Tuesday 25 November 2014

19.) கனவுணர்த்திகள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               கடந்த பதிவில் கனவில் தோன்றும் சில புதிரான விஷயங்களையும், அது சார்ந்த மனிதர்களையும் பற்றி விவாதித்தோம். அவ்வாறான கனவுகள், எதேச்சையாக நமது மனதைத் தீண்டுவது போலவும், அதிலிருந்து நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது போலவும் அமைந்திருந்தது. இன்றைய பதிவில், அத்தகைய கனவுகளை, அதாவது நமக்கு எது நாளை தேவைப்படுமோ, அதை இன்றே கனவாகக் காண்பது என்பது சாத்தியமா? அவ்வாறு நிகழ்ந்திருக்கின்றனவா? போன்றவற்றைக் காண்போம்.

                 ஒரு இடத்திற்குச் செல்கிறோம். அந்த இடத்தை எப்போதோ இதற்கு முன் பார்த்த ஒரு உணர்வு. அங்கு இதற்கு முன் ஏற்கனவே வந்து சென்றது போல, அல்லது வசித்தது போல ஒரு உணர்வு. நிச்சயம் இது நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் "தேஜா-வூ" (Deja Vu) என்றழைக்கின்றனர். (அதேபோல், நாம் இதற்கு முன் சென்ற ஒரு இடத்திற்கு செல்கிறோம். ஏற்கனவே சென்ற இடமாக இருந்தாலும், அவ்விடம் நமக்குப் புதியது போலத் தோன்றும். [அவ்விடத்தில் மாறுதல்கள் ஏதும் செய்யப்பட்டிருக்காவிட்டாலும்!]. முன் கண்டவற்றின் எதிர்மாறான இப்பண்பு "ஜமாய் வூ" (Jamais Vu) என்றழைக்கப்படுகிறது.{'நண்பன்' திரைப்படத்தில் கூட இது பற்றி விளக்கும் ஒரு காட்சி வரும்}) இவ்வுணர்வு இடத்திற்குத் தான் பொருந்தும் என்றில்லை; மனிதர்கள், வாசனைகள் என நினைவில் பதியத் தகுதியுள்ள அனைத்திற்கும் பொருந்தும்.

                 ஆனால் நான் கூறவரும் இவ்வுணர்வானது, மேற்கூறிய இவ்விரு உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டது. உதாரணமாக, நாளை நீங்கள் எங்கே செல்வீர்கள் என்பதை இன்றே  திட்டமிடுவீர்கள்; அத்திட்டமானது, உங்களுக்கு எங்கு செல்லப்போகிறோம் என்று தெரிந்திருக்கும் வகையில் செல்லுபடியாகும். ஒருவேளை, நீங்கள் எங்கு செல்லப்போகிறீர்கள் என்று தெரியாவிட்டால்? உங்கள் திட்டம், ஒரு முன்னெச்சரிக்கை அட்டவணையை முன்னெடுத்துச் செல்லுமேவொழிய, திட்டவட்டமான ஒரு திட்டமாக இருக்காது. (உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல்ல) அதிலும், நீங்கள் எங்கு செல்வீர்கள் என்பது உங்களுக்கே தெரியாத பட்சத்தில், நாளை நீங்கள் எங்கு செல்வீர்கள், என்ன செய்வீர்கள், என்ன நிகழும் போன்றவற்றை, உங்கள் திட்ட அட்டவணையையே காணாத ஒருவர் மிகச் சரியாகக் (தனது கனவில் கண்டதாகக்) கூறினால்(!), அதை என்னவென்பீர்கள்?! ('ஜோசியம்!!!' என்று சிரிப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்)

                 'உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறாரா?' என்றால், 'ஆம்' என்பதே பதிலாக இருக்கும். அவர் ஆருடம் கூறும் ஜோசியக்காரர் அல்ல. தொலைக்காட்சிப் பழுதுநீக்குனராகப் (TV Repairman) பணியாற்றிய கிறிஸ்டோஃபர் ராபின்சன் (Christopher Robinson) இத்தகு விந்தையான சக்தி பெற்ற, உதாரண புருஷராகத் திகழ்கிறார்.


(கிறிஸ்டோஃபர் ராபின்சன்)

                  தற்போது லண்டனில் வசித்துவரும் ராபின்சன், ஸ்காட்லாந்து யார்ட் (Scotland Yard), எம்.ஐ.5 (M.I.5) போன்ற உளவுத்துறைகளின் நம்பிக்கைக்குரிய மாயக்கண்ணாடியாக செயல்பட்டுவருகிறார். அவர் கனவில் கண்டதை வைத்து அவ்வுளவு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில், அந்நிறுவனங்களும் பல வழக்குகளுக்கு சுமூகமான உடனடித் தீர்வுகள் கண்டுள்ளன. இவர், இரட்டை கோபுர இடிப்பு, டயானாவின் மரணம் போன்ற பலவற்றையும் முன்னரே கணித்துக் கூறியவர். (அதாவது, கனவில் கண்டு கூறியவர்) இருப்பினும், ஒரு சாதாரண மனிதரின் வார்த்தை எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை. [இதற்கு,

  • "இவனும் நம்மைப் போன்ற சாதாரண மனிதன் தானே, இவன் என்ன கடவுளா?(!) இவன் சொல்லி நாம் ஏன் கேட்க வேண்டும்? இவன் கனவு கண்டால் நடந்துவிடுமா?" என்பது போன்ற அகங்காரம்,
  • "கனவில் கண்டவையெல்லாம் பலிக்காது. எனக்கும் நிறைய கனவுகள் வரும், அவையெல்லாம் பலிக்கவா செய்கின்றன?" என்பது போன்ற அவநம்பிக்கை,
  • "கனவுதானே" என்பது போன்ற அலட்சியம்,

எனப் பல காரணங்களைக் கூறலாம்.] (ஆனால் இப்போது பிரபலமாகிவிட்டார்.)


(பத்திரிகையில் ராபின்சன் பற்றிய செய்தி)

                  (அறிவியலின் கூற்றுப்படி, கனவு என்பது "ரெம்" (REM - Rapid Eye Movement) எனப்படும் தூக்கத்தின் ஒரு படிநிலையில் ஏற்படும் ஒரு நிகழ்வு (REM Sleep). அத்தகைய நிலையில் நமது கண்களில் அசைவு தெரியும். அச்சமயத்தில் அவ்வாறு கனவு காணும் (அல்லது கண்விழிகள் மூடியவாறு அசையும்) மனிதரை எழுப்பிவிட்டால், (அதாவது தொடர்ச்சியாக, பலமுறை) அம்மனிதனுக்கு பைத்தியம் பிடிக்க வாய்ப்புகள் அதிகமாம். (வேணும்னா, உங்க வீட்டுல யாராவது தூங்கும்போது இதை ட்ரை பண்ணி பாத்துட்டு, எனக்கு ஒரு ரிபோர்ட் அனுப்புங்களேன்!!!) காரணம், எங்கோ படம் பார்த்துக்கொண்டிருக்கும் மனதை, காலில் கயிறு கட்டி வெடுக்கென இழுப்பதுபோன்ற செயல் அது. ('ப்ரெண்ட்ஸ்' பட வடிவேலு ஞாபகம் வந்தால், நான் பொறுப்பல்ல!) மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் கனவுகள் வரும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எலிகள் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போலவோ, அல்லது எங்கோ ஓடுவது போலவோ கனவு காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். (ஆமா. இந்த ரெண்டையும் விட்டா, அது வேற என்ன சாதனை பண்ணிடப் போகுது?!) [கூடுதல் தகவல் : ஒரு நாயை 3 நாட்களுக்குத் தொடர்ச்சியாக, தூங்கவிடாமல் செய்தால், அந்நாய் இறந்துவிடுமாம்!] (தூக்கம் மிக முக்கியம் அமைச்சரே!)


('ரெம்' நிலையில் மூளையின் செயல்பாடு)

                 'இத்தகைய முன்னுணர்வை உரைக்கும் கனவுகள், எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை; அவைகள் கிறுக்கல்களாகவோ, மங்கலான உருவமைப்புகளாகவோ, மறைமுக அடையாளங்களாகவோ கூட இருக்கலாம்', என்பது ராபின்சன் போன்றோரின் கருத்து.


