Wednesday 30 August 2017

30.) கசியா ரகசியங்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

    ஜோதிடவியலாளர்களையும், தீர்க்கதரிசிகளையும் பொருத்தமட்டில், எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் நீட்சியே. தற்போதைய குவாண்டம் இயற்பியலும் கூட ஏறத்தாழ இதே கருத்தையே முன்மொழிகிறது. உதாரணமாக, நமது நிலவின் ஒளி பூமியை அடைய ஒரு நிமிடம் ஆகும். எனவே நாம் தற்போது காண்பது ஒரு நிமிடங்களுக்கு முன்னர் இருந்த நிலவையே. ஒருவேளை நிலவை ஒரு விண்கல் தாக்கினால், அதை நாம் காண ஒரு நிமிட தாமதம் தேவைப்படும். இதையே ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடும் முன்வைக்கிறது.  இவ்வாறிருப்பின், எதிர்காலத்தைக் கணிப்பதென்பது சாத்தியமற்ற ஒன்றல்லவே! 

              கி.மு.6000-ஆம் ஆண்டுக்கு முன்னரே சுமேரியர்கள் மேலை உலகிற்காக, தங்கள் ஜோதிட வாயிலைத் திறந்துவைத்தனர். (அவர்களின் ஜோதிட அறிவுமேகூட இந்தியாவிலிருந்து சென்றதுதான்.) விண்மீன் தொகுதி குறித்த விண்ணியல் அறிவிற்கு அடித்தளமிட்டவர்களும் சுமேரியர்கள்தான். சுமேரிய குருமார்கள், அக்காலத்திலேயே 700 அடி  உயரத்தில் கட்டப்பட்டிருந்த பிரம்மாண்ட கோபுரம் ஒன்றின் உச்சியிலிருந்து இருபத்துநான்கு மணி நேரமும் வானத்தை ஆராய்வர். மனிதகுலத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் விண்மீன்கள்தாம் எனக் கண்டறிந்தனர்/நம்பினர். அக்காலத்தில் பரவும் நோய்களுக்கு காரணம் கடவுளின் கோபம் என்கிற நம்பிக்கை உலகின் பல இடங்களில் பரவிக்கிடந்தபோதிலும், நோய்களின் காரணம் கிரகங்களின் நிலைகளே என சற்று மாறுதலான கருத்தை முன்வைத்தவர்கள் சுமேரியர்கள்.

    இந்தியாவில் தற்போதுவரை பின்பற்றப்படும், ஜாதகம் மற்றும் பஞ்சாங்கத்தின் அடித்தளமே கிரகங்களின் நகர்வுகள்தான் என்பதைக் கடந்த பதிவிலேயே கண்டோம். "சரி, இவ்வாறு ஒவ்வொரு நாகரீகத்தினரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்துகளை முன்வைத்தால் அது உண்மையென்றாகிவிடுமா? அதுகுறித்து விஞ்ஞான ரீதியாக யாரேனும் ஆராய்ந்துள்ளனரா? அவ்வாறெனில் அதன் உண்மைநிலைதான் என்ன?" போன்ற பலவிதமான தூக்கம் துரத்தும் கேள்விகளுக்கு விடைகொண்டுவந்தார், ரஷ்யாவின் விண்ணியல் ஆய்வாளரான அலெக்ஸ்சாண்டர் சிஜேவ்ஸ்கி (Alexander Chizhevsky).  இவர் சிறந்த கவிஞராகவும், ஓவியராகவும் திகழ்ந்தவர் என்பது உபரித் தகவல். மேலும் இவர், விண்-உயிரியல், உயிர்-இயற்பியல், காற்று அயனியாக்கம், தொல்லியல், தத்துவவியல் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கியும், அதுசார்ந்த துறைகளில் பல்வேறு பதவிகளையும் வகித்தவர். இவரது தந்தை லியோனிட் வாசிலேவிச் சிஜேவ்ஸ்கி (Leonid Vasilievich Chizhevsky), ரஷ்ய ராணுவத்தில் ஜெனரலாகப்  பணியாற்றியவர். 


அலெக்ஸ்சாண்டர் சிஜேவ்ஸ்கி

               போலந்து (Poland) நாட்டில், 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் பிறந்து, மாஸ்கோவில் (Moscow) 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் நாள் மறைந்த சிஜேவ்ஸ்கி, பல தீவிர ஆராய்ச்சிக்குப் பின், 1920-ஆம் ஆண்டு அவர் கண்டறிந்த பதில் இதுதான். ஒவ்வொரு பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் பெரியவெடிப்புகள் உருவாகின்றன. அவ்வாறான அணுவெடிப்புகளின்போது பூமியில் புரட்சிகளும் போர்களும் நிகழ்கின்றன, எனக்கூறி கடந்த 700 ஆண்டுகளில் நிகழ்ந்த சூரியனின் அணுவெடிப்பையும் அச்சமயத்தில் நம் பூமியில் ஏற்பட்ட பேரழிவுகளையும் பட்டியலிட்டார். சிஜேவ்ஸ்கியின் இவ்வாறான கண்டுபிடிப்புகள் மறுக்க இயலாதவை. ஆனால், பூமியில் ஏற்படும் புரட்சிகளுக்குக் காரணம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே என்கிற கருத்தை அடிப்படையாகக்கொண்ட மார்க்சிய சிந்தனைக்கு இது  முரணாக அமைந்ததால், மார்க்சிய சிந்தனையில் ஊறிய ரஷ்யாவிற்கும், அதன் அப்போதைய ஆட்சியாளரான ஸ்டாலினுக்கும் எதிரிபோலானார் சிஜேவ்ஸ்கி; விளைவு, ஸ்டாலின் கண்மூடும் வரை சைபீரியாவில் சிறைவாசம். ஸ்டாலினின் மறைவிற்குப் பின் பதவிக்கு வந்த க்ருஷ்ச்சேவால் விடுதலைசெய்யப்பட்ட சிஜேவ்ஸ்கி ஏறத்தாழ ஐம்பதாண்டுகளை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வீணாக்கியிருந்தார். இன்றளவிலும் கூட சிஜேவ்ஸ்கியின் கருத்தை யாரும் (விஞ்ஞான ரீதியில்) மறுத்து நிரூபிக்கவில்லை. அவரின் எழுநூறு ஆண்டுகால கணிப்பும், சூரியனுக்கும் அதற்குமான தொடர்பும் பெருமளவில் சரியாக இருந்தது. இக்கருத்து அக்காலத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்குமேயானால், மார்க்சியம் என்றோ தவிடுபொடியாகியிருக்கும். மனித வாழ்வுக்கும், சூரியனில் ஏற்படும் வெடிப்புகளுக்குமான தொடர்பு விளக்கப்பட்டிருக்குமானால், புரட்சிகளைப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளோடும், வர்க்க முரண்பாடுகளோடும் தொடர்புபடுத்தமுடியாமலும், புரட்சிகளுக்கு விளக்கம்கொடுக்க முடியாமலும் மார்க்சியம் திணறியிருக்கும். அவ்வுண்மையை வெளிக்கொண்டுவந்து ஜோதிடத்தை விஞ்ஞானத்தின் அங்கமென உயர்த்த நினைத்த ஒரு அறிவியலாளருக்குக் கிடைத்த வெகுமதி, சிறைத்தண்டனை. தனது ஆய்வைத் தொடரமுடியாமல் 50 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டிருந்த சிஜேவ்ஸ்கி, விடுதலையான நான்கிலிருந்து ஆறுமாதங்களுக்குள் இவ்வுலக வாழ்விலிருந்தும் விடுதலையானார்; ஜோதிட உலகில் சூரியன் அஸ்தமனமானது. இருப்பினும், தான் விடுதலையாகி உயிரோடிருந்த அந்த குறுகிய காலகட்டத்திலும் கூட, தனது கருத்தை வலுப்படுத்த, அவர் மேலும் பல ஆதாரங்களை அடுக்கினார். கொள்ளை நோய்கள் பரவ சூரியகிரகண(மு)மே காரணம் என்று கூறினார்.




க்ருஷ்ச்சேவ்


ஜோசப் ஸ்டாலினுடன் க்ருஷ்ச்சேவ்

            சிஜேவ்ஸ்கியின் கூற்றுப்படி, சூரியன் நாம் நினைப்பதுபோல் சாதாரண(!) எரியும் அணு உலைக்கோளமோ, நெருப்புப்பந்தோ, அக்கினிக்குழம்புத்திரளோ மட்டுமல்ல, அது எல்லையற்ற ஆற்றலும், துடிப்பும், வெறியும் மிக்க ஒரு உயிருள்ள பிராணி..! அது அடிக்கடி தன மனநிலையை மாற்றிக்கொள்கிறது. அவ்வாறு, அதன் மனநிலை சிறிதளவில் மாறும்போதும், பூமியில் உள்ள உயிர்களை அது பாதிக்கிறது. சூரியனில் மாற்றமேதுமின்றி, பூமியில் மாற்றமேதுமில்லை. இவ்வாறு அவர்கூறியவற்றைக்கண்டு, இவர் மீது ஆத்திரப்பட்டோரும், பரிதாபப்பட்டோரும், அலட்சியம் செய்தோரும், ஏளனம் செய்தோரும் ஏராளம். 





