட்டால்..?!
அவர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால்...?!

          விளைவுகளைக் காண அடுத்தவாரம்வரை காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.




மேலும் விவரங்களுக்கு, காண்க : 



Photo Courtesy : Google & Facebook.



To Contact Me :

Mail ID       : jayanth.leonoswin@gmail.com
Facebook  : Jayanthi Nathan
Twitter       : Jayanthinathan@ayalaan007



Tuesday 2 September 2014

7.) கடவுள்...!!!


அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

         என்முன் நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட கேள்வி, "எனது பதிவுகளின் முற்பகுதியில் பதிவிடுவதாகக் கூறப்பட்ட 'கடவுள் ', 'வேற்றுக்கிரகவாசி ' போன்ற விஷயங்களின் பதிவுகள் எங்கே?" என்பதே. நண்பர்களே, உண்மையில் அவ்விஷயத்தை நான் மறக்கவில்லை. உலகில் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையின்படி, கடவுள் 6 நாட்களில் உலகைப் படைத்து, 7-ம் நாள் ஓய்வெடுத்தார் என்பதே. இது எனது 7-வது பதிவு. ஆகவே 7-ம் நாள் ஓய்வில் இருக்கும் அவரை எனது 7-வது பதிவிற்கு அழைக்கலாம் என காத்திருந்தேன்!

         கடவுள் = கட + உள். 'உள்ளத்தைக் கடந்து உணரவேண்டிய ஒரு சக்தி' என்ற நோக்கில் வைக்கப்பட்ட பெயர். இருக்கிறாரோ இல்லையோ தெரியாது; ஆனால், மனிதர்களுக்கு திட்டவும், புகழவும் தேவைப்படும் ஒரு நபர். எல்லோரும் கைவிட்ட பின் மனித மனம் நாடும் ஒரு மகா சக்தி; (அதுவரைக்கும் தேடவே மாட்டோம்) நம்பிக்கையின் உச்சம். சரி, ஆன்மீகப் பாதையில் இருந்து சற்று விலகி, பின் தொடர்வோம்.

         யானையைத் தடவும் குருடர்களைப் போல, கடவுளை பலவாறாக உலகின் அனைத்து மதங்களும் சித்தரிக்கின்றன.(பௌத்த மதத்தைத் தவிர. அவர்கள் நம்பிக்கையின்படி, இப்பிறவியில் நீ நல்லவனாக வாழ்ந்தால், மறுஜென்மம் இருக்காது; முக்தி கிட்டும். இதுவே பௌத்தத்தின் சாராம்சம். அதில் கடவுளுக்கு வேலை இல்லை.) 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் கூறிய வசனம்போல, "யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி,  'மதம்' பிடித்துப் போனால், தொல்லைதான்!". உண்மையில் மதங்கள் உருவான காரணமே, மனிதனை நெறிபடுத்தத்தான். ஆனால் இன்று, அநேக மதங்களின் மீது பூசப்பட்ட சாயங்கள் அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டன; நோக்கத்தையும் புதைத்துவிட்டன.

          மதத்தின் பெயரால் வாழ்வை இழந்த, அவமானத்தை பரிசாகப் பெற்ற, மரணத்தை முத்தமிட்ட விஞ்ஞானிகள் உலகில் ஏராளம். அதில் உலகையே புரட்டிப் போட்ட ஒரு கண்டுபிடிப்பின் எஜமானர் "சார்லஸ் டார்வின்"(CHARLES DARWIN). பரிணாமக் கொள்கை (EVOLUTION THEORY)-யின் தந்தை என, உலகில் தற்போது வரையிலும் போற்றப்படும் ஒரு விஞ்ஞானி. 'மனிதன் குரங்கிலிருந்துதான் பிரிந்தான் 'எனக்கூறிய போது, உலகமே அவரை அவமானப்படுத்தியது. (அப்பறம்...எவன் 'என் தாத்தா ஒரு குரங்கு'-னு சொல்ல விரும்புவான்..?!) "இவரது வம்சம் குரங்கிலிருந்து வந்ததாம்" என உலகமே எள்ளி நகையாடியது. அவரது "The Origin of the Species" என்கிற ஆராய்ச்சிப் புத்தகம், கடும் கண்டனங்களுக்கும், விமரசனங்களுக்கும் ஆளானது. அவ்வாறு அவரை பலவாறாக அவமானப்படுத்தியதற்கு, சில வருடங்களுக்கு முன்தான் தற்போது பதவியிலுள்ள 'போப்'(POPE)-பிற்கு முன்னர் பதவி வகித்த போப்பாண்டவர், மன்னிப்பு கோரினார். (டார்வின் இறந்தது 1882-ல்!)




