Tuesday 28 October 2014

15.) வேற்றுலக விருந்தினர்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

              எனது கடந்த பதிவின் பாராட்டுகள் அனைத்தும் திரு.மதன் அவர்களையே சேரும். காரணம், அவர் எழுதிய "மனிதனும் மர்மங்களும்" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துகளே அவை. சரி, கடந்த பதிவில் நான் அளித்த வாக்கின்படி, இன்றைய பதிவு, நமது பூமிக்கு வந்து நம்மோடு வாழ்ந்து மறைந்த, வேற்றுலுகவாசிகள் வருகைப் பதிவின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.


(திரு.மதன்)

[கடந்த பதிவின் எல்லாப் புகழும் இந்த ஒருவருக்கே]


              கடந்த பதிவில், விண்ணிலிருந்து விழும் வினோத பொருட்கள் குறித்து கண்டோம். அவ்வாறு, ஒரு சரக்குந்து (Lorry) மணலை சரிப்பதுபோல மழையாய் விழும் அசாதாரண நிகழ்வைப் பற்றி எண்ணும்போது, நம்முள் எழும் மிக முக்கியமான கேள்வி, "நம்மால் (மனிதர்களால்) விமானம் போன்ற பறக்கும் ஊர்திகளால், விண்ணிலிருந்து அத்தகைய பொருட்கள் விழவில்லை எனில், அவ்வாறு விழச் செய்வது யார்? ஒருவேளை அது வேற்றுகிரகவாசிகளாக இருக்க வாய்ப்புண்டா?" காணலாம் வாருங்கள்.

              நீர் ஒழுகாமல் சென்ற தண்ணீர் லாரியும், எண்ணெய்யை ஒழுகவிட்டுச் செல்லும் எண்ணெய் லாரியும் (சரக்குந்து-னு போட்டா, ரைமிங்கா (Rhyming) வரமாட்டேங்குது.) நம் ஊரில் இல்லை என்று சொல்லுமளவிற்கு அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கண்டுணர்கிறோம். இரண்டும் அத்தியாவசியப் பொருட்களே. இருப்பினும் ஒரு பொருளில் மட்டும் அலட்சியப்போக்கு எதற்கு என எனக்கு இன்னும் புரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களாக.  சரி, நாம் நம் விஷயத்திற்கு வருவோம். ஒருவேளை, வேற்றுக்கிரகவாசிகள் நமது பூமிக்கு கிரகசஞ்சாரம் மேற்கொள்ளும்போது, நம்மூர் தண்ணீர்-உந்து போல, (அவ்விநோத மழைப்பொருட்களை) வழிநெடுக ஒழுக விட்டுவிட்டனரா? காரணம், அவர்களும் 'பறக்கும்தட்டு' (UFO) என்கிற வானூர்தியில் பயணிப்பதாகவே பன்னெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒருவேளை அவ்வாறு அவர்கள் பறக்கும்போது, கதவு திறந்திருந்தால், அதிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் கொட்டியிருக்கும்தானே. ஆனால், இது நம்பத்தகுந்ததாக இல்லை. சரி முதலில் வேற்றுக்கிரகவாசிகள் நமது கிரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்களா என காண்போம்.

              சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்து நாட்டின் "ஸஃபோல்க்" (Suffolk) என்ற இடத்திற்கு அருகேயுள்ள "வுல்பிட்" (Woolpit) என்ற ஊரின் ஒரு தெருவில் ஒரு சிறுவனும் சிறுமியும் அழுதுகொண்டே சென்றுகொண்டிருந்தனர். (இதென்ன பெரிய உலக அதிசயமா? எனக் கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்) அவர்கள் நம்மைப்போன்று இருக்கவில்லை. அவர்களின் தோல் பச்சை நிறத்தில் இருந்தது! மேலும் அவர்கள் அணிந்திருந்த உடை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. (அக்காலத்தில் உள்ள உடைகளுடன் ஒப்பிடும்போது அப்படி வித்தியாசமாக இருந்திருக்கிறது. இப்போது எப்படியோ தெரியாது.) நம் உலகில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமல்லாது, வேறு சில பொருட்களை உபயோகித்தும் அவ்வுடை உருவாக்கப்பட்டிருந்தது.