(முன்னுணர்வை உணர்த்தும் கனவு போன்ற கற்பனை ஓவியம்)

                  ராபின்சனைப்பற்றி முன்பொருமுறை, Discovery Channel-ல் "Stan Lee's Super Humans" என்கிற நிகழ்ச்சியின் தொடரில் விளக்கப்பட்டது. (அந்நிகழ்ச்சியின் காணொலிக் காட்சி (Video), கீழே இணைக்கப்பட்டுள்ளது) அதில், மறுநாள் எங்கு செல்லப்போகிறோம் என்பதைத் தெரிவிக்காமலேயே, ஒரு தனியறையில் தங்கச் செய்கின்றனர். அவரது கனவின் மூலம் செல்லப்போகும் இடத்தை அறிய வேண்டும் என்பதே சோதனை. இவரும் நமது கடந்த பதிவில் கண்ட இராமனுஜனைப் போல, இரவில் அரைத்தூக்கத்தில் எழுந்து (உருண்டு), தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார் (கிறுக்கிக்கொண்டார்).


(Stan Lee's Super Humans நிகழ்ச்சியில், ராபின்சன், டேனியலுடன்)


(ராபின்சனின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்)

                    மறுநாள் அவர்கள், ராபின்சனை அவர்கள் முன்னரே திட்டமிட்டு, ராபின்சனுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அவர் கனவில் கண்டதாகக் குறிப்பேட்டில் குறிப்பிட்டிருக்கும் அடையாளங்களுடன் அவ்விடம் பலவாறாக ஒத்துப்போகிறது. இத்தகு திறன் "முன்னுணர்வு" (Premonition) எனப்படுகிறது.


(Christopher Robinson on Stan Lee's Super Humans Program)
  1. இவரை "நாஸ்ட்ராடாமஸ்" (Nostradamus) போன்ற தீர்க்கதரிசிகளின் (Prophet) வரிசையிலும் சேர்க்க இயலாது. காரணம் அவர் (நாஸ்ட்ரடாமஸ்), விழித்திருக்கும்போதே இத்தகு எதிர்கால நிகழ்வுகளை, தன்னை மறந்து குறிப்பிடுபவர். (இவருக்கோ கனவில் தான் வருகிறது)
  2. இவரது சக்தியை ஞானதிருஷ்டி (Precognition), புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வான வரும்முன் உணர்தல்(ESP - Extra-Sensory Perception) போன்ற எவ்வகையிலும் மேற்கூறிய காரணத்தால் சேர்க்க முடியவில்லை.

(இவைகளைப் பற்றி இனிவரும் பதிவுகளில் காணலாம்.)

                   எதற்க்கெடுத்தாலும் மேலை நாடுகளை, பகுத்தறிவின் சிகரம்போல் மேற்கோள் காட்டும் பலருக்கும், இப்பதிவைக்கண்டவுடன் சந்தேகம் வலுக்கலாம்; நம்பிக்கையின்மை அதிகரிக்கலாம். (சந்தேகம் - நம்பிக்கையின்மை, இவை இரண்டின் பொருளும் ஒன்றாகத் தோன்றினாலும், இவற்றுள்  வித்தியாசங்கள் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்) உண்மையில், நமது நாட்டை விட இத்தகு அமானுஷ்ய விஷயங்களிலும் (Paranormal) , அற்புத சக்திகளிலும் (Miracles, Wonders, Super Powers, etc.) மேலை நாடுகளே அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டுள்ளன.

                     அதுவும் இன்று நேற்று அல்ல. சோவியத் ரஷ்யாவின் (USSR - United States of Soviet Russia) அதிபராக இருந்த ஜோசஃப் ஸ்டாலினும் (Joseph Stalin), ஜெர்மெனியின் (Germany) சர்வாதிகாரியாக இருந்த அடால்ஃப் ஹிட்லரும்(Adolf Hitler) இது போன்ற அசாதாரண திறமைகளிலும், சக்திகளிலும் நம்பிக்கை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராயவும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். (அவற்றைப் பற்றியும் இனி வரும் பதிவுகளில் காணலாம்)

                      சரி இவ்வாறான அற்புதங்கள், ராபின்சனைத் தவிர வேறு எவருக்கேனும் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா எனத் தேடும்போது, வரலாறு நம்மை 1970-களுக்கு அழைத்துச் செல்கிறது. "கில்ப் ராக்கன்" என்றழைக்கப்பட்ட ப்ரிட்டிஷ்காரருக்கு, இத்தகைய கனவுகள் அதிர்ஷ்டத்தை வாரிவழங்கிய வரலாற்று நிகழ்வுகள் தான் அவை. அவருக்குக் குதிரைப் பந்தயம் என்றால் உயிர். ஒரு பந்தயத்தை விடமாட்டார். தூக்கத்தில்கூட குதிரைகள்தான் அவர் கனவில் வந்தன. (ஹும்...நம்ம கனவுல ஒரு கழுதைகூட வரமாட்டேங்குது..! ஒருவேளை அப்டி வந்தா, நமக்கு அதிர்ஷ்டம் வந்துடுமோ-னு வரமாட்டேங்குதா? ஆமா, அப்டி பாத்தா, கழுதைய தினமும் நேர்ல பாக்குற சலவைத் தொழிலாளி மட்டும்தான், இந்த உலகத்துலேயே ரொம்ப அதிர்ஷ்டக்காரனா இருக்கணும்..இங்க என்ன அப்டியா இருக்கு...?! சரி, நாம நம்ம கதைக்கு வருவோம்.)

                      அதிகாலையில் ஒருநாள், அரைத்தூக்கத்திலிருந்த கில்ப் ராக்கனின் மனக்கண்ணில் "ட்யூபர் மோர்" என்ற பெயருடைய குதிரை முதலில் வருவதாகத் தோன்றியது. உண்மையில் அப்படி ஒரு குதிரை ஓடி, நாம் அதில் பணம் கட்டி, அது ஒருவேளை ஜெயித்தும் விட்டால்? ஆவலுடன் மறுநாள், நாளிதழ்களை வாங்கி, எல்லா பந்தயக் குறிப்புகளையும் பார்த்தார். ம்ஹூம். அப்படி ஒரு பெயருடைய ஒரு குதிரையும் ஓடவில்லை. வெறுத்துப்போய் பேப்பரைத் தூக்கியெறிய நினைத்தபோது, ஒரு குறிப்பிட்ட பந்தயத்தில் "ட்யூபர் ரோஸ்" என்கிற குதிரை ஓடுவதாக வெளியாகியிருந்த செய்தி, ராக்கனின் கண்களில் பட்டது. இரண்டிலும் பொதுவான பெயராக இருந்த "ட்யூபர்"-ன் மேல் பாரத்தைப் போட்டு, அக்குதிரை மீது பணம் கட்டுவோம் என, அதுகுறித்து விசாரித்தார்.

                      அந்தக்குதிரைக்கு சான்சே இல்லை (ODDS 100-க்கு 6) எனப்பலரும் பலவாறாக பயமுறுத்த, ராக்கனுக்கும் உள்ளூர உதறல்தான். இருப்பினும், அவர் அவரது கனவு கைவிடாது என ஏனோ அழுத்தமாக நம்பினார். ஆச்சர்யம்! அந்த பந்தயத்தில், ட்யூபர் ரோஸ் முதலாவதாக (முதன் முறையாக) வந்து, ராக்கனுக்கு சில லட்சங்களை அள்ளித்தந்தது. அவர் உட்பட பலரும், அதை ஏதோ அதிர்ஷ்டம் என்ற அளவிலேயே நம்பினர். ஆனால், அவரை குதிரைக்கனவுகள் கண்ணயரும்போதெல்லாம் துரத்தின. அவற்றில் வரும் குதிரைகள் மிகச்சரியாக ஜெயிக்கவும் செய்தன. விளைவு, ராக்கன் விரைவில் கோடீஸ்வரன் ஆனார். பலமுறை அவரது நண்பர்களுக்கும் ஆலோசனை அளித்து, அவர்களும் லட்சாதிபதி ஆக உதவினார். (ம்க்கும்...அவரு நல்ல மனுஷன்..கூட இருந்தவங்களுக்கு சொல்லி உதவிருக்காரு... நம்மாளுங்க அடிசுக் கேட்டாலும் சொல்லமாட்டாங்க..!!!)

                      ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு இக்கனவுகள் அவருக்கு பலித்தன. இறுதியாக 1972-ல் "நியூடர்ன்" (New Turn) என்கிற குதிரை அவர் மனதில் தோன்ற, அதில் பணம் கட்டித் தோற்றார் ராக்கன். அந்த குதிரையின் பெயர் மட்டுமல்ல, அன்றிலிருந்து ராக்கனின் வாழ்கையும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்தது. அதன் பிறகு பணம் கட்டிய எந்தவொரு போட்டியிலும் ராக்கன் வெற்றிபெறவில்லை. (இந்த ராக்கன் ஜெயிக்ககூடாதுன்னு எவனோ செய்வினை வச்சுட்டான்...!!!) அந்த சக்தி(!) ஏனோ அவரை விட்டுப் போய்விட்டது.

