அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!
'நாளை தேர்வு' என்றால் கூட பயப்படாமல், நிம்மதியோடு தூங்கப் போகும், லட்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன். இருப்பினும், முதன்முதலில், பத்தாம் வகுப்பு தேர்வின் முதல் நாள் இரவில் உள்ளூர ஒருவித பயம் போன்ற உணர்வு. 'நாளை நல்லபடியாக தேர்வை முடிப்போமா?' என்கிற கவலை, பதட்டம். இது போன்ற ஒரு உணர்வை ஒவ்வொரு நாள் செவ்வாய்க்கிழமை இரவிலும் எனக்கு வரச் செய்த உங்கள் ஆதரவிற்கு, நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நாம், கடந்த பதிவுகளில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்க வாய்ப்புடைய கோட்பாடுகளைப் பார்த்தோம். இனி, கிரகங்கள் தோன்றிய விதத்தையும், அவற்றில் உயிரினங்கள் தோன்றியதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்வோம்.
அதற்கு முன், இந்து மத நம்பிக்கையில் காணப்படும் 'ஸ்ரீ சக்கரம்' பற்றி எனது கண்ணோட்டத்தை, இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
(ஸ்ரீ சக்கரம்)
இதைப் பார்க்கும் போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோன்றும், இது ஒரு ஓவியம் என்பதால்.
எனக்கு இது 'பெருவெடிப்புக் கொள்கை'(BIG BANG THEORY)யைக் குறிப்பதைப் போலத் தோன்றியது. இதிலுள்ள ஒவ்வொரு முக்கோணமும் ஒரு திசையைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால், அது பெருவெடிப்பின் போது அணுத்துகள்கள் சிதறிய திசைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும், அதை சுற்றிலும் காணப்படும் தாமரை இதழ்கள் போன்ற அமைப்பு, அப்போது வெளிப்பட்ட வெப்பத்தையும், அதைச் சுற்றிலும் உள்ள வட்டங்கள், அது சீராக அனைத்து திசையிலும், ஒரே வேகத்தில் பரவுவதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும், அதன் நடுவில் அமைந்த 'தலைகீழ் முக்கோணம்' மற்றும் அதன் மையத்தில் அமைந்த ஒற்றைப் புள்ளி போன்றவை எனது இக்கருத்தை மேலும் பலப்படுத்தின.
அதைக் காணும் முன், பிரபல அமெரிக்க எழுத்தாளர் Dan Brown அவரது கதைக்காக உருவாக்கிய Robert Langdon எனும் ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.
அவரது சர்ச்சைக்குரிய கதைகளான, "The Da Vinci Code" மற்றும் "Angels and Demons" போன்றவை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பிரதான கதாப்பாத்திரமான "Robert Langdon", அவரைச் சுற்றிலும் காணக் கிடைக்கும் குறியீடுகளைக் கொண்டு, அடுத்த துப்புகளைக் கண்டறிவது போல அதன் கதை செல்லும். நிஜ உலகிலும் அவ்வாறான உண்மைகள் கலந்துள்ளன (!) அவற்றைப் பற்றி விரிவாக இனி வரும் 'குறியீடுகள்' பற்றிய பதிவுகளில் காணலாம்.
(Dan Brown)
இவற்றை நான் இங்கு குறிப்பிடக் காரணம், "The Da Vinci Code"-ல் சொல்லப் படும் ஒரு விஷயம். அது, 'தலைகீழ் முக்கோணம்' பெண் தன்மையைக் குறிக்கும் என்பதாகும். மிகச்சரியாக, ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் தலைகீழ் முக்கோணம் அமைந்துள்ளது. அதோடு ஒரு மையப் புள்ளியும். 'இப்பிரபஞ்சம் உருவாவதற்கு முன் அது ஒரு புள்ளி போன்ற பொருளாக இருந்தது ' என்று நாம் நமது முந்தைய பதிவில் கண்டோம்!
மேலும், 'படைக்கப்படுதல்' என்ற ஒரு விஷயம், பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒன்றாக இந்து மதத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என அனைவரும் 'சக்தி'யால் படைக்கப்பட்டவர்களே, என்பது சக்தி வழிபாட்டைப் பின்பற்றுவோரின் நம்பிக்கை.
இந்த ஸ்ரீ சக்கரத்தை நாம் பெரும்பாலும், ஒரு அம்மனின் பாதத்தின் அருகில் பிரதிஷ்டை செய்திருப்பதைக் காணலாம். நம் முன்னோர்கள், விஞ்ஞானத்தை ஆன்மீகத்தின் வாயிலாக தெரிவிக்க முயன்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
( 'லலிதாம்பிகை'யின் காலடியில் 'ஸ்ரீ சக்கரம்' )
இப்போது, உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கான சில வாய்ப்புகளைக் காண்போம்.
- பூமி குளிர்ந்த பின்பு ஏற்பட்ட இரசாயன மாற்றங்களினால் நிகழ்ந்திருக்கலாம்.
- கடவுள் படைத்திருக்கலாம்.
- வேற்றுக்கிரகவாசிகள் படைத்திருக்கலாம்.
இம்மூன்றைத் தவிர வேறு சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதுவரையில் தெரியவில்லை. இவற்றை விரிவாக அடுத்த வாரம் அலசுவோம். நிச்சயம் வெளுக்கப் பட வேண்டிய சாயங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அதுவரை காத்திருங்கள், எதிர்பார்ப்புகளுடன்.
அதுவரை நன்றிகளுடன்,
- அயலான்.
Photo Courtesy : Google.