              அக்கம்பக்கம் இருந்தவர்கள், அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். அவர்களுக்கு நம் மொழியும் புரியவில்லை; நமக்கு அவர்கள் மொழியும் புரியவில்லை. (வெளங்கிடும்!) ஏதோ புதுமொழியில் பேசிக்கொண்டனர். நம்முடைய உணவை அவர்களால் சாப்பிட முடியவில்லை. கடைசியில் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்கள் பீன்ஸ் காய்களை மட்டும் சாப்பிட்டனர். (அவங்க கலருக்கு மேட்சா எடுத்து சாப்டிருக்காங்க பாருங்க!)


                போதுமான உணவு கிடைக்காத காரணத்தால் சிறிது நாட்களில் அச்சிறுவன் இறந்து போனான். அச்சிறுமியோ கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உணவுகளையும் சாப்பிடப் பழகிக்கொண்டாள். (Survival of the Fittest - தக்கன பிழைக்கும்!) அவளுடைய தோலின் நிறமும் சற்று இளஞ்சிவப்பாக மாறத் தொடங்கியது. மேலும், கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில மொழியையும் புரிந்துகொள்ளத் தொடங்கினாள். பின், தட்டுத்தடுமாறியேனும் ஆங்கிலத்தில் பேசுமளவிற்குக் கற்றுக்கொண்டாள். 

                 பூமிக்கடியில் இருக்கும் ஒரு புதிய இடத்திலிருந்து இங்கு வந்ததாகத் தெரிவித்தாள். மேலும், அவ்வுலகில் சூரிய ஒளியையே கண்டதில்லை என்றும், அங்கு எல்லாமே பச்சை நிறத்தில்தான் இருக்கும் என்றும் அவள் கூறினாள். பூமிக்கடியிலிருந்த பெரிய குகையின் வழியாக அவள் வந்ததாகவும் தெரிவித்தாள். இத்தகவல்கள், அக்காலகட்டத்தில் வாழ்ந்த "வில்லியம் ஆஃப் நியூபர்க்" (William of Newburgh - 1189) மற்றும் "ரால்ஃப் ஆஃப் கோக்கஷால்" (Ralph of Coggeshall -1220) போன்றவர்கள், நேரில் கண்டதாகப் பதிவிட்டிருக்கும் குறிப்புகளிலிருந்து இத்தகவல்கள் அறியப்படுகின்றன. இச்சிறுவர்களின் ஞாபகமாக இன்றும் அவ்வூரின் வரவேற்புக் கம்பத்தில் இருவரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன; அதுவும் அச்சிறுவர்களின் உருவங்கள் பச்சை நிறத்தில் இருப்பது போன்று!



             இதே போல் 1887-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. "பேன்ஜோஸ்" (Banjos) என்ற இடத்தினருகே இருந்த குகையிலிருந்து பச்சை நிறத்தோலை உடைய சிறுவனும், சிறுமியும் வெளியே வந்தார்கள். இவர்களுக்கும் அவர்களைப் போல் நமது மொழி தெரியவில்லை; உணவை உட்கொள்ள முடியவில்லை; இங்கும் அச்சிறுவன் உணவை உட்கொள்ளாத காரணத்தால் இறந்துவிட்டான்; அச்சிறுமி 5 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்தாள். ஸ்பானிஷ் மொழி பேசத் தொடங்கினாள். மணல் என்பதே இல்லாத ஒரு இடத்தில் அவள் வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்தாள். ஒரு புயல் காற்று தன்னையும், தனது சகோதரனையும் ஒரு குகைக்குள் தள்ளிவிட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அக்குகையைக் கடந்து இங்கு வந்து சேர்ந்ததாகவும் அவள் குறிப்பிட்டாள்.

             உலகில் இது போன்ற சம்பவங்கள் பத்துக்கும் அதிகமாக நடந்துள்ளன. இதில் மேற்கூறிய இரண்டும் மிகப் பிரபலமானவை. இவை இரண்டையும் படிக்கும்போது ஏதோ பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்ற இரு கதைகளை சொல்வது போலத் தோன்றலாம். இதில் இரண்டாவது சம்பவத்தின் நம்பகத்தன்மையும் முன்கதையையொத்த சம்பவங்களின் நிகழ்வுகள் காரணமாக, சற்று சர்ச்சைக்குரியதாக உள்ளது. காரணம் இரண்டிற்கும் அவ்வளவு ஒற்றுமை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது, முதலில் தோன்றிய சிறுமி, மணமுடித்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்தாள்; ஆனால், இரண்டாவது பெண் 5 ஆண்டுகளில் இறந்து போனாள், என்பதே. (அந்த பொண்ணோட வாரிசு யாராவது இப்பவும் இருந்தா தெரியப்படுத்துங்க!) உலகில் பெருகிவிட்ட மோசடிகளின் தாக்கம் உண்மைகளை நம்மிடமிருந்து பிரித்து வெகு தொலைவு கொண்டுசென்றுவிடுகிறது.