                       இதுபோன்ற மனம் சார்ந்த சக்திகள் (Psychic) (பேருலாம் கொஞ்சம் "லூஸ் மோகன்" டயலாக் மாதிரியும் இருக்கும் [சைக்கிக்(!)]).  முதியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக, 1980-களில் "எர்னஸ்டோ ஸ்பினெல்லி" (Ernesto Spinelli) என்கிற மனோதத்துவ ஆராய்ச்சியாளர், வெவ்வேறு வயதுடைய 1200 நபர்களிடம் நடத்திய "டெலிபதி" (Telepathy)  தொடர்பான சோதனையின் அடிப்படையில் தெரிவித்தார். ஏனோ அத்தகு திறன்கள் (சக்திகள் போலத் தோன்றினாலும்) வளர வளர மழுங்கிப் போகின்றன. (இன்னும் பரிணாமத்துல எதையெல்லாம் இழந்தோமோ...?!)



(எர்னஸ்டோ ஸ்பினெல்லி)

                      இருப்பினும், குழந்தைகள்தானே என எண்ணி நம்மில் பலர் அவை கூறும் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதில்லை. அத்தகைய அலட்சியத்தின் விளைவுக்கு உதாரணம், இதோ.

                      1966-ஆம் ஆண்டு, அக்டோபர் 21-ம் தேதி பிரிட்டனிலுள்ள அபெர்ஃபேன் (Aberfan) கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, தனது கனவில் கருப்பு மேகங்கள் தனது பள்ளியை மூடுவது போலவும், ஆனால் அதற்கு சிறிதும் அஞ்சாமல் தான், தனது சக தோழிகள் இருவரின் கைகளைக் கோர்த்தவாறு நின்றிருப்பதாகவும் தனது தாயிடம் தெரிவித்தாள். (இதே நம்ம வீடா இருந்தா, 'இதுக்குத்தான் தூங்கும்போது கண்ட கருமத்தயெல்லாம் பாக்காதனு சொல்றேன்'-னு அடி கொன்னுருப்பாங்க...!) அதற்கு அவளது தாய், 'எதையும் எண்ணி குழம்பாதே' என அறிவுறுத்திவிட்டு, வழக்கம்போல பள்ளிக்கு அனுப்பினாள். மறுநாள் காலையில், அச்சிறுமியின் பள்ளிக்கருகிலிருந்த நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், அப்பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளனைவரும் உயிரிழந்தனர்; அச்சிறுமி உட்பட! (ஒருவேளை நிலக்கரி அப்பள்ளியை மூடும் காட்சி, சிறுமியின் கனவில் கருப்பு மேகம் சூழ்வது போலத் தெரிந்திருக்கலாம்!) இதுபற்றி தகவல் சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர், அவ்விபத்தில் இறந்த குழந்தைகளின் கல்லறையைப் பார்வையிட சென்றபோது, ஒரு இடத்தைப்பார்த்து உறைந்து போனார். அங்கு,சிறுமி குறிப்பிட்டிருந்த சக தோழிகளின் சமாதி, அச்சிறுமியின் சமாதியின் இருபுறமும் (தற்செயலாக) அமைந்திருந்தது. (கைகளைக் கோர்த்ததுபோல!) இங்கு அச்சிறுமியின் முன்னுணர்வு புறந்தள்ளப்படக் காரணம், அவள் சிறுமிதானே என்கிற அலட்சியம் மட்டுமே.


(அபெர்ஃபேன் பேரழிவு பற்றி சிறுமியின் கனவு : ஒரு கற்பனைப் படம்)
[உண்மையில் இது நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் கருப்பு வெள்ளை படம்]


(அபெர்ஃபேன் பேரழிவு)

                      இத்தகைய கனவுகள் அல்லது சக்திகள் உண்மையா? கனவுகள் இவ்வாறு தானாக வரும் முன் உரைக்கும் ஆற்றல் கொண்டவையா? அல்லது வெளிப்புற, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் (கடவுள், ஆவிகள், வேற்றுகிரகவாசிகள்) செயலா? அல்லது நம்முள் இப்படி ஒரு சக்தி உறங்கிக் கிடக்கிறதா? ஆராய்வோம் அடுத்த வாரம்.

அதுவரை நன்றிகளுடன்,
                       - அயலான்.



துணை நின்ற நூல்:

  1. மனிதனும் மர்மங்களும் - மதன்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/D%C3%A9j%C3%A0_vu
http://www.spiritoday.com/premonition-man-christopher-robinson-interview-on-precognitive-dreams/
http://www.discoveryuk.com/web/stan-lees-superhumans/videos/?video=stan-lees-superhuman-future-man
http://en.wikipedia.org/wiki/Rapid_eye_movement_sleep
http://en.wikipedia.org/wiki/Premonition_(disambiguation)
http://www.counselling.org/training-development/tutors-trainers/professor-ernesto-spinelli/
http://en.wikipedia.org/wiki/Aberfan_disaster


Photo Courtesy: Google.


Video Courtesy : YouTube.

Tuesday 18 November 2014

18.) கனவுகள், வரும்பொருள் உரைக்குமா...?!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               சென்ற பதிவில் கனவு மற்றும் அது சார்ந்த சில புதிரான விஷயங்களைப் பார்த்தோம். இந்த வாரம், அவ்வாறு காணும் கனவுகள் பலிக்குமா? என்பது பற்றிய நிகழ்வுகளைக் காண்போம்.

                நாம் கடந்த பதிவிலேயே ஆபிரகாம் லிங்கன் தனது மரணம் பற்றி கண்ட கனவும், பின்னாளில் அது உண்மையாகவே நடந்த விஷயத்தையும் கண்டோம். இன்றும், அது போன்ற சில விஷயங்களையே ஆராய உள்ளோம்.

                இவை, இன்று நேற்று தொடங்கிய ஆராய்ச்சியல்ல. இத்தகைய கனவுகள் தொடர்பான சம்பவங்களுக்கு ஆதாரமாக, 4000 ஆண்டுகள் பழமையான காகிதம் போன்ற (Papyrus) சுவடி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 'கனவுகளும் அதன் அர்த்தங்களும்' விரிவாக எழுதப்பட்டிருந்தன.


(Papyrus சுவடி)

                அக்காலத்தில், எகிப்தில் 'தெய்வீகக் கனவு'களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். (அதென்ன தெய்வீகக் கனவு?) கலாச்சார வளர்ச்சியடைந்த பண்டைய நாடுகளான எகிப்து, சீனா, கிரீஸ், இந்தியா - இந்த நாடுகளில், நோயாளிகள் கோவில்களுக்கு வந்து, நோய் குணமடையும் வரை தங்கும் ஒரு வழக்கம் இருந்தது. இரவில், ஆலயத்தின் பிரகாரத்திலேயே தூங்க வேண்டும். நோயாளியின் கனவில் கடவுள் வந்து பரிகாரம் சொல்வாராம்(!).

                 கிரேக்க நாட்டில், "ஈஸ்க்யூலேப்பியஸ்" ( Asklepios / Asclepius / Aesculapius) ஆலயத்தில், 'மென்ட்டேஷன் (Mentation) சிகிச்சை' என்ற ஒன்று பின்பற்றப்பட்டது. ('மென்ட்டேஷன்' என்றால் "கோவில் தூக்கம்" என்று அர்த்தம்.) நோயாளிகள், கோவிலுக்கு வந்து, (விலங்குகளைப்) பலிகொடுத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு (ஆசாரமாக), இரவில் பிரகாரத்தில் படுத்துத் தூங்க வேண்டும். ஈஸ்க்யூலேப்பியஸ் கடவுள் அந்நோயாளியின் கனவில் வந்து சிகிச்சையளிப்பார் என்றும், சிலருக்கு தூங்கும்போது அறுவைசிகிச்சைகள் கூட நடந்துள்ளது என்றும் கூறப்பட்டது(!). (பூசாரிகளில் தேர்ந்த பல மருத்துவர்கள் இருந்ததாகவும், அவர்கள் கடவுளின் பெயரால் இத்தகைய சிகிச்சைகளையும், தூங்கும் நபரின் காதில் மருந்துகளை முணுமுணுத்தல் போன்ற [கனவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்த] செயல்களைச் செய்திருக்கலாம் என மனோதத்துவ நிபுணர்களும், நோயாளி பக்தர்களின் தீவிர நம்பிக்கையே அவர்களைப் பாதி குணமாக்கியிருக்கும் என உளவியல் ஆய்வாளர்களும் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.)