            கதிரவனின் மாற்றமேதுமின்றி, பூமியில் மாற்றமேதுமில்லை. சூரிய கிரகணத்தின்போது, பறவைகள் பாடுவதை நிறுத்திவிடுகின்றன. சொல்லப்போனால் கிரகணம் நிகழ இருபத்திநான்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பே பறவைகள் வாயடங்கிப் போய்விடுகின்றன. பயம், சந்தேகம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டு மௌனம் சாதிக்கின்றன. குரங்குகள் மரங்களை விட்டிறங்கித் தரைக்கு வந்து, கும்பலாய்ப் பாதுகாப்பாய் ஒன்று கூடி அமர்ந்துவிடுகின்றன. எப்போதும் கூச்சலும் சேட்டையுமாய் பரபரப்போடு இருக்கும் அவை, கிரகண காலங்களில் கடைபிடிக்கும் அமைதியைப்போல், தியானம் செய்பவர்களும் கடைபிடிப்பதில்லை. இதையெல்லாம் சிஜேவ்ஸ்கி விளக்கினாலும், அதை செவிமடுத்துக் கேட்பாரில்லை.




            சிஜேவ்ஸ்கியைப் போலவே, பாராசெல்சஸ் (முழுப்பெயர்: ஃபிலிப்பஸ் ஆரியோலஸ் தியோஃபிராஸ்டஸ் பாம்பாஸ்டஸ் வான் ஹொஹென்ஹெய்ம்) என்கிற மருத்துவரும் சில முடிவுகளை வெளியிட்டார். ஆனால் இவரது காலம் சிஜேவ்ஸ்கியின் காலத்திற்கும் முற்பட்டது. சுவிட்சர்லாந்தில் 1493-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் அல்லது டிசம்பர் 17-ஆம் நாள் பிறந்து, ஆஸ்திரியாவில் 1541-ஆம் ஆண்டு செப்டம்பர்  24-ஆம் நாள் தனது 47-ஆம் வயதில் காலமான பாராசெல்சஸ் தத்துவவியலாளராகவும், மருத்துவராகவும், உயிரியலாளராகவும், ஜோதிடராகவும், ஜெர்மானிய மறுமலர்ச்சியின் அமானுஷ்ய ஆய்வாளராகவும், நச்சுவியலாளராகவும் திகழ்ந்தார். துத்தநாகத்திற்கு "ஜிங்க்" (Zinc) எனப் பெயரிட்டு  அழகுபார்த்தவர் இவரே. "நச்சுவியல்" (Toxicology) என்கிற துறையை உருவாக்கியவர் என்கிற பெருமைக்குரியவர். (உண்மையில் இப்பதவிக்கு இவர் உரித்தானவர் அல்ல. ஆதாரங்களினடிப்படையில் நோக்கினால், பழனியில் நஞ்சுகளைக் குறித்த ஆய்வகங்களை உருவாக்கி, அதில் மாபெரும் புரட்சியும் செய்த "போகர்" சித்தரே இப்பெருமைக்குரியவர். அவரே நஞ்சுகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டும், நஞ்சுகள் மூலம் சிற்பம்கூட வடிக்க இயலும் என்றும்  நிரூபித்தார். இதற்கு ஆதாரமாக பழனியின் மூலவராக நவபாஷாணத்தால் ஆன விக்கிரகம் வீற்றிருக்கிறது. வழக்கம்போல நம்மவர்களின் திறமை வரலாற்றின் நச்சுப்புகையால் திரையிடப்பட்டுவிட்டன; மேலைநாட்டவரின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் உலகிலேயே முதன்முறை என்று கொண்டாடப்படுகின்றன.) பாராசெல்சஸும் சாமான்யமானவர் அல்ல. அவரைப்பற்றி தனியாகப் பதிவிடும் அளவிற்குத் திறமையானவர்.






            சிஜேவ்ஸ்கிக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகாலம் மூத்தவரான பாராசெல்சஸும் ஜோதிடவியல் சார்ந்த ஒன்றைக் கண்டறிந்திருந்தார். அது, "கிரகங்களின் மாறுபாட்டால் மனிதனின் உடல்நிலை கெடுகிறது" என்பதே. ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கும், மற்றவற்றிற்கும் (கிரகநிலை போன்றவை) ஏற்படும் மாறுபாட்டால்  உடல்நலத்தில் மாற்றம் நிகழ்கிறது என்றும் கூறினார். கதிரவனில் கரும்புள்ளி தோன்றும்போதெல்லாம் பூமியில் நோய் நொடிகள் பெருகுகின்றன. அப்புள்ளிகள் குறையும்போது நோய்களும் குறைகின்றன. சூரியனில் கரும்புள்ளிகள் இருக்கும்வரை, பூமியில் நோய் இருந்தே தீரும், அதை ஒழிக்க வழியில்லை. (இன்றைய விஞ்ஞானிகளும் ஏறத்தாழ பாரசெல்சஸின் இம்முடிவுக்கே வந்திருப்பதாகத் தெரிகிறது.)


சூரியனில் கரும்புள்ளிகள்




           இவரைப்போலவே, இவருக்கு முன்னர், கி.மு.600-களில் வாழ்ந்த பித்தகோரஸ் (Pythagoras), கிரகங்களின் ஒத்திசைவு குறித்த மதிப்புமிக்க கோட்பாடு ஒன்றைக் கண்டறிந்தார். அவரது காலகட்டத்தில் நமது இந்தியா, புத்தர் மற்றும் மகாவீரரின் போதனைகளில் திளைத்திருந்தது. அக்காலகட்டத்தில் இந்தியாவுக்கும், எகிப்து போன்ற நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, கிரீஸ் திரும்பிய பின்னரே, பித்தகோரஸ் தனது கோட்பாட்டை வெளியிட்டார். அவர் எழுதிய குறிப்புகளில், பௌத்த, சமண மதத் துறவிகளின் குறிப்புகள் காணப்படுகின்றன. சமண முனிவர்களை அவர், "ஜைனோ சோபிஸ்ட்ஸ்" என்று குறிப்பிட்டிருக்கிறார். (அவர்கள் நிர்வாணமாக நடமாடியதையும் குறிப்பிட்டிருக்கிறார்.)

            நட்சத்திரம், கிரகம், துணைக்கோள் - என ஒவ்வொன்றின் இயக்கமும் தனித்தனி அதிர்வுகளை ஏற்படுத்தி விடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு விண்மீனுக்கும் வெவ்வேறு இயக்கம், வெவ்வேறு அதிர்வு. இவ்வாறாக எல்லா விண்மீன்களின் ஒட்டுமொத்த ஒத்திசைவையே நாம் "பிரபஞ்ச ஒத்திசைவு" என்கிறோம். (பிரபஞ்ச ஒத்திசைவின் சிறு துணுக்கை நாம் முன்னரே "பிரணவம்" என்கிற பதிவில் பார்த்திருக்கிறோம்.) புத்தம் புதிதாய்ப் பிறக்கும் குழந்தையின் புத்தம் புதிய மனதில், அவ்வேளையில் இயங்கும் ஒரு விண்மீனின் அதிர்வு அழுத்தமாய்ப் பதிந்துவிடுகிறது. வாழ்நாள் முழுவதும், அதனுடைய உடல்நலமும் சீர்கேடும், அவ்விண்மீனின் அதிர்வுகளாலேயே உண்டாகிறது. இவ்வாறு இருக்கும் குழந்தையின் அதிர்வு, அது பிறந்தபோது இயங்கிய விண்மீனின் அதிர்வுடன் ஒத்திசைவு ஏற்பட்டால் அக்குழந்தையின் உடல்நலம் சீராக இருக்கும், ஒத்திசைவு மாறுபடும்போது உடல்நலம் சீர்கெடுகிறது.



