Thursday 7 June 2018

31.) நாமறியா வே(ரு/று)லகம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          கடந்த பதிவில் நமது பூமி சுற்றிவரும் சூரியன் ஒரு உயிருள்ள பிராணி என்றும், அதன் தாக்கம் பூமியிலுள்ள உயிரினங்களைப் பாதிக்கும் என்றும் கண்டோம். கடந்த பதிவில் சொல்லத்தவறிய ஒரு தகவல்: சிலந்தி, தான் பின்னும் வலைகளை கிரகணகாலங்களில் கலைத்துவிடுகிறது. (காரணம் என்னனு ஸ்பைடர்மேன்-கிட்டதான் கேக்கணும்...!) சூரியனுக்கு உயிருண்டு என சில ஆய்வாளர்கள் எவ்வாறு நம்புகிறார்களோ, அதேபோல யாராலும் நம்பவே இயலாத, தனது ஆராய்ச்சியின் முடிவொன்றை உலகின் மிகப்பிரபலமான ஒரு விஞ்ஞானியும் நம்பினார். அவர்தான், இங்கிலாந்தில் டிசம்பர் 25, 1642-ல் பிறந்து மார்ச் 20, 1726-ல் வரலாறாய் மறைந்த சர். ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton). நம்மில் பலருக்கு நியூட்டனை ஒரு இயற்பியல் விஞ்ஞானியாக மட்டுமே தெரியும். ஆனால், அவர் அத்தகைய பௌதீக ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, கணிதவியல், வேதியியல், ஒளியியல், விண்ணியல், தத்துவவியல், இயக்கவியல் எனப் பல துறைகளில் முன்னோடியாகவும் ஜாம்பவானாகவும் திகழ்ந்தவர். அவர் செய்தவற்றுள் நமது பதிவிற்குத் தேவையான சில குறிப்பிட்ட ஆய்வுகளை மட்டும் இப்பதிவில்  காண்போம்.



சர் ஐசக் நியூட்டன்

          உலகிலேயே மிகப்பெரிய காந்தமான 'உலகம்', உலகில்வாழும் அனைத்து பொருட்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அது நம் கண்முன்னே ஏற்படுத்தும் தாக்கமே புவிஈர்ப்புவிசை. பூமி காந்தமாதலால், நமது உடலிலுள்ள இரும்புச்சத்துக்களின் மீது அதன் தாக்கம் சர்வ நிச்சயமாய் இருக்கும். அப்படிப்பார்த்தால், நமது பூமியையே இழுத்துப் பிடித்திருக்கும் சூரியனின் தாக்கமும் நம்மீது இருக்கும், என பல்வேறு ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதுதான் அலெக்சாண்டர் சிஜேவ்ஸ்கி (Alexander Chizhevsky) சூரியன் ஒரு உயிருள்ள பிராணி என்று கூறினார். இவர் பிறக்கும் முன்னே தோன்றிய உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளுள் ஒருவரான நியூட்டன், பூமிக்கு உயிர் உண்டு எனவும், அது சுவாசிக்கிறது எனவும் கூறினார். 



          உலகின் ஒப்பற்ற விஞ்ஞானிகளுள் முக்கியமான ஒருவர் இவ்வாறு அறிவுக்கு ஒப்பாத ஒரு கருத்தை எவ்வாறு முன்வைத்தார் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஒன்று, பிற விஞ்ஞானிகள் கூறுவதுபோல் அவரது கருத்து உண்மையிலேயே நமது மேம்பட்ட அறிவியலின் பார்வையில் ஏற்றுக்கொள்ளவியலாதவொன்றாக இருந்திருக்கலாம்; அல்லது, அவர் கூறிய ஆய்வு முடிவை நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். சொன்னவர் ஒன்றும் சாமான்யமான விஞ்ஞானியல்ல, நியூட்டன்; தனது காலத்தைத் தாண்டிச் சிந்தித்த மிகச் சில மேதைகளுள் முக்கியமானவர். இவரது மூளையுடன் ஒப்பிட்டால், மனித இனத்திலேயே தனது மூளையின் பெரும்பகுதிகளை உபயோகித்த ஐன்ஸ்டீனின் மூளைகூட எந்த மூலைக்கு என்று உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் மெச்சும் அளவிற்கு ஆகச்சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தவர். அவ்வாறிருக்க, அவரது ஆராய்ச்சி முடிவுகள் பிதற்றலாக இருக்க வாய்ப்பு இல்லை. மாறாக, அவர் கூறியதை நாம் சரியாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.


          நமது உடலில் நுண்ணுயிரிகள் ஒட்டிக்கொண்டு ஒண்டிக்குடித்தனம் நடத்தி, குட்டிபோட்டு பல்கிப்பெருகுவதைப் போல, இவ்வகண்ட பூமியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நாமும், நம்மைப்போன்ற பிற உயிர்களும் சுவாசித்து உயிர்வாழ்வதே பூமியின் ஒரு சுவாசித்தலாகக் கருதி இதைக்கூறினாரா, அல்லது நியூட்டனின் கூற்றுப்படி, உண்மையிலேயே (சிஜேவ்ஸ்கி சூரியனைக் கூறியதைப் போல்) பூமியும் ஒரு மிகப்பிரம்மாண்ட உயிரினமா? அது சுவாசிக்கிறதா? என்பது வெளிச்சத்தை ஆராய்ந்த அந்த நியூட்டனுக்கே வெளிச்சம்!


(ஒரு சிறுவனின் கைகளிலேயே இத்தனை நுண்ணுயிரிகள் இருப்பின், அப்போது உலகமெல்லாம்...?)
[அவற்றின் வளர்ச்சியில் காணப்படும் ஒழுங்கமைவுகளை நோக்குக]

          சரி, அவர்கள் நம்புவது போல சூரியனும் பூமியும் ஒரு உயிரினமாக இருப்பின், தொழில்நுட்பத்தில் பல்வேறு மைல்கற்களை ஒரே தாவலில் இரண்டாம் உலகப்போருக்குப்பின் தாண்டிய (ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற) மனித இனத்தால் அதை இன்றளவுமா கண்டறிய இயலாமல் இருக்கும், என்று கர்வத்தோடு கேட்கும் ஆறறிவு மனிதனுக்கு இந்த அயலானின் கேள்வி என்னவெனில், "அப்படி எதையெல்லாம் அவதானித்து, ஆராய்ந்து, உணர்ந்தறிந்து, பகுத்தறிந்து நமது மனித இனம் இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறது...?" என்பதே. ஆம், நுண்ணிமத்திலும் நுட்பமான அருகிய அறிவைக்கொண்டே நாம், நம்மைச் சுற்றி நடப்பவற்றில் சிலவற்றை நமது அறிவுக்கெட்டியவரை ஆராய்ந்து அறிகிறோம். இத்தனை தூரம் மனித இனம் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்ந்துவிட்டதாக மார்தட்டும் வேளையிலும், நாம் கற்றது கைமண்ணளவே! நாம் அன்றாடும் காணும் ஆறறிவுக்குக் கீழுள்ளதாக நம்பப்படும் ஒரு முக்கியமான உயிரினத்தை முதலிலும், உயிரற்ற ஒன்று என நாம் நம்பும் சிலவற்றின் அற்புதமான ஆற்றலை, அதைத்தொடர்ந்தும் காண்போம்.

          முதலில் நாம் காணவிருக்கும் அற்புத உயிரினம், மனித இனத்தால் ஓரறிவு (தொடு உணர்வு) உயிரினம் என ஒதுக்கப்பட்ட "தாவரங்கள்". புராணகாலம் தொட்டு இன்றுவரை நாம்கேட்கும் சொலவடைகளுள் ஒன்று, 'விண்ணும்-மண்ணும்'. சற்றே நிதானமாய் யோசித்தால் விண்ணின் துவக்கம் மண்ணின் எல்லை முடிகின்ற புறப்பரப்பிலிருந்தே துவங்குகிறது. எந்தவொரு உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் அவை ஒன்று மண்ணினுள் வாழ்பவையாகவும், அல்லது விண்ணின் துவக்கமான மண்ணின் புறப்பரப்பில் வாழ்பவையாகவும் இருக்கும். (நீரில் வாழ்பவற்றை மண்ணின் புறப்பரப்பில் வாழ்பவையாகவே கொள்ளவேண்டும்). ஆனால் இவ்விரு உலகங்களிலும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஆளும் ஒரு உயிரினம் உண்டெனக் கூறினால், அது மரத்தைத் தவிர வேறேதுவும் இல்லை. (தாவரங்கள், செடி, கொடிகள் போன்ற அனைத்தும் பழம்விட்டு கொட்டை போட்ட மரத்தின் பேரக்குழந்தைகள் என்றே கருதவேண்டும்...!). மண்ணின் புறப்பரப்பில் கிளைகளையும், மண்ணின் உட்புறத்தில் வேர்களையும் பரப்பி, இருந்த இடத்தைவிட்டு நகராமல், தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்து, உலகின் முதல் சூரிய மின்தகடுகளான இலைகளின் மூலம் பிற உயிர்களும் வாழ, பிராணவாயுவை இலவசமாக வழங்கும் இம்மரங்களிடம் முறையாக வேண்டிக் கேட்டால் வரங்கள் பல தரும் என்பதால் நம் முன்னோர் இதற்குத் "தாவரம்" (தா-வரம்) எனப் பெயரிட்டனரோ? அல்லது அவ்வாறு தன்னிடமுள்ளதைத் தருவதால் மரங்களுக்குத் "தரு" என்று பெயரிட்டனரோ? தெரியாது; மரம்போல் மனித இனமும் வளர்ந்துவிட்டது; மரங்கள் நம்மை வளர்த்துவிட்டது.