(Asklepios)


               இது போன்ற தலையீடுகள் ஏதுமின்றி தோன்றிய சில கனவு நிகழ்ச்சிகள், வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன. அவற்றில் அலெக்ஸாண்டரின் கனவும் ஒன்று. உலகையே ஆள வேண்டும் என கனவு கண்ட இளம் பேரரசன் அலெக்சாண்டர் (Alexander The Great), அதன் ஒரு பகுதியாக பொனீஷிய நாட்டின் "டைர்" (Tyr) நகரத்தின் மீது போர் தொடுத்தார். டைர் வீரர்கள் அலெக்ஸாண்டரின் படையை கடுமையாக எதிர்த்தார்கள். அலெக்ஸாண்டரின் படை சற்று நம்பிக்கை இழந்தது. அன்றைய இரவில், அலெக்ஸாண்டரின் கனவில் "Satyr" (பாதி மனித உடலும், பாதி ஆட்டின் உடலும் கொண்ட ஒரு குட்டிச்சாத்தான் போன்ற கிரேக்கப் புராணக் கற்பனைக் கதாப்பாத்திரம் ['Narnia' திரைப்படத்தில் கூட இக்கதாப்பாத்திரம் வரும்]) ஒன்று தங்கக் கேடயத்தின் மீது நடனமாடுவது போல அக்கனவு விரிந்தது. இதன் அர்த்தம் புரியாத அலெக்சாண்டர் கவலை கொண்டார். "கனவுகளை விளக்குபவர்" எனப் பெயர்பெற்ற அரிஸ்டாந்தர் (Aristander)-ஐ வரவழைத்து கனவைச் சொல்ல, அவர். 'கவலை வேண்டாம் அரசே! இது நல்ல கனவுதான். கடவுளின் சொல் விளையாட்டு. Satyros என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். Sa + Tyros. அதாவது Sa என்றால் உன்னுடையது என்று அர்த்தம். "'டைர்' நகரம் உன்னுடையது; எடுத்துக்கொள்" என்பதே கனவின் அர்த்தம்!' என்றார். அதன்பின் கிடைத்த உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் போரிட்டு டைரை கைப்பற்றினார் அலெக்சாண்டர். எனவே கனவுகள் மறைமுகமாகவும் ஒரு பொருளை உணர்த்தும் எனக் கூறலாம். (அலெக்சாண்டர் கனவு கண்டதால் போரில் ஜெயித்தாரா? அல்லது கனவின் மூலம் பெறப்பட்ட ஊக்கத்தினால் போரில் வென்றாரா? என்பது வழக்கம்போல சர்ச்சைக்குரிய வாதமாகவே தொடர்கிறது.)
       

(மாவீரன் அலெக்சாண்டர்)
              

(Satyr)


('அலெக்ஸாண்டரின் கனவு' போன்ற கற்பனை ஓவியம்)


('நார்நியா' திரைப்படத்தில் வரும், 'Satyr'-ஐக் குறிக்கும் "Tumnus Faun" எனும் கதாப்பாத்திரம்)

              இது நல்ல கனவு, எனவே ஊக்கம் கிடைத்தது என வைத்துக் கொள்வோம். தூக்கத்தைக் கெடுக்கும் பயங்கரக் கனவுகளும் (Nightmares) இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு ஒரு வரலாற்று உதாரணம், இன்னொரு மன்னரின் வாழ்விலுள்ளது. அவர், "ஜூலியஸ் சீசர்" (Julius Caesar).


(ஜூலியஸ் சீசர்)

              ஜூலியஸ் சீசர் சதிகாரர்களால் கொல்லப்படுவதற்கு முன்னிரவில், அவரது (மூன்றாவது) மனைவி "கல்பூர்னியா" (Calpurnia), சீசரின் உடலெங்கும் துளைகள் ஏற்பட்டு, அவற்றிலிருந்து நீரூற்று போல ரத்தம் தெறிப்பதாகக் கனவு கண்டாள். சீசரிடம் இதுபற்றிக் கூறி செனட் கூட்டத்திற்குச் செல்லவேண்டாமென மன்றாடினாள். அலட்சியப் புன்னகையோடு வெளியேறிய சீசரின் இறுதிகால நிகழ்வுகளை, வரலாறே நமக்குப் பறை சாற்றுகிறது.


(கல்பூர்னியா)


(சீசரின் மரணம்)

             'காரணம் இதுதான். நமக்கு வரும் கனவுகளையோ, அது மறைமுக உணர்த்தும் விஷயங்களையோ நாம் நம்பாமல் அலட்சியப்படுத்துகிறோம், அல்லது அவற்றை பொருட்படுத்துவதில்லை. இதனால் பல நன்மைகளை நாம் இழக்கிறோம்' என, கனவுகள் பலிக்கும் என நம்பும் சாரார் கருதுகின்றனர். 

             சரி. இவ்வாறான கனவுகளை முறையாகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சாதித்த மனிதர்கள் யாரேனும் உண்டா எனத் தேடினால், நிச்சயம் இருக்கிறார்கள் என்றே வரலாறு பதிலளிக்கிறது! அவர்களுள் மிக முக்கிய உதாரணம், "சர். ஐசக் நியூட்டன்" (Sir. Isaac Newton).


(சர். ஐசக் நியூட்டன்)

             தனது மனதில் எழும் பல குழப்பமான கேள்விகளுக்கு, கனவில் தான் நியூட்டனுக்கு விடை கிடைக்குமாம். அவற்றை அரைத்தூக்கத்தில் குறிப்பெடுத்துக்கொள்வாராம். அவ்வாறு கனவின் மூலம் பெறப்பட்ட விடைகளும், மிகச்சரியாக இருப்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சம்!

            சரி. இவர் அக்கேள்வி பற்றிய சிந்தனையோடு உறங்கச் சென்றிருப்பார், அதனால் அவரது ஆழ்மனம் விழித்திருந்து விடை கண்டுபிடித்திருக்குமா? எனப் பார்த்தால், அவ்வாறும் இல்லை. காரணம், ஒருமுறை  இவ்வாறாக நடந்திருந்தால் ஒருமனதாக இக்கருத்தை நம்பியிருக்கலாம். ஆனால், நியூட்டனுக்குப் பலமுறை இவ்வாறு நடந்துள்ளது. 

            இவராவது கேள்விக்கான பதிலை கனவில் கண்டார். நமது மண்ணின் மைந்தர் ஒருவர், கேள்வி-பதில் இரண்டையுமே கனவில் தான் கண்டாராம்! அவர், "ஸ்ரீனிவாச இராமானுஜன்" (Srinivasa Ramanujan).


(ஸ்ரீனிவாச இராமானுஜன்)

              இராமானுஜன் எப்போதும் தனது தலையருகில் ஒரு நோட்டுப் புத்தகமும், ஒரு பென்சிலும் வைத்திருப்பாராம். அதில், தன் கனவில் வரும் சமன்பாடுகளையும், சில புதிரான கணித விவரங்களையும், தேற்றங்களையும், சிக்கலான கணிதங்களையும், அவற்றின் தீர்வுகளையும் அரைத்தூக்கத்தில் கிறுக்கி வைப்பாராம். மறுநாள் விழிக்கும்வரை அது நினைவில் இருக்குமோ, இருக்காதோ என்கிற நியாயமான சந்தேகம்தான் இதற்குக் காரணம். இவரது நோட்டுப்புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான தேற்றங்கள், இன்னும் மேலைநாட்டு கணித அறிஞர்களின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், இவர் தனது குறிப்பேடுகளில் தேற்றம் - அதன் விடை, ஆகிய இரண்டை மட்டுமே பெரும்பாலும் குறித்துவைத்துள்ளார் (யாரோ கூறி இவர் எழுதியது போல!). (நாம ஸ்கூல் படிக்கும்போது படிச்ச Maths Solution Book மாதிரி) ஆனால், அவற்றுக்கு பல வழிகளில் முயன்று விடை கண்டறிந்தால், அட்சரசுத்தமாக அவர் எழுதிய விடைதான் வருகிறது. பக்கங்கள் பல தாண்டி கண்டறியப்படும் கணித விடையை, கேள்வியின் பக்கத்திலேயே பதிலாக அவரால் எவ்வாறு எழுத முடிந்தது?! இத்தனைக்கும் மேல், அவர் காலத்திற்குப் பின் உருவாகிய சில தேற்றங்களும், அவரது தேற்றத்தை நிரூபிக்கப் பயன்பட்டவயே! உண்மையில் இராமானுஜன் விந்தையான மனிதர்! (நமக்கு கணக்குதான் புரியமாட்டேங்குதுனா, கணக்குல சாதிச்ச ஆளும் அதுக்கு மேல இருக்காரு!) 