(பரிணாம வளர்ச்சி)


(டார்வினை அவமானப்படுத்தும் நோக்கில் வரையப்பட்ட கேலிச்சித்திரம்)

          கடவுள் சித்தாந்தத்தில் நம்பிக்கையுள்ள மக்கள், இவற்றை எதிர்க்கக் காரணம், அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டால், கடவுள் மனிதனை மனிதனாகவே படைத்தார் என்கிற சித்தாந்தம் பொய்யாகிவிடும் என்கிற பயம். களிமண்ணால் படைக்கப்பட்டதாக அவர்களால் நம்பப்படும் மனிதன் அடைமழையிலும் கரைவதில்லை! மேலும், களிமண்ணின் மூலக்கூறுகளான 'Silica'-வின் பங்கு, மனித உடலில் மிகவும் குறைவு.


(உடலிலுள்ள மூலக்கூறுகளின் சதவிகிதம்)

         இத்தனைக்கும் டார்வின் "கடவுள் இல்லை" என்றுகூட சொல்லவில்லை. "கடவுள் மனிதனை, மனிதனாகப் படைக்கவில்லை" என்றுதான் கூறினார்; ஆதாரங்களையும் அடுக்கினார். இருப்பினும் அப்போது அவரது கூற்றை ஏற்க மக்கள் தயங்கினர். காரணம், நமது நம்பிக்கை பொய்ப்பதை உளவியல் ரீதியாக ஒருவரும் விரும்புவதில்லை! எப்படியேனும் அதை மெய்ப்பிக்க போராடுகிறோம். (நான் உட்பட!)

         டார்வினிஸ மறுப்பாளர்கள் கேட்கும் இன்னொரு, யோசிக்கத்தூண்டும் கேள்வி, "ஒருவேளை மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தால், இன்று குரங்கினமே இல்லாமல் போயிருக்குமே!" என்பது! நண்பர்களே, டார்வின், "மனிதன் குரங்கிலிருந்து பிரிந்தான்" என்றுதான் சொன்னார்; "பிறந்தான்" என சொல்லவில்லை. மேலும் குரங்கினத்திலிருந்து (சற்று மாறுதலோடு) பிரிந்த ஒரு இனமே மனித இனம் என்றார். ஆகவே அவ்வாறு பிரிந்த கிளை முழுவதுமே தற்போது மனித இனமாக வீற்றிருக்கிறது.

இதை மறுப்பவர்களிடம் சில கேள்விகள் :
  • உண்மையில் கடவுள் மனிதனை மனிதனாகப் படைத்திருந்தால், 'குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணமித்தான்' என்பதற்கு ஆதாரமாக ஆய்வாளர்கள் காட்டும் மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் யாரினுடையது? எங்கிருந்து வந்தது?
          [ படங்களின் எண்ணிக்கை அதிகம்தான், பொறுத்துக்கொள்ளவும். "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்" என்கிற நெப்போலியன் போனபார்ட் (NAPOLEON BONAPARTE)-ன் வார்த்தைகளை நினைவில் கொள்ளவும்.]





(அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட, மனித பரிணாமத்தை மெய்ப்பிக்கும் ஆதாரங்களாகக் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகள்)

  • "மனிதன் படைக்கப்பட்டதே கடவுளை தொழுவதற்காகவே" என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். உண்மையில் கடவுள் இவ்வாறு சொல்லியிருப்பரா? (கடவுளுக்குக் கீழான நிலையிலிருப்பதாக நம்பப்படும் மனித இனமாகிய நாமே, ஒரு இயந்திர மனிதனை (ROBOT) உருவாக்கினால், அதனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முயற்சிப்போமே தவிர, "தினமும் எனக்கு நீ SALUTE அடிக்கணும்; அப்பதான் நீ நல்ல ROBOT"-னு சொல்லுவோமா?)
  • உண்மையில் நமக்காக மட்டுமே இப்பூமியும் நாம் வாழும் இப்பிரபஞ்சமும் படைக்கப்பட்டிருந்தால், நமது கண்களுக்கு எட்டா வண்ணம் இத்தனை பிரம்மாண்டமான, நமக்கு தேவையே இல்லாத (முக்கியமாக, கடவுளைத் தொழ) விஷயங்களை இவ்விண்வெளியில் உலவவிட்டதன் அவசியம் என்ன? அவரது சக்தியின் மூலம் இத்தகு பிரம்மாண்டத்தைக் காட்டித்தான் அவர் நமக்கு 'கடவுள்' என்பதை உணர்த்த வேண்டும் என்பதில்லையே! நமது பிரபஞ்சத்தில் நமது பூமியின் இருப்பிடத்தை எடுத்துக்கொண்டால், ஒரு மாபெரும் கடற்கரையிலிருந்து ஒரு மணல் துகளை நோக்குவதற்குச் சமம். அதற்கான ஆதாரமாக கீழே இணைக்கப்பட்டுள்ள Video பதிவைக் காண்க.

