Tuesday 19 August 2014

5.) "நீர்" இன்றி அமையாது உலகு...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவில் கண்ட முன்னோட்டத்தின் தொடர்ச்சியை, இந்த வாரம் காண்போம். நாம் வாழும் இப்புவி, சூரியனிலிருந்து பிரிந்து, சூரியனைச் சுற்றிவர ஆரம்பித்து, காலப்போக்கில் குளிர ஆரம்பித்தது. உண்மையில் அப்போதைய பூமி, எரிமலைக் குழம்பைக் கடலாகக் கொண்டிருந்தது. (அப்போது சுனாமி வந்தால், அதன் விளைவை சற்று எண்ணிப்பாருங்கள்...!)


( அன்றைய பூமி )


         அப்போதைய பூமி, தற்போது இருப்பதுபோல் வளிமண்டலக் கவசம் ஏதுமின்றி இருந்ததால், விண்கல் (Asteroid), எரிகல் (Shooting Star), வால்நட்சத்திரம் (Comet) போன்றவைகள், இந்தியாவின் மீது படையெடுத்த அன்னியர்களைப் போல் சரமாரியாக மோதல் மழை பொழிந்தன.

         அதன் விளைவாக இன்றைய பூமியின் புறப்பரப்பில் மேடு பள்ளங்கள் தோன்றின. ( தற்போதைய கடல் பகுதிகள், அவற்றை நிரப்பி, முழுமையான உருண்டை வடிவக் காட்சியை ஏற்படுத்தின. இன்று கடலடியிலுள்ள பெரும்பாலான பள்ளங்களும், அகழிகளும் அவ்வாறு உருவானவைகளே! ) புவியின் புறப்பரப்பில் நீர் அதிகமாகக் காட்சியளித்தாலும், உண்மையில் நிலப்பரப்பே உலகில் அதிகம்.

         நம்மிடையே காலம்காலமாக நிலவிவரும், "பூமி குளிர்ந்து, பின் ஏற்பட்ட நீராவி, மழையாய்ப் பொழிந்து, பின்புதான் நமது புவியில் நீர் தோன்றியது" என்ற கருத்து தவறானது. நீராவி உருவாகவும் நீர் வேண்டும். அந்த அடிப்படை நீர், நமக்கு வால்நட்சத்திரங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றதே..!
  • அப்படி, நமக்கு அத்தியாவசியமான நீரை, நமக்கு வால்நட்சத்திரம் மூலம் Courier செய்தது யார்?
  • அவ்வாறு அனுப்பப்பட்ட நீர் எப்படி இவ்வளவு பத்திரமாக மற்ற கோள்களைப் போலல்லாமல் நமது பூமியில் மட்டும் தேக்கி, பாதுகாக்கப்பட்டது?
         முதலாவது கேள்விக்கான பதில் :
          அப்போது மோதிய வால்நட்சத்திரங்கள் மட்டுமல்ல, தற்போது நாம் வான்வெளியில் கண்டு ரசிக்கும் வால்நட்சத்திரங்கள் அனைத்தும், நமது சூரியக்குடும்பத்தின் எல்லை எனக் கருதப்படும், "குயிப்பர் பெல்ட்" (Kuiper Belt) எனும் ஒரு வெளிவட்டப்பதையில் இருந்தே வருகின்றன. அப்பாதையைச் சுற்றிலும் உள்ள மேகங்கள் போன்ற பனித்திரள்கள் "ஊர்ட் மேகங்கள்" (Oort Cloud) என்றழைக்கப்படுகின்றன. இங்குதான் வால்நட்சத்திரங்கள் உருவாகின்றன.



         "உண்மையில் அந்த நீர் நமக்காக அனுப்பி வைக்கப்பட்டனவா?" என்றால், 'தெரியாது' என்பதே எனது பதிலாக இருக்கும். காரணம், அக்கேள்விக்கும் பதில் கூறுவதற்கான தகுந்த சாத்தியக்கூறுகள் இருப்பதால்தான்..!