               மேலும், இராமானுஜனின் காலத்தில் கடல் தாண்டிச் செல்வதென்பது, (அவரது குடும்ப வழக்கப்படி) தீட்டாகக் கருதப்பட்டது. (எவன் இப்டிலாம் கிளப்பி விட்டான்-னு தெரியல!) இதன் காரணமாக, இங்கிலாந்து செல்ல இராமானுஜன் தயங்கினார்; அவரது குடும்பத்தினரும் அவ்வாறே தடுத்தனர். அச்சமயம் 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்' (Madras Board Trust)-ன் தலைமைக் கணக்கராக இருந்த நாராயண ஐயர்-ன் கீழ்தான், இராமானுஜன் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த நாராயண ஐயரின் உறுதி, இராமானுஜனையும், அவரது குடும்பத்தாரையும் குலதெய்வத்திடம் உத்தரவு கேட்க ஒருமனதாக சம்மதிக்க வைத்தது. அவர்களது குலதெய்வம், நாமக்கல்லில் உள்ள நரசிம்மப் பெருமாளும், நாமகிரித் தாயாரும்.

               நாராயண ஐயரும், இராமானுஜனும் 3 நாட்கள் கோவிலில் தங்கியிருந்தனர். திடீரென ஒருநாள் நடு இரவில் கண்விழித்த இராமானுஜன், "உத்தரவு கிடைத்துவிட்டது" என்றார். உண்மையிலேயே கடவுள் கனவில் வந்து சொன்னாரா? அல்லது அவர் மனம் அவ்வாறு தன்னை திருப்திப்படுத்திக் கொண்டதா? தெரியவில்லை. மேலும், 'எப்படி இத்தகைய சிக்கலான கணக்குகளுக்கு உங்களால் விடையை மட்டும், அதுவும் மிகச்சரியாகக் குறிப்பிட முடிகிறது?' என்று நண்பர் ஒருவர் இராமானுஜனிடம் கேட்டதற்கு, "என் கனவில் நாமகிரித் தாயார் தோன்றி, அத்தகைய கணக்குகளையும், அதற்கான விடைகளையும் கூறுவார், நான் குறித்துக் கொள்வேன்" எனத் தெரிவித்திருக்கிறார்! (ஹும்.நமக்கு ஒரு சாமியும் கனவுல வந்து பாடம் நடத்த மாட்டேங்குது!)

               இத்தகைய புதிருக்கான விடைக்கு, நமது பதிவில் எங்கேனும் தொடர்பிருப்பது போல் தோன்றுகிறதா எனத் தேடினால், இருக்கிறது என்பதே எனது பதில். ஆம். ஒரு பதிவில், 'கணிதம் மனிதர்கள் தோன்றும் முன்னரே இருந்திருக்கும்' என்ற அறிஞர்கள் கருத்தைப் பதிவிட்டிருந்தேன். ஒருவேளை அது உண்மையாக இருந்தால், அவ்வாறு இருக்கும் கணிதம் மனித மனதை ஒரு நிலையில் அடைகிறது எனக் கொள்ளலாம். அது தற்செயலாகவோ, அல்லது கடவுள் மூலமோ அல்லது இறந்த முன்னோரது ஆன்மா / ஆவி மூலமோ அல்லது வேற்றுகிரகவாசி போன்ற நம்மைவிட மேம்பட்ட உயிரினம் மூலமாகவோ (அவரவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப மாறுபட்டு) இருக்கலாம். 

               இவ்வாறு தூங்கும்போது வரும் கனவுணர்த்திகள், நாம் கண் மூடினாலே வந்தால் எப்படி இருக்கும்? அவ்வாறு இருக்க வாய்ப்புண்டா? அவ்வாறு நடந்திருக்கிறதா? உங்களுக்கு வரும் கனவு உங்களைப் பற்றி மட்டும்தான் இருக்குமா? உங்களைச் சார்ந்தவர்களையோ, முற்றிலும் அறிமுகமில்லாதவர்களையோ பற்றி இருக்காதா? இல்லை அவ்வாறு நிகழ்ந்திருக்கிறதா? இன்னும் பல புரியாத பல கேள்விகளோடும் குழப்பங்களோடும் காத்திருங்கள் அடுத்தவாரம் வரை.

அதுவரை நன்றிகளுடன்,
                     - அயலான்.



துணைநின்ற நூல்கள்:
  1. கடவுள் - சுஜாதா.
  2. மனிதனும் மர்மங்களும் - மதன்.
  3. கணிதமேதை இராமானுஜன் - பத்ரி சேஷாத்ரி.


மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy : Google.

Tuesday 11 November 2014

17.) கனவு-நாயகன்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

              நமது கடந்த பதிவில் வெவ்வேறு நபர்களின் வாழ்வில் நடந்த ஒற்றுமையுடைய பதிவுகளைக் கண்டோம். இன்றைய பதிவில் கனவுகளைப் பற்றிக் காண்போம்.

              "உறக்கத்தில் வருவது கனவல்ல; உங்களை எது உறங்கவிடாமல் செய்கிறதோ, அதுவே உண்மையான கனவு. கனவு காணுங்கள்." - ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (A.P.J.Abdul Kalam) .



              இவ்வாறு தத்துவத்தில் மூழ்கி முத்தெடுக்காமல், தத்தித் தாவி நமது விஷயத்திற்கு வருவோம். காரணம் இன்று நாம் காணவிருப்பது, கலாம் அவர்கள் சொன்ன கனவைப்பற்றி அல்ல; காலம் காலமாக நாம் காணும் கனவுகள் பற்றி.

              சென்ற பதிவில், லிங்கன் தனது மரணத்தைக் கனவில் கண்டதாகவும், அவ்வாறே சில தினங்களில் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு, கனவில் கண்ட காட்சிகள் பலிக்குமா? அல்லது நடக்கவிருக்கும் காட்சிகள்தான் கனவாக வருகின்றதா? (ஒரு முன்னெச்சரிக்கை போல.) காணலாம் இந்த வாரம்.

               'நமது வாழ்வில் நடந்த சம்பவங்களின் நேர்த்தியான தொகுப்பு அல்லது கோர்ப்பே, கனவு' என்பது உளவியலின் தந்தை என்றழைக்கப்படும், சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud)-ன் கருத்து. நமது மனதில் புதைந்துள்ள ஆழ்மன ஆசைகளும், கோபங்களும், பயங்களும் வெளிப்பட ஒரு வடிகாலாக கனவு உதவுகிறது என்பதே அறிவியலின் நம்பிக்கை. மேலும் இத்தகைய கனவுகள் நம் உடலின் மிகச்சிறந்த தொகுப்பாளரான மூளையின் உதவியால் தயாரித்து இயக்கப்படுகிறது. நாம் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது நமது காதுகள் மெலிதாக உணரும் சத்தங்களையும், சூழ்நிலைகளையும், (வாசனைகளைக்கூட!) நமது கனவுலகில் நிஜமான சம்பவம் போல நமது மூளை தொகுக்கிறது.


(சிக்மண்ட் ஃபிராய்டு)


(நிகழ்வுகளின் தொகுப்பு - கனவு)

             இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை, தனது 'The Interpretation of Dreams' என்ற தனது புத்தகத்தில், தான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொகுத்துள்ளார், ஃபிராய்டு. இப்புத்தகத்தை தமிழில் நாகூர் ரூமி (Nagore Rumi) என்பவர் 'கனவுகளின் விளக்கம்' என்கிற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.



(நாகூர் ரூமி)


             பெரும்பாலான கனவுகள் மேற்குறிப்பிட்ட 
  • பயம்,
  • கோபம்,
  • ஆசை,
போன்றவைகளில் ஏதேனும் ஒன்றின் வெளிப்பாடாகவே இருக்கும். இவற்றில், பயம் சார்ந்த கனவுகளில் பெரும்பாலும் பேய் சார்ந்ததும், ஒரு உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்றும் நிச்சயம் நம்மில் அநேகர் கனவு கண்டிருப்போம்.




இது அறிவியலின் பார்வையில். இனி நம்மிடையே உலவும் நம்பிக்கைகளின் அடிப்படையில் கனவின் நிலை பற்றிக் காண்போம்.

            உலகில் தோன்றிய ஒவ்வொரு மதத்திலும் கனவு குறித்த ஏதேனும் ஓர் கருத்து நிச்சயம் இடம் பெற்றிருக்கும். துர்க்கனவுகள் வருவதைத்தடுக்க மேலை நாடுகளில் Dream Catcher என்றழைக்கப்படும், அலங்காரப் பொருள் போன்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். (நாம் நம்மூரில் தலையருகே செருப்பு, துடைப்பம், இரும்புப்பொருட்கள் போன்றவற்றை தலையருகில் வைத்துவிட்டு உறங்குவது போல!)


(Dream Catcher)

             கிரேக்க மதத்தில் கனவுக்கென்றே "மார்ஃபியஸ்" (Morpheus) என்றொரு கடவுள் உண்டு. அவ்வாறான கடவுள்கள் நமக்கு கனவின் மூலம் செய்திகளையோ, தீர்க்கதரிசனம் போன்ற வரும்முன் உரைக்கும் விஷயங்களையோ கூறுவார் அல்லது காட்டுவார் என்பது உலகெங்கும் பரவலாகக் காணப்படும் ஓர் நம்பிக்கை.