          

          "உண்மையில் நாம் இங்கே படைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறோம்". இதை நான் இங்கு உறுதியாகவே கூறுகிறேன். (இதற்கான விளக்கத்தை வரும் பதிவுகளில் காண்போம்).

          ஒருவேளை 'கடவுள்' என்ற ஒருவர் பெரும்பாலானோரின் நம்பிக்கையின்படி, ஆதாமையும், ஏவாளையும் முதல் மனிதர்களாகப் படைத்திருந்தால், உலகின் முதல் Test-tube baby ஆதாமே ஆவார்! மேலும், எனது நண்பர் திரு.ஷங்கர் என்பவருடன் உரையாடும்போது கிடைத்த ஒரு தகவல். 'ஆதாம்' என்கிற பெயர் உட்பட அக்கதைகளில் (அல்லது நம்பிக்கையில்) வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் பெயர்களும் தமிழிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆதாரமாக, உலகின் முதல் மனிதன் என்பதால், உலகில் முதலில் தோன்றும் சூரியனின் பெயரான, "ஆதவன்" (Adam) என்பதை அடிப்படையாகக் கொண்டும், அவனிடம் இருந்து பிரித்து எடுக்கப்பட்டதால் அவள் "Eve" (ஏவாள்) {ஈவு - கணிதத்தின் வகுத்தலில் வரும் ஈவு (Quotient), மீதி (Remaining) போன்றவற்றை நினைவு கூர்க } என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.

[இதுகுறித்து ஒரு புத்தகம் இருப்பதாகக் கூறினார். ஆனால், அது இன்னும் கைகளில் சிக்கவில்லை; அவருக்கும் கூட!]

  • மேலும், இப்பிரபஞ்சத்திலேயே மனித இனம் மட்டுமே உயர்ந்தது என்கிற கூற்றும் உண்டு. அத்துடன் வேறங்கும் உயிரினங்கள் கிடையாது என்றும் மதவாதிகளால் நம்பப்படுகிறது. சற்று சிந்தித்துப் பாருங்கள்; இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் வாழ்கிறோம் என்றால் அத்தனை பெரிய அதிர்ஷ்டம் மனித இனத்திற்கு மட்டும் இருக்குமா? 

          இறுதியாக, இப்பிரபஞ்சத்தில் நமது மனித இனமும், நமது பூலோக உயிர்களும் மட்டும் தனியாக இல்லை என்பதே உண்மை! (வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் !)

         "அப்போ நம்மள கடவுள் படைக்கல-னு சொல்றியா?" என்கிற உங்கள் கேள்விக்கு எனது பதில்.

         Darwin சொன்னதுபோலத்தான். கடவுள் நம்மை மனிதனாகப் படைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் உள்ளது போல நமது ஆரம்பத்திற்கும் ஒரு காரணகர்த்தா, ஒரு சூத்திரதாரி தேவைப்படுகிறார். ஆன்மீகப் பெரியோர்கள் கடவுளையும், பகுத்தறிவுப் பெரியார்கள் இயற்கையையும் அதற்கு(படைப்பிற்கு)க் காரணம் என நம்புகின்றனர். ஏனெனில், இப்பிரபஞ்சத் தோற்றத்தின் முதல் கணம் மட்டுமே, இன்னும் விளக்க இயலாதவாறு  'பிரம்மாவின் கையெழுத்து' போல் குழப்பமாக, தெளிவின்றி உள்ளது. அதற்கடுத்த கணம் முதல், சகலத்தையும் தற்போதைய விஞ்ஞானத்தால் நிச்சயமாக விளக்கமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

[இப்டித்தான்...! கடைசிவரைக்கும் எந்த பக்கமும் சாயாம, அப்டியே 'நீயா-நானா' கோபிநாத் மாதிரி பஞ்சாயத்து பண்ணி வச்சுட்டு போய்கிட்டே இருக்கணும்...எங்கயும் சிக்கிடவே கூடாது...!]

"அப்போ நம்மள படைச்சது யாரு?!" என்கிற உங்களின் அடுத்த கேள்விக்கான பதிலை நாம் அடுத்த வாரம் காண்போம்.

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க :

http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
http://en.wikipedia.org/wiki/Composition_of_the_human_body


Photo Courtesy : Google.


Video Courtesy : YouTube.