         இரண்டாவது கேள்விக்கான பதில் :
         "புவிஈர்ப்புவிசை". இது நம்மைச் சுற்றியுள்ள பிற கோள்களைக் காட்டிலும் நமது புவியில், நீரைத் தக்கவைக்கும் அளவிற்கு இருக்கிறது. பிற கோள்கள், சூரியனிலிருந்து சரியான தொலைவில் (அதாவது, நீரை நீராக வைத்திருக்கும் தொலைவில் இல்லாததால், அவ்வாறு பெறப்பட்ட நீரை, பனிக்கட்டியாகவோ, அல்லது நிரந்தர நீராவியாகவோ வைத்திருக்கின்றன. 

         ( "இன்னைக்கு இவன் 'சயின்ஸ் புக்'க கையில குடுத்துட்டான்" அப்டினு நீங்க புலம்புறது எனக்கு கேட்குது...! ஆனால், அடுத்த கட்டத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல இவ்வறிமுகம் அவசியமாகிறது.)

         உண்மையில் நமது பூமி மட்டும்தான் நீரைத்தேக்கும் சரியான தொலைவில் அமைந்துள்ளதா?

"இல்லை"

'அப்படியானால், நமது சக போட்டியாளன் யார்...?'

         அவன், நமக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள, பூமியின் இரட்டைச் சகோதரன் என்றழைக்கப்படும் "செவ்வாய்". இன்றும்கூட அங்கு நீர்நிலைகள் இருந்ததற்கும், ஏரிகள் உருவாகியிருந்ததற்க்குமான ஆதாரங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.


( செவ்வாயில் நீர் இருந்ததற்க்கான ஆதாரங்கள் )


         "எங்கே ஓடி மறைந்தன அவ்வளங்கள்...?!" என்கிற நமது நியாயமான கேள்விக்கு, அறிவியலின் தற்போதைய பதில், "நிச்சயமாகத் தெரியாது". ஆனால், அதைப்பற்றிய யூகங்கள் அதிகம் உலவுகின்றன.

        சரி. இப்போது நாம் பூமிக்கு வருவோம். உலகின் முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது, பூமி குளிர்ந்த பின்பே என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில் பூமி தீக்கோளமாய் தகிக்கும்போதே அதில் ஊர் உயிரினம் வாழ்ந்துவந்தது. அதன் பெயர் "ஆர்ச்சியா" (Archaea).


( ஆர்ச்சியா )

         இது ஏறத்தாழ முப்பது கோடி ஆண்டுகள் இப்பூமியில் தனது சந்ததியைப் பெருக்கியது; வெறும் இரும்பு மற்றும் நச்சுப்பொருட்களை உண்டு, உலகை பலவகை உயிரினங்கள் தோன்ற ஏற்ற இடமாக மாற்றியது. இதன் விசித்திர தன்மை என்னவென்றால், மனிதனை சாம்பலாக்கும் அளவிற்கு வெப்பம் இருந்தால் மட்டுமே, இவை உயிர் வாழும். இன்றும் கூட, எரிமலைக் குழம்புகளில் இவை வாசம் செய்கின்றன.

[ பைபிளிலும், குரானிலும் அவர்களது மத நம்பிக்கையின்படி, மனிதனைப் படைக்கும் முன்னரே, கடவுள் "சாத்தானை"ப் படைத்தார். நரகத்தின் ஆட்சியாளனாக வர்ணிக்கப்படும் "சாத்தான்" அல்லது "சைத்தான்", நெருப்பின் சூழ்நிலையில் வாழ்வதுபோல "Tom and Jerry" உட்பட அனைத்து வித ஊடகங்களும் காட்சிப்படுத்துகின்றன; கையில் இரும்பாலான சூலத்தோடு. ஆனால், பெரும்பாலும் இவ்வுருவகங்கள், நரகத்தில் தண்டனை வழங்க நியமிக்கப்பட்ட,  ஒரு எம-கிங்கரர்களைப் போன்றும் காட்சிப்படுத்தப் படுகின்றன.