(Morpheus)


(புகழ்த்துணை நாயனாரின் கனவில் சிவபெருமான்)

              இந்துமத புராணங்களில் இவ்வாறான கனவில் கடவுளின் தரிசனங்களும், தகவல்களும் பற்றிய விஷயங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்திலும் கடவுள் ஒருவரது கனவில் வந்து நாளை நான் உன் வீட்டிற்கு விருந்துண்ண வர எண்ணுகிறேன் எனக் கூறியதாகவும். இஸ்லாமிய மதத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கனவில் ஒரு பாத்திரத்திலுள்ள பாலை நான் அருந்துகிறேன்; எந்த அளவிற்கு என்றால், அது என் நகக்கண்கள் வழியாக வெளியேறும் அளவிற்கு என உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார். இதற்கு அவர் ஞானம் பெற்றதாக கனவிற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, கனவுகளும் விளக்கங்களும் எவ்வாறோ நம்மூடே பின்னிப்பிணைந்துவிட்டன. இவ்வாறான விளக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், விளக்க இயலாத விநோதங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது "This Man" மர்மம்.

             அதென்ன 'திஸ் மேன்' மர்மம்? முன்பின் தெரியாத ஓர் மனித உருவம், உங்களின் கனவில் அடிக்கடி வருகிறது; கனவுலகில் நீங்கள் இக்கட்டில் இருக்கும்போது உதவுகிறது; வருத்தப்படும்போது ஆறுதல் சொல்கிறது; ஆனால் அவ்வுருவம் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை. இதே கனவு தினமும் தொடர்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

              அதே போல் ஒரு உருவம் உங்களுக்கு தெரிந்த  ஒருவரின் கனவில் வந்து அச்சுறுத்துகிறது, மிரட்டுகிறது, தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறது; ஆனால், யாரென்று தெரியவில்லை.

              இப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து அம்மனிதனை, நீங்கள் கனவில் கண்ட அதே உருவத்தை படமாக வரைகிறீர்கள். இரண்டும் அச்சுஅசலாக ஒன்றாக இருக்கிறது! அதெப்படி ஒரே உருவம் இருவர் கனவிலும் வர இயலும்? உறவினர் அல்லது தெரிந்தவரின் முகம் என்றால் கூட ஒருவாராக ஏற்றுக்கொள்ளலாம். இது முற்றிலும் தெரியாத நபரின் முகம். யாராக இருக்கும்? 'சரி, ஏதோ ஒரு சிலருக்கு ஒன்றாக தோன்றியிருக்கிறது, அவ்வளவுதானே' என இதை சாதாரணமாக விட இயலவில்லை. காரணம், அவ்வுருவ ஓவியத்தை இணையத்தில் பரவவிட்டதும், இவ்வுருவத்தை நானும் என் கனவில் கண்டிருக்கிறேன், என பலர் வாக்குமூலம் அளித்தனர். அத்தோடு தாங்கள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஓவியங்களையும் ஆதாரமாகக் காட்டினர் (அவைகளும் ஒத்திருந்தன!). [அவர்கள் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், பலகட்ட விசாரணை என்பதைத் தாண்டி, (ஒரு விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார்களோ? என எண்ணத்தோன்றினாலும்) 'அந்த கனவில் தோன்றுபவன் நான்தான்' என யாரேனும் கூறினால், அதை விளம்பரம் எனக் கருதலாம். ஆனால் அவர்கள், தாங்களும் அவ்வுருவத்தைக் கனவில் கண்டதாகவே கூறுகிறார்கள்.] மேலும், அவ்வுருவம் கனவில் அவர்கள் பலருக்கும் உற்ற நண்பனைப்போல் உதவியதாகவே அவர்கள் தெரிவித்தனர். யார் அந்தக் கனவு-நாயகன்?


            இவரைப்பற்றி நான்கு விதமான யூகங்கள் உலவுகின்றன. அவை,
  1. கடவுளாக/இறைத்தூதராக இருக்கலாம்,
  2. வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாம்,
  3. மனிதர்களின் பொதுவான முக அமைப்பாக இருக்கலாம்,
  4. கனவுகள்/எண்ணங்களில் ஊடுருவும் சக்திபெற்ற ஓர் மனிதனாக இருக்கலாம்,
             இவ்வாறான 'லாம்'களின், முதல் இரு யூகங்களில் முதலாவது, நாம் முன்னரே கண்ட விஷயங்களின் அடிப்படையில் உருவானது. ஒருவேளை கடவுள் அவரது உண்மையான ரூபத்தைக் காட்டாமல், ஒரு மனித உருவில் வருகிறாரோ?! என்றும், வேற்றுகிரகவாசிகள் மனிதர்களைத் தொடர்புகொள்ள இவ்வாறாக முயற்சிக்கின்றனரோ?! என்றும் கருத்துகள் காரணங்களாக்கப்பட்டன.


              மூன்றாவது யூகத்தின்படி, சில ஆய்வாளர்கள் குழு, இம்முகம் ஒரு பொதுவான கண்கள், மூக்கு, புருவங்கள், வாய் போன்றவற்றைப் பெற்றுள்ளது, (பாத்தா அப்படி ஒன்னும் தெரியலியே!) என விளக்கம் கொடுத்தனர். மேலும் இம்முகம் எவ்வித மனித குலத்தொடும் ஒப்பிடவியலாத பொதுவான முகம் எனக் குறிப்பிட்டனர். அதாவது இம்முகம், 'மங்கோலாய்டுகள்' (Mongoloids) என்றோ, 'நீக்ரோக்கள்' (Negroes) என்றோ, அல்லது இது போன்ற உலகின் எவ்வகை மனித இனத்தோடும் ஒத்துப்போகாது எனக் கூறினர்.


              நான்காவது கருத்து சற்று சுவாரஸ்யமானது! நம்மைப்போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு மற்றொரு மனிதனின் மனதினுள் அல்லது கனவினுள் ஊடுருவும் சக்தி கிடைத்திருந்தால்?! இத்தகைய அற்புத ஆற்றல் நிரம்பியவர்களை ஆராய்ச்சியாளர்கள் "Dream Surfer"-கள் என்றழைக்கின்றனர். ஆனால், இதுவரையில் அப்படி ஒரு மனிதன் விஞ்ஞானத்தின் கண்களில் அகப்படவில்லை. (உங்க யார் கனவுலயும் வந்தா சொல்லுங்க.)

             (இதே கருத்து, "Inception" படத்தில் காட்டப்பட்டிருக்கும்.)


              இதன்மூலம் நான் முன்வைக்கவிரும்பும் கேள்வி, அவ்வாறான சக்தியுள்ள மனிதர்கள் இருக்கிறார்களா? (உதாரணமாக, நமது கடந்த பதிவில், லிங்கன் தனது மரணம் பற்றிக் கனவில் கண்டது!) இவ்வாறான முடிவிற்கு நான் வரக் காரணம், நாம் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கண்ட, ஃபிராய்டு அவர்கள் கூட, "நான் பெரும்பாலான கனவுகளுக்குக் காரணம் கண்டுபிடித்திருந்தாலும், சில கனவுகள் இன்னும் விளக்க இயலாத புதிர்களாகவே உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, உண்மை என்ன? அல்லது என்னவாக இருக்கும்? காணலாம் அடுத்தவாரம்; காத்திருங்கள் அதுவரை.

அதுவரை நன்றிகளுடன்,
                     - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy : Google & Facebook.

Tuesday 4 November 2014

16.) தலைசுற்றும் தற்செயல்களும்; ஒப்பிடவியலா ஒற்றுமைகளும்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

              கடந்த பதிவின் இறுதி இணைப்பில் குறிப்பிட்டிருந்தவாறு, இந்தவாரம் "சம்பந்தமே இல்லாத இருவேறு நபர்களுக்குமிடையிலான நிகழ்வுகள், ஒரே போல் அமையுமா? அவ்வாறு விசித்திர நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றனவா?" காணலாம், இந்த வாரம்.

              ஏதேனும் இரண்டு நபர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் பட்டியல், ஓரளவிற்கு ஒத்திருந்தால், சாதாரணம். அதுவே தலைசுற்றுமளவிற்கு தற்செயல்களாக இருந்தால், அதற்கு 'அசாதாரணம்' என்பதைத் தவிர எப்பெயரும் பொருந்தாது. அத்தகைய அசாதாரணங்களில் சிலவற்றை இனி காண்போம்.

               என்றுமே ஒரு சாமானிய மனிதனைப் பற்றி முதலில் பேசினால், எவருக்கும் அதை அறிவதில் அத்தனை ஈடுபாடு வருவதில்லை. (நான் உட்பட!). ஆகவே முதலில் பிரபலங்களின் வாழ்கைப்பதிவுகளில் காணப்படும் ஆச்சர்யங்களைக் காண்போம், அவற்றைத் தொடர்ந்து மற்றவையும்.