பித்தகோரஸ்



இப்பிரபஞ்சம் முழுவதும் கணிதங்களால் ஆனது எனக் குறிப்பிடும்  வகையில், பித்தகோரஸ் கோட்பாட்டை இயேசு நாதரோடு இணைத்தது 

            இத்துறையில் பாராசெல்சஸின் பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நோயாளியின் ஜாதகக்குறிப்பைப் பார்க்காமல் அவர் மருந்து கொடுத்ததில்லை. அம்முறையில் நோயாளிகள் பூரண குணமடைவது கண்டு பிற மருத்துவர்கள் குழம்பினர்; காரணம், அந்நோயாளிகள் யாவரும் பிற மருத்துவர்களால் குணப்படுத்த இயலாது என கைவிடப்பட்டவர்கள். "ஒருவரது 'ஜென்ம நட்சத்திரம்' இன்னதென்று தெரியாமல், அவரது உடலின் உள் ஒத்திசைவை அறிய இயலாது. அது தெரியாமல், ஒருவராக குணப்படுத்துவது எப்படி?" என்று அவர் கூறுவது வழக்கம். பாராசெல்சஸ் கூறும் உடலின் உள் ஒத்திசைவே மனித உடல் நலத்திற்குக் காரணம். இவ்வாறு நாம் குறிப்பிடும் உடல்நலம் அல்லது ஆரோக்கியம் என்பதன் விளக்கம் என்ன என்று மருத்துவர்களைக் கேட்டால், "நோயின்மையே உடல்நலம்" என்பர். உண்மையில், நோயின்மை என்பது உடல்நலத்தைக் குறிக்காது, நோயால் பீடிக்கப்பட்ட உடலின் எதிர்ப்பதமே நோயின்மை. ஆனால் உடல்நலம் என்பது, பிறந்தது முதல் இறப்பது வரை நம்மோடு இயல்பாய் இருப்பது. (நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் தத்தமது சத்துக்களை இழப்பதின் இறுதி நிலையே 'இயற்கை மரணம்'. இவ்வாறு "சத்துப்போதலே" காலப்போக்கில் மருவி "செத்துப்போதல்" என்றானது, என்றும் கூறுவர் என்பது ஒரு கொசுறுத்தகவல்.) நோயின்மை குறித்த மருத்துவர்களின் மேற்கண்ட விளக்கத்தை பாராசெல்சஸ் மறுத்தார்.  உடலின் உடன்பாடான நிலைமையே உடல்நலம். அத்தகைய இயல்பான நிலையின்மீது தொடுக்கப்படும் தாக்குதலே நோயாகும். உடலின்  உள்ளார்ந்த ஒத்திசைவை ஒருவர் உணர்வதன் மூலமே நோயைப் போக்க முடியும். அவ்வாறு உள்ளார்ந்த ஒத்திசைவை ஒழுங்குபடுத்தாததன் விளைவே, ஒரு நோயிலிருந்து விடுபட்டவுடன், மற்றொரு நோயால் பீடிக்கப்படும் நிலை. நாம் உள்ளார்ந்த ஒத்திசைவை சீராக்க யாதொரு முயற்சியும் எடுப்பதில்லை. அதை முதலில் சரிசெய்ய வேண்டும்" என்றார் பாராசெல்சஸ். ஐநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கண்டுபிடிப்புகள் காலவோட்டத்தில் மறக்கப்பட்டுவிட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஜோதிடம் மீண்டும் புத்துயிர் பெறத் துவங்கியுள்ளது. (சில போலிகளும் அடக்கம்.)

            1950-ல், "பிரபஞ்ச இரசாயனம்" (Cosmic Chemistry) என்றொரு புதிய விஞ்ஞானம் பிறந்தது. அதைத் தோற்றுவித்தவர், ஜியார்ஜி ஜியார்டி. கடந்த நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மனிதராகக் கருதப்பட்ட அந்நபரின் புகைப்படம் கூட இணையத்தில் அகப்படவில்லை என்பது சோகம். அவர் செய்த எண்ணற்ற ஆராய்ச்சிகளின் முடிவாக வெளியிட்ட முடிவு, "இப்பிரபஞ்சம், உறுப்புகளின் ஒத்திசைவைக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு" என்பதே. "இப்பிரபஞ்சமுமே ஒரு மாபெரும் உடல், அதன் மீச்சிறு கூறுகளின் மிகநுண்ணிய அமைப்பு நாம். நம் உடலினுள் உயிர்வாழும் நுண்ணுயிரிகளைப் போல", என்பது அவர் வாதம். 'அவ்வாறாயின் இப்பிரபஞ்சம்தான் கடவுளா?' என்கிற வினாவும் எழுகிறது. "இருக்கலாம்" என்பதே எனது பதில். நாம் இப்பிரபஞ்சத்தில் உருவாகியிருக்கிறோமா; பிரபஞ்சத்தால் உருவாகியிருக்கிறோமா என்பது தெரியவில்லை. ஒருவேளை நாம் இப்பிரபஞ்சத்தால் உருவாகியிருந்தால் அதைக் கடவுளெனக் கொள்ளலாம்; படைப்பின் காரணகர்த்தா என்கிற அடிப்படையில். (அதை உண்மையெனக் கொண்டாலும், தற்போது நம்பப்படும் பல்வேறு பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு (Multiverse Theory) உண்மையாயின், கடவுளரும் பலராகவே இருப்பர்.) அவ்வாறல்லாது இப்பிரபஞ்சத்தில் நாம் உருவாகியிருந்தால், நம்மோடு சேர்த்து அதனையும் உருவாக்கிய அல்லது உருவாகக் காரணமாக இருந்த கடவுளெனும் காரணகர்த்தா அவசியமாகிறார். இதுபோன்ற நம்மைக்குழப்பும் கேள்விகள் பலவும் இறுதியேதுமற்ற முடிவிலியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை; ஆகவே ஜியார்டி முன்மொழிந்த விஷயங்கள் சிலவற்றை மட்டும் இங்கு காணலாம். ஜியார்டியின் கூற்றுப்படி, எவ்வாறு நமது உடலின் எந்த ஒரு பகுதியில் அடிபட்டாலோ, தொட்டாலோ நம்மால் உணர முடிகிறதோ, அதேபோல், இப்பிரபஞ்சத்தின் எம்மூலையில் ஏற்படும் தாக்கமும், பிரபஞ்சம் முழுவதிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும்; அவ்வதிர்வுகள் மாற்றங்களின் வித்தாய் அமையும்.  இவ்வாறு விளக்கும் பிரபஞ்ச இரசாயனத்தின்படி, இப்பிரபஞ்சத்தில் தனித்து நிற்பதென்று ஏதுமில்லை; அனைத்தும் ஒன்றோடொன்று ஒன்றிணைந்து இயங்குபவையே.


            இவ்விடத்தில், சற்று பிரபலமான கேயாஸ் (அல்லது  கையாஸ்) கோட்பாடைப் (Chaos Theory) பற்றிக் கூறியாக வேண்டும். நாம் முன்னரே பார்த்தது போல், இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கூறும் மற்றொன்றோடு ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்புபட்டிருக்கின்றன (அரூபமாகக் கூட). அப்பேற்பட்ட இடியாப்ப சிக்கலான பிரபஞ்சத்தில், சில தொடர்புகள் எளிதில் மாற்றங்களுக்கு உட்படுபவை. அத்தகைய மாற்றங்கள், அதனோடு தொடர்பிலுள்ள ஏதேனும் ஒரு கூறினால் உருவான அதிர்வின் விளைவாக இருக்கும். 

            இதற்கு உதாரணமாக 'நியூட்டனின் தொட்டில்' (Newton's Cradle) என்றழைக்கப்படும் ஓர் அமைப்பைக் கூறலாம். இதில், முதலில் உருவாக்கப்படும் தொடர்வினையானது, (அதாவது ஏதேனும் ஒரு முனையிலுள்ள பந்தை இழுத்து விடுவது), அதனோடு தொடர்பிலிருக்கும் மற்ற பந்துகளில் அதன் அதிர்வலைகளைப் பரப்புகிறது. மேலும் அவ்வதிர்வுகளைக் கடத்த வழியற்ற மற்றொரு முனையிலுள்ள பந்து, நாம் இழுத்துவிட்ட முதல் பந்தின் விசையை உள்வாங்கி அசைவுறுகிறது. அதன் விசை அவ்வீச்சோடு ஓய்ந்துவிடாதபடியால், (காரணம் அது கட்டப்பட்டுள்ள நூல்), அது மீண்டும் அதன் துவக்கப்புள்ளியை நோக்கி அலைவுற்று, தான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் என்பதுபோல், உள்வாங்கிய அதிர்வை வாங்கிய பந்தின் வழியாகவே திருப்பி அனுப்புகிறது. செய்தார்க்கு செய்த வினை என்பதுபோல், இச்செயலைத் தொடங்கிய அதே பந்து, தான் அனுப்பிய விசையைத் தானே பெற்று அசைவுற்று, விசையை மீண்டும் முன்னர் போல் அதனருகிலுள்ள பந்திற்குக் கடத்துகிறது. இச்செயல்பாடு விசை குறையும் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். அறிவியலோடு, கர்மா சிந்த்தாந்ததையும் இக்கருவி மறைமுகமாக விளக்குகிறது; நாம் பார்த்துக்கொண்டுவரும் கேயாஸ் கோட்பாட்டையும் சேர்த்து. இத்தொடர்வினையுமேகூட நாம் முதலில் கொடுக்கும் சீரான விசையைப் பொருத்தே நிகழும். சீரற்ற விசை ஒழுங்கற்ற அதிர்வினை ஏற்படுத்தி, விசைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டு நிற்கும் பந்துகளில் மகாக்குழப்பமாய்ப் பரவி, வீணாகி, மேற்கூறிய அழகான அசைந்தாடல் நிகழாமலே போகும். எல்லாம் நாம் உருவாக்கும் அம்முதல் வினையைப் பொறுத்தே; முதல் கோணல் முற்றிலும் கோணல். அதேபோல், முன்னர் உருவாக்கிய அதே விசையை மறுமுறை யாராலும் உருவாக்க இயலாது; நுண்ணிய மாறுபாடு சர்வ நிச்சயமாய் இருக்கும். அந்த மாறுபாடு நாம் மேற்கண்ட எளிதில் மாறுபாட்டிற்கு உட்படும் தன்மை கொண்ட, இவ்வினையோடு தொடர்புடைய ஏதேனுமோர் காரணியாய் இருக்கும். அது நாம் சற்றும் யூகிக்கக்கூட இயலாத வகையில் தொடர்பற்ற ஒன்றைப் போலத் தோன்றலாம். இதையே 1972-ஆம் ஆண்டு, "பட்டாம்பூச்சி விளைவு" (Butterfly Effect) எனப்பெயரிட்டார், இந்த கையாஸ் கோட்பாட்டை "மேரி கார்ட்ரைட்" (Mary Cartwright)-டோடு இணைந்து உருவாக்கிய "எட்வார்ட் நோர்ட்டன் லொரென்ஸ்"(Edward Norton Lorenz). இது கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானபோதும், இயற்பியல், பொறியியல், பொருளாதாரம், உயிரியல், விண்ணியல், வானியல், தத்துவவியல் எனப் பலதரப்பட்டத் துறைகளில் பரந்துவிரிந்து கிடக்கிறது.  லொரென்ஸ் உருவாக்கிய ஒரு 'விசித்திரமான கவர்ச்சி மாதிரி' (Strange Attractor Model) வரைபடம், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு பட்டாம்பூச்சியின் உருவத்தைப் போலத் தோற்றமளித்தது. (இதைக் கவனத்தில் கொள்க.) முன்னர் குறிப்பிட்டதைப்போல், சிறு அதிர்வும் பேரலைகள் உருவாகக் காரணமாகலாம்.