( சாத்தானின் கற்பனை உருவம் )

குரானில், 'ஜின்'கள் நெருப்பினால் படைக்கப்பட்டவை என்ற ஒரு நம்பிக்கை உண்டு. (ஆனால், இந்த ஜின்கள் பூதாகரமானவை, என்றும் நம்பப்படுகிறது.)

  • மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்டது,
  • நெருப்பில் வாழும் சூழ்நிலை,
  • கையில் இரும்பு, ( அதுவும் 'குத்தி' உண்ணக்கூடிய "Fork"-ஐ நினைவுபடுத்துவது போல )
  • இன்றும் மனிதர்கள் வாழும் சூழ்நிலையில், (அதாவது இன்னும் பூமியில்) வாழ்கின்றது!

போன்ற விஷயங்கள், ஆர்ச்சியாவையும், சாத்தானையும் ஏதோ ஒருவகையில் குறிப்பது போலவே தோன்றினாலும், 'நிச்சயமாக சாத்தானின் உருவகம் இந்நுண்ணுயிரியைத்தான் குறிக்கிறது' என்று நான் சொல்லவில்லை. ]

          முப்பது கோடி ஆண்டுகளில் பூமி குளிர்ந்ததால், அச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆர்ச்சியா, சயனோபாக்டீரியாவாக (Cyano Bacteria) உருவெடுத்தது. உலகின் முதல் பரிணாம வளர்ச்சி இங்கிருந்து துவங்குகிறது. இவைதான், கரியமில வாயுவை (Carbon-di Oxide [கார்பன்-டை ஆக்சைடு] ) கிரகித்து, பிராணவாயுவை (ஆக்சிஜன் [Oxygen]) உற்பத்தி செய்த பிரம்மா..!
(ஐயா சயனோபாக்டீரியா...உண்மையிலேயே "நீர்" இன்றி அமைந்திருக்காது இவ்வுலகு...!)


(சயனோபாக்டீரியா)

          இதற்குமேலும், இந்நுண்ணுயிர்களைப் பற்றி நுணுகி ஆராய்ந்தால், நாம் அடுத்த பதிவிற்குச் செல்வதற்குள், மனித இனம் மற்றுமொருமுறை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். ஆகவே, நாம் நேரடியாக அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்.
  • நமது பூமியிலேயே இத்தகைய பரிணாமம் நிகழ்ந்திருந்தால், நம் பூமியின் இரட்டைச் சகோதரனும், நமக்கு முன்னரே குளிர ஆரம்பித்தவனுமான, செவ்வாயின் நிலை என்ன?
  • ஒருவேளை அந்தப் பரிணாமம் அங்கேயும் நிகழ்ந்திருந்தால், அவ்வுயிரினங்கள் தற்போது எங்கே?
  • நமது பூமியில் அடுத்து எவ்வகை உயிரினங்கள் தோன்றின?

காத்திருங்கள், கேள்விகளுடன்..!

அடுத்த வாரம் அழைத்துச்செல்கிறேன் Jurassic யுகத்திற்கு, Steven Spielberg-ன் ஒத்துழைப்புடன்...!

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க :



துணைநின்ற நூல்கள் :

  • உயிரின் ரகசியம்.  --சுஜாதா.
  • விஞ்ஞானம் : நேற்று-இன்று-நாளை.   --தமிழ் உத்தம்சிங்.


Photo Courtesy : Google


சிறப்பு நன்றி: 
இன்று எனது மடிக்கணினி பழுதானபோது, தனது மடிக்கணினியை பயன்படுத்த அனுமதியளித்த K.காமராஜ்-க்கு.

2 comments:

  1. அப்போதைய பூமி, தற்போது இருப்பதுபோல் வளிமண்டலக் கவசம் ஏதுமின்றி இருந்ததால், விண்கல் (Asteroid), எரிகல் (Shooting Star), வால்நட்சத்திரம் (Comet) போன்றவைகள், இந்தியாவின் மீது படையெடுத்த அன்னியர்களைப் போல் சரமாரியாக மோதல் மழை பொழிந்தன.