          
          இத்தகைய பெருமைமிகு மரங்கள் எப்போதும் நேராக வளரும், பக்கவாட்டில் கிளைகளைப் பரப்பும். ஆனால், நாம் நினைத்த/விரும்பிய வடிவத்திற்கு மரங்கள் வளருமா? 'வளரும்' என்று கூறும்வண்ணம் இவ்வுலகிற்கு நிரூபித்துக்காட்டியவர், ஸ்வீடன் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடிபெயர்ந்த "ஆக்செல் எர்லேண்ட்சன்" (Axel Erlandson). எவ்வாறு என நீங்கள் வியப்பீர்களாயின், சற்றே நிதானித்து மேலும் தொடர்க. பொதுவாக எந்தவொரு உயிரினத்திடமிருந்தும் ஏதேனுமொன்றை நாம் பெற விரும்பினால், முதலில் அதன் நம்பிக்கையைப் பெறவேண்டும். அதன் மொழியைப் புரிந்துகொள்ளவிட்டாலும், அதன் மனதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். உங்களால் அந்த உயிரினத்திற்கு எந்தவிட ஆபத்தும் இல்லை என்பதை அவ்வுயிரினம் உணரும்போதுதான், அது தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்திக்கொள்ளும். (இத்தனை வருட சினிமா வரலாற்றில், "ஈ.டி." (E.T. - The Extra-Terrestrial) தொடங்கி "தி ஷேப் ஆஃப் வாட்டர்" (The Shape of Water) வரை, இதுதான் (ஒருவருக்கொருவர் வினோதமான) இருவரது புரிந்துணர்தலின் சாராம்சம். அவ்வளவு ஏன், முகநூலில் முகம் தெரியாமல் புதிதாகப் பேசத்தொடங்கும் டோளிகளுக்கும், டோலர்களுக்கும் நான் கூறும் இந்த மனநிலை புரியாதா என்ன..?!)



          வைத்தியத்திற்காக மூலிகைகளைப் பறிக்கும் வைத்தியர்கள் மூலிகைகளைப் பறிக்கும்முன் எதையோ முணுமுணுத்து, அதன் பின் பறிப்பதுண்டு. அவ்வாறு அவர்கள் மந்திரம் என்கிற பெயரில் முணுமுணுப்பது, "இப்போது நான் உன்னில் சில பகுதிகளை மருத்துவத்துக்காய் எடுத்துக்கொள்ள இருக்கிறேன். தயைகூர்ந்து பொறுத்தருள்க; மனமுவந்து கொடுத்தருள்க." என்பதுபோலான ஒரு வேண்டுகோளே. இதற்கான காரணத்தை விளக்க ஒரு உதாரணம். நமது கால் விரலில் அடிபட்டு ரத்தம் வழிகிறது என வைத்துக்கொள்வோம். நம் உடலினுள் அப்போது எவ்வித செயல்பாடுகள் நடைபெறுகின்ற என்றால், காலில் அடிபட்ட தகவல் மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடையும்; மூளை அசம்பாவிதத்தை உணர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் ஓடும் ரத்தத்தைக் கட்டுப்படுத்தவும், வீணாகும் ரத்தத்தை நிறுத்தவும், தக்கக் கட்டளைகளைப் பிறப்பித்து தகுந்த உடலுறுப்புகள் மூலம் அதிரடி  நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவால் ரத்தம் வழிவது நிற்கிறது. இதேபோல, அடி பலமாக இருக்கும்பட்சத்தில், அடிபட்ட இடத்தின் வலியை  நாம் உணர இயலாதவாறு அவ்விடம் மரத்துப் போகிறது. இதற்குக் காரணமும் அவ்வலியை நாம் உணரவேண்டாம் என நமது மூளை எடுத்த முடிவே. இதே அவசரகால நடவடிக்கையே தாவரங்களிலும் நடைபெறுகிறது. நமது உடலுறுப்பைப்போலவே அதன் உடலுறுப்புகளில் சிறு சேதம் ஏற்படும்போது, அவ்விடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அத்தாவரத்தின் சத்துக்கள் (நமது ரத்தம் வழிவதை நிறுத்த மூளை நடவடிக்கை மேற்கொண்டதைப் போல) வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது; இதன்மூலம் அது ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்து வைத்திருந்த சர்க்கரைச் சத்துக்கள் (Starch) இயன்ற அளவு பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. வைத்தியத்துக்காகப் பறிக்கப்படும் மூலிகைகளில் நமக்குத் தேவைப்படும் சாறு (சத்துக்கள்) இல்லாதபோது, அதைப் பறித்தும் பயனின்றிப் போகும். ஆகவே, அத்தாவரத்திற்கு முன்னறிவிப்பு செய்து, சற்று அவகாசம் கொடுத்து, அது சம்மதித்து விட்டதாக மனதின் உள்ளுணர்வின்மூலம் நம்பியபின்னரே மூலிகைகளை வைத்தியர்கள் பறிக்கின்றனர். காரணம் சொன்னால் மட்டும் அது தன் உடலுறுப்பை இழக்க சம்மதிக்குமா என்றால், நிச்சயம் சம்மதிக்கும் என்பதே பதிலாக இருக்கும். காரணம், அது இழக்கும் உறுப்புகள் மீண்டும் வளரும் திறன் கொண்டவை. உறுப்பை இழக்கும்போது வலித்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ளும் வலிமையையும், தியாகம் செய்யும் தன்மையும் ஒருங்கே பெற்ற ஞானிகள் மரங்கள். அதனால்தான் அதனிடம் 'தா-வரம்' எனக் கேட்கிறோம்.


          இவ்வாறான 'கேளுங்கள் தரப்படும்' என்கிற அற்புதமான நெறியைக் கையாளும் மரங்களின் மனதை அறிந்த ஆக்செல், அவற்றை சக உயிரினமாய் மதித்து, அன்புகாட்டத் துவங்கினார். 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ல் ஸ்வீடனிலுள்ள (Sweden) ஹாலேண்ட் (Halland) நகரில் ஆல்ஃப்ரெட் எர்லாண்ட்சன் (Alfred Erlandson) மற்றும் கிறிஸ்டினா லார்சன் (Kristina Larsson) தம்பதியினருக்கு லுட்விக் (Ludwig), ஆந்தன் (Anthon) என்கிற இரு புதல்வருக்குப் பின்னரும், எம்மா ஸ்வான்சன் (Emma Swanson) என்கிற புதல்விக்கு முன்னரும் மூன்றாவதாய்ப் பிறந்தவர்தான் ஆக்செல். அடிப்படையில் விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட குடும்பம், சுண்ணாம்பு, சாந்து போன்ற கட்டுமானப் பொருட்கள் உருவாக்கும் சுண்ணாம்புக் காளவாசலையும் நடத்திவந்தது. 1886-களின் துவக்கத்தில் அமெரிக்காவின் மின்னசோட்டா (Minnesota) மாகாணத்திற்குக் குடிபெயர்ந்தது ஆக்செலின் குடும்பம். சிறுவயதிலிருந்தே (விவசாயக் குடும்பம் என்பதால்) தாவரங்களோடு புழங்கிய ஆக்செல், மரங்களின் மீதிருந்த அளவற்ற அன்பினால், தான் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்தபின், 1925-ல் தனது தோட்டத்தில் மரங்களைத் தனக்குப் பிடித்த வடிவங்களில் வளர்க்கத் தொடங்கினார். வடிவங்கள் என்றால், அசாதாரணமானவைகள் அவை. உதாரணத்திற்கு, கூடை, நாற்காலி, நுழைவாயில், நடனமாடும் ஜோடி, ஏணி, பாம்பு, இதயம், கோபுரம் என அவரது மனத்திரையில் கண்ட/விரும்பிய அனைத்துமாய் வளர்ந்து நின்றன மரங்கள். அதுமட்டுமல்லாது, வளர்ந்துகொண்டே இருக்கும் தனது பொதுவான பண்பினை மரங்கள் ஆக்செலுக்காக நிறுத்தியிருந்தன. ஆம், ஆக்செல் வளர்த்த மரங்கள் சில குறிப்பிட்ட (அவர் விரும்பிய) அளவிற்கு மேல் வளரவே இல்லை. உதாரணத்திற்கு, ஒரு நாற்காலி வடிவில் ஒரு மரத்தை வடிவமைத்து வளர்த்தால், அது சரியாக ஒரு நாற்காலியின் உயரம் மட்டுமே வளர்ந்திருந்தது; அதற்கு மேல் வளரவில்லை.






          இவ்விநோதத்தை மக்கள் ரசிக்கின்றனர் என்பதைத் தாமதமாகத்தான் அறிந்துகொண்டார் ஆக்செல். உடனடியாக கலிபோர்னியா (California)-வில் ஒரு இடத்தை வாங்கி, அங்கும் தனது இஷ்டம்போல மரங்களை வளர்த்துவிட்டார். "உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்" என்று விளம்பரப்படுத்தியதோடு, "மரங்களின் வித்தையரங்கம்" (The Tree Circus) என அத்தோட்டத்திற்குப் பெயரும் இட்டார். மரங்கள் விதவிதமான வடிவங்களில் கிளைகளைப் பரப்ப உலகெங்கும் ஆக்செலின் புகழ் பரவத் தொடங்கியது. "ரிப்லீயின், நம்பினால் நம்புங்கள்" (Ripley's Believe It or Not!) என்கிற உலகப்புகழ்பெற்ற விநோதங்களின் தொகுப்புகளடங்கிய புத்தகத்தில் ஆக்செலும், அவரது மரங்களும் பன்னிரண்டு முறை இடம்பெற்றிருந்தன. இதில் இவருக்குக் கிடைத்த சிறப்பு என்னவெனில், ரிப்லீயின் புத்தகத்தில் ஒருமுறை இடம்பெற்ற வினோதம் மீண்டும் இடம்பெறும் சாத்தியக்கூறுகள் குறைவு; காரணம், ஆண்டுக்கொருமுறை வெளியாகும் அப்புத்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் நிகழும் விநோதங்களும், இந்த ஆண்டிலும் மக்களை வியப்புறச் செய்யும் சென்ற ஆண்டின் விநோதங்களும் மட்டுமே இடம்பெறும்.