           {"வேற்றுக்கிரகவாசிகள்" என்றதும் 'பச்சைநிறத்தோல்' என பெரும்பாலானவர்களுக்கு நினைவிற்கு வரக்காரணம் இவர்கள்தான் என்றால் மிகையாகாது. உதாரணமாக, "டிராகன் பால் ஜீ" (Dragon Ball - Z) ஒளிச்சித்திரக் கதையில் (Cartoon) வரும் "பிக்கலோ" (Piccolo) என்கிற கதாப்பாத்திரம் ஒரு வேற்றுகிரகவாசி. "நாமிக்" (Namek) எனும் கிரகத்தைச் சேர்ந்த பச்சை நிற மனிதன்.}



(Piccolo)

           மேலும், இவர்களின் கதைகள், "E.T. - The Extra Terrestrial" மற்றும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட  "கோய் மில் கயா" (KOI MIL GAYA) போன்ற படங்களை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அவற்றில், ஒரு வேற்றுகிரகவாசியை, திரும்பிச்செல்லும் அவசரத்தில், அதன் சகாக்கள் தவறவிட்டுவிடுவர் என்பதுபோல் கதை செல்லும்.

         

(E.T. படத்தில் ஒரு காட்சி)


             மேலும் இப்பதிவில் உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளுள் ஒன்று, "அப்படியெனில் இப்பதிவுகள் உண்மையா? இல்லையா?" என்பது. காரணம், இதை மறுப்பவர்களும் உண்டு. (அதற்கான இணைப்பையும், கீழே இணைத்துள்ளேன்.) இதைப்பற்றி என்னிடம் கேட்டால், வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நம்புபவர்கள் இவை உண்மையென நம்பலாம். மற்றவர்கள் இது கதை என எடுத்துக்கொள்ளலாம். காரணம் அவர்கள் இல்லை என்பதன் நமது மறுப்பு, அவர்களின் இருப்பைத் தடுக்கப்போவதும் இல்லை. அவர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை (மட்டும்), அப்படி ஒரு ஜீவராசிகளை விண்வெளியில் உற்பத்தி செய்யப் போவதுமில்லை. (யச்சச்ச யச்சச்ச, கச்சச்ச கச்சச்சா..!)

              இதை நம்புபவர்களுக்கும் எழக்கூடிய மற்றுமொரு கேள்வி, "அதெப்படி இரு வெவ்வேறு சம்பவங்களும் ஒரே போல் இருக்க முடியும்?" என்பது. எனது அடுத்த பதிவு, உங்கள் இதயத்துடிப்பை நிச்சயம் அதிகரிக்கச் செய்யும். காரணம், அவ்வாறு ஒரே போல் நடந்த வெவ்வேறு நிகழ்வுகள் உலகில் ஏராளம். அவை என்னென்ன என்பதை அடுத்த வாரம் காண்போம்.

அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.



துணை நின்ற நூல்:

உங்களுக்குத் தெரியாத செய்திகள் - எம்.பி.அழகியநாதன்.


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Green_children_of_Woolpit
http://brian-haughton.com/ancient-mysteries-articles/green-children-of-woolpit/
http://en.wikipedia.org/wiki/William_of_Newburgh
http://en.wikipedia.org/wiki/Ralph_of_Coggeshall
http://www.todayifoundout.com/index.php/2014/02/green-children-woolpit/
http://mysterynewstory.blogspot.in/2013/10/children-of-woolpit.html
http://cassiopaea.org/forum/index.php?topic=7302.0
http://www.jasoncolavito.com/blog/the-green-children-of-banjos-another-case-of-false-evidence-and-outright-lies


Photo Courtesy: Google.

No comments:

Post a Comment