நியூட்டனின் தொட்டில்


சீரான இயக்கமும், சீரற்ற இயக்கமும்


ஆற்றல் கடத்தல்


கிரகங்களும் அதுபோலே


ஆனால், இயக்கிடும் காரணகர்த்தா மட்டுமே மர்மம்


எட்வார்ட் நார்ட்டன் லொரென்ஸ்



மேரி கார்ட்ரைட்


விசித்திரமான கவர்ச்சி மாதிரி (Strange Attractor Model) வரைபடம்



லொரென்ஸ் சமன்பாடு உருவாகும் விதம் (வரைபடமாக)





            இத்தகைய கேயாஸ் கோட்பாட்டைப் பற்றிக் கூறப்படும் மற்றுமொரு நம்ப சிரமமான விஷயம்/கூற்று என்னவெனில், "ஒரு பட்டாம்பூச்சி பிரேசிலில் தனது சிறகுகளை அடித்தால், டெக்சாசில் அதன் சிறகடிப்பையொத்தப் புயல் வீசும்" என்பது. இது எங்கோ கேள்வியுற்ற வரிகளைப்போல் உள்ளதா? அவ்வாறு தோன்றினால், நீங்கள் திரைப்படங்களின் வாயிலாகக் கூறப்படும் அறிவியல் மற்றும் உலக விஷயங்களை உற்றுக் கவனிப்பவர் என்று அர்த்தம். "தசாவதாரம்" திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமல்ஹாசன் விளக்கிக்கூறும் வசனங்களில் ஒரிரு வரிகள் இதையொத்தவை. "மேற்கத்தியச் சிந்தனையில் 'கையாஸ் தியரி' என்று  ஒன்று உண்டு. இந்த விஞ்ஞானத் தத்துவப்படி, உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை; சக நிகழ்வுகள். ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கைப் படபடப்பில் துவங்கும் அதிர்வுக்கும், ஒரு பூகம்பத்திற்கும்கூட தொடர்பு உண்டு என்கிறது அந்தத் தத்துவம்." இவ்வரிகள் அப்படத்திலுள்ளவை. நம்ப சற்று சிரமமாக இருக்கிறது அல்லவா? பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு எவ்வாறு ஒரு புயலுக்கோ, பூகம்பத்திற்கோ காரணமாக அமைய இயலும்? அது கால்களால் சுவையறியும் ஒரு வண்ணத்துப்பூச்சி அவ்வளவே. பிரேசிலில் காணப்படும் "ஆர்க்கியோ-ப்ரிபோனா டெமொபூன்" (Archaeoprepona Demophoon) எனும் சாக்லேட் நிற பட்டாம்பூச்சி, தன் பெண் இணையைக் கவர, சாக்லேட் வாசனையைப் பரப்பிச்செல்லுமாம். (சிலர், அது 'வெனிலா' (Vanilla) வாசனை என்றும் கூறுகின்றனர்). இதேபோல்,  க்ரேடா ஓடோ (Greta Oto) எனும் வண்ணத்துபூச்சி, கண்ணாடி போன்ற ஒளிஊடுருவும் இறக்கைகளைக் கொண்டுள்ளது. "மோனார்க்" (Monarch) போன்ற வண்ணத்துப்பூச்சிகள் குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும். (இதை நாம் "உறையும் உயிர்கள்" பதிவில் முன்னரே கண்டிருக்கிறோம்). உயிரியல் உலகில் இவை, 'தக்கன பிழைக்கும்' (Survival of the Fittest) என்கிற பரிணாமக் கோட்பாட்டினடிப்படையில், தங்களது தேவைக்கேற்ப காலச்சுழலில் தங்களைத் தகவமைத்துக்கொண்டுள்ளன. ஆகவே, இவற்றின் இத்திறன் ஏதேனும் ஓர் வகையில் இவைகளின் உயிர்வாழ்விற்கு உதவுகின்றன. ஆனால், இவற்றின் சிறகடிப்பு புயலை உருவாக்கவல்லது எனப் பேசப்படும் கூற்று? அது இவற்றின் உயிர்வாழ்விற்கோ, பரிணாம வளர்ச்சிக்கோ எவ்வாறு பயன்படக்கூடிய ஒன்றாகும்? 


தசாவதாரம் திரைப்படம்



ஆர்க்கியோ-ப்ரிபோனா டெமொபூன்


க்ரேடா ஓடோ




            அதைத் தெளிவுபடுத்த, கேயாஸ் கோட்பாடு இயங்கும் ஒரு நிகழ்கால உதாரணத்தைப் பார்க்கலாம். நீங்கள் வானிலை அறிக்கை அறிவிப்பதைக் கவனித்திருந்தால், இதை நிச்சயம் உங்களால் நினைவுபடுத்த இயலும். அது, அவர்கள் குறிப்பிடும் ஒரு வாக்கியம், "அடுத்த சில நாட்களுக்கு...". இன்னும் நான் கூறவருவதை யூகிக்கமுடியவில்லையா? தொடருங்கள். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், விஞ்ஞானிகளால் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்ட வானிலை மாற்றங்களையே கண்டுணர்ந்து அறிவிக்க முடிகிறது. காரணம், மேலே நாம் கண்ட கேயாஸ் கோட்பாட்டின்படி, வானியல், தன்னைச் சுற்றியுள்ள அல்லது தான் சார்ந்துள்ள சூழியல் காரணிகளால் எளிதில் மற்றத்திற்குட்படக்கூடியது. சுற்றுசூழலின் மீச்சிறு மாற்றம்கூட, வானியலின் மிகப்பெரிய விளைவுகளுக்கு அடிகோலும். கண்டங்களை நகர்த்தும் மாபெரும் புயலும், அதனோடு சங்கிலித்தொடராய் உருவாகும் கடல்கோள், நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு முதலிய இயற்கைப்பேரிடர்களும் நிகழ இயற்கையின் ஒரு மிகச்சிறிய மாற்றமே போதுமானது; அது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த உதாரணம், ஏற்கனவே லொரென்ஸ் உருவாக்கிய வரைபடத்தில் உருவான பட்டாம்பூச்சியின் உருவமைவு போன்றவற்றோடு சில அறிவியல் ஆர்வலர்கள் சேர்ந்துக் குழப்பி, "ஒரு பட்டாம்பூச்சி பிரேசிலில் தனது சிறகுகளை அடித்தால், டெக்சாசில் அதன் சிறகடிப்பையொத்தப் புயல் வீசும்" என்கிற சொலவடையை (அவரவர் நாட்டிற்கு ஏற்ப இடங்களின் பெயர்களை மாற்றி) உருவாக்கிவிட்டார்கள்; அதுவும் "பட்டாம்பூச்சி விளைவு" என்கிற பெயரில் அறிவியல் அறிவு தேடும் மாணவர்களுக்கு மனதில் ஆழப்பதிந்துவிட்டது. ஆனால், உண்மை நான் மேலே விளக்கியதில் உள்ளது.