    So vali mandalam epa form achu and how?. . .bt earth form aana apave valimandalamum form aairuchu apdinu epayo paditha niabagam. . .bt neenga ipdi solrenga. .pls explain

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எனது பதிவை, தவறாது பின்தொடர்வதற்கு எனது முதற்க்கண் நன்றிகள்...!

      வளிமண்டலம், பூமி ஒரு நெருப்புக்குழம்பாகவோ, ஒரு பெரும் பாறையாகவோ விளங்கியபோது உருவாகவில்லை. அப்போது பூமியில் வாயுக்கள் (Gases) இருந்தன; வளிமண்டலம் (Atmosphere) இல்லை. இது சற்றுக் குழப்பமாகத் தோன்றலாம். அதனால், வளிமண்டலத்தைப்பற்றி முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

      பலவகையான வாயுக்கள், அதனதன் நிறைக்கு ஏற்ப, பூமியின் மேற்பரப்பில், புவிஈர்ப்புவிசையின் காரணமாக சூழ்ந்துள்ள ஒரு படலமே "வளிமண்டலம்" எனப்படுகிறது. இதன் வெளிப்புற அடுக்கே "ஓசோன்" என்றழைக்கப்படுகிறது. இந்த அடுக்குகள்தான் பூமியின் கவசம் போல இன்றுவரையில் எரிகற்களிடமிருந்தும், விண்கற்களிடமிருந்தும், வால்நட்சத்திரங்களிடமிருந்தும், பூமி தாக்குதலுக்கு ஆட்படாதவாறு காக்கிறது. பெரும்பாலானவைகள், நமது வளிமண்டலத்தினுள் நுழையும்போதே உராய்வின் காரணமாக, முழுவதும் எரிந்து சாம்பலாகின்றன. மாபெரும் கற்கள் மட்டுமே, மிகச்சிறிய நொறுங்கல்களாக பூமியை வந்தடைகின்றன.

      இத்தகைய பாதுகாப்பு அமைப்பு பூமியின் தொடக்கக் கட்டத்தில் வலுவிழந்து இருந்ததால், பயங்கர தாக்குதல்களுக்கு ஆளானது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலை, நமது அண்டை கிரகமான செவ்வாயில் நிலவுவதைக் கண்கூடாகக் காணலாம். அதற்காக, "அங்கு வாயுக்கள் இல்லை" என்று அர்த்தமில்லை. "இருக்கும் வாயுக்கள், பலம்பொருந்தியதாக இல்லை" அல்லது மேற்கூறிய, "வளிமண்டலம் இல்லை" என்றே பொருள்.

      பலநூறுகோடி ஆண்டுகள் தேவைப்பட்ட நமது பூமியின் உருவாக்கத்தை, சில வினாடிகளில் படித்தறியும் ஆற்றல் பெற்றவர்களாக இப்போது நாம் விளங்குவதால், பிரபஞ்சம் தோன்றியது - சூரியன் பிறந்தது - பூமி உருவானது - வளிமண்டலம் உருவானது, என தொடர் நிகழ்வுகளை, அதன் உண்மையான கால அளவை அறிந்திராமல் கடந்துவிட்டோம். (நமக்கு சொல்லி குடுத்தவங்க, syllabus-a cover பண்ணனும்கிற நோக்கத்துல, வேகமா சொல்லிக்குடுத்துட்டங்க-னு வச்சுக்கோங்களேன்).

      மற்றபடி, பூமி உருவாகி பல லட்சம் ஆண்டுகள் கழித்தே வளிமண்டலம் உருவானது.


      மேலும் விரிவான விவரங்களுக்குக் காண்க :

      http://en.wikipedia.org/wiki/History_of_the_Earth


      தங்கள் வருகைக்கு நன்றி...!

      Delete