       மரங்களின் தென்றல் காற்றில் வாழ்ந்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் காற்று திசைமாறியது. அவரது வாழ்க்கையின் சோதனைக்காலம்; தான் உருவாக்கிய அந்த அற்புதத் தோட்டத்தை விற்கவேண்டிய சூழ்நிலை! 1963-ல் தனது தோட்டத்தை, பன்னிரண்டாயிரம் டாலர்களுக்கு லேரி (Larry) மற்றும் பெக்கி தாம்ப்சன் (Peggy Thompson) தம்பதியருக்கு விற்றார். ஆக்செலுக்கு தான் வளர்த்த மரங்களின் மீதிருந்த அளவுகடந்த பிரியத்தை உணர்ந்த அத்தம்பதியர், ஆக்செல் அவ்விடத்தை விற்றபிறகும் கூட அம்மரங்களைப் பராமரிக்க, பணிக்கு அமர்த்தினர். என்ன இருந்தாலும் இப்போது அவர் மாற்றான் தோட்டத்து மரங்கள். தினமும் அவைகளோடு இருக்கும் வாய்ப்பு கிட்டினாலும், அவைகள் தனது சொந்தமாய் இருந்து தற்போது தான் வேறோருவராய் வந்து பராமரிக்கிறோமே என்கிற வருத்தம் ஆக்செலின் மனதில் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருந்தது. விளைவு, தான் வளர்த்து உருவாக்கிய மரங்களை அதன் இடத்தோடு சேர்த்து விற்ற ஒரு ஆண்டிற்குள்ளாகவே, அதாவது சரியாக 1964, ஏப்ரல் 28-ல் ஆக்செல் தனது கடைசி மூச்சுக்காற்றை அம்மரங்களிடமிருந்து பெற்று மீண்டும் அம்மரங்களிடமே கொடுத்தனுப்பினார். (அப்போது மரங்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலியும், கதறல்களும் மரங்களுக்கு மட்டுமே கேட்டிருக்கும்!) [பின்குறிப்பு: இவர்தான் ஆக்சல் எர்லாண்ட்சன் என்று ஆணித்தரமாகக் கூறுமளவிற்கு அவரின் ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை.]




          பின்னர், லேரியும், பெக்கியும், அத்தோட்டத்திற்குள் 25, 30 ராட்சத டைனோசர் உருவங்களை வைத்து அதற்கு "தொலைந்த உலகம்" (The Lost World) எனப் பெயரிட்டனர்; ஆக்செலின் மரங்கள் இருந்த தோட்டத்திற்கு "மந்திரக்காடு" (The Enchanted Forest) எனவும் பெயர் மாற்றினர். துரதிஷ்டவசமாக, அவை இரண்டும் திறப்பு விழா காணும் முன்னரே லேரியின் இறப்பு நிகழ்ந்துவிட, தனது மூன்று குழந்தைகளை வளர்க்கும்பொருட்டு நிர்வாகத்தைக் கையிலெடுத்த பெக்கி, சில ஆண்டுகள் வெற்றிகரமாகக் கையாண்டார். பின்னர், அவ்விடத்தை விற்க முடிவெடுத்தபோது முதலில் சம்மதித்த ஒரு சிலர் பின்னர் காரணமேதுமின்றி பின்வாங்கினர். சரி குத்தகைக்கு விடலாம் என்று பார்த்தால், குத்தகைக்கு எடுத்தவர்களின் தொழிலில் எதிர்பாராத நஷ்டம் என இந்த மந்திரக்காடு ஒரு சபிக்கப்பட்ட காடுபோல் சிலரது மத்தியில் பீதியைக் கிளப்பியது. 




          பின்னர் 1977-ல், ராபர்ட் ஹோகன் (Robert Hogan) என்பவர் தொழில் மேம்பாட்டிற்காக அந்நிலத்திலுள்ள மரங்களைப் பெயர்த்தெடுத்து வேறொரு இடத்தில் வரிசையாக நட முடிவெடுத்து, மார்க் ப்ரிமேக் (Mark Primack) எனும் இளம் வடிவமைப்பாளரின் தலைமையில் மரங்களைக்குறித்தத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டன.  ஜோசப் காஹில் (Joseph Cahill) எனும் நிலவியல் வடிவமைப்பாளர், இவர்களின் திட்டப்படி மரங்களை இடம்பெயர்த்து பத்திரமாகப் பொருத்த பன்னிரண்டாயிரம் டாலர்களையும், இரண்டரை ஆண்டுகள் அவகாசமும் பெற்றார். திடீரென ஜோ குச்சியாரா (Joe Cucchiara) என்பாரின் தலைமையில் கிளம்பிய உள்ளூர் புரட்சிப்படை (Friends of Scotts Valley Tree Circus) ஒன்று, இவர்கள் மரங்களை இடம்பெயர்ப்பதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவால் ப்ரிமேக்கும் அவரது சகாக்களும் கைதுசெய்யப்பட்டனர், காஹிலின் அலுவலகம் மூடப்பட்டது, ஹோகனின் கனவு அம்மரங்களின் காற்றில் கரைந்தே போனது. பிறிதொருநாள் 1985-ஆம் ஆண்டு, மைக்கேல் போன்ஃபான்டே (Michael Bonfante) என்பவர் ஆக்செல் வளர்த்த 24 மரங்களை ஹோகனிடம் விலைக்கு வாங்கி, தற்போது கில்ராய் பூங்கா (Gilroy Gardens) என்றழைக்கப்படும்  தனது கேளிக்கைப் பூங்காவில் நிறுவினார். ஆக்செல் வளர்த்ததில் இறந்துபோன மரங்களை கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டாக்ரூஸ் நகரிலுள்ள கலை-வரலாற்று அருங்காட்சியத்தில் பதப்படுத்திப் பாதுகாக்கின்றனர். ஒரு மரம் ஜப்பானில் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகளாவிய கண்காட்சி ஒன்றிற்காக வழங்கப்பட்டது. ஆக்செல் வளர்த்த "தொலைபேசிக்கடை மரம்" (Telephone Booth Tree)மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமூர் நகரிலுள்ள அமெரிக்க தொலைநோக்குக் கலை அருங்காட்சியகத்தில் (American Visionary Art Museumநிரந்தரக் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.




          ஆக்செலின் இம்மரங்களால் கவரப்பட்ட பலர் அவரைப்போல மரம்வளர்க்க முயன்று தோற்றனர்; சிலருக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. அந்த ஓரளவு வெற்றியும் கூட ஆக்செலின் விஸ்வரூப வெற்றிக்கு முன் தூசாகத் தெரிந்தது. அதற்காக அவர்கள் நிறைய மெனக்கெடவும், மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியும், அவை வளரும்போது துன்புறுத்தியும் வளர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஆக்செல் இதில் எதையும் பின்பற்றியதாய்த் தெரியவில்லை. சில கிளைகளுக்கு ஆதரவாய் (துன்புறுத்தாமல்) அருகில் கொம்பு நடுதல், சிறிது நாட்கள் பிணைத்துவைத்தல் போன்றவற்றைச் செய்தாலும், அவர் செய்த முறை அவருடனேயே மறைந்து போனது. ஆக்செல் எப்படி இவ்வாறு மரங்களை வளர்த்தார் என்ற ரகசியத்திற்கு இன்றுவரை யாருக்கும் விடை கிடைக்கவில்லை. ஒருமுறை ஆக்செலிடம் அவர் எவ்வாறு இப்படி மரங்களை வளர்த்தார் என்பதைக் கேட்டபோது, "நான் மரங்களிடம் பேசுவேன். நான் எப்படி சொல்கிறேனோ, அப்படித்தான் மரங்கள் வளரும்." என்பார். இதைத்தான் நமது கண்ணதாசன்'குரு' படத்தின் 'பறந்தாலும் விடமாட்டேன்' பாடலில், "தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே, கேட்குமே...!" என எழுதினாரோ, என்னவோ!