            விஞ்ஞானம் தான் வளர்ந்துவிட்டதாகத் தலைகாட்டும் முன்னரே, நம் முன்னோர் எவ்வித வானிலை அறிக்கையோ, ரமணனோ இன்றி மழை வரப்போவதை ஊர்ஜிதப்படுத்துவர். "தட்டான் தாழப் பறந்தால் மழை", "கறுப்பெறும்பு மொய்த்தால் மழை" என தன்னைச் சுற்றி நடைபெறும் இயற்கையான மாற்றங்களைக் கவனித்தே நிகழப்போகும் வானியல் மாற்றத்தை அறிந்தனர். மொட்டைப் பனைமரங்களில் கூடுகட்டும் மைனா போன்ற பறவையினங்கள் காற்றின் திசையறிந்தே தனது கூடுகளை அமைக்கின்றன. மரத்தின் உச்சியில் கூடமைத்தால் மழை இருக்காது. காற்று வீசும் திசைக்கு எதிர் திசைகளிலேயே கூடுகள் அமைக்கப்படும். மரத்தின் ஓரங்களில் கூடமைக்கும் காலங்களில் மழை வரும். இவ்வாறு வானிலை இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களுக்கு நடக்கவிருக்கும் வானிலை மாற்றங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வை ஒரு அறிவாக/திறனாக அளிக்கிறது. இதன் விளைவாகவே எந்தவொரு இயற்கைப்பேரிடரிலும் யாதொரு விலங்குகளோ, பறவைகளோ அழியவில்லை. (அதற்காக விலங்குகளின் அச்செயல்பாட்டால் அப்பேரிடர் நிகழ்ந்ததாக நம்பக்கூடாது; அவ்வாறு தவறாகக் கருதப்பட்டதே மேலே விளக்கப்பட்ட 'பட்டாம்பூச்சி விளைவு'. மாறாக, அப்பேரிடர் வரவிருப்பதை விலங்குகள் முன்னரே அறிந்துகொண்டன என்பதே நிதர்சனம்.) மனிதனும் குகைவாசியாக வாழ்ந்தபோது இருந்த இயற்கை அறிவு, அறிவியல் வளர்ச்சி என்கிற பெயரால் மழுங்கடிக்கப்படுகிறது. தொலைபேசியின் காலத்தில் நாம் மனனம் செய்துவைத்திருந்த எண்கள், தற்போதைய அலைபேசி காலத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளது ஒரு உதாரணம். மனிதனின் சோம்பேறித்தனத்திற்கு ஆதரவாக உருவாக்கப்படும் அதிநவீன கருவிகள், நம்மை மேம்பட்ட ஒரு உயிரினமாக இப்பூவுலகில் காட்டிக்கொள்ள உதவினாலும், மறைமுகமாக நம்மை முட்டாளாக்கிகொண்டுதான் வருகிறது. காடுகளில் வாழும் பழங்குடியினர்கள் இதுவரை எந்தவொரு இயற்கைப் பேரிடராலும் பாதிக்கப்படவில்லை. இவ்வளவு ஏன், காட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த வீரப்பன், அருகில் இருக்கும் விலங்கின் வாசனையை உணர்ந்து அதன் திசையிலிருந்து விலகிச் செல்வாராம். அனைத்திற்கும் காரணம், இயற்கையோடு இணைந்த வாழ்வு. அப்படியெல்லாம் இருக்க இக்காலத்தில் முடியாது, நான் கான்க்ரீட் காட்டுவாசியகத்தான் வாழ்வேன் என்போருக்கு, இயற்கை லாவகமாக ஒரு ஆப்பு வைத்துள்ளது. அது தேனீ.


தட்டான் பூச்சி



கறுப்பெறும்புகள்



மைனா



ஆதிவாசிகள்

            ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி, "இவ்வுலகிலுள்ள தேனீக்கள் அனைத்தும் அழிந்துவிட்டால், அடுத்த நான்கே ஆண்டுகளில் மனித இனமே அழிந்துபோகும்(!)". இக்கூற்று இன்றளவும் மறுதலிக்கப்படவில்லை. சிறுவயதில், சிந்துபாத் போன்ற கற்பனைக் கதைகளில் வரும் மந்திரவாதிகள், தங்களின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகைக்குள், சகல பாதுகாப்புகளோடு சர்வ பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் தங்கக்கூண்டுக்குள் வாழும் ஒரு கிளியில் இருப்பதாகப் படித்திருப்போம். அதுபோல், நமது சந்ததியினரின் உயிர் தேனீக்களிடம் தரப்பட்டுள்ளதா? மேலோட்டமாகப் பார்க்கும்போது இவ்வாறு விந்தையாகத் தோன்றினாலும், அவைகளின் இயற்கையான பணி, நமது உயிர்வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. புறஊதாக் கதிர்களைக் கண்களால் கண்டுணரக்கூடிய இவ்வுயிரினத்தின் அன்றாடப் பணியான தேனெடுத்தல், அது சென்றமரும் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு மறைமுகமாக வழிவகுக்கிறது. நெடுந்தூரம் பறந்துசென்று, நடனமாடி, தனது சகாக்களோடு சேகரித்துவந்த தேனை, எக்கல்லூரியிலும் பொறியியல் கல்லாமல், தங்களுள் பொதிந்துள்ள இயற்கையான திறனையும், அறிவையும் கொண்டு உருவாக்கப்பட்ட, மிகநேர்த்தியான அறுங்கோண மெழுகுக்கூட்டில், உமிழ்ந்து சேகரிக்கும் உழைப்பாளியின் உழைப்பை, நெருப்பினால் துரத்தி, அதன் உழைப்பை நக்கித்தின்னும் மனிதஇனம் அறியுமோ தேனீக்களின் அத்தியாவசியத்தை?



தேனீக்களின் பார்வையில் ஒரு பூ



            ஆர்மடில்லோ (Armadillo) என்றொரு விலங்கினம் உண்டு. தனக்கு ஆபத்து நேரும் காலத்தில் தன்னை ஒரு கால்பந்து வடிவில் உருட்டி சுருக்கிக்கொள்ளும், கவசம்போன்ற தோல் அடுக்குகளைக் கொண்ட இவ்வுயிரினம், பிறரால் அல்லது பிற விலங்கினங்களால் பயமுறுத்தப்பட்டால் தரையிலிருந்து எழும்பிக்குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும். ஒருவேளை, தேனீக்களும் நம்மால் பரிணாமச் சுழலில் இந்நிலைக்கு ஆளானலோ, அல்லது நமது தொழில்நுட்ப மேம்பாடு, விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் அதன் வாழ்விடங்களோ சூழ்நிலையோ அழிக்கப்பட்டாலோ, மனிதனை அருங்காட்சியத்தில் மட்டுமே வேற்றுகிரகவாசிகள் காணும் சூழ்நிலை உருவாகுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


ஆர்மடில்லோ


கால்பந்து போல தன்னைச் சுருக்கிக்கொள்ளும்போது



            மேற்கூறிய விளக்கங்களின் மூலம், நம்மைச்சுற்றிலும் காணப்படும் இயற்கையான விஷயங்களினூடே காணப்படும் அரூபமான நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளை அறியலாம். "மென் இன் பிளாக்"(Men in Black) படவரிசையில் வெளிவந்த மூன்றாவது பாகத்தின் இறுதிக்காட்சியில், 'ஏஜென்ட் கே' (Agent K) எனும் கதாப்பாத்திரம், ஒரு உணவகத்தில் உண்டபின்பு வெகுமதி (Tips) வைக்காமல் சென்றுவிடுவார். அப்போது ஒரு விண்கல் பூமியைத் தாக்க வரும். பின்னர், தான் மறந்துவிட்டதை உணர்ந்து மீண்டும் வந்து வெகுமதியை வைத்துவிட்டுச் செல்வார், அப்போது ஒரு செயற்கைக்கோள், அவ்விண்கல்லின் பாதையில் குறுக்கிட, பூமியில் அவ்விண்கல் மோதும் அபாயம் குறுக்கே புகுந்த செயற்கைகோளின் மோதலால் தவிர்க்கப்படும். இதன் கூற்றுப்படி, நமது ஒவ்வொரு செயலும் இப்பிரபஞ்சத்தில் நியூட்டனின் மூன்றாம் விதியை செயல்படுத்துகின்றன. ஆனால் அது மிகப்பரந்த பிரபஞ்சத்தில் குறிப்பிட்டு சொல்லவியலாத ஒரு தாக்கமாகவே இருக்கும் எனத் தர்க்க அறிவிற்குத் தோன்றினாலும், நாம் மேலே கண்ட கேயாஸ் கோட்பாடு அந்நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது. 