1.) ஆபிரகாம் லிங்கனும் - ஜான் கென்னடியும்:



(ஆபிரகாம் லிங்கன்)


(ஜான் கென்னடி)

                 இவ்விரு அமெரிக்க அதிபர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒற்றுமைகளின் தொகுப்பு, இதோ உங்கள் பார்வைக்கு.
  1. 'லிங்கன்' (Lincoln), 'கென்னடி' (Kennedy) இரு பெயர்களும் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்கள்; தமிழில் நான்கு எழுத்துக்கள். ("இதுதான் நீ கண்ட ஒற்றுமையா?" அப்டின்னு சிரிக்கிறவங்களும் தொடர்ந்து படிங்க.)
  2. லிங்கன் 1860-லும் கென்னடி 1960-லும் ஜனாதிபதியானார்கள். இரு வருடங்களுக்குமான வித்தியாசம் சரியாக 100 ஆண்டுகள்.
  3. இருவரும் நீக்ரோ இனத்தாரின் உரிமைகளில் தீவிரமாக ஆழ்ந்திருந்தனர்.
  4. இருவரும் தங்கள் மனைவியின் அருகிலிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  5. இருவருமே சுடப்பட்ட தினம் 'வெள்ளிக்கிழமை'.
  6. இருவருமே தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்து இறந்தனர்.
  7. இருவரின் மனைவியருக்கும், வெள்ளைமாளிகையில் வாழும்போது குழந்தை பிறந்து, பிறந்ததும் குழந்தை இறந்தது.
  8. லிங்கன் இறந்தது ஃபோர்டு (Ford) அரங்கத்தில், கென்னடி இறந்தது "லிங்கன்" என்ற பெயர் கொண்ட காரில், அக்காரைத் தயாரித்தது ஃபோர்டு மோட்டார் கம்பெனி.
  9. லிங்கனின் செயலாளரின் முன்பெயர் "ஜான்", கென்னடியின் செயலாளரின் பின் பெயர் "லிங்கன்".
  10. இருவரையும் கொன்ற "ஜான் வில்க்ஸ் பூத்" (John Wilkes Booth) மற்றும் "லீ ஹார்வி ஆஸ்வால்டு" (Lee Harvey Oswald) இருவரின் பெயர்களும் ஆங்கிலத்தில் 15 எழுத்துக்கள்.
  11. பூத் பிறந்தது 1839, ஆஸ்வால்டு பிறந்தது 1939. சரியாக 100 வருடம்!
  12. இருவருமே தென் மாநிலத் தீவிரவாதிகள்.
  13. பூத், லிங்கனை ஒரு அரங்கத்தில் கொன்றுவிட்டு, ஒரு கிடங்கை நோக்கி ஓடினான்; ஆஸ்வால்டு, கென்னடியை ஒரு கிடங்கிலிருந்து கொன்றுவிட்டு, ஒரு தியேட்டரை நோக்கி ஓடினான். 
  14. இருவரும் பிடிபட்டு, வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  15. லிங்கன், கென்னடி இருவரும் இறந்த பின்னர் "ஜான்சன்" என்ற பெயருடையவர்கள் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றனர். ("ஆண்ட்ரூ ஜான்சன்" மற்றும் "லிண்டன் ஜான்சன்", முறையே)
  16. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808, லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக 100 வருடம்!
  17. இவர்கள் இருவரின் பெயர்களும் ஆங்கிலத்தில் 15 எழுத்துக்கள். (Andrew Johnson & Lyndon Johnson).
  18. மேலும், லிங்கன் முதல் முறை ஜனாதிபதி பதவிக்கு மனு போடும்போது, 'ஜான் கென்னடி' என்பவரை உபஜனாதிபதியாகப் பரிந்துரைத்திருந்தார்.
  19. அத்துடன், லிங்கன் உயிருடன் இருக்கும்போது, தனது இறப்பை கனவில் கண்டதாகவும்; கென்னடி ஒரு முறை ஒரு கல்லறைப் பகுதியை காரில் கடக்கும்போது, காரை நிறுத்தச் சொன்னவர், 'இந்த சூழ்நிலையிலேயே தங்கிவிடலாம் போல் உள்ளது' என தனது ஓட்டுனரிடம் கூறியதாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர்களது உள்ளுணர்வு உணர்த்திய ஒருவார காலத்தினுள் அவர்கள் உண்மையில் இறந்திருந்தனர்.
          இவைகள் தற்செயலா?

          'இருக்கலாம்' என்பவர்கள் மற்றவர்களைப்போல் மேலும் தொடரவும்.

2.) நெப்போலியனும் - ஹிட்லரும்:


(நெப்போலியன் போனபார்ட்)


(அடால்ஃப் ஹிட்லர்)

            இவ்விரு தலைவர்களின் வாழ்விலுள்ள ஒற்றுமைகளாவன:
  1. இருவருமே தலைமைப் பொறுப்பிற்கு வரும்முன் சாதாரண சிப்பாய்களாக அவரவர் நாட்டு இராணுவத்தில் பணியாற்றினர்.
  2. நெப்போலியன் பிறந்தது 1760-ல், ஹிட்லர் பிறந்தது 1889-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
  3. நெப்போலியன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது 1804-ல், ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது 1933-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
  4. நெப்போலியன் வியன்னாவைக் கைப்பற்றியது 1809-ல், ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
  5. நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்தது 1812-ல், ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தது 1941-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம். (இதே போல் இருவருக்குமான ஆண்டுகள்-வித்தியாச ஒற்றுமைகள் ஏராளம்.)
  6. இருவருமே காதல் திருமணம் செய்தவர்கள்.
  7. இருவருமே புகழின் உச்சத்தில் இருந்தபோது தோற்கடிக்கப் பட்டனர்.
  8. இருவரின் உயரங்களுமே ஆண்களின் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவு.
  9. இருவருமே மனோதிடம் மிக்கவர்கள் என்றும், இவர்களைத் தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது எனவும் வரலாற்று ஆய்வாளர்களால் இன்றளவும் வர்ணிக்கப்படுபவர்கள்.
  10. நெப்போலியனுக்கு புத்தகம் படிப்பதும், ஹிட்லருக்கு ஓவியம் வரைவதும் பொழுதுபோக்குகளாக இருந்தன. (இரண்டுமே உட்கார்ந்து பார்க்கும் வேலை)
  11. இருவரின் மரணமும் இயற்கை மரணம் அல்ல. நெப்போலியன், 'ஆர்செனிக்' (Arsenic) விஷம் வைத்து மெல்ல மெல்ல கொல்லப்பட்டார். ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
  12. இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனிக்கு நேச நாடாக விளங்கியது. அந்த இத்தாலி நாட்டுக் கொடியை வடிவமைத்தவர், நெப்போலியன்.
  13. இருவருமே நாடு பிடிப்பதில் முனைப்புடன் இருந்தனர்.
  14. இருவரும் இந்தியாவில் உருவான புத்தகத்தை எப்போதும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். (நெப்போலியன் - "மகாபாரதம்"; ஹிட்லர் - "பகவத் கீதை". இரு புத்தகங்களும் ஒரே விஷயத்தைச் சார்ந்தவை. [மதம் சார்ந்தும், கருத்து சார்ந்தும்] ஆனால் இருவரின் நோக்கங்கள் வேறுபட்டிருக்கலாம்)

(இத்தாலி நாட்டுக் கொடி)

              இதுவும் தற்செயலா?

              குழப்பத்தோடே மேலும் தொடர்வோம். இப்போது நம்மைப்போன்ற சாதாரண மக்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் காண்போம்.

3.) மும்மூர்த்திகள்:

               தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் 1920-ல் மூன்று ஆங்கிலேயர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அந்த இரயிலில் மொத்தமே இவர்கள் மூன்று பேர் மட்டும்தான். முதன்முறையாக ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்ட அவர்கள், பெயர்களைப் பரிமாறும்போதுதான் ஆச்சரியம் காத்திருந்தது.

               அவர்களில், முதலாமவர் பெயர் "பிங்ஹம்", இரண்டாமவர் பெயர் "போவெல்", மூன்றாமவர் பெயர் "பிங்ஹம் போவெல்"!

4.) அதே ரத்தம், அப்படித்தான் இருக்கும்:

                "ஜேம்ஸ் ஸ்பைசட்" என்பவர் 1787-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஒரு யுத்தத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யுத்தகளத்தில் இறக்கும்போது அணிந்திருந்த அங்கியானது (Coat), அவரது அண்ணன் டானியலுடையது.

                 மூன்று வருடங்களுக்கு முன் நடந்த யுத்தத்தில், இதே அங்கியை அணிந்திருந்தபோதுதான் இருவரில் மூத்தவரான டானியல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

                  அந்த அங்கி மட்டுமல்ல, அப்போது அண்ணனைத் துளைத்த குண்டு சென்ற துவாரத்தின் வழியேதான், தம்பியின் உயிரைக்குடித்த குண்டும் ஊடுறுவியிருந்தது!

5.) ஏகப் பொருத்தம்:

                  நாற்பது வருடத்திற்கு முன் (கதைப்படி), இரட்டையர்கள், பிறந்த சிறிது நேரத்தில் வளர்வதர்காகக் கொடுக்கப்பட்டுவிட்டனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. வெவ்வேறு ஊர்களில் வளர்ந்தனர். 1979-ல், அவர்களுக்கு வயது இருக்கும்போது அவர்கள் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். தங்கள் வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இருவருக்கும் ஆச்சரியம். காரணம்,
  1. இருவருக்கும் "ஜேம்ஸ்" (James) என்று பெயர்.
  2. இருவரும் சட்ட மீறல் தடுப்புப் பணியில் இருந்தனர்.
  3. இருவருக்குமே சித்திரம் வரைவதிலும், தச்சு வேலைகளிலும் விருப்பம்.
  4. இருவரின் மனைவி பெயரும் "லிண்டா" (Linda).
  5. இருவருக்குமே ஒரே ஒரு மகன்.
  6. மகன்களின் மனைவியின் பெயர், "விண்டா" (Winda).
  7. இவர்கள் இருவருக்கும் ஒரே ஒரு மகன்.
  8. அந்த மகன்களின் பெயர், "ஜேம்ஸ் ஆலன்". (இரண்டாவது ஆலனுக்கு, பெயரில் ஒரு 'L' அதிகமாக வரும். [James Al(l)an])
  9. இரண்டு ஜேம்ஸும் விவாகரத்தாகி மீண்டும் திருமணம் செய்திருந்தனர்.
  10. அம்மனைவியரின் பெயர், "பெட்டி" (Betty).
  11. இருவரும் நாய் வளர்த்தார்கள்.
  12. அந்த நாய்களின் பெயர், "டைனி" (Tiny)! (நாய் கூடவா..?!)
           நம்பமுடிகிறதா உங்களால்?! இத்தகவல் 1980-ல், ஜனவரி மாதம் வெளியான "ரீடர்ஸ் டைஜஸ்ட்" (Readers' Digest) இதழில் வெளியானது.

           இதுபோன்ற நம்பமுடியாத விசித்திர ஒற்றுமைகள் நம்மைச்சுற்றிலும் ஏராளம். தேவைப்பட்டால், அவற்றை இரண்டாம் அத்தியாயமாகக் கொண்டு, பின்னர் காணலாம். "என்னமோ இப்போ தேவையான விஷயத்த சொன்ன மாதிரி, தேவைப்பட்டா பாக்கலாம்னு சொல்ற..?" எனக் கேட்கும் அன்பர்களுக்கு, நான் முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். "இப்பதிவுகள் நிச்சயம் ஏதாவதொரு வகையில் தொடர்புடையாதாயிருக்கும். அது நமக்கு நேரடியாக தொடர்பிருப்பதுபோலத் தோன்றவேண்டும் என்பதில்லை. ஒரு மரத்தின் கிளை, அதே மரத்தின் மற்றொரு கிளையுடன் தொட்டும் தொடாமல் இருப்பதுபோலத்தான் இதுவும்". நம்பவில்லை எனில், உங்களுக்காக ஒரு (செய்தித் துணுக்குடன் கூடிய) சிறு உதாரணப்படம்.


             சம்பந்தமே இல்லாத உதாரணம் போல் தோன்றுகிறது, அல்லவா?! விளக்குகிறேன். இன்றைய பதிவில், (தேவைக்கேற்ப) ஆபிரகாம் லிங்கனைப் பற்றிப் பார்த்தோம். ஆனால் அருகில் இருக்கும் லிங்கனின் தூரத்து உறவினரும், திரைப்பட நடிகருமான "டாம் ஹேங்க்ஸ்" (Tom Hanks)-ஐப் பற்றி இதற்கு முன் நமது பதிவில் குறிப்பிட ஏதேனும் தேவை ஏற்பட்டிருந்ததா, எனத் தேடினால். நிச்சயமாக குறிப்பிட்டிருக்கிறேன்; அதற்கு அவசியமும் இருந்திருக்கிறது! ஆனால் டாம் ஹேங்க்சைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை. (அதிகமாகக் குழப்புகிறேனா?!) 

            எனது முந்தைய பதிவுகளுள் "பிரபஞ்ச வரலாறு" என்கிற தலைப்பின் கீழ் இடப்பட்ட பதிவில் குறிப்பிட்டிருந்த, "டான் பிரவுன்" (Dan Brown)-ன் பிரதான கதாப்பாத்திரமான "ராபர்ட் லேங்க்டன்" (Robert Langdon)-னுக்கு திரையில் உருவமும், உணர்வும், உயிரும் கொடுத்தவர், இந்த டாம் ஹேங்க்ஸ்! இதை ஒருவித மறைமுகப் பிணைப்பாகக் கருதலாம்.


("Angels & Demons" திரைப்படத்தில், ராபர்ட் லேங்க்டனாக 'டாம் ஹேங்க்ஸ்')

            இதுபோன்ற ஒற்றுமைகள் சாத்தியமா? என்று பார்த்தால், எனது மானசீக குரு திரு.சுஜாதா கூறிய பதில் மட்டுமே நினைவிற்கு வருகிறது. அது "இது ஒரு நிகழ்தகவு போலத்தான். சிலருக்கு அதன் அளவு சற்று அதிகமாக இருக்கும். உங்களில் ஒருவர் உங்களது வாழ்விற்கும் ஒரு பிரபலத்தின் வாழ்விற்கும் உள்ள விஷயங்களில் நிச்சயம் பல ஒற்றுமைகள் காணப்படும்" என்றார். நானும் ஒரு நம்பிக்கையில் ஒரு மிக முக்கிய புராண கதாப்பாத்திரத்துடன் ஒரு ஆர்வத்தில் ஒப்பிட ஓரளவிற்கு ஒற்றுமையாகவே வந்தது! (அது என்ன கதாப்பாத்திரம்னுலாம் கேக்கக்கூடாது. அப்பறம் பிரச்சனையாகிடும். எனக்கு சொன்னேன்!)

            ஆனால், என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டீர்கள் எனில், இதுபோன்ற ஆச்சர்யங்கள் உண்மையாகவே நாம் அற்புதம் என நம்பும் நிலையைக் கொண்டிருக்க வாய்ப்புகளுள்ளது என்றே கூறுவேன். அதற்கான விளக்கங்கள் வழக்கம்போல் வரும் பதிவுகளில் பதிவிடப்படும். நான் பலரை மானசீக குருவாக ஏற்றிருந்தாலும், அவர்கள் கூறியவற்றை அப்படியே நம்பமாட்டேன். அப்பலரின் கருத்துக்களின் சில துளிகளின் கதம்பமாகவே எனது பாதைகளில் அலங்கரிக்க விரும்புகிறேன். ஆகவே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்தளவில் கூட இருக்க விரும்புவதில்லை. (கடைசிவரைக்கும் ஆடியன்ஸ் தான். ப்ளேயரே கிடையாது!)

            பிரபல எழுத்தாளரான "ஆர்தர் கோஸ்லர்" (Arthur Koestler), 'தி ரூட்ஸ் ஆஃப் கோயின்சிடன்ஸ்' (The Roots of Co-incidence) என்கிற நூலில் இத்தகைய தற்செயலான நிகழ்ச்சிகளுக்கு, ஒருவிதமான அறிவியல் ரீதியான (சற்று சிக்கலான) விளக்கம் தந்திருக்கிறார். 


(ஆர்தர் கோஸ்லர்)


            மேலும், அடுத்த வாரம் காணவிருக்கும் தலைப்பின், சிறு துப்பை (Clue), ஏற்கனவே இப்பதிவின் ஒரு ஓரத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதுவும் லிங்கனிடமே! அது, "கனவுகள் பலிக்குமா?" என்பது பற்றி. காத்திருங்கள் கனவுகளுடன்; காணலாம் அடுத்த வாரம்.

அதுவரை நன்றிகளுடன்,
             - அயலான்.



துணை நின்ற நூல்:

கடவுள் - சுஜாதா.


மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy:  Google.


பின் குறிப்பு: 
          பதிவுகள் தவிர்த்து மேலும் சில விந்தைகளைப் பற்றி அவ்வப்போது அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட இணைப்பு இட்டுச்செல்லும் பக்கத்தை "LIKE" செய்யவும்.