செயற்கையாய் வளைத்து வளர்க்கப்படும் மரங்கள்


'கவியரசர்' கண்ணதாசன்

          இது சற்று நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், அதென்ன, உலகில் இத்தனைகோடி மனிதர்கள் இருக்க, அம்மரங்கள் ஆக்செலின் பேச்சை மட்டும் கேட்டிருக்கின்றன என்ற கேள்வியும் நம்முள் தோன்றலாம். உண்மையில் இவ்வாறாக அவை நமது விருப்பங்களுக்குச் செவிசாய்க்க நாமும் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும்; ஆக்செலைப் போல! அவ்வாறு நாமும்  மரங்களைப் புரிந்து உணர்ந்து அவற்றோடு உரையாடினால் அவைகள் அவற்றின் மொழியில் நிச்சயம் பதில் கூறும். என்ன, அந்த ஓரறிவு உயிரினத்தின் மொழியினை உணர்ந்தறியத்தான் ஆறறிவு கொண்ட மனிதனுக்கு அறிவு போதவில்லை. அதையே ஆக்செலும் உலகிற்கு நிரூபணத்துடன் கூறிச் சென்றிருக்கிறார். உங்கள் வீட்டுச் செடி கொடிகளிடம் வாய்விட்டுப் பேசவேண்டாம், மனதுவிட்டு மனதுக்குள் பேசுங்கள்; அவை உங்களை உணரும்! அதற்கு நீங்கள் முதலில் மனிதன் பெரியவன் என்கிற எண்ணத்தையும், தாவரங்கள் ஓரறிவுடையன என்கிற நம்பிக்கையையும் தகர்த்தெறியவேண்டும். தகர்த்தெறிந்துவிட்டால் போதுமா? அதனுடன் நாம் பேச முடியுமா? ஏனெனில், ஆக்செல் பேசியிருந்தால் ஆங்கிலத்தில் பேசியிருப்பார், வைத்தியர்கள் கூறும் மந்திரங்கள் சமஸ்கிருதம். இப்படி இருக்க, மரங்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியும்? அந்தந்த நாட்டு மரங்களுக்கு அந்தந்த நாட்டின் மொழிகள்தான் புரியுமா? அப்படியாயின், வாய் பேச இயலாதவர்கள் மரங்களோடு பேசும் வாய்ப்பும் அற்றவர்களா? என எண்ணற்ற கேள்விகள் நம் மனதினுள் விரியலாம். விடையோ மிக எளிது. மரங்கள் உண்மையில் ஞானிகள்! அவை இருந்த இடம்விட்டு அகலாது தனக்குத் தேவையானதையும், தனது சுற்றத்திற்குத் தேவையானதையும் மௌனியாய் இருந்து வழங்குகிறது. தனது அடியை உச்சிவெயிலில் வெட்டுபவனுக்கும், தான் வீழும்வரை நிழல் தரும் தயாள குணம்கொண்டது. தன்னைக்கொத்தும் மரங்கொத்திக்கும் தங்க இடம் தருவது. இத்தனைக்கும் ஆறறிவுடைய மனித இனம் அறியும், அதற்கு தொடு உணர்வு எனும் ஓரறிவு உண்டென. இருந்தும் அதைத் துன்புறுத்துகிறோம். அவற்றில் ஆணி அடித்து பலகைகளைத் தொங்கவிட்டு விளம்பரம்செய்தல், கல், கத்தி போன்றவற்றால் மரத்தில் தனது காதல் சின்னம், சுய விளம்பரம், பக்தியின் உச்சம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என மரங்களைக் காயப்படுத்துதல் போன்றவை பெருங்குற்றம். தன்னை அது தாக்காது எனத் தெரிந்து துன்புறுத்துதல் அரக்கத்தனம். அதன் கிளைகளில் மனிதர்களால் செதுக்கப்பட்ட அடையாளங்களை என்றேனும் கவனித்திருக்கிறீர்களா? நமது உடம்பில் காயம்பட்டு, ரத்தம்வந்து ஆறிய ரணம் எவ்வாறு சற்று உப்பலாக இருக்குமோ, அதே போன்றிருக்கும். கடந்து போகும் பாதைகளில் அசைந்தாடும் இலைதழைகளை காரணமின்றி பிய்த்தெறிந்து செல்பவரா நீங்கள்? சற்று நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் பிய்த்தெறிந்தது ஒரு தாவரக் குழந்தையின் விரல்களாகக்கூட இருக்கலாம். தாவரங்களுக்குத் தொடு உணர்வுண்டு என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், தொட்டாச்சிணுங்கி அல்லது தொட்டால்சுருங்கி. அதன்மீது படும் அந்நியத் தீண்டல்களை உணர்ந்து தனது பரப்பளவை சுருக்கிக்கொள்ளும் ஒரு சாதாரணச் செடி. (அவ்வாறு செய்வதால் தாக்குதலிலிருந்து தன்னாலியன்ற பகுதிகளையேனும் காப்போமே, என்கிற நம்பிக்கையில் அச்செடி எடுக்கும் அதனாலியன்ற கடைசி முயற்சி.) இது சாதாரணம் எனத் தோன்றினாலும், அதனோடு வளரும் மற்ற செடிகளின் இலைகள் அதன் மீது படும்போது இவ்வாறு தன்னை சுருக்கிக்கொள்வதில்லை என்பது வியப்பளிக்கிறது. இதன் இப்பண்பு முன்னர் நாம் கண்ட தாவரங்கள் தாங்கள் தாக்கப்படும்போது எடுக்கப்படும் அவசரகால தற்காப்பு நடவடிக்கையை ஒத்தது.


தொட்டாச்சிணுங்கி / தொட்டால்சுருங்கி (Touch-me-not)


          இதே குணாதிசயம்தான் தாவரங்களில் ஏதேனும் ஒன்றிற்கு ஆபத்து ஏற்பட்டால் பிற தாவரங்களை எச்சரிக்கை செய்யவும் உதவுகிறது. ஆம். நாம் சினிமாக்களில் வில்லன் கும்பல் ஒருவரை தாக்கும்போது, தாக்கப்படுபவர் தன்னைத் தியாகம் செய்து மற்றவர்களை 'இங்க இருந்து தப்பிச்சு போய்டுங்க...!' என்கிற ரீதியில் எச்சரிப்பாரே, அதேபோல ஒரு தாவரத்தில் ஏதேனும் (மனிதர் முதலிய) அந்நிய சக்திகளால் தாக்குதல் ஏற்படும்போதோ,  அழிவு சார்ந்த ஏதேனும் துன்பம் நேரும்போதோ, தன்னிடமிருந்து ஒருவித வாசனையை வெளியேற்றுகிறது. இவ்வாசனை அது எதிர்கொள்ளும் தாக்குதலுக்கேற்பவும், தாக்கப்படும் மரத்தைப் பொருத்தும் மாறுபடுகிறது. அப்படியானால், இந்த வாசனைதான் அவற்றின் மொழியா? இருக்கலாம்! ஆனால், அதை ஏன் (மொழியை அல்ல, வாசனையைக்கூட) ஆறறிவு படைத்த நம்மால் இனங்காண முடிவதில்லை? காரணம், ஆறறிவு கொண்ட மனித இனத்திற்கும் அறிவின் வரையறை என்று ஒன்று உண்டு. நாயினால் நம்மைவிட அதிக வாசனைகளை, அதிக தொலைவிலிருந்தே உணர முடியும். காரணம் நமது மூக்கில் வாசனை அறிய உதவும் செல்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம். (ஹப்பா... என வியப்பவர்களுக்கு, ஒரு நிமிடம்...!) நாய்களின் மூக்கில் உள்ள அத்தகைய செல்களின் எண்ணிக்கை இருபது கோடி! இது நவீனகால மனித இனத்தில் காணப்படும் அளவு. குகைவாசியாய் இருந்த காலத்தில் நமக்கும் இத்தகைய உணர்வுறுத்தும் செல்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருந்திருக்கலாம்; ஆனால் இன்றில்லை. இதுபோல நாம் கொண்டுள்ள திறன்களைக் காட்டிலும், நாம் இழந்த திறன்களே அதிகம். காரணம் மிக எளிது, நாம் நமது தேர்வைக்காக உருவாக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே. அதுவே நமது இயற்கைத் திறன்களை இழக்கக் காரணமாக அமைந்தது. (நாம் இவ்வாறான திறன்களை இழந்ததன் காரணம், நாம் நமக்காக நாம் சார்ந்த இயற்கையை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மாற்றியமைத்தது. ஆனால் விலங்கினங்களின் திறன் நம்மைவிட மேலோங்கியிருப்பதன் காரணம், அவை தான் சார்ந்திருக்கும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டது.) ஆகவே, நமது தொழில்நுட்பத்தால் மழுங்கடிக்கப்பட்ட திறன்களைக்கொண்டு தாவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குறைந்தபட்ச அறிவான ரசனையாவது இருத்தல் அவசியம். அப்போதுதான் அதன் கலைநயமும், அவை தனக்குள் உரையாடும் சூட்சுமமும் ஓரளவேணும் உணரப்படும். அவைகளும் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றன, சுற்றத்தை அறிகின்றன, தனது கணித மற்றும் கலைத் திறன்களை எதன்மூலமேனும் வெளிப்படுத்துகின்றன; முன்னரே கூறியது போல, அதை உணரத்தான் நமக்கு ஆறறிவு போதவில்லை.


குழந்தையின் கரு வடிவ விதையுடைய ஆரஞ்சுச் சுளை


பத்துலட்சத்தில் ஒன்று என்கிற சாத்தியக்கூறில் உருவாகும் வாய்ப்புடைய சரிவிகித இருவண்ண ஆப்பிள் பழம்


இயற்கையாய் பூத்த பலவண்ண ரோஜாக்கள்


காற்றுவீசும் திசையில் தலைசாய்த்த மரம்


தானாகவே ஒன்றைப்பொறுத்து மற்றொன்று சாய்ந்து வளர்தல்


இயற்கையாய் வளைந்து வளர்ந்து, நுழைவாயில் போலக் காட்சி தரும் சாலையோர மரங்கள்


வெட்டப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம் அதன் சுற்றியுள்ள இலைகளோடு சேர்ந்து பறவையைப் போல உச்சிலிருந்து பார்க்கும்போது இமையுடன் கூடிய கண் போல தோற்றமளிக்கிறது


முகபாவம் காட்டும் மரம்

          இதெல்லாம் எதேச்சயானவை, இதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு அவைகள் தங்களுக்குள் தகவல் பரிமாறுவதையும், வலிகளை உணர்வதையும், சுற்றத்தை அறிவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என நம்ப மறுக்கும் அன்பர்களுக்கு சில கேள்விகள். நீங்கள் அவை எவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்கள்?
  • கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்சியில் (Guardians of the Galaxy) வரும் க்ரூட்டைப் (Groot) போலவா?
  • ஹாரி பாட்டரில் (Harry Potter) வரும் வோம்ப்பிங் வில்லோ மரத்தைப் (Whomping Willow Tree) போலவா?
  • லார்ட் ஆஃப் தி ரிங்ஸில் (Lord of the Rings) வரும் என்ட்களைப் (Ent) போலவா?
  • மேல்ஃபிசியன்ட்டில் (Maleficient) வரும் ட்ரீ வாரியர்களைப்  (Tree Warriors) போலவா?
  • அல்லது, ஹெல்பாயில் (Hellboy) வரும் காட்டின் கடவுளைப் (Forest God) போலவா?
இதில் நீங்கள் நினைத்த என்ட்களைப் போலவோ, ட்ரீ வாரியர்களைப் போலவோ தாவரங்கள் நடமாடாது, சண்டையிடாது; ஆனால், க்ரூட்டைப் போல இசையைக் கேட்கும், ரசிக்கும்! இங்கு நான் அவை இசையைக் கேட்கின்றன எனக்கூறினாலும், அவை (செவிபோன்ற எவ்வித ஒலியுணர் உறுப்புகளின் உதவியின்றி) இசையை ஏதோ ஒரு வடிவில் உணர்கின்றன. அதுமட்டுமல்லாது, இசைகேட்டு வளரும் தாவரங்கள், காதைக்கிழிக்கும் அதிரடி இசையைவிட (Rock Music) காலம்காலமாக நம்மவர்கள் பாதுகாக்கும் காதிற்கினிய பாரம்பரிய இசையையே (Classical Music) அதிகம் விரும்புகின்றன என்பதை,  மேற்கூறிய இருவகை இசைகளையும் ஒலித்து, தாவரங்களை வளர்த்து, அச்சூழலில் வளர்ந்த அவற்றின் வளர்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.


க்ரூட் (Groot) [Guardians of the Galaxy]


வோம்ப்பிங் வில்லோ மரம் (Whomping Willow Tree) [Harry Potter]


'என்ட்' எனப்படும் ராட்சத மர மனிதர்கள் (Ent) [Lord of the Rings]


ராட்சத மர வீரர்கள் (Tree Warriors) [Maleficient]


காட்டின் கடவுள் (Forest God) [Hellboy]




இசை கேட்டும், கேட்காமலும் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி ஒப்பீடு


இருவகை இசையையும் கேட்ட தாவரங்களின் வளர்ச்சி

          சரி, தாவரங்கள் (காதே இல்லாவிட்டாலும் கூட) ஒலிகளை மட்டும்தான் உணர்கின்றன என்றுபார்த்தால், ஹாரிபாட்டரில் வரும் வோம்ப்பிங் வில்லோ மரத்தைப் போல, தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் உணர்கின்றன. அவை உணர்வதோடு மட்டுமல்லாமல் சூழலுடன் உரையாடவும் செய்கின்றன; அவற்றின் மொழிபுரிந்த உயிர்களிடம்! உதாரணத்திற்கு, தாவரங்களின் இனப்பெருக்க முறையான மகரந்தச் சேர்க்கையை எடுத்துக்கொள்வோம். தாவரங்கள் அதன் இனப்பெருக்கத்திற்குத் துணைசெய்யும், பட்டாம்பூச்சி, தேனீ, குளவி போன்றவற்றைத் தன்பால் கவர்ந்திழுக்க விதவிதமான வண்ணங்களையும், வடிவங்களையும், வாசனைகளையும் கொண்ட மலர்களை உருவாக்கி இவ்வுலகுக்கு அளிக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், பகலில் இப்பூச்சிகளைக் கவர விரும்பும் தாவரங்கள், சூரிய ஒளியில் பளீரெனத் தெரியும்வண்ணம், பல்வேறு வண்ணங்களிலும், இரவில் இப்பூச்சிகளைக் கவர விரும்பும் தாவரங்கள், இரவின் மங்கலான நிலவொளியிலும் (ஓரளவுக்கேனும்) நன்றாகத் தெரியுமளவிற்கு வெண்மை நிறத்திலும் பூக்கின்றன! இரவில் வெண்மை நிறம் மற்ற நிறங்களை விட பளிச்சென்றும், பகலில் பலவண்ண நிறங்கள் பளிச்சென்றும் தெரியும் என்கிற ஒளியியல் உண்மையை இந்தத் தாவரங்கள் எங்கு கற்றன? அவ்வறிவை எவ்வாறு அவை வளர்த்துக்கொண்டன?


          இதுமட்டும்தானா, அல்லது இதற்குமேலும் நம்மை வியக்கவைக்கும் தகவல்கள் தாவரங்களிடத்தில் இருக்குமா எனத் தேடியபோது கிடைத்த பதில்கள் அனைத்தும் ஆச்சரியமானவை! ஆம், சில தாவரங்கள் உருவாக்கும் பூக்களின் தோற்றம், நாம் அன்றாட வாழ்வில் காணும் பலவற்றைக் குறிப்பிடுவதுபோல் உள்ளது. நான் கண்டதை வார்த்தைகளால் விவரிப்பதைவிட காட்சிகளைக் காட்டினால் மட்டுமே நீங்களும் வியப்பீர்கள் என்பதால், பின்வரும் இத்தொகுப்பு.


விகார முகத்தோற்றமுடைய ஸ்நாப்-ட்ராகன் விதைக் கூடு (Snapdragon Seed Pod)


மண்டையோட்டு வடிவமுடைய ஸ்நாப்-ட்ராகன் விதைக் கூடு (Snapdragon Seed Pod)



பாலெரீனா நடனமங்கை வடிவ ஆர்க்கிட் (Ballerina Orchid [Caladenia Melanema])


பறக்கும் மனிதன்/பூச்சி போன்ற தோற்றமுடைய ஆர்க்கிட் (Ophrys Insectifera)


ஜப்பானிய வெண்புறா ஆர்க்கிட் விதைகள் (Japanese White Dove Orchid Seeds)



பேய் வடிவ ஆர்க்கிட் (Phalaenopsis)


இதய வடிவ வெண்ணிற ஆர்க்கிட் (White Bleeding Heart Orchid)


இதய வடிவ செந்நிற ஆர்க்கிட் (Lamprocapnos Spectabilis)


பறக்கும் பெண் வடிவ ஆர்க்கிட் (Habenaria Plantaginea)



வெள்ளை எக்ரெட் ஆர்க்கிட் (White Egret Orchid [Habenaria radiata])



தாய்லாந்தில் காணப்படும் கிளிவடிவ பூ (Impatiens Psittacina)




சுற்றிப் போர்த்தப்பட்ட குழந்தைவடிவ மலர் (Swaddled Babies [Anguloa Uniflora])



சீனாவில் காணப்படும் பறக்கும் வாத்து வடிவமுடைய ஆர்க்கிட் விதைகள் (Flying Duck Orchid Flower Seeds)


பறக்கும் மங்கையர் போன்ற பூ (Habenaria Crinifera)


நடனப்பெண்கள் வடிவ பூ (Dancing Girls [Impatiens bequaertii])


ஹம்மிங் பறவை வடிவ ஆர்க்கிட் (Phalaenopsis)



குரங்கு முக ஆர்க்கிட் (Monkey Face Orchid [Dracula Simia])



நடனப்பெண் வடிவ பூ (Orchis Simia)


ஹூக்கரின் உதடு பூ (Hooker’s Lips [Psychotria Elata])


பறவை வடிவ ஆர்க்கிட் (Pterostylis Barbata)



சிரிக்கும் வண்டு பூ (Laughing Bumble Bee Orchid [Ophrys Bomybliflora])


மகிழ்ச்சியான வேற்றுக்கிரகவாசியைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு ஆர்க்கிட் பூ (Happy Alien [Calceolaria Uniflora])



புலியின் முகம் போன்று தோற்றமளிக்கும் ஆர்க்கிட்


தேவதை உருவ ஆர்க்கிட் (Habenaria Grandifloriformis)



புறா வடிவ (அல்லது, தூய ஆவி) ஆர்க்கிட் (Peristeria Elata)

          இப்பூக்களில் காணப்படும் உருவங்கள், நமது கோணத்தில் நாம் பார்த்த விஷயங்களுடன் ஒத்துப்போவதால், அவ்வுருவங்களுக்கிடையேயான ஒற்றுமை நமக்குத் தெரிகிறதா? அல்லது, உண்மையிலேயே தாவரங்கள் (நம்மைப் போலவே) இவ்வுலகத்தைக் கண்காணிக்கின்றனவா? தெரியவில்லை. இவை எல்லாம் தற்செயலாக இருக்கலாம் என வழக்கம்போல் கூறுபவர்கள் சற்றுக் கீழேயுள்ள பூவையும் பார்க்கவும்.


டார்த் வாடர் முக வடிவ பூ (Aristolochia Salvadorensis)




டார்த் வாடர் (Darth Vader)


          "ஸ்டார்வார்ஸ்" (Star Wars) வரிசை திரைப்படங்களின் புகழ்பெற்ற வில்லனான 'டார்த் வாடர்' (Darth Vader)-ன் முகத்தோற்றம் போல உருவான பூ. இது எப்படி சாத்தியமானது! ஒருவேளை அக்கதாப்பாதிரத்தை உருவாக்கியவர் இப்பூவை மையப்படுத்தி உருவாக்கியிருந்திருப்பாரா என்கிற கோணத்தில் சிந்தித்தாலும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது; காரணம், ஜப்பானிய சாமுராய் (Samurai) வீரர்களின் தலைக்கவசத்தை அடிப்படையாக வைத்தே டார்த் வாடரின் உருவம் உருவாக்கப்பட்டதாக அக்கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் தெரிவித்த கருத்து. சரி, சாமுராய்கள் இதைப்பார்த்து அவர்களின் உடைகளை வடிவமைத்திருப்பார்களோ எனக் குழந்தைத்தனமாக சிந்திக்க இயலவில்லை. ஏனெனில், அவ்வீரர்கள் போரில் தனது தலையைக் காக்குமளவிற்கு பாதுகாப்பான கவசம் தேடுவார்களே அன்றி, தலையில் சூடும் பூவிலிருந்து அழகைத் தேடியிருக்க மாட்டார்கள் என்கிற பதிலே காரணம்.


சாமுராய் வீரர் ஒருவரின் தலைக்கவசம்

          அப்படியானால் தாவரங்கள் டார்த் வாடரையோ, சாமுராய் வீரரையோ பார்த்து, அவர்களின் உருவத்தைப்போல தனது மலரை உருவாக்கியிருக்குமா? அதெப்படி சாத்தியமாகும்? வாய்ப்பிருக்கிறது! காரணம், தாவரங்களின் தகவலைக்கடத்தும் பண்புகள். ஆபத்துக்காலத்தில் வெளியும் சமிஞ்ஞைகளைப் போல! சரி, அது அவசரம், ஆபத்து என்பதால் அதனைத் தெரிவிக்க அத்தகைய தகவல் பரிமாற்றத் திறன் சாத்தியமாயிற்று, இது மனிதர்களின் பொழுதுபோக்கு மற்றும் கற்பனை சார்ந்த விஷயமல்லவா. ஒரு மனிதன் தனது பாதுகாப்புக்காகக் கண்டுபிடித்தக் கவசத்தையும், போழுதுபோக்குக்காகக் கற்பனைகலந்து உருவாக்கியக் கதாப்பாத்திரத்தையும் ஒரு தாவரம் அவதானித்து, தனது இனப்பெருக்கத்திற்கு அத்தியவசியாமான மலரை, மனிதனின் கற்பனையை சேர்த்து ஆடம்பரமாய் உருவாக்குமா? அந்த அளவிற்கு தாவரங்கள் தன்னை அலங்கரிக்க சிந்திக்குமா? என்றால், தாவரங்கள் மனிதர்களின் சிந்தனாசக்தியைப் பார்த்து அதன் மலர்களை உருவாக்கியிருக்குமா எனத் தெரியவில்லை, ஆனால், தாவரங்கள் மனிதர்களைப் போலவே தங்களை அலங்கரித்துக்கொள்ளும். அவைகளுக்கும் போட்டி-பொறாமைகள் உண்டு! இதனை இருவேறு கொடிகளை அருகருகே படரவிட்டு, நுணுக்கமாய் அணுகுவதன் மூலம் அறிந்துணரலாம். ஒருநாள் ஒரு செடி அல்லது கொடி உயரமாக வளர்ந்திருந்தால், அடுத்த சில நாட்களில் அதன் அருகிலுள்ள கொடி முன்பு உயரமாய் வளர்ந்திருந்த செடி அல்லது கொடியைக் காட்டிலும் உயரமாய் வளர்ந்துள்ளது, என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தன்னைக்காட்டிலும் உயர்ந்தவனை மிஞ்சி உயரவேண்டும் என்கிற மனித மனத்தைப் பிரதிபலிப்பதுபோலவே இதன் செயல்பாடுகள் இருக்கின்றன. மேலும், தனது வளர்சிக்காக முயற்சியைக் கைவிடாது, தனது பலம்கொண்ட மட்டும் தனக்கான வாய்ப்புகளை மனிதர்கள் தேடுவது போலவே, கொடிகளும் தாங்கள் உயிர்வாழவும், செழித்து வளரவும், தாங்கள் வளரும்போது தங்களின் சுய-எடையால் வலுவிழந்துவிடாமல் இருக்க கொழுகொம்புகளைத் தேடுகிறது. அருகில் எங்கேனும் கொழுகொம்பு கிடைத்துவிடாதா என தன்னைச்சுற்றிலும் திருகி வளர்ந்து, அதன் நுனிக்கிளையால் துழாவி, ஒரு வழியாக ஏதேனுமொன்றைப் பற்றிப் படர்கிறது. அவ்வாறு பற்றியபின், நீர் மற்றும் சூரிய ஒளியைத் தேடித் தன் பயணத்தை மேலும் நீட்டிக்கிறது. ஒரு ஆய்வுமுடிவு குறித்து என்றோ நான் எனது ஊரின் நூலகத்தின் நூலொன்றில் படித்தது நினைவுக்கு வருகிறது. தாவரவியல் ஆய்வாளர்கள் ஒரே வகையான, ஒரே அளவுடைய இருவேறு செடிகளை ஒரு ஆய்வுக்காக இருவேறு இடங்களில் (சூரிய ஒளி கிடைக்குமாறு) நட்டார்கள். இரண்டுக்கும் குறிப்பிட்ட காலம்வரை சரியாகப் பராமரிப்பது, நீர் ஊற்றுவது போன்ற வழக்கமான தாவர வளர்ப்பு விஷயங்களைச் செய்தனர். இரண்டும் செழித்து வளர்ந்துவந்தன. ஒரு நாள், ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதை முற்றிலும் நிறுத்தினர். அதைக் கண்டுகொள்ளவே இல்லை. மற்றொரு செடிக்கு மட்டும் வழக்கமான உபசரிப்புகள் நடைபெற்றன. நீரிறைக்காத செடி மெல்லமெல்ல வாடத்துவங்கியது. ஒருகட்டத்தில் முற்றிலும் பட்டுப்போகும் நிலைவந்துவிடும் என நினைத்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யமுறும் வகையில் அது துளிர்க்கத் துவங்கியது; நாளாக நாளாக அது நன்றாக செழித்து வளரத்துவங்கியது. ஒருகட்டத்தில் நீரூற்றப்படாத செடி, நீரூற்றப்பட்ட செடிக்கு இணையாக வளர்ந்து நிற்க, ஆய்வாளர்கள் குழு வாய்பிழந்து நின்றது; எப்படி இது சாத்தியம் என மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரு முடிவெடுத்து, அதன் வேர்க்கால்களை சேதாரமின்றி காண்பதற்காக மண்ணைத் தோண்டினர். அப்போது அதன் வேர் மற்றொரு வேருடன் பின்னிப் பிணைந்திருந்தது கண்டு சற்று அதிர்ச்சியடைந்தனர். சரி, அந்த வேர் எங்கிருந்து வருகிறது எனத் தேடிப் பார்த்தவர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி. இத்தனை நாட்கள் எந்த செடிக்கு நீரூற்றி வளர்த்தார்களோ அந்தச் செடியின் வேர் அது! ஆம், தனது சக உயிர் உணவின்றி மாளப்போவதை உணர்ந்து தனது வேர்க்கால்களை அதன் வேர்வரை செலுத்தி, தான் பெரும் நீரில் ஒரு குறிப்பிட்டப் பங்கைப் பகிர்ந்தளித்து, சாகக்கிடந்தச் செடியினை உயிர்ப்பிக்கச் செய்திருக்கிறது அச்செடி. இத்தகைய கருணையின் பண்பை செடிகள் எங்கிருந்து கற்றன எனத் தெரியாது, ஆனால், செடிகளிடமிருந்து மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அதெல்லாம் கிடையாது, இதெல்லாம் எதேச்சையானது எனப் புலம்புவோர், புலம்பிக்கொண்டே இருக்கட்டும்.

பறவையின் எச்சத்தால் உருவான பறவையின் ஓவியம் போன்ற உருவம்கூட தற்செயல் போல எனக்குத் தெரியவில்லை!

          இவ்வாறு செடிகள் செய்த அற்புத வடிவங்களில் சில கீழே. இவை நமது இந்திய புராணங்களின் தெய்வங்களின் வடிவிலுள்ளதைக் காணலாம்.



ஆந்திராவில் விளைந்துள்ள விநாயகர் வடிவ இஞ்சி


நாகலிங்க பூ



லேபாக்ஷி கோவிலில் காணப்படும் நாகத்துடன் கூடிய சிவலிங்கம்


          சரி, இவையெல்லாம் ஏன் வெளி உலகுக்குத் தெரியாமல் போனது எனப் பார்த்தால், இவ்வாறான உண்மையான தகவல்களுடன் புகழுக்காக உருவாக்கி வெளியிடப்படும் போலிகளின் இடைச்செருகல்களே. ஒருவிஷயத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ஒருவர், ஒருகட்டத்தில் அவர் நம்பிய விஷயம் போலியானது எனத் தெரியவரும்போது, உளவியல் ரீதியாக அந்த ஏமாற்றம் அவரை வெகுவாகப் பாதிக்கிறது. வருங்காலங்களில் இவ்வாறான செய்திகளை அவர் நம்பத் தயாராக இல்லாமல் போகிறார். விளைவு, உண்மையான அற்புதங்களும் போலியைக் கொளுத்தும்போது சேர்ந்தே சாம்பலாகிறது.

          'பூ வடிவ தேவதைகள் இந்திய கிராமத்தில் கண்டுபிடிப்பு! அமேசான் காட்டிற்கு சுள்ளி பொறுக்கச் சென்று வந்த தனது முன்னோர்கள், தங்கள் வீட்டின் கொல்லைப்புறமுள்ள தோட்டத்தில் நட்டுவைத்திருந்த செடியில் பூத்துள்ள மலர்கள் "தி ஸ்பைடர்விக் க்ரானிக்கிள்ஸ்" திரைப்படத்தில் வரும் 'ஸ்ப்ரைட்' எனும் பூ தேவதைகளின் உருவத்தைப்போலவே காணப்படுவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள், இது போன்ற மலர்கள் இருப்பதை இப்போதுதான் தாங்கள் முதன்முதலில் காண்பதாகவும், இது இருப்பது உண்மையென்றால் அப்படத்தில் வரும் தேவதைகள் இருப்பதும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே உலகின் பல இடங்களிலும் தேவதைகளுடன் மனிதர்கள் இருப்பதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள் விஞ்ஞானிகளைக் குழப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்ய இந்த போஸ்டை ஷேர் பண்ணுங்க பிரண்ட்ச்ச்ச்...!!!' என சமூக வலைத்தளங்களில் புகழுக்காகவும், வெட்டி கௌரவத்திற்காகவும் போலியான தகவல்களைப் பரப்புகிறார்கள். நாம் களையெடுக்கவேண்டியது வேண்டிய தாவரங்களுக்கிடையே வளரும், வேண்டாத தாவரத்தை மட்டுமல்ல, இந்த ஆகாத வேலைபார்க்கும் ஆசாமிகளையும்தான்.


பூக்களைக்கொண்டு செயற்கையாக செய்யப்பட்ட பொம்மைவடிவங்கள்
(Hollyhock Dolls)





'ஸ்ப்ரைட்ஸ்' (Sprites) எனும் பூ வடிவ தேவதைகள்




தி ஸ்பைடர்விக் க்ரோனிக்கிள்ஸ் (The Spiderwick Chronicles)



பக்கா போட்டோஷாப்! இதெல்லாம் பாவம் மை சன்!!!


கடல்பேனா (Sea Pen) [Pennatulacea]

          'ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது முப்பத்தாறு ஆண்டுகளுக்கு  ஒருமுறை மலரும் நாகபுஷ்ப மலர் இமயமலையில் கண்டுபிடிப்பு' என இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் மேற்கண்ட படத்தைப் போட்டு ஏராளமான தகவல்கள் உலவினாலும், உண்மையில் இது ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லிமீனைப் போன்ற ஒரு உயிரினம். இது பார்ப்பதற்கு முற்காலத்தில் மைக்கூட்டில் தொட்டு எழுதப்படும் இறகாலான பேனாவைப் போலிருப்பதாலும், கடற்பகுதிகளில் காணப்படுவதாலும் 'கடல் பேனா' என்று பெயர்பெற்றது.



இறகுடன்கூடிய மைக்கூடு

          'இருபதாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நரிலதா மலர் கண்டுபிடிப்பு! பெண்ணின் வடிவில் பூத்துள்ள இந்த அமானுஷ்ய மலர்களைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்பு!' என பக்கம்பக்கமாக அளந்துவிடலாம். ஆனால், உண்மையில் இவை பொம்மைகள்! உண்மையான நரிலதா மலர், நாம் மேலே கண்ட ஆர்க்கிட் வகைப் பூக்களைப்போல ஓரளவிற்குப் பெண் வடிவில் மட்டுமே இருக்கும்.



நரிலதா மலர் (போலி)




நரிலதா மலர் (உண்மையானது)

          சீனாவில் புத்தர் அல்லது குழந்தை வடிவில் (சிறுவர்களைக் கவர) பேரிக்காய் உருவாக்குகிறார்கள். இதற்காக பேரிக்காய் வளரும்போதே அதைச்சுற்றி வலுவானதோர் அச்சை மாட்டுகின்றனர். காய் அதன் அச்சின் அளவு வரைமட்டுமே தன்னை வளர்த்துக்கொள்ள இயலும். முழுமையாக வளர்ந்ததும், சேகரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப் படுகிறது.


குழந்தை வடிவ / புத்தர் வடிவ பேரிக்காய்கள்


          இதேபோல் சீனாவில் காணப்படும் ஃப்லீஸ்ஃப்ளவர் எனும் தாவரத்தின் வேர், மனித உருவங்களைப்போன்று உள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் இணையஉலகில் வலம்வருகின்றன. பார்ப்பதற்கு, செய்வினை செய்வதற்கு உபயோகிப்பதற்காக படங்களில் காட்டப்படும் பொம்மைபோலவும், ஹாரிபாட்டரில் வரும் "மேன்ட்ரேக்" (Mandrake) எனும் செடியைப் போலவும் தோற்றமளிக்கிறது. இதிலுள்ள ஆண்பால், பெண்பால் பிரித்தறியுமளவிலான நேர்த்தி, இதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்கச் செய்கிறது. இதுகுறித்த தெளிவான தகவல்கள் (உண்மையா பொய்யா என) போதுமான அளவு கிடைக்கப்பெறவில்லை என்பதால், இதன் நம்பகத்தன்மையை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன். இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் விநோதவடிவ தாவரங்கள் அனைத்தும் மிகக்குறைவே. இதில் நான் பகிராததும், அறியாததும் ஏராளம்!



மனித உருவ கிழங்குகள்/வேர்கள் (Chinese Fleeceflower)



மேன்ட்ரேக் (Mandrake [Harry Potter])




          மேற்கண்ட சில தாவரங்களின் காய்களோ, கனிகளோ, வேர்ப்பகுதியில் விளையும் கிழங்குகளோ மனிதர்களால் அவரவர் விருப்பத்திற்கேற்பவும், சுயலாபத்திற்காகவும் உருவாக்கப்படுமேயானால், அதுவும் வாயில்லா ஜீவன்களை வதைப்பதைப் போன்றதாகும். இத்தகைய வன்கொடுமைகளின் உச்சமே 'பொன்சாய் மரங்கள்' (Bonsai Trees). நன்றாக வளரவேண்டிய குழந்தையை, அதன் கால்கள் இப்போது இருப்பது போலவே எப்போதும் சிறிதாக இருந்தால் அழகாக இருக்கும் என்பதற்காக, அதன் கால்கள் மேற்கொண்டு வளராவண்ணம் கம்பிகளாலும், வலிமையான ஏதேனும் ஓர் உபகரணத்தின் உதவியோடும், வரும் இடங்களை அறுத்தெறிந்தும் ஒரு குழந்தையை வளர்ப்போமா என சிந்தியுங்கள். இத்தகைய கொடூரத்திற்கு எதிரானவராக நீங்கள் இருந்தால், எனது நண்பராக நீங்களும் பொன்சாய் மரங்கள் உருவாக்கலை எதிர்ப்பீர்கள் என்பது திண்ணம். காரணம், நான் குழந்தைக்குச் சொன்ன அதே உவமையை, மனிதர்கள் மரங்களில் பிரயோகித்து, முடமாக்கி லாபமீட்டுகிறார்கள்.

          ஓங்கி உயர்ந்து வளரவேண்டிய மரங்களை, கம்பிகளால் கட்டியும், கட்டுப்படாது வளரும் பாகங்களைக் கத்தரித்தும், ஒரு மரத்தின் முழுவளர்ச்சியையும் கைய்யடக்கத்தில் கொண்டுவந்து வளர்ப்பதே இக்கொடுமை. ஆயிரம் ஆண்டுகள் அசராமல் பயன்தரும் மரங்களும் இம்முறையில் அற்ப ஆயுளில் மாண்டுவிடும். சொல்லப்போனால் இம்மரங்கள் அழகுக்காக உருவாக்கப்படுகின்றன என்பதைத் தாண்டி யாதொரு காரணத்திற்காகவும் உருவாக்கப்படவில்லை என்பது மனிதர்களாகிய நாம் வெட்கப்படவேண்டிய விஷயம்.


பொன்சாய் மரங்கள் (Bonsai Trees)




          இத்தகைய பொன்சாய் மர வளர்ப்பு முறை சமீபகாலங்களில் உருவான முறையல்ல. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தின் சுவரோவியங்களில் கைய்யடக்க மரங்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அங்கிருந்து நாடோடி வண்டிகளில் ஆசியா முழுவதும் பரவியிருக்கிறது. இப்போது இருப்பதைப்போல அழகுக்காக அவர்கள் அவற்றை வளர்க்காமல், மூலிகை மருந்துகளுக்காக வளரத்ததாகத் தெரிகிறது. தற்போது பின்பற்றப்படும் பொன்சாய் மரவளர்ப்புக் கலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்னர், ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரையிலான காலகட்டங்களில் ஜப்பானை (அரச தூதுவர்கள் மூலம்) சென்றடைந்திருக்கிறது.

          ஆக, காலம் காலமாக நம்மால் கொடுமைப்படுத்தப்படும் தாவரங்கள் நம்மைத் திருப்பித் தாக்கினால் என்ன செய்ய இயலும்? சில திரைப்படங்களிலும், கதைகளிலும் கூறப்படுவதுபோல, மனிதனை உண்ணும் தாவரங்கள் மடகாஸ்கர் தீவில் காணப்படுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. உண்மையில் அத்தகைய அசைவச் செடிகள் இருக்க வாய்ப்பில்லை; ஆனால், அசைவச் செடிகள் இருக்கின்றன. (ஒருவேளை தாவரங்கள் புரட்சிப்படையைத் திரட்டி மனிதர்களைத் தாக்கினால் என்னவாகும் என்பது குறித்து அடுத்த பதிவில் காண்போம்.)


மடகாஸ்கரில் இருப்பதாகக் நம்பப்படும், மனிதர்களை உண்ணும் மரத்தின் கற்பனை ஓவியம்


          மனிதனை உண்ணும் அசைவத்தாவரங்கள்தான் (நமக்குத் தெரிந்தவரையில்) இல்லையே தவிர, பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் இருக்கின்றன. பொறிவைத்துப் பிடித்தும், திரவத்தில் வழுக்கவைத்து மூழ்கடித்து பின்னர் அதை ஜீரணித்தும், பசைபோன்ற முனைகளைப் பயன்படுத்தி இறுக்கிக் கொன்றும் தங்களது வேட்டைத்திறனை வெளிப்படுத்துகின்றன. இவை காரணமின்றி பூச்சிகளை வேட்டையாடுவதில்லை. இத்தகைய தாவரங்கள் வளரும் மண்ணில் நைட்ரஜன் சத்து குறைவாக இருக்கும். எனவே அச்சத்தை ஈடுசெய்யும் பொருட்டு, பூச்சிகளைக் கொன்று, அதிலிருந்து நைட்ரஜன் சத்தைப் பெறுகின்றன. ஒரு தாவரத்தின் இத்தகைய பரிணாம வளர்ச்சி, உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினமும் (தக்கன பிழைக்கும் என்பதற்கேற்ப) தானும் தனது சந்ததியினரும் மேலும் மேலும் இவ்வுலகில் வாழ எடுக்கும் பிரயத்தனங்களை மட்டுமல்லாது, தாவரங்களின் நுண்ணறிவு, செயல்பாடு போன்றவற்றிற்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இதன் திறன்களை மேலும் அறிய, பின்னிணைத்துள்ளக் காணொளியைக் காணவும்.


வீனஸ் பூச்சிப் பொறி செடி (Venus Fly Trap)




பூச்சிகளைப் பிடிக்கும் குடுவைத் தாவரம் (Nepenthes Sibuyanensis)





சன்-ட்யூ (Sundew)







அசைவத் தாவரங்கள் ஒரு பார்வை

          இப்பதிவைப் படித்த பின்னர், சாலையோரம் செல்லும் யாரேனுமொருவர் காரணமின்றி இலைகளைப் பிய்த்து எறிவதை நிறுத்துவாராயின் அதுவே எனது பதிவின்மூலம் ஒருவரை என்னாலியன்ற அளவிற்கு மனிதராக்கிய பெருமையைப் பெற்றுத்தரும். சிலர் கேட்கலாம், அப்படிப் பார்த்தால் நாம் உணவே சாப்பிட முடியாது என்று. உண்மைதான், ஆனால் தாவரங்களிடம் அதன் அனுமதியின்றி எடுப்பதையும், பறிப்பதையுமே நான் தவறென்கிறேன். தாவரங்கள் பிறவிப்பயனை உணர்ந்தவை. 'தன்கடமை பணிசெய்து கிடப்பதே' என்பதுபோல, பிறப்பின் நோக்கம் பிறருக்காய் வாழ்வதே என அவைகள் உணராமல் இல்லை. அதனால்தான் நம் முன்னோர் எதையும் தாவரங்களிடமிருந்து பெரும் முன் மனிதனால் இன்ன காரணத்திற்க்காக அதை நாம் பெறுகிறோம் என வேண்டி, அதன் மௌனத்தை சம்மதமாய் ஏற்றதைப் போல், அதன் பின் அறுவடை செய்வர். 'அதெப்படி? நம்மால் அதன் மொழியை உணரமுடியாத போது, அது மௌனமாகக் கொண்டு, அதை சம்மதமாக எவ்வாறு ஏற்கலாம்?' எனும் கேள்வியும் நம்முள் எழலாம். நான் முன்னரே குறிப்பிட்டதுபோல், தாவரங்கள் தனது பிறவிப்பயனையும், வாழ்வின் நிலையையும் உணர்ந்தவை. அதன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல தயாராக இருப்பவை. அதனிடம் நாம் கேட்டால், அதனாலியன்றதை நிச்சயம் தரும். பறித்தாலோ, திருடினாலோ மட்டுமே பயன் தராது. இது தாவரங்களுடனான உறவுக்கு மட்டுமல்லாது, வாழ்வின் அனைத்துத் தருணங்களுக்கும் பொருந்தும். இதையே நம்முன்னோர், "கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!" என்றனர். இதன் பொருள், முகத்தின் ஒரு பகுதியான கன்னத்தில் (Cheek) கப்பல் கவிழ்ந்தால் ஏற்படும் சோகத்தைப்போல முகத்தை வைத்துக்கொண்டு, தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கை வைத்து உட்காருவது அல்ல. 'கன்னம்' என்பதற்குத் 'துளையிடுதல்' என்றொரு பொருளுண்டு. அதிலும் குறிப்பாக சுவற்றில் துளையிடுவது. முற்காலத்தில் சுவற்றைத் துளையிட்டு அல்லது கஜானாவைத் துளையிட்டு செல்வங்களைக் கொள்ளையடிக்கும் வாடிக்கை, திருடர்களிடத்தில் இருந்துவந்தது. கப்பல்விடுமளவிற்குச் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவன், அக்கப்பல் கவிழ்ந்து செல்வமெல்லாம் இழந்த நிலைவரினும், திருட்டில் கைவைக்கக் கூடாது என்பதையே சூசகமாய் 'கன்னத்தில் கைவைக்காதே' என வழங்கி வந்தனர். பின்னாளில் இது காலத்தால் திரிபடைந்தாலும், இதன் உண்மைப்பொருள் இதுவே. இவ்வாறான நல்வழியில் வந்த நாம் தாவரங்களை நமக்கு இணையாக மதித்தே "தா" என்று கேட்கிறோம். (நமக்கு வேண்டியதைக் கேட்கும்போது, நம்மை விட சிறியவர்களிடம், 'கொடு' என்றும், சமமானவர்களிடம் 'தா' என்றும், உயர்ந்தவர்களிடம் 'ஈ' என்றும் கேட்கவேண்டும் என்பது வகுக்கப்பட்ட இலக்கண விதி.) அத்தனைதூரம் நம்மோடு சகதோழனாய் நம்முன்னோர் மதித்த தாவரங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. (மாறாக, அதற்கு நாம் செய்யும் கொடுமைகளை எனது மற்றொரு பதிவுத்தளமான யாத்ரீகன்-ல் காண்க.) தாவரங்கள் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு.













இறப்பு, மற்றொரு வாழ்வின் துவக்கம்!




பல வேடிக்கை மரங்களைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?!


ரெண்டாயிரம் வருஷமா பழம் வளர்த்து கொட்டை போட்டவரு


மாமியார் முன்னாடி பேச்சு வருமா?!


அண்ணாந்து பார்க்க வேண்டிய உங்கள, இப்டி 'ஐ' விக்ரம் மாதிரி வளைச்சது யாரு?!


தனிமரம் தோப்பாகாது என்பவர்களின் கவனத்திற்கு!



தொட்ரா பாக்கலாம்...!



தாவர உலகம் ஒரு பார்வை

"ஹப்பா...! தாவரங்கள் இவ்வளவு அறிவார்ந்தவையா...?!" என வியப்பவர்களுக்கும், "ஹும்... இவ்வளவுதானா...?!" என சலிப்பவர்களுக்கும் எனது பதில், இது தாவரங்கள் குறித்தப் பதிவின் முதல் பாகம் மட்டுமே. இதன் தொடர்ச்சியுடன் கூடிய மேலும் பல ஆச்சர்யமான தகவல்களுடன் உங்களை மீண்டும் விரைவில் சந்திக்கிறேன்.

              
அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


(நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி! நான் இன்றளவு எழுதிவரும் தொகுப்புகள், இனி வரப்போகும் தொகுப்புகள், இதில் சொல்லப்படாத விஷயங்கள் பலவற்றையும் தொகுத்து புத்தகமாக எழுதி வருகிறேன். ஆகையால், அடுத்த பதிவு, வரும் இரு மாதங்களுக்கு வெளிவர வாய்ப்புகள் மிகக்குறைவு. முடிந்தவரை அடுத்தமாதமே பதிவிட என்னாலான முயற்சிகளை நிச்சயம் எடுக்கிறேன். தவறும்பட்சத்தில் எனது வேண்டுகோளுக்கு செவிமடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஏமாற்றம் எனக்குப் புரிகிறது. ஆனால், இப்போது நீங்கள் எனக்குத்தரும் அவகாசமே, அடுத்தவருட துவக்கத்தில் எனது புத்தகம் உங்கள் கைகளில் தவழ வாய்ப்பளிக்கும் என்பதை உணர்ந்து, தங்களின் மேலான ஆதரவையும் அன்பையும் இன்றுபோல் என்றும் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)


இப்பதிவுத்தளத்தை ஆங்கிலத்தில் பார்வையிட: 

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு:

மேலும் விவரங்களுக்கு, காண்க:
Narilatha Flower
Unbelievable Orchids
Meat eating plants
Isaac Newton
Isaac Newton's Esotericism Revealed
The effect of music on plants
Isaac Newton - Heretical Scientist
Isaac Newton Alchemist
Philosopher's Stone of Newton
Newton & Darwin
Music for plants
The effect of music on plants
Nagapushpa Flower Himalaya Fake
Narendra Modi Flower
Plants Look Animals
Bonsai
Flowers look like something else
Bonsai
Man eating tree

12 comments:

  1. Super bro. Such an deep, amazing study.. very informative. Keep it going. Expecting ur book in bookstores soon.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for your review...! :) Will try to give my best...!!! :) <3

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என்ன ஒரு அருமையான பதிவு ! மெய்சிலிக்கிறேன் !!

    நானும் ஒரு இயற்க்கை ஆர்வளன்தான் ... மரங்களின் மீது அலாதியான அன்பு வைத்துள்ளவன்தான் ... எனக்குள்ள சிறிய தோட்டத்தில் சில மரங்களை வளர்க்கிறேன் .மரங்களை நட்டு அதனை பராமரிப்பது ஒரு அலாதியான சுகம் . அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் . மரங்களின் மேன்மையை அறியாத மக்களை கண்டு பரிதாபப்படுகிறேன் . உங்களின் பதிவு நிச்சயம் பலரின் கண்ணோட்டத்தை மாற்றுவதாக இருக்கும் .

    மரங்களின் உணர்வுகளுக்கு மனிதர்கள் மதிப்பளிக்கும் காலம் வெகுதொலைவிலில்லை .உங்களின் அடுத்த பதிவை/புத்தகத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ,

    தங்கள் உண்மையுள்ள ,
    ஆனந்த்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...! :) அகமகிழ்கிறேன்...!! தங்களின் மரங்களுடனான உறவை என்னால் உணர முடிகிறது...!!!

      நிச்சயம் என்னாலியன்றவரை எனது சிறப்பான புத்தகமாக உங்களிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறேன்...! :)

      Delete
  5. Omg.. awesome yaar... Already I am a plant's lover... I got goosebumps.. This is very very useful for me... Thanks a lot..

    ReplyDelete
  6. Sir,

    Almost 6 months gone .i am waiting for your new post .

    ReplyDelete
  7. It’s nice and valuable information, really appreciate for the nice blog...!!

    Garden World is one of the best for setting up new gardens, Landscape Maintenance in Bangalore and hedge cutting and trimming. We provide 100% Satisfaction Guaranteed.

    ReplyDelete
  8. This is the first time I am seeing your post. It's really very interesting and amazing. Thanks for sharing with us. There are lot of information in this blog. I am gonna keep your blog in top of my favorite. If you want colourful planter pots online in Bangalore, visit Trust Basket website.

    ReplyDelete
  9. sir ,

    waiting for long time . when i can expect your next post ?

    ReplyDelete
  10. I am new to your blog.. thank you for wonderful posts.

    ReplyDelete