'மென் இன் பிளாக்' திரைப்படத்தில் ஒரு காட்சி

            நாம் முன்னர் கண்ட பிரபஞ்ச இரசாயனம், நாம் வாழும் முழு பிரபஞ்சமுமே ஓர் உடல் என்று கூறுகிறது. மேலும், நம் உடலின் ஏதேனும் ஒரு ஓரத்தில் ஏற்படும் பாதிப்பு, முழு உடலிலும் உணரப்படுவதுபோல, எல்லாம் ஒன்றிணைந்து இயங்கும் இப்பிரபஞ்சத்தில், ஏதேனும் ஓர் விளிம்பில் ஏற்படும் தாக்கம், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஏதேனும் ஓர் விதத்தில் அதிர்வுறச் செய்கின்றன. ஒரு விண்மீன் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அதன் நிலை மாறும்போது நமது இதயத்துடிப்பும் மாறுகிறது. சூரியன் நமது பூமியிலிருந்து ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், அதன் அமைதி குலையும்போது, நமது ரத்த ஓட்டம் பாதிப்பிற்குள்ளாகிறது. பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் "அணுப்புயல்" (Atomic Storm / Solar Flare) தோன்றி வருகிறது; அக்காலங்களில் நமது பூமியிலும் பெரிய கொந்தளிப்புகள் விளைந்தன. அச்சமயம், சுமார் இருபது ஆண்டுகாலம் பெண்களின் ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்துவந்த ஜப்பானிய மருத்துவரான "டமாட்டோ" (Tamatto) என்பவர் வியப்பான ஒன்றைக் கண்டுபிடித்தார்.  மாதவிலக்கின்போதும், கர்ப்ப காலத்தின்போதும் பெண்களின் ரத்தம் மென்மையடைகிறது; ஆணின் ரத்தம் ஒருபோதும் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாதிருந்தது. ஆனால், அதுவுமேகூட சூரியனில் அணுப்புயல் உக்கிரமடையும்போது மென்மையடைவதாகக் கண்டறிந்தார்.



சூரியனில் தோன்றும் அணுப்புயல்/மின்காந்தப்புயல்


            இவரைப்போலவே, விண்வெளிப் பயணிகளின் பாதுகாப்பு, வசதிகள் பற்றிய துறையில் பணியாற்றி வந்தவரும், ஜோதிடத்தில் துளியும் நம்பிக்கையற்ற பேராசிரியருமான, சிந்தனையாளர் ஃபிராங்க் ப்ரௌன் (Frank Brown) விண்வெளிப் பயணிகள் பூமியை விட்டு விலகி விண்வெளியில் நுழையும்போது எதிர்கொள்ளும் கதிர்வீசுகளின் அபாயங்களைக் கண்டறிய, உருளைக்கிழங்குகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்தார். விண்வெளிக்குச் சென்று திரும்பிய உருளைக்கிழங்குகள் முளைவிட்டால், மனிதர்களால் விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சுகளைத் தாங்க இயலும் என்பது அவரது கணிப்பு. (ஒருவேளை, உருளைகிழங்கு கேட்டுபோனால், 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்கிற கதையாகியிருக்கும் இப்போது நாம் மேற்கொள்ளும் விண்வெளிப்பயணங்கள்.) அரிஸ்டாட்டிலுக்குப் பின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள், அண்டவெளியில் எதுவுமே இல்லை என்றும்,  பூமிக்கு மேல் இருநூறு மைல்களைத் தாண்டி சுற்றுச்சூழல் முடிந்து, சூனியப்பிரதேசம் தொடங்கிவிடும் என மேலை நாட்டவரால் கருதப்பட்டு வந்தது. அத்தகைய எண்ணங்களையெல்லாம் துடைத்தெறிந்து விஞ்ஞானம் ஒளிரத் துவங்கிய காலம். மேற்கூறிய துறைகளோடு மற்றொரு துறையையும் ப்ரௌன் ஆராய்ந்துவந்தார். அத்துறைக்கு சரியான பெயர் சூட்டப்படவிட்டாலும், "கிரக மரபு" என அத்துறையை அழைத்தனர். அதை ஆங்கிலத்தில், "ஹோரோஸ்கோப்" (Horoscope) என்றழைக்கப்படும் "ஜாதகம்".  இது "ஹோரோஸ்கோபோஸ்" "Horoscopos" எனப்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்பட்டாலும், நாம் இதற்கு முந்தைய பதிவில் கண்ட, 'ஹவர்' (Hour) என்றழைக்கப்படும் மணிநேரத்தைக் குறிக்கும் சொல் உருவாகக் காரணமாக இருந்த ஹோரை என்ற சொல்லின் அடிப்படையே, மேற்கண்ட கிரேக்கச் சொல்லின் வேர்மூலமாகத் தோன்றுகிறது. ("ஹோரோஸ்கோபோஸ்" என்கிற கிரேக்கச் சொல்லின் பொருள், "கிரகங்களை நான் கவனிக்கிறேன்" என்பதாகும்.) நமது கடந்த பதிவில் குறிப்பிட்டதுபோல், நமக்கு சாதகமான சூழ்நிலைகளை அறியப்பயன்படும், கணிப்புகளின் தொகுப்பே ஜாதகம். ஆனால், ப்ரௌன் முதலில் அத்துறையில் அதன் பெயருக்கேற்றாற்போல் கிரகங்களின் நிலைகளை மட்டுமே ஆராய்ந்தார். காரணம், விண்வெளிப் பயணிகளுக்கு கிரகங்களின் நிலைகளாலும் சிரமங்கள் ஏற்படக்கூடும். (விண்வெளிப் பயணிகள் தரையிறங்க ஏவப்படும் இடங்களில் கிரகம் இல்லாது நகர்ந்து போய்விட்டாலோ, அல்லது, விண்ணில் மிதக்கும் விண்கற்கள் போன்றவற்றால் தாக்குதலுக்கு உட்பட்டாலோ சிரமம் அல்லவா.)

            முதலில் விஞ்ஞான ரீதியாக அத்துறையை அணுகியவருக்கு, பின்னாளில் ஓர் ஆய்வு நடத்திப்பார்க்க முடிவு செய்தார்; தான் நாத்திகராக (அல்லது பகுத்தறிவாளராக) இருந்தாலும். நமது மூளையில் முன்னரே உதித்த, சற்று தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் தோன்றிய, "ஒருவேளை ஜோதிடம் உண்மையாயின், ஒரே நேரத்தில் உலகெங்கும் பிறக்கும் வெவ்வேறு குழந்தைகளுக்கு எவ்வாறு வெவ்வேறு திறன்களும், ஆயுள்களும் அமையும்?" என்கிற கேள்வி மனதினுள் எழ, தளபதிகள், மருத்துவர்கள், இன்ன பிற துறைகள் சார்ந்த திறமைவாதிகளின் ஜாதகங்களை சேகரித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஏறத்தாழ ஐம்பதினாயிரம் பேரை ஆராய்ந்தார். முடிவில் அவர் கண்டறிந்ததாவது, ஒரு குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் மட்டுமே, குறிப்பிட்ட தொழிலில் இருந்தார்கள்; பிரகாசித்தார்கள்! உதாரணத்திற்கு, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த ராசிக்காரர்கள் தளபதிகளாகவும், போர் வீரர்களாகவும் இருந்தனர். (செவ்வாய்க்கு அதிபதியாகப் போற்றப்படும் உலகக் கடவுளர் யாவரும் போர்க்குணம் வாய்ந்தவர்கள் என்பதைச் சென்ற பதிவில் பார்த்தோம்.) கல்வியாளர்களுக்கு செவ்வாயின் பாதிப்பே இல்லை. இதைப்போல ஒரு குறிப்பிட்ட ராசியில் கவிஞர்களும், மற்றொரு ராசியில் கணிதவியலாளர்களும் பிறந்திருந்தனர். ஆங்காங்கே ஒருசில விதிவிலக்கானவர்களும் இருந்தார்கள். அதற்கான காரணத்தையும் ஜோதிடவியலாளர்கள் தந்தனர். அதாவது ஒரு குழந்தை பிறந்த நேரம் குறிப்பதில் (சில சமயம் நொடிகளில் கூட) சிறு தவறு ஏற்பட்டாலும் ஜாதகமே மாறிவிடும் என்பதே அது. உண்மையில் ஒரு குழந்தைக்கு இரு பிறப்புகள். ஒன்று, கருவாக உருவாகும்போது, இன்னொரு சிசுவாக தாயின் கருவறையிலிருந்து இவ்வுலகை அடையும்போது. அவ்வாறு பூமியைத் தொட்ட நாட்களை சரியாகக் குறித்துவைத்து ஜோதிடரிடம் கொடுக்கும்போது, அவர் கருவான நாளையும், அன்றைய கிரகநிலையையும் கருத்தில்கொண்டு எழுதும் ஜாதகம் சரியாக இருக்கும் என்பது நம்பிக்கையாளர்களின் கருத்து. ஒரே வயிற்றில் பிறக்கும் இரட்டையர்களுக்கு எந்த நாட்டில் பிரித்து விடப்பட்டு வாழ்ந்தாலும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது, மற்றவருக்கும் அவ்வாறே நடக்கிறது. ஒரு சிலருக்கு நம்பமுடியாத அளவிற்கு ஒற்றுமைகள் மேலோங்கியிருக்கும். (உதாரணத்திற்கு, நமது முந்தைய பதிவான தலைசுற்றும் தற்செயல்களும்; ஒப்பிடவியலா ஒற்றுமைகளும் பகுதியில், "ஏகப்பொருத்தம்" என்ற தலைப்பின் கீழுள்ள தகவலைக் காணவும்.) இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தாலும், பிரித்தறியக் கூடியவர்கள் (Fraternal/Non-identical Twins), பிரித்தறிய இயலாதவர்கள் (Identical Twins) என இரு பிரிவினராய்ப் பிறக்கின்றனர். இவ்வாறு பிரித்தறிய இயலாதவர்களாகப் பிறந்தபோதிலும், இருவருக்கும் கைரேகை வேறுபடுகிறது. அப்போது நமக்குள் ஒரு சந்தேகம் எழலாம். அவ்வாறாயின் கைரேகை ஜோதிடம் இவர்களிடத்தில் பொய்யாகிவிடுமே என்று. நிச்சயம் இல்லை! இருவருக்கும் ஒற்றுமைகள் இருக்குமே தவிர, இருவரும் அவரவர்களுக்கான வாழ்க்கையையே வாழ்கின்றனர். (தோல் மாற்று அறுவைசிகிச்சையின்போது, உடன்பிறந்தவர்களின் தோலையோ, பெற்றோர்களின் தோலையொ, தோல்மாற்று சிகிச்சை செய்யப்படும் ஒருவருக்குப் பொருத்த இயலாது; அவரது தோலை மட்டுமே பொருத்த இயலும். ஆனால், ஆச்சர்யத்தக்க வகையில், இரட்டையர்களாகப் பிறந்த ஒரு சகோதர, சகோதரியின் தோலை, அதன் இரட்டைச் சகோதர, சகோதரிக்குப் பொருத்தலாம்.)


             ஜோதிடத்தில், குருவின் பார்வை பட நன்மை உண்டாகும் என்பர். உண்மையில் விண்ணிலுள்ள நமது சூரியக்குடும்பக் கிரகங்களில் குரு என அழைக்கப்படுவது வியாழன் கிரகம் (Jupiter). நமது பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்கள், எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றை முடிந்தவரையில் தனது ஈர்ப்பு சக்தியால் தன்னை நோக்கி ஈர்த்து, தன் மீது மோதி அழித்தோ, தன்னுடைய அளப்பற்ற ஈர்ப்பு விசையினால் சிதைத்து, வியாழனுக்கும் செவ்வாய்க்கும் இடையேயான விண்கற்கள் மிதக்கும் பாதையில் மிதக்கவிட்டோ, பூமியை வியாழன் காக்கிறது. (உண்மையில் வியாழன் ஒரு "குள்ளக்கோள்" (Brown Dwarf) (அட, இங்கயும் ப்ரௌனா...?!). அதாவது, சூரியனாக மாற சகல தகுதிகளும் கொண்ட ஒரு கிரகம், ஏதோ சில குறைபாடுகளால் சூரியனைப்போல் மாறி எரிந்து ஒளிர முடியாமல் போனால், அக்கிரகம் 'குள்ளக்கோள்' என அழைக்கப்படும். அப்படியாயின் வியாழனின் ஈர்ப்பு விசையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.)



2009-ஆம் ஆண்டு, வியாழனில் எரிநட்சத்திரங்கள் மோதும்போது ஹப்பிள் தொலைநோக்கியால் (Hubble Telescope) எடுக்கப்பட்டப் புகைப்படம் (அந்த கரும்புள்ளிகள், அவை மோதிய அடையாளங்கள்)



வியாழன் கிரகத்தின் ஆளுகைக்குட்பட்ட விண்கற்களின் பாதை

            இவ்வாறாக, விண்கற்களின் தாக்குதலை வியாழன் சமாளித்தாலும், சூரியனின் அணுப்புயலை பூமி தன்னந்தனியாக எதிர்கொண்டே ஆகவேண்டும். அதற்கு உதவிகரமாக, நமது பூமியைச்சுற்றி "டோனட்" (நம்ம பாஷைல உதாரணம் சொல்லனும்னா, 'உளுந்துவடை' மாதிரி) வடிவில், காந்தமண்டலம் ஒன்று கவசம்போல் காக்கிறது. நாம் முன்னர் கண்ட சூரியனின் அணுப்புயல்/மின்காந்தப்புயல் போன்றவற்றை தனது வலிமையால் பூமியின் துருவப்பகுதிக்குக் கடத்தி, அதிலுள்ள அயனிகளோடு வினைபுரிந்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகு மிளிரும் ஒளியால் அசைந்தாடும் திரைச்சீலை போன்ற ஓர் இயற்கை நிகழ்விற்கு வித்திடுகிறது. அதுவே "துருவ ஒளி" (Aurora) என்றழைக்கப்படுகிறது. (இவை வெறும் கண்களால் காணும்போது தோன்றுவதைவிட, புகைப்படங்களில் மிகவும் ரம்மியமாகத் தோற்றமளிக்கும்.) இதே ஒளி, வடதுருவத்தில் தோன்றும்போது "அரோரா போரியலிஸ்" (Northern Lights/Aurora Borealis) எனவும், தென்துருவத்தில் "அரோரா ஆஸ்ட்ரலிஸ்" (Southern Lights/Aurora Australis) எனவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் பார்வைக்கேற்றவாறு வெவ்வேறு உருவங்களாக வேறுபாடும் இத்துருவ ஒளியை முதன்முதலில் கண்டறிந்து ஆராய்ந்தவர், 7 முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவரான, நார்வேயைச் சேர்ந்த வளிமண்டல மின்புல ஆய்வாளரான "கிறிஸ்டியன் பிர்க்லேண்ட்" (Kristian Birkeland). இவரே விண்பொருட்களிலிருந்து வெளிப்படும் பிளாஸ்மாவை ஆராய்ச்சி செய்தவர். துருவ ஒளியைக் கண்டறிந்து கூறியவர் இவராக இருந்தாலும், மக்களிடம் அது பிரபலமாக காரணமாக இருந்தவர், மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்த, அமெரிக்கவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி "பெஞ்சமின் ஃபிராங்க்ளின்" (Benjamin Franklin).


சூரியன்



சூரியனில் தோன்றும் மாற்றங்கள்



சூரியனில் தோன்றும் அணுப்புயல்/மின்காந்தப்புயல் 




காந்தமண்டலம் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள்





காந்தமண்டலம்




சூரியனிலிருந்து பூமியை நோக்கிவரும் மின்காந்தப்புயல்/அணுப்புயல்


சூரியனின் மின்காந்தப்புயலைத் தடுக்கும் பூமியின் காந்தமண்டலம்



வடதுருவ ஒளி


தென்துருவ ஒளி





துருவ ஒளி, விண்ணிலிருந்து



துருவ ஒளி - வெற்றுக்கண்களால் காணும்போதும், புகைப்படத்தில் காணும்போதும்


ஃபீனிக்ஸ் பறவை போன்ற துருவ ஒளி


கழுகு அல்லது ஃபீனிக்ஸ் போன்ற துருவ ஒளி


ஓநாய் போன்ற துருவ ஒளி


பட்டாம்பூச்சி அல்லது தேவதை போன்ற துருவ ஒளி


தேவதை போன்ற துருவ ஒளி




கிறிஸ்டியன் பிர்க்லேண்ட்




தனது ஆய்வகத்தில் பிர்க்லேண்ட்


நியூட்டனின் சிலைக்கு முன்பாக தனது சுயசரிதையின் கையெழுத்துப்பிரதியை வாசிக்கும் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்


            ஜியார்டியின் கூற்றான, 'இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே ஒரு பேருடல்' என்கிற கூற்றை மெய்ப்பிப்பதுபோல தற்போதைய விஞ்ஞான உலகம் கொணரும் விண்வெளி, மற்றும் நுண்வெளி புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றின் சில ஒப்பீடுகள் கீழே. யார் கண்டது? நாம் நம்மைவிட நாகரீகத்திலும், பரிமாணத்தில் உயர்ந்த பரிணாமத்தை அடைந்த மற்றொரு ஜீவராசியின் ஒட்டுண்ணிகளாகவோ, அவற்றின் உடலுறுப்புகளாகவோ கூட இருக்கலாம். அல்லது "மென் இன் பிளாக்" (Men in Black) படவரிசையின் முதல் பாகத்தின் இறுதிக்காட்சியில் காட்டப்படுவதுபோல, நமது பால்வெளி அண்டமேகூட நான் மேலே விளக்கிய ஜீவராசி விளையாடும் கோலிகுண்டாக இருக்கலாம்.



கண்விழிகளும் விண்ணிலுள்ள நெபுலாக்களும்


கண்விழிகளும் கோள்களும்


உயிரியல் நிகழ்வுகளும், பிரபஞ்ச நிகழ்வுகளும் ஒரு ஒப்பீடு


கை போலத் தோன்றும் மேகம்


கண் போலக் காட்சியளிக்கும் ஹீலிக்ஸ் நெபுலா


முகமூடி போலக் காட்சியளிக்கும் NGC 2007மற்றும் IC 2163 அண்டங்கள் 


கடவுளின் கை என்றழைக்கப்படும் நெபுலா



கடவுள்...?!




"மென் இன் பிளாக்" பட வரிசையில் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி

            ஆதிகாலந்தொட்டே, விண்ணியல் நிகழ்வுகளோடு சுற்றுப்புறத்தை அவதானித்து/ஒப்பிட்டு நம் முன்னோர்கள், நடக்கவிருப்பதைக் கணித்தும், இணைத்தும் நிறைய தகவல்களை அவர்களின் அடுத்த தலைமுறைகளாக நமக்கு விட்டுச்சென்றனர். ஆனால், அவையனைத்தும் நம் மீது நாமே கொண்ட தாழ்வுமனப்பான்மையாலும், நம்பிக்கைக்குறைவாலும், அந்நியர் படையெடுப்பாலும், அலட்சியத்தாலும் அழகிழந்து அலங்கோல அறிவோடு வளர்ந்து நிற்கிறோம். நாம் இழந்த அறிவைக்குறித்து நமக்கு மிகவும் பரிச்சயமான தமிழ்ப்புலவர் ஒருவர், ஒரு விண்ணியல் நிகழ்வோடு வருந்திக்கூறுவதையும், தனக்கேயுரிய தனித்துவமான பாணியில் வேண்டுதல் ஒன்றை முன்வைப்பதையும் அவர் எழுதிய பாடலில் காணலாம். அப்பாடலை எழுதிய கவி வேறுயாருமல்ல, நமது தேசியக்கவி பாரதியார்தான். என்ன? பாரதியார் விண்ணியல் நிகழ்வுக்குறித்துப் பாடல் எழுதியுள்ளாரா? என்று வியப்பவர்களுக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். முதன்முதலில் அப்பாடலைத் தற்செயலாக வாசித்தபோது ஏதோ ஒன்று மீண்டும் வாசிக்கத்தூண்டியது. மீண்டும் மீண்டும் வாசித்தபோது, விழிகள் விரியும் ஆச்சர்யம். அவர் எழுதிய பாடல் இதோ:

சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே, வாராய்!

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய்,சுடரே! வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ, மெய்யோ?

ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால், தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ, பொய்யோ?

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்; மெய்யோ, பொய்யோ?

சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?

- சுப்பிரமணிய பாரதியார்.



சுப்பிரமணிய பாரதியார்

            புரிந்ததா? அவர் எதைக்கூறுகிறார் என்று. அவர் "தூமகேது" என்று குறிப்பிடுவது வால்நட்சத்திரத்தை. நாம் ஏற்கனவே வால்நட்சத்திரத்தின் இருப்பிடமான/பிறப்பிடமான "ஊர்ட் மேகக்கூட்டம்" (Oort Cloud) பற்றி நமது "நீர்" இன்றி அமையாது உலகு என்கிற முந்தைய பதிவில் பார்த்திருந்தோம்.  ஆனால், "ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்" என்கிற வரிகளில் பாரதியார் எந்த வால்நட்சத்திரத்தைக் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறதா?


சூரியக்குடும்பமும், ஊர்ட் மேகக்கூட்டமும்

            ஆம், அவர் குறிப்பிடுவது 'ஹேலி' அல்லது 'ஹாலே' வால்நட்சத்திரம் (Halley's Comet)! இதை 1758-ஆம் ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த, விண்ணியலாளரும், பூகோளவியலாளரும், கணிதவியலாளருமான "எட்மண்ட் ஹாலே" (Edmond Halley) என்பவர் கண்டறிந்தார். கடைசியாக 1986-ஆம் ஆண்டு தலைகாட்டிச் சென்ற இந்த வால்நட்சத்திரத்தை எதிர்வரும் 2061-ஆம் ஆண்டு விண்வெளி மீது நம்விழி வைத்து எதிர்பார்க்கலாம்.


ஹாலே வால்நட்சத்திரம் 



எட்மண்ட் ஹாலே



எட்மண்ட் ஹாலே நினைவாக வெளியிடப்பட்ட தபால்தலை
(ஹாலேயையும் அவர் கண்டறிந்த வால்நட்சத்திரத்தையும் இணைத்து வெளியிடப்பட்ட இத்தபால்தலையை முதன்முதலில் பார்த்தபோது செவ்விந்தியர்கள் எனக் கருதிவிட்டேன்) (ஹாலே மன்னிப்பாராக!)


            ஆனால் தற்போது நமது பூமியை 2.7 மைல் விட்டமுடைய "ஃபிளாரன்ஸ்" (Florence) (இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்த, இங்கிலாந்தின் 'நைட்டிங்கேல்' (Nightingale) என்கிற செவிலிய அம்மையாரின் பெயரால்) எனப் பெயரிடப்பட்ட, இதுவரைக் கண்டறியப்பட்ட விண்கற்களிலேயே ராட்சஸ வடிவமுடைய விண்கல் ஒன்று பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது பூமியை 4.4 மில்லியன் மைல் தொலைவில் கடந்துசெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் பூமி அழிந்துவிடும் என்பது போன்ற புரளிகளும், 2012-இல் உலகம் அழியும், கடந்து சென்ற கங்கண சூரிய கிரகணத்தோடு பூமி அழியும் என உளறித் திரிந்ததுபோல, இன்றும் இணைய உலகை வலம் வருகிறது. (சரி சரி, அந்த மோரை ஊத்து... அதுல பூனை கெடக்குதானு பாப்போம்...!) 


விண்கல்


பூமியைத் தாக்கும் விண்கல் (கற்பனை புகைப்படம்)

            என்னதான் நாம் முயன்றாலும் விதிப்படியே நடக்கும் என நம்புவோர் பலர். குர்ஆனில் குறிப்பிட்டுள்ளது போல், "மறைவானவற்றை (உலக அழிவு, கடவுளின் பிரபஞ்ச படைப்புகள், எதிர்காலம் போன்றவை) அல்லாஹ்வே (கடவுளே) அறிவான்" என்பது ஒரு சிலரது ம்பிக்கை. அவ்வாறாயின் அவ்விதியை அறிந்துகொள்ளவேண்டும் என்பது வேறு சிலரது ஆவல். (இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, ஜோதிடத்தால் எதிர்காலத்தைக் கணிக்க இயலும்; ஆனால் அது 'ஹராம்' (தடைசெய்யப்பட்டது)). உதாரணத்திற்கு ஒரு சம்பவம், "அர்ஜென்டினா" (Argentina) நாட்டின் தலைநகரான "போனஸ் அயர்ஸ்" (Buenos Aires)-ல் 1988-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள், 75 வயதுடைய ஒரு மூதாட்டி சாலையோரம் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 13-வது மாடியிலிருந்து, ஒரு நாய் அவர் மீது விழுந்து, சம்பவ இடத்திலேயே, அந்த மூதாட்டியும் நாயும் பலியானார்கள். நடந்த சம்பவத்தைப் பார்க்க, அவ்வூரிலும் நம்மூரைப்போல் கூட்டம் கூடியது. திடீரெனக் கூடியக் கூட்டத்தில் அவ்வழியே அதிவிரைவாக வந்துகொண்டிருந்த பேருந்து மோத, ஒரு பெண்மணி அதே இடத்தில் பலியானார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், தனது நெஞ்சைப்பிடித்தவாறு தரையில் சரிந்தார்; மாரடைப்பால் அங்கேயே காலமானார். சரித்திரத்தில் இவ்வாறான சங்கிலித்தொடர் மரணங்களும் உண்டு. 


சங்கிலித்தொடர் மர்மங்கள்


            மரணமே ஒவ்வொருவருக்கும் இவ்வாறிருக்க, நாம் எதையெல்லாம்தான் கணிக்கப்போகிறோம்...?! வாழ்க்கை பல அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கியது. அது நமக்கான இன்ப-அதிர்ச்சியையோ, பேரதிர்ச்சியையோ தரும்போது தரட்டும். அதுவரை இத்தருணத்தில் வாழ்ந்து, வருகின்ற இன்ப-துன்பங்களை சூடாக அனுபவித்து வாழ்வோம். இவ்வுலகில் இன்னும் நாம் கண்டிராத பல்வேறு நம்பமுடியாத ஆச்சர்யங்களோடு அடுத்தபதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


துணை நின்ற நூல்கள்:
         மறைந்திருக்கும் உண்மைகள்  - ஓஷோ.

இப்பதிவுத்தளத்தை ஆங்கிலத்தில் பார்வையிட: 

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு:

மேலும் விவரங்களுக்கு, காண்க:
Astrology & Astronomy in Iran
Alexander Chizhevsky
Paracelsus
Paracelsus & Paracelsians
Astrology by Osho
Osho's Astrology
Osho's Astrology-New
Astrology History
Astrology
Edward Norton Lorenz
Mary Cartwright
Greta Oto
Chain Deaths
Benjamin Franklin
Eagle Aurora
Kristian Birkeland
Jupiter Protects Earth
Halley Comet



3 comments: