Monday 1 February 2016

28.) ஜோஸ்யமும், ஹேஷ்யமும்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவு, இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. நான் இப்பதிவைத் துவங்கியபோது, 6,700-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டிருந்த நமது பதிவுத்தளம், தற்போது 15,000-ஐத் தாண்டியுள்ளது. இவ்வெற்றிக்கு முழுக் காரணமும் வாசகர்களாகிய நீங்கள்தான். (என் பதிவின் தாமதமும்தான்..!!!) உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்கக் கடமைப்பட்டுள்ளேன். அந்த ஆறரை அடி அசுரரின் பதிவு, அசுர வேகத்தில் பார்வையிடப்பட்டுள்ளது. இதை முறியடிக்கும் பதிவுகள் எதிர்காலத்தில் வருமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதை முறியடிக்கும் பதிவுகளை உருவாக்கும் எனது முயற்சி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இருப்பினும், உங்கள் கவனத்திற்கு ஒரு தகவல். அதுபோன்ற அசாதாரண மனிதர்களின் வாழ்க்கைகள் பயங்கர விறுவிறுப்புடன் இருக்கலாம், ஆனால், நமது பதிவின் தேடலில் உள்நுழையும் அனைத்துப் பதிவுகளும் அதே விறுவிறுப்புடன் இருக்கும் என உத்தரவாதம் தரமுடியாது. காரணம் நமது பதிவுகள் விஞ்ஞானம், புதிர்கள், மர்மங்கள், அமானுஷ்யங்கள், வரலாறுகள், நம்பிக்கைகள், ஆன்மிகம், என பலதரப்பட்ட விஷயங்களையும் பிணைத்துச் செல்லும் சங்கிலி போல, ஒன்றுக்கொன்று இருக்கும் மறைந்துள்ள தொடர்புகளை வெளிப்படுத்தக் கூடியது. இதிலுள்ள அனைத்து பிரிவுகளும் அனைவருக்கும் எற்புடையதாகவோ, பிடித்தமானதாகவோ இருக்குமா என்பது சந்தேகமே. எனவே, சற்று விறுவிறுப்பு குறைந்த தொடராக இருந்தாலும், இத்தேடல் பதிவின் முடிவு வரை பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். காரணம், இப்பதிவின் முடிவில் உங்களின் நம்பிக்கைகள் குறித்த கண்ணோட்டம் நிச்சயம் மாறும். மேலும், எனது பணி நெருக்கடி, சில எதிர்ப்புகள், ஒரு சிறுவர் வார இதழில் நமது 'அரிகோ' கட்டுரையின் அனுமதியற்ற பதிப்பு, எதிர்பாராத விபத்து, எனது வரலாற்றுக்குறிப்புகளடங்கிய புத்தகத்தை கரையான் அரித்த சம்பவம் என என்னை முழுவதும் முடங்கவைக்க பல தடைகள் எதிர்ப்பட்டன. அவற்றையும் தாண்டி நான் பதிவிட நீங்கள் அனைவரும் என் மீதும், என் எழுத்தின் மீதும் வைத்துள்ள அன்பும், நம்பிக்கையுமே காரணம். சில நண்பர்களும் அன்பர்களும் விடாமல் பதிவுகள் குறித்து, தனிப்பட்ட முறையில் இணையம் வாயிலாக விசாரித்தனர்; அவர்களுக்கு என் நன்றிகள். ஒருவழியாக நான் ஓய்ந்தேன் என யாரேனும் மகிழ்ந்திருந்தால், அவர்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் விழுந்தேன்; ஆனால் வீழவில்லை. இனி நம் பதிவினுள் நுழையலாம்.

           நமது கடந்த பதிவில், கௌரவத் தோற்றத்தில் வந்து சென்ற ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போல, ஒரு பெரும் புயலையும் பீதியையும் கிளப்பிச் சென்றவர், செய்ரோ (Cheiro). அவர் அவ்வாறு வருங்காலத்தைக் கணித்துக் கூறியது கைரேகைகளை பார்வையிட்டு. அவ்வாறான கைரேகைகள் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தை அறிய இயலுமா? அவ்வாறு முடியுமெனில், இது ஜோதிடம் எனும் ஒரு பெரும் மரத்தின் ஒரு கிளைதான். அப்படியானால் ஜோதிடம் உண்மையா? காணலாம் வாருங்கள்.

         அநேகமாக மனிதனின் அறிவார்ந்த கண்டுபிடிப்புகளில் தொன்மையானது ஜோதிடமாகத்தான் இருக்கும். 'அறிவார்ந்த கண்டுபிடிப்பு' எனக் கூறியதால், ஜோதிடத்தை உண்மை என நிரூபிக்க சிரத்தை எடுக்கிறேனோ என முடிவெடுக்க வேண்டாம். இங்கு நான் அவ்வாறு குறிப்பிடக் காரணம், பூமியில் வாழும் மனிதன், அவன் உருவாக்கிய/கண்டறிந்த/கற்றுக்கொண்ட கணித அறிவு, எத்தனையோ தொலைவுகள் தள்ளி தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் விண் பொருட்களான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள். இவ்வாறு வெவ்வேறான விஷயங்களைக் கோர்க்கவேண்டும் என எப்படித் தோன்றியது என்கிற ஆச்சரியமே அவ்வாறு நான் குறிப்பிட்டதன் காரணம். மற்றபடி அது உண்மையா பொய்யா என்பதெல்லாம் வழக்கம்போல் உங்கள் கைகளில்தான். நான் ஆதாரங்களை சேகரித்து, உங்களிடம் சேர்க்கும் வெறும் சாட்சிபூதம் மட்டுமே! ஜோதிடத்தின் தோற்றுவாய்க்கான காரணம் நிச்சயமாக நாளை என்ன நடக்கும் என்பதை இன்றே அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மனித மனதின் தீரா ஆவலே. அவ்வாசையின் விளைவாய் தோன்றியவைகளே ஜோதிடம். (ஆவிகளைத் தொடர்புகொண்டு அவைகள் மூலமாக எதிர்காலத்தை அறிவதும் ஒருவகை ஜோதிடமே. இதுகுறித்து முந்தைய பதிவுகளிலேயே பார்த்துவிட்டோம்!) அவ்வாறு தோன்றிய ஜோதிடமானது உலகெங்கும் வேரூன்றி (உருவான பகுதியின் சூழ்நிலைக்கேற்ப), பலவகையில் கிளைவிட்டது. அவ்வாறு உருவான ஜோதிட வகைகளாவன,
  1. கைரேகை ஜோதிடம் (Palmistry),
  2. நாடி ஜோதிடம்,
  3. நட்சத்திரங்கள் மூலமாக,
  4. ஜாதகக் கணக்கீடு (Horoscope),
  5. தேவப்பிரசன்னம் (சோழிகள் மூலமாக),
  6. கிளி ஜோசியம், எலி ஜோசியம், எண் கணிதம், மற்றும் பல.
இவற்றில் கடைசியாகக் குறிப்பிட்டிருக்கும் இரு பிரிவுகளும் (அதன் உட்பிரிவுகள் உட்பட) ஏனோ நம்பத்தகுந்தவையாகத் தெரியவில்லை, (எனது பார்வையில்). மற்ற பிரிவுகளில் கூறப்படும் விஞ்ஞான விளக்கங்களை (!) இதில் எதிர்பார்க்க முடியாது. மன ஆறுதலுக்கு வேண்டுமானால், அவர்கள் கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்டுக் கொள்ளலாம். அவ்வளவே..!

1.) கைரேகை ஜோதிடம் (Palmistry):

           ஒரு மனிதன் பிறக்கும்போதே அவனது இறப்பும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது (ஆமா, எக்ஸ்பைரி டேட் குறிச்ச பொருள் மாதிரி தான்) என்பது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை. அதற்கு ஆதாரமாகக் கூறப்படுவனவற்றுள் மனித கைரேகையும் அடக்கம். 'அப்படியென்றால் ஒரு விபத்தில் பலியாகும் அனைவருக்கும் ஒரே போலவா கைரேகை அமைந்திருக்கும்?' என்பது போன்ற தர்க்கவியல் கேள்விகளை சிறிது நேரம் உறங்கச் சொல்லிவிட்டு, மீண்டும் தொடர்வோம்.

           முதலில் கைரேகை ஜோதிடத்தில் எவ்வாறான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் உள்ளன என முதலில் காணலாம். ஜோதிடத்தின் அடிப்படை அம்சமான நவக்கிரகங்களின் நிலை, ஆயுள் ரேகை, புத்தி ரேகை என எதிர்காலம் குறித்து அறிய விரும்பி, எவைகுறித்து எல்லாம் ஒரு மனிதன் கேள்வி எழுப்புவானோ அவை அனைத்துமே ரேகைகளில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடுகின்றனர் ஜோதிடர்கள். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கையை அளித்ததுபோல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விதியையும், ஒவ்வொரு விதமான கைரேகையையும் அளித்துள்ளார் என்பது அவர்களின் நம்பிக்கை.


(ஜோதிடத்தில் குறிப்பிட்டுக் காட்டப்படும் கைரேகைகள்)

           சரி, உண்மையில் கைரேகைகள் குறித்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது என பார்ப்போம். ஒரு மரத்தின் கிளையையோ, வேரையோ எடுத்துக் கொண்டால், அது தோன்றிய மூலப்பகுதியில் தடித்து உருவாகி, தொடர்வளர்ச்சியின் போது, அதன் மூலப்பகுதியிலிருந்து கிளைக்கும் பகுதிகள் மெலிந்துகொண்டே சென்று, பின் ஒரு கட்டத்திற்குமேல் வளராமல் நின்றிருக்கும். நம் உடலிலும் வேர்விட்டுப் படர்ந்திருக்கும் நரம்புகளும், தசைகளும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நீண்டு, பின் மீண்டும் துவங்கிய பாதையை நோக்கித் திரும்பியதைப் போல, தசைகளும், நரம்புகளும் தங்களின் நீட்சியை முடித்துக்கொண்டு திரும்பிய தடத்தின் விளைவுதான் ரேகைகள். ஒரு புத்தகத்தை நீளவாக்கில் சுருட்டினால், மேலேயும் கீழேயும் வரும் அடுக்கடுக்கான தடிப்புகளாகக் காணப்பெறும் காகிதங்களை ஒத்தவை இவை. நமக்கும் இத்தகு மேல்-கீழைப் போல அமைந்தவையே கை மட்டும் கால் ரேகைகள். (ஏனோ, ஜோதிடத்திற்குக் கால் ரேகைகளைக் கண்டுகொள்வதில்லை. நடந்து நடந்து தடம் தேய்ந்திருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! இல்லையெனில் அவர்கள் குறிப்பிடும் மேற்கூறிய ரேகைகள் பாதங்களில் இல்லாமல் இருக்கலாம்.) 


(விரலில் காணப்படும் ரேகைகள்)

        இத்தகு ரேகைகளின் இடுக்குகளில் இருந்து சுரக்கும் ஒருவித எண்ணெய்ப் பசையே, நாம் தொடும் (ஈரப்பதமற்ற) எவற்றிலும் நமது கைரேகைகள் பதியக் காரணம். உலகில் எந்த இரு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான கைரேகைகள் அமையாது; அவர்கள் இரட்டையர்களாகவே இருந்தாலும்! கைரேகைகள் மட்டும்தான் என்றில்லை, உருவ அமைப்பு, பல்வரிசை, நாக்கின் அமைப்பு, அங்க அடையாளங்கள் (மச்சம், காயத்தழும்புகள் போன்றவை), மூக்கு என பலவிதங்களில் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் வேறுபட்டிருந்தாலும், இதில் கைரேகைகளுக்கென தனிச்சிறப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. பத்திரப்பதிவு தொடங்கி, ஒரு அலுவலகத்தில் நுழையப்பயன்படும் கடவுச்சீட்டை ஒத்த தனிநபர் அடையாளமாக இன்று பல இடங்களிலும், கைரேகைகளே பயன்படுகிறது. 


(கைவிரல் ரேகையின் தடம்)


(கைரேகையின் உதவியால் திறக்கப்பயன்படும் மின்பூட்டு)

           கைரேகையின் இத்தகைய தனிச்சிறப்புகளே, அதன்மீது மனித இனம் தனிப்பட்டதோர் கவனத்தைச் செலுத்தக் காரணமாக அமைந்திருக்கும் என்றே தோன்றுகிறது. வரலாற்றில் மனித இனத்தைக் கைரேகைகள் கவர்ந்த வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ள இடம், நான் இப்போது பதிவுகளைத் தட்டச்சுசெய்யும் இடத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. கி.மு. பதினாறாம் நூற்றாண்டில், பாபிலோனின் (Babylon) ஆட்சிக்குட்பட்ட மெசபொடோமிய (Mesopotamia)-ப் பகுதியில் பானை வனைந்துகொண்டிருந்த குயவர்கள், ஒருநாள் தங்களின் பானைகளில் பதிந்திருந்த கைரேகைகள் வித்தியாசமான ஒரு அலங்கார வடிவம் போலத் தோன்றியதாகவும், ஒவ்வொருவரின் கைகளால் செய்யப்பட்டப் பானைகளிலும் வெவ்வேறு அலங்கார வடிவங்களைப் போலத் தடங்கள் தோன்றியதாகவும், அதன்பின் அவற்றை உற்றுநோக்கியவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கைரேகைகள் இருக்கிறது என்பதை இனம் கண்டதாகவும் வரலாறு. இருப்பினும், அவர்கள், கைரேகையிலுள்ள நுண்ணிய மாறுதல்களை உணர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் நிலபுலன்களை விற்கும்போதும், வாங்கும்போதும் மோசடிகள் ஏற்படாமல் இருக்க, கையெழுத்துடன் கைரேகையையும் பதியவைக்கும் முறை, இதைப் பின்பற்றி வந்ததே. பின், மெசபோடோமியப் பிரதேசத்தைச் சேர்ந்த, அபு சையது ஹசன் (Abu Syed Hassan) என்கிற அரேபிய வணிகர், தன்னிடம் கடன்பெற வருவோரின் கைரேகையை களிமண்ணில் பதியவைத்து, (இக்கால உறுதிமொழிப் பத்திரம் போல) கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே பயன்படுத்தியிருக்கிறார். மனிதனின் கைரேகையை அடையாளப்படுத்தி, அதையும் வணிக நோக்கில் பயன்படுத்திய முதல் மனிதராக அறியப்படுகிறார். இருப்பினும், இவருமேகூட கைரேகையின் தனித்துவத்தை அறிந்திருந்ததாகத் தெரியவில்லை.

           பின்னர் கி.பி. 1788-ல், ஜெர்மனி-(Germany)-யைச் சேர்ந்த ஜோகன் கிறிஸ்டோப் ஆண்ட்ரியாஸ் (Johann Christopher  Andreas) எனும் மருத்துவரே மனித கைரேகையின் தனித்துவத்தை முதன்முதலில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். இதன்மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி கைரேகை என்பதை மனித இனம் ஏற்றுக்கொண்டாலும், கைரேகையை ஆதாரமாகக்கொண்டு ஒரு மனிதனை அடையாளம் காணலாம் என்கிற யோசனை, 1858-ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி பௌல்ட்ஸ் என்கிற மருத்துவருக்கு தோன்றி, அதுகுறித்த ஆய்வுக்கட்டுரைகளை லண்டன் மாநகர காவல் துறைக்கு அனுப்பிவைத்தார். அவரது அவ்வாய்வுகள் தடவியல் துறைக்கு பேருதவியாக இருக்கும் என நம்பினார். இடதுகை பெருவிரல் ரேகையை அடையாளப்படுத்த முதன்முதலில் பரிந்துரை செய்தவர் இவரே. இருப்பினும், முழுமைபெறாத இவரது ஆய்வுகளை, 'ஒன்றுக்கும் உதவாது; நடைமுறைக்கு ஒத்துவராது' என முத்திரையிட்டு ஒத்துக்கித்தள்ளியது லண்டன் மாநகர காவல்துறை. ஹென்றி அக்காலத்திலேயே இந்த அளவிற்கு நுணுகி ஆராய்ந்ததை அவர்கள் அப்போது அறியவில்லை. ஆனால் இன்றுவரை அவர் முன்மொழிந்தவாறே, நாம் இடதுகை பெருவிரல் ரேகையையே அடையாளப்படுத்துகிறோம். இம்முறை நடைமுறைக்கு வரும்முன்னர் "மனிதரளவை" என்றழைக்கப்படும் 'ஆந்த்ரோபோமெட்ரி" (Anthropometry) எனும் முறை நடைமுறையிலிருந்தது. இதன்படி ஒரு குற்றவாளியின் உயரம், நிறம், மரு, மச்சம், தழும்பு, கையின் நீளம், காலின் நீளம், கண் விழியின் நிறம், காதின் வடிவம், முடியின் வகை மற்றும் நிறம், என சகலமும் அளவிடப்பட்டு பதிவுசெய்யப்பட்டுக்கொண்டிருந்தது. இம்முறையை 1882-ல் அல்போன்ஸ் பெர்டிலன் (Alfonse Ferdilan) என்பவர் அறிமுகப்படுத்தினார்.

           பின், உலகிலேயே முதன்முறையாக 1858-ல் கொல்கத்தாவில் (ஆமா, இந்தியாவுலதான்..!) கைரேகையின் மூலம் ஒரு மனிதனை அடையாளம் காண்பது என்பது அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. (கொல்கத்தாவின் அருகிலுள்ள ஹூக்ளியில் அரசாங்க வேளையில் இருப்பவர்கள் ஓய்வூதியம் பெறவரும்போது, முறைகேடுகளைத் தடுக்கும்பொருட்டு, அரசாங்கக் கோப்புகளிலுள்ள கைரேகையுடன், ஓய்வூதியம் பெற வருபவரின் கைரேகையும் ஒப்புநோக்கப்பட்டு, பின்னரே வழங்கப்பட்டது..!) (இடைப்பட்ட காலத்துல அந்த ஆளுக்கு ரெண்டு கையும் ஏதோ ஒருவிபத்துல 'போயிருந்துதுனா' என்ன பன்னிருப்பாங்கனு தெரியல...!!!) இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, 9.7.1873 அன்று கொல்கத்தா நகரின் காவல்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்ட ரிச்சர்ட் எட்வர்ட் ஹென்றி (Richard Edward Henry) என்பவரின் மேற்பார்வையில் பணியாற்றிய அஷிஷுல் ஹக் எனும் கைரேகையியல் நிபுணரும், அவருக்கு பக்கபலமாக ஹெம் சந்திர போஸ் (Hem Chandrabose) எனும் கைரேகையியல் நிபுணரும், அல்போன்ஸ் பெர்டிலனின் மனிதரளவையை அடிப்படையாகக்கொண்டு மிகத்துல்லியமான கைரேகை அளவையை உருவாக்கினர். இதன்படி, கைரேகையின் நீள-அகலங்கள், கோணங்கள், வளைவுகள், நெளிவு-சுளிவுகள் போன்றவை ஓரளவிற்கு துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, கொல்கத்தா நகரில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக சிறையிலடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளின் கைரேகைகள் 'மை'-யின் உதவியோடு  காகிதங்களில் பதிவுசெய்யப்பட்டு, ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டது. இத்தகைய தொகுப்பின் விளைவாக 12.6.1897-ல் உலகின் முதல் மனிதரளவையியல் கைரேகை நிறுவனம் (Anthropometric Fingerprints Bureau) கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. (அட உலகத்திலயேதான்-பா..!) பின்னர் இம்மூவர் கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கையைப்போல 1900-ம் ஆண்டு, ஹக் மற்றும் போஸின் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், ஒப்பீட்டுக் கணக்கீடு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு, "கைரேகை வகைப்பாட்டு முறைகளும், அதன் பயன்பாடுகளும்" என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் எட்வர்ட். அப்போதே லண்டன் மாநகர காவல்துறைக்கும் இவர்களது ஆய்வறிக்கைகளை எழுதியனுப்பினார். சில அடிப்படை ஆய்வுகளுக்குப் பின் 1901-ம் ஆண்டு உலகின் முதல் ஒருங்கிணைந்த கைரேகையியல் நிறுவனத்தை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக லண்டன் மாநகரில் ஏற்படுத்தியது. பின்னாளில் இத்துறையின் முக்கியத்துவத்தையுணர்ந்து பிற நாடுகளும் இத்துறையை அந்நாடுகளில் நிறுவின. இதில் குறிப்பிடத்தக்க சோகம் என்னவெனில், இவ்வாராய்ச்சிக்கு வித்திட்ட ஹக் மற்றும் போஸ், இந்தியர்கள் என்பதாலும், அக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த காரணத்தினாலும், இவர்களின் தலைமை எட்வர்டும் ஒரு ஆங்கிலேயர் என்பதாலும், இவ்விருவரின் பெயர் வரலாற்றின் பக்கங்களில் மறக்கடிக்கப்பட்டு, தற்போது கைரேகையியல் என்றால் 'எட்வர்ட் ரிச்சர்ட் ஹென்றி'தான் என அடையாளப்படுத்தப்படுகிறது. (அடங்கோ...!!!) இனிமேலாவது நம் உண்மையான வரலாற்றை அறிவோம். (அப்டினு சொல்லிட்டு கட்டுரைய திரும்பிப் பார்த்தா, வண்டி எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு..! சரி இப்போ நம்ம கதைக்கு வருவோம்..!)

         இவ்வாறாக, கைரேகை தொட்டு, கட்டைவிரல் ரேகை வரை அறிவியலும் ஜோதிடமும் அதனதன் பங்கிற்கு விவரங்களை விளக்கிக்கொண்டுதான் செல்கின்றன. எனது மனதில் தோன்றுவது என்னவெனில், கைகள் இல்லாதோருக்கும் வாழ்க்கை உண்டு என்பதே! சரி, இனி கட்டைவிரல் ரேகையை மையமாகக்கொண்டு ஜோதிடம் கூறும், நாடிஜோதிடம் குறித்து சற்று பார்க்கலாம்.

2.) நாடி ஜோதிடம்:

         இதன் வரலாறு என்று எடுத்துக்கொண்டால், மனிதர்களின் முக்காலம் குறித்தும் பார்வதிதேவி சிவபெருமானிடம் கேள்வி எழுப்ப, அதுகுறித்த விவரங்களை பார்வதிதேவியிடம் விளக்கினார் சிவபெருமான். அச்சமயம் அங்கு குழுமியிருந்த சித்தர்களால் அவ்விவரங்கள் குறிப்பெடுக்கப்பட்டு, பின் தொகுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வழிவழியாக இன்றளவும் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக நம்பிக்கை. (உலகத்திலேயே முதல் ரிப்போர்ட்டர்ஸ் நம்ம சித்தருங்கதான்னு நெனைக்கிறேன்!)


(சிவன், பார்வதியிடம் விளக்கும் காட்சி)


(சிவன் சித்தர்களுக்கு விளக்கும் காட்சி)

   இவ்வாறு, சிவனின் அருளால் மனிதகுலத்திற்கு அத்தகைய சாஸ்திரவித்தை சித்தர்கள்மூலம் கடத்தப்பட்டதாக ஒரு நம்பிக்கை. இவ்வாறு மனிதர்களை அடைந்த நாடிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கப் புகழுடைய நாடிகள் வெகுசிலவே. அவற்றுள் முக்கியமானவை, அகத்தியர் நாடி, காகபுஜண்டர் நாடி, சுகர் மார்க்கண்டேயர் நாடி அல்லது சுகர் நாடி, (அப்போ பீபி நாடி, பக்கவாத நாடியெல்லாம் எங்க-னுலாம் கேக்காதீங்க. இங்க 'சுகர்'-ங்கறது, சுகப்பிரம்ம மகரிஷியோட சுருக்கப் பெயர். தமிழ்-ல 'சுகம்' அப்டினா 'கிளி'-னு ஒரு அர்த்தம் இருக்கு; 'பிரம்மம்'-னா தலையைக் குறிக்கும். 'கிளி போன்ற தலை'யைக் கொண்டவர்-னு பொருள்.) அகத்தியர் நாடி, பிருகு நாடி, வசிஷ்டர் நாடி, காகபுஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, கௌசிகர் நாடி, சிவ நாடி, திருமூலர் நாடி, அத்திரி நாடி, சப்தரிஷி நாடி எனப் பலவகைகள் உள்ளன.


(சுகப்பிரம்ம மகரிஷி)


(18 சித்தர்கள்)



(நாடி)

  தற்காலத்தில் நாடி பார்ப்பவர்கள், இந்த சித்தரின் நாடிகளை வைத்துள்ளதாகக் கூறியே நாடி பார்க்கின்றனர். உண்மையிலேயே இது அவர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவைதானா? என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. (சில வருடங்களுக்கு முன், சின்னத்திரையில் ஒளிபரப்பான, "சிதம்பர ரகசியம்" எனும் நெடுந்தொடரில், இதேபோன்ற நாடிஜோதிடம் குறித்துக் காட்டினர். அதில் ஒரு கும்பல், பழைய நாடிபோல் போலிகளை உருவாக்கி, அதை வைத்து பிழைப்பு நடத்துவதுபோல் காட்சிப்படுத்தியிருப்பர்.) (அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவனுக்கு, அதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா, இல்லையா..?!) 


         நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. (உதாரணமாக, சாந்தி காண்டம், தீட்ஷை காண்டம், ஔஷத காண்டம், எல்லைக் காண்டம், அரசியல் காண்டம், பிரச்சன்ன காண்டம், மந்திர காண்டம், துல்லிய காண்டம், தசாபுக்தி காண்டம் முதலியன). அதன்மூலம் நமது முக்காலத்தையும் அறியலாம் என்கின்றனர் நாடி ஜோதிடர்கள். இருப்பினும், அவற்றை அறிய முதல் காண்டமான பொது காண்டத்தினைப் பார்க்கவேண்டும். அதில் ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரையிலான பொதுவான தகவல்கள் அடங்கியிருக்கும். (பெயர், தொழில், குடும்பத்தகவல்கள் முதலியன). திருமணம், குழந்தைகள், கல்வி. வேலைவாய்ப்பு, வழிபாடு போன்ற இதரவிவரங்களை அறிய தனித்தனி காண்டங்களை அணுகவேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. 

         கை ரேகையை அடிப்படையாகக்கொண்ட நாடிஜோதிடத்தில் சங்கு, சக்கரம், சுழி, வட்டம், கோணம், பூபந்தம், கோடி, மணி, சிகிரி, கீற்று என கைவிரல் ரேகைகளை ஜோதிடர்கள் பல வகைப்படுத்துவார்கள். அதிலும் ஒரு புள்ளி, இரு புள்ளி என பல உட்பிரிவுகள் உண்டு. அதனடிப்படியில் ஒரு நபரின் சரியான ஓலையைக் கண்டறிவதாகவும், பழங்கால வரிவடிவிலுள்ள உள்ள அவ்வோளைச்சுவடியின் பாடல்களை, முறையாக பயிற்சி பெற்ற, தங்களைப் போன்றவர்களால் மட்டுமே படித்தறிய இயலும் என்கின்றனர், நாடி ஜோதிடர்கள். ஆணாக இருப்பின் வலதுகை பெருவிரல் ரேகையும், பெண்ணாக இருப்பின் இடதுகை பெருவிரல் ரேகையும் ஒரு தாளில் முதலில் பதியப்பட்டு, பின் மேற்கூறிய அவர்களின் தொழில்ரகசியப்படி ஓலைகளைத் தேடுகின்றனர். ஒரு சிலருக்கு உடனே கிடைத்துவிடும், ஒரு சிலருக்கு ஓரிருநாள் ஆகலாம். ஒரு சிலருக்கான ஓலை கையிருப்பில் இல்லையெனில், வேறு நிலையத்திலிருந்துதான் எடுக்கவேண்டுமென்பதால், ஓரிரு மாதங்கள் கூட ஆகலாம். சுவடி கிடைத்ததும், அது அந்த குறிப்பிட்ட நபரின் ஒலைதானா என்பதை அறிந்துகொள்ள, நாடி ஜோதிடர் அந்நபரிடம் பல கேள்விகளைக் கேட்பார். 

         சரி, ஓலை குறித்து இவர்கள் கூறும் இத்தகவல்களெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என பார்த்தால், சுவடியியல் அறிஞர்கள், இச்சுவடிகளெல்லாம் போலியானவை; தற்காலத்தில் உருவாக்கப்பட்டவை. பழங்கால ஓலைச்சுவடியின் அளவிற்கு பனைஓலைகளைத் தயாரித்து, நெல் ஆவியில் காட்டி, பழங்கால ஓலைகளைப் போல் மாற்றி, அதில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ் எனக் கூறுவதாகவும் கூறுகின்றனர். மேலும், அதிலிருப்பது வட்டெழுத்தும் இல்லை; கூட்டேழுத்தும் இல்லை; கிரந்தமும் இல்லை. அதோடு, பாடல்களும் முறையான இலக்கணப்படியோ, வெண்பாகவோ, அந்தாதியாகவோ இல்லை; தப்பும் தவறுமாக உள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்ற அந்தாதி அடிப்படையிலயே அவ்வோலைச் சுவடியிலுள்ள பாடல்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இவ்வாறிருக்கையில் அவை எவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூற இயலும் என்பது ஆராய்ச்சியாளர்களின் சந்தேகப் புருவத்தை உயரவைக்கும் கேள்வி. சரி, கார்பனின் வயதுக்கணக்கீட்டு முறைப்படி (Carbon Dating) ஓலையின் வயதைக் கண்டறியலாம் எனப் பார்த்தால், நாடி ஜோதிடர்கள் அதற்கு சம்மதிப்பதில்லை. இத்தனைக்கும் நமக்கு நாடி பார்க்க சென்றால், நமக்கான நாடி எனக்கூறி அவர்கள் படிக்கும் நாடியையே நம்மிடம் அவர்கள் தருவதில்லை.

   தற்போது, நாடி ஜோதிடர்களின் கருத்து குறித்துக் காணலாம். இவ்வோலைச்சுவடிகளை எழுதியவர்கள் ஞானதிருஷ்டி உடைய, முக்காலமும் உணர்ந்த மகான்கள், சித்தர்கள். அவர்களின் பாடல்களில் பிழைகள் இருக்க வைப்பே இல்லை. ஆனால், ஓலைகளை பெயர்த்து எழுதும்போது, எழுதுபவரின் கவனக்குறைவு பிழைகளுக்குக் காரணமாக இருக்கலாம். இவ்வாறு தவறான ஓலை ஒருகாலத்தில் பெயர்த்து எழுத உதவும் மூல ஓலையாக அமையும் பட்சத்தில் தவறுகள் அதிகரித்து, மென்மேலும் தொடர வாய்ப்புள்ளது. ஓலைகளைப் பெயர்த்து எழுதுபவர்கள் அனைவரும் முற்கால எழுத்துகள் குறித்துக் கரைத்துக் குடித்தவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே நமது ரிஷிகள் குறிப்பிட்டிருந்த சில ரகசிய பரிபாஷைகளை அவர்கள் என்னவென்று தெரியாமல் அதிலிருப்பது போலே குறிப்பிடுவர், அல்லது அது புரியவில்லை என்பதால் ஏதேனும் அவர்கள் கருத்தில் இதுவாகத்தான் இருக்கும் என தோன்றுவதை இட்டு நிரப்புவர், அல்லது அவற்றை அப்படியே விட்டுவிடுவர். பெயர்த்து எழுதுதலை எத்தனை பேர் தொழில் பக்தியோடு நேர்மையாக செய்திருப்பர்?! 

 இதுகுறித்து தமிழகக் காவல்துறையின் தடையவியல் துறையில், துணைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், முப்பத்தேழு ஆண்டுகாலக் காவல்துறை அனுபவமிக்கவருமான, திரு. ஏ.எம்.பத்மநாபன் (A.M.Padmanaban) அவர்கள், தடயவியல் துறையிலும், கைரேகையியலிலும் பல்வேறு ஆய்வுகளைச் செய்து, "Finger Print is a Replica of Religion and God" என்கிற ஆய்வு நூலை வெளியிட்டார். (இவர் பல சிக்கலான வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தவர்; பல்வேறு அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டவர்.) அந்நூலில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல்களுள் சில உங்கள் பார்வைக்கு.
  1. விரல் ரேகையில் மொத்தம் 10 வகை உட்பிரிவுகள் உள்ளன.
  2. இரு விரல் ரேகைகள் ஒரே மாதிரியாக இருக்க சாத்தியக்கூறுகளே இல்லை.
  3. விரல் ரேகையில் சுழி, வளைந்த சுழி, நீள்வட்டம், இரட்டை நீள்வட்டம், குறுக்குவட்டம் என பற்பல வகைகள் உள்ளன.
  4. விரல் ரேகை அமைப்பில் திருநீறு, திருமண், சக்கரம், ஓம், சிலுவை, பிறைச்சந்திரன் போன்ற இறைச்சின்னங்கள் மட்டுமல்லாது, மனிதமுகம், பறவைகள் போன்ற சின்னங்களும், சில ஆங்கில எழுத்துக்களும்கூடக் காணப்படுகின்றன.

(கைவிரல் ரேகையில் காணப்படும் குறியீடுகள்)

         இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் குறிப்பிடும் ஒரு விஷயம், பல ஆயிரக்கணக்கான குற்றவாளிகளின் கைரேகையை ஆராய்ந்து பார்த்ததில், அவர்கள் எல்லோரது கைரேகையிலும் ஒரே ஒரு அம்சம் மட்டும் பொதுவாக இருந்ததாம். அவ்வாறெனில், குற்றவாளிகள் எவருமே உருவாவதில்லை, பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறார்கள்; தக்க சமயம் வரும்போது வெளிப்படுகிறார்கள். அவ்வளவே! "எனில் 'விதி' என ஒன்று உள்ளதா? விதி இருப்பது உண்மையாயின், அது உருவாகக் காரணமான முன்ஜென்மமும், அதைத் தீர்க்கத் தேவைப்படும் மறுஜென்மமும் ஒருவழியில் அவசியப்படுகிறது. அப்படியானால்...?!" என்பதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு நமது வருங்காலப் பதிவுகளில் பதிலைத் தேடலாம். இனி, நட்சத்திரங்கள் மூலமாக வருங்காலத்தை கணிக்கும் முறை குறித்துக்காணலாம்.

         அதற்குமுன், தலைப்பின் காரணத்தை இங்கே சொல்வது நலம் எனத் தோன்றுகிறது. ஜோசியம் தெரியும், அதென்ன ஹேஷ்யம்..?! இதனை அறியவேண்டுமானால், புராண காலத்திற்குப் பின்னோக்கி செல்லவேண்டும். குருட்சேத்திரப்போரில் ஒரு காட்சி. அர்ஜுனனின் அம்புகளை மார்பில் ஏந்தி வீழ்ந்து கிடக்கும் கர்ணனை, மடியிலமர்த்திக் கதறித் துடிக்கிறாள் குந்தி. அப்போது, இத்தனை நாட்கள், பெற்ற தாயே தனது பிள்ளைகளிடம் உண்மையை மறைத்திருக்கிறாள் என்பதையறிந்து மனம்நொந்த தருமர், "பெண்களிடம் இனி ரகசியம் தங்காமல் போகட்டும்" என சபிக்கிறார். அப்போது அர்ஜுனன் கண்ணனிடம், "நீயும் எங்களை ஏமாற்றிவிட்டாயே?!" என கோபத்தோடு புலம்ப, அங்கே கண்ணன் அர்ஜுனனுக்கு சம்பவங்களை விளக்குகிறார். அதே சமயம் சகாதேவன், இத்தனை நாட்கள் நான் கற்ற சாஸ்திர வித்தைகள்கூட இதை எனக்கு உணர்த்தவில்லையே என மனம் வெறுத்து, அங்கு எரிந்துகொண்டிருந்த தீயில் தனது சாஸ்திர சுவடிகளை வீசுகிறார். அதைக்கண்ட பீமன் வெடுக்கெனப் பாய்ந்து அச்சுவடிகளை எடுத்து, "என்ன காரியம் செய்யத் துணிந்தாய்?! நாம் இன்று இருப்போம், நாளை இறப்போம். ஆனால் இவை..?! காலத்தையும் மிஞ்சி நிற்கும் கலைகள். அவற்றை அழிக்க உனக்கு மட்டுமல்ல யாருக்கும் உரிமையில்லை". என்பதுபோல பொரிந்து தள்ளினார்; சகாதேவனும் தனது தவறை உணர்ந்தார். அவ்வாறு பீமன் எடுக்கும் முன், அவ்வோலைகளை தீ தீண்டியிருந்தது. அக்கனலில் கருகிய பக்கங்களைக் கொண்டு பிரதியெடுத்தவர்களுக்கு, அவ்விடத்தில் என்ன வரும் எனத் தெரியவில்லை. எனவே முழுப்பாடலையும் படித்துணர்ந்து, இவ்விடத்தில் அடி, அசை, சீர், தொடை, எதுகை, மோனை, மாத்திரை, போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, இதுவாகத்தான் இருக்கும் என, பின்னாளில் வந்த ஜோதிடர்களால் இட்டு நிரப்பப்பட்ட கணிப்புகளே 'ஹேஷ்யம்'. இதைத்தான், 'ஜோசியம் பாதி, ஹேஷ்யம் மீதி' என சொல்லிவைத்தார்கள்.


(கர்ணன்)


(தருமர் / யுதிஷ்டிரர்)


(அர்ஜுனன்)


(கிருஷ்ணர்)


(சகாதேவன்)


(பீமன்)
3.) ட்சத்திரங்கள் மூலமாக:

         இரவில் வானை அலங்கரிக்கும் நட்சத்திரங்களை, நம் முன்னோர் வழிகளைக் கண்டறிவதில் மட்டுமல்லாது, வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து அறிவதிலும் வழிகாட்டுவதாக நம்பினர். சமீபத்தில் போஸ்னியா-(Bosnia)-விலுள்ள விசோகோ (Visoko) மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாறைப்படிவத்தில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்திருந்த நட்சத்திரங்களின் இருப்பிடமானது செதுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.82,250-ஐச்  சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. (ஆமா, கி.மு. தான்!). ஆனால், இதை செதுக்கிய மக்களின் விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது. இதில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க விந்தை என்னவெனில், இம்மாகாணத்தில் மலையளவு பிரமிடானது மலையாகவே மாறியுள்ளது, அல்லது மலையினுள் மறைந்துள்ளது. இதுகுறித்து எதிர்காலப் பதிவுகளில் காணலாம். (ஏற்கனவே, எகிப்திய பிரமிடுகளும் சரி, மாயன் பிரமிடுகளும் சரி, நட்சத்திரங்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு கட்டப்பட்டவையாகவேயுள்ளன என்பதை நினைவில் கொள்க.) 


(பாறைப்படிவத்தில் செதுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களின் அமைவிடமும், கணினி மென்பொருள் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் தோன்றியிருக்க சாத்தியக்கூறுள்ள வரைபடமும்)








(போஸ்னியாவின் மலை பிரமிடு)




(நட்சத்திரங்களின் அமைவிடமும், பிரமிடுகளின் கட்டுமானமும்)


         இத்தகைய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு இணையானது, கி.மு.2600 ஆண்டுவாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படும் 'ஸ்டோன்ஹெஞ்ச்' (Stonehenge) எனப்படும் வட்டமாக அமைக்கப்பட்ட கற்படுக்கை அமைப்புகள். இவைகளும் நட்சத்திரங்கள் நகரும் பாதை மற்றும் கிரகணங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம், தனித்தனியாகப் பிரித்துக்க(கா)ட்டப்பட்டுள்ள கற்களனைத்தும் கிரேக்க எழுத்தான 'பை' (Pi [π] )-யைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. 

.
(ஸ்டோன்ஹெஞ்ச்)



(ஸ்டோன்ஹெஞ்ச் மீது நட்சத்திரங்களின் ஒளி விழுதல்)




         இவ்வாறு மனிதகுலத்தை மயக்கிய நட்சத்திரங்களின் இருப்பிடமானது, நம் பூமியிலிருந்து பார்க்கும்பொழுது வெவ்வேறு உருவங்களைக் குறிக்கும் புள்ளிகளைப்போன்று மனிதனின் கண்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஒருபுறம், உலகளவில் அவை நில மற்றும் கடல்வழி நாடோடிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தாலும், மறுபுறம் ஜோதிடத்திலும் அசைக்கமுடியாததோர் கதாப்பாத்திரமாக உருவாகிக்கொண்டிருந்தது. கிரேக்கத்தில், நட்சத்திரங்களின் இத்தகைய காட்சித்தொகுப்புக்கேற்றவாறு உருவகப்படுத்தி கதைகளும் கதாப்பாத்திரங்களும் அவர்களின் மத மற்றும் கடவுளரின் பண்புகளுக்கேற்றவாறு உருவாகிக்கொண்டிருந்தன. உதாரணமாக நாம் பெரும்பாலும் தெளிவான வானத்தில் தேடும், நேர்கோட்டில் அமைந்தார்போல தோன்றும் மூன்று நட்சத்திரங்களைக் கூறலாம். 'வேட்டைக்காரன்' என்று பொருள்படும், ஓரியான் நட்சத்திரக்கூட்டத்தின் ஒரு அங்கமே அந்த மூன்று நட்சத்திரங்கள். உருவகத்தில், அந்த வேட்டைக்காரனின் இடுப்புப்பட்டையாக கற்பனைசெய்யப்பட்டிருக்கும். இந்த நட்சத்திரக்கூட்டமானது கிரேக்கம் மட்டுமல்லாது, பாபிலோனிய நாகரீகம், ரோமானியம், மத்தியக்கிழக்கு போன்ற பகுதிகளைச்சார்ந்த மக்களால் கவனிக்கப்பட்டதோடு, கற்காலம், உலோகக்காலம் தொட்டு, ரிக் வேதம், பைபிள் வரை இந்நட்சத்திர மண்டலம் குறித்த விவரங்கள் கவனிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில், இதை வேடனாக பாவிக்காமல், மானாக சித்தரித்திருப்பர். அவ்வாறே ஒவ்வொரு நாகரிக மக்களும் தங்களுக்கேற்ப உருவகப்படுத்திக்கொண்டனர். இருப்பினும், கிரேக்கத்தில் சூட்டிய 'ஓரியான்' (Orion) என்கிற வேடனின் உருவகமே நிலைபெற்றது. காரணம், அந்நாட்டு வானியலாளர்கள் உலகத்தின் வெளிச்சத்திற்கு, பலத்தடைகளை மீறி வந்ததே. (நமது நாட்டிலும் அவர்களுக்கு இணையான அல்லது அவர்களை மிஞ்சிய வானியலாளர்கள் இருந்தாலும், அவர்கள் உலகின் பார்வையில் பட்ட அளவிற்கு நம்மவர்கள் படவில்லை; படுவதற்கு நம்மவர்களே விடவில்லை! (நமக்கு எதிரிங்க வெளில இல்லடா, கூடவே இருக்கீங்க..!) 


(ஓரியான்)


(ஓரியான் நட்சத்திரக்கூட்டதிலுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள்)



(தற்கால சூழலுக்கு இந்த நட்சத்திர இணைப்பு ஒரு வேட்டைக்காரனை நினைவுபடுத்தாது; 'கங்னம் ஸ்டைல்' டான்ஸை வேண்டுமானால் நினைவுபடுத்தும்!)


('கங்னம் ஸ்டைல்' (Gangnam Style) நடனத்தில் 'பார்க் ஜே-சாங்' (Park Jae-sang), மேடைப்பெயர் சுருக்கமாக 'PSY')



(ஓரியானும், எகிப்திய பிரமிடுகளும்)


(பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கல்படுகையில் ஓரியான்)

   அவர்களுள் மிக முக்கியமானவர் 'ஹிப்பாஷியா' அல்லது 'ஹைப்பாஷியா' (Hypatia). உலகின் முதல் பெண் வானியலாளர் இவர் என்பது பெண்ணியம் பேசும் பெண்கள் எத்தனை பேருக்குத்தெரியும்? உலகிலேயே நட்சத்திரங்களுக்கான வரைபடத்தை, அவைகளின் இருப்பிடத்தை காலமாற்றத்திற்கேற்றவகையில் வரைந்த முதல் வானியலாளர், நாம் தற்போது அழைக்கும் 'வீனஸ்' (Venus - வெள்ளி), 'மார்ஸ்' (Mars - செவ்வாய்) போன்ற பல கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் ரோமானியக் கடவுளரின் பெயரை சூட்டியவர், வரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட கணிதவியலாளர் மற்றும் மெய்யியலாளர் எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். மேலும், தாலமி (Ptolemy) , யூக்ளிட் (Euclid) போன்ற கணிதவியலாலர்களின் சமன்பாடுகள், தேற்றங்கள் போன்ற கண்டுபிடிப்புகளைத் தொகுத்த தியோன் (Theon) எனும் கணிதவியலாளரின் மகள் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நட்சத்திரங்கள் சொர்க்கத்தை மூடியிருக்கும் திரையின் துளைகள் வழியாக வரும் சொர்க்கலோகத்தின் ஒளி என குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருந்த, கிறிஸ்தவ மதகுருமார்களின் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்தின் (Egypt) அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) சாம்ராஜ்யத்தில், அவைகள் துளைகளல்ல, நமது சூரியனையொத்த அல்லது அதைவிடப்பெரிய ஒளிப்பந்துகள் எனக் கூறியபோது, கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதோடு, விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். அப்போது "அவை சொர்க்கத்திலிருந்து வரும் ஒளி இல்லை, சூரியனைப் போன்ற ஒளிப்பந்தின் ஒளி என்றால், சொர்க்கம் எங்கே இருக்கிறது?" என ஒரு அறிவாளி (!) கேட்க, என்ன சொல்வாள் பாவம்?! இறுதியில், மதத்திற்கு எதிரான பிரச்சாரம் என முட்டாள்தனமாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு தரப்பட்ட தண்டனை நாம் கற்பனை செய்யவும் துணியாத ஒன்று. வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தவரை, நடுவழியில் கடத்திவந்து, விசாரணை என்கிற பெயரில் ஒரு கொடூரமான தண்டனையை நிறைவேற்றினர். அவரின் முகம் தீட்டப்பட்டுள்ள ஓவியம் மட்டுமே நம்மிடம் உள்ளது. (அப்புறம், கி.பி.-400-ல எவன் கேமரா வச்சிருப்பான்...?!) அத்தனை பெரியோர்கள் (!) குழுமியிருந்த சபையில், ஏறத்தாழ அந்த 50 வயதுக்குமேல் மதிக்கத்தக்க பெண்மணியின் தோலை கிளிஞ்சல்களால் உரித்தெடுத்தனர்! அவரின் உடலை ரத்தம் சூழ்ந்தது. அவ்வுடலில் தோலைப் பறிகொடுத்து, மீதமிருந்த உயிர் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. வலியாலும் அவமானத்தாலும் முனகிக்கொண்டிருந்த அந்த அறிவியலாளரை தலைமுடியைப் பிடித்து இழுத்து சென்று, ஒரு கம்பத்தில் கட்டிவைத்து உயிரோடு கொழுத்தினர்! (என்னால் இன்னும் இதை ஜீரணிக்க முடியவில்லை! அந்த அம்மாவின் முகத்தைப் பார்க்கும்போது அந்த பாவிகளுக்கு இவ்வாறு செய்ய எப்படி மனம் வந்ததோ?!) அன்று எரிந்தது அவரது உடல் மட்டுமல்ல; இத்தனை ஆண்டுகள் விண்வெளி வரலாற்றின் அஸ்திவாரத்தினை அலங்கரித்த அன்னையின் அறிவும்தான். இவரது காலத்திலிருந்து 1200 ஆண்டுகள் கழித்துதான். 'யோஹன்னஸ் கெப்ளர்' (Johannes Kepler) சூரியக்குடும்ப வான்பொருட்களின் பாதை நீள்வட்டம் என்பதை உலகிற்கு உணர்த்தினார். ஆனால், அதை இந்த அம்மையார் எப்போதோ கூறியிருந்தார். அக்காலத்தில், ஆராய்ச்சியாளர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததற்கு இத்தகைய மதக்குருடர்களும் காரணம். அவர்களின் குறி அறிவியலாளர்கள் மட்டுமல்ல, ஜோதிடர்களும்தான்.


(ஹிப்பாஷியா)


(தியோன்)


(தாலமி)


(யூக்ளிட்)


(ஹிப்பாஷியாவிற்கு தண்டனையை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் ஓவியம்)


(ஹிப்பாஷியாவைக் குறித்து வெளியான நூல்)


(ஹிப்பாஷியாவின் வாழ்கையைச் சித்தரித்த, ஸ்பானிய மொழிப்படம் 'அகோரா')

         இன்றும்கூட, நமது கிராமப்புறங்களில் எரிநட்சத்திரங்கள் தோன்றுவது முதல் நட்சத்திரங்களின் நகர்வு முதலிய பலவற்றுக்கும் பல கதைகளும் காரணங்களும், எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும், அவைகள் மூலமாக அறியலாம் எனவும் கூறப்பட்டுவருவதைக் காணலாம். இவ்வாறான நட்சத்திரங்களின் மீதான மனிதகுலத்தின் ஈர்ப்பே, மனிதக்கண்களை நட்சத்திரங்களிலிருந்து கிரகங்களை நோக்கி நகர்த்தியது. 

4.) ஜாதகக்கணக்கீடு  (Horoscope):

         நவீன காலத் தொழில்நுட்பங்கள் கிரகங்களை உற்றுநோக்கும் முன்பே, உலகெங்கிலும் செழித்திருந்த நாகரிகங்களில் கிரகங்கள் குறித்த நிலைப்பாடுகள் வேரூன்றியிருந்தன. உதாரணமாக, தமிழ் நாகரீத்தில் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக, 'சூரியன்தான் பூமியை சுற்றுகிறது; பூமியே இப்பிரபஞ்சத்தின் மையம்' என உலகமே கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்துகொண்டிருந்த நேரத்தில், சூரியனை மையமாக வைத்தும், பிற கிரகங்களை அதைச்சுற்றி நிறுத்தியும் அதற்கு கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தனர் நம்மவர்கள். நம்மைச் சுற்றிவரும் அவ்வொரு கிரகத்தையும் உருவகப்படுத்தி, கடவுளாகப்பாவித்து, உணர்வூட்டி, அவர்களுக்கென தனிப்பட்ட குணாதிசயங்களையும் பண்புகளையும் அளித்து வழிபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை பிறந்தது முதல், அது இறக்கும் வரை அது அனுபவிக்கும் அனைத்து சுக-துக்கங்களுக்கும் இக்கிரகங்களின் தாக்கமே காரணம் என நம்பினர்; அதுகுறித்த விதிகளையும் வகுத்தனர். (அவை குறித்து சற்று விரிவாக அடுத்த பதிவுகளில்).


(நவகிரகங்கள் )



5.) தேவப்பிரசன்னம் (சோழிகள் மூலமாக):

         உலகையே உலுக்கிய சமீபத்திய இந்திய சம்பவங்களுள் முக்கியமானது, கேரளாவின் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறையில் மறைந்து கிடந்த ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான தங்க ஆபரணங்களும், பொருட்களும். கருவறையின் கீழ் பலநூறு ஆண்டுகளாக, அப்பகுதியை ஆண்ட மன்னர்களின் வம்சாவளியினரால் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் ஆறு அறைகளினுள் அடைந்து கிடந்த அக்கால பொக்கிஷங்களைக் கண்டு உலகமே வியந்தது. அதில் இறுதி அறையான ஆறாவது அறையை (F-6) மட்டும் திறப்பதற்கு மிகவும் யோசித்தனர். காரணம், அவ்வறையைத் திறப்பதென்பது மிகவும் ஆபத்தானது என அவர்களின் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டதே. இன்றுவரை அவ்வறை திறக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. என்றும் மேம்படுத்தப்பட்டதாகத் தங்களைக் காட்டிக்கொள்ள, பரபரப்புகளின் பின்னணியிலேயே ஓடும் ஊடகங்கள் எதுவும் இதன் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்தவில்லை. (இது என்று இல்லை. அவர்கள் எந்த ஒரு சம்பவத்தையும் அதன் இறுதிக் காட்சிவரை காட்டியதில்லை. அதைவிட பரபரப்பான ஒரு செய்தி வரும்வரை அதை வட்டமிடும் கழுகுகள், புதியதைக் கண்டதும் அவற்றை வட்டமிடும். வாசகர்களுக்கு ஒரு சம்பவத்தின் இறுதி நிலையைக் காட்டவேண்டும் என்பதில் ஊடகங்களின் நிலைப்பாடு, ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். அவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. நம்மவர்களும் அதன் இறுதிநிலை குறித்து அறியும் ஆர்வமற்றவர்களாய் இருக்கின்றனர். இங்கு நம்மை திசைதிருப்பும் விஷயங்கள் ஏராளம். 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தில் கமல்ஹாசன் சொல்வதுபோல், "மறதி - ஒரு தேசிய வியாதி. மன்னிக்கிறோமோ இல்லையோ, மறந்துடுறோம்!")



(பத்மநாபசுவாமி கோவில், கேரளா)




(பத்மநாபசுவாமி கோவிலின்  ரகசிய அறையில் பாதுகாக்கப்பட்டிருந்த தங்கத்தாலான பொருட்கள்)



(திறப்பதற்கு பலரும் யோசித்த, ஆறாவது அறையின் கற்பனை உருவகம்)

         மேற்குறிப்பிட்ட, ஆறாவது அறையைத் திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பலவாறான ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இதுகுறித்து பத்மனாபசுவாமியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என அவரிடமே கேட்டுவிடுவோம் என இறுதியில், இறை நம்பிக்கையாளர்கள் எடுத்த முடிவே, தேவப்பிரசன்னம் பார்த்தல். இம்முறை நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. சோழிகளை (Cowrie Shells) உருட்டி, அதில் விழும் மதிப்புகளுக்கேற்ப சூழ்நிலையின் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. மேல்நோக்கி விழும் சோழிகள் கணக்கில் கொள்ளப்படும் என்பது நாம் அறிந்ததே. தாயம் (தாயக்கட்டை) விளையாடுவதற்கு பெரும்பாலும் நாம் உபயோகிக்கும், நத்தை போன்ற ஒரு கடல் உயிரினத்தின் கூடு எவ்வாறு எதிர்காலத்தைக் கணிக்கும் என்பதற்கு விஞ்ஞான விளக்கங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சோழிகளைப் போலவே சில பழங்குடியினரால் விலங்குகள் அல்லது அவர்களின் மூதாதையரின் எலும்புகள், சோ ழிகளுக்கு மாற்றாகப் பயன்படுகின்றன. இம்முறை முற்காலத்தில் உபயோகிக்கப்பட்ட ஒன்று. ஒரு சில பழங்குடியின, மலைவாழ் சமூகத்தார் மட்டுமே இத்தகு பண்டைய முறையை இன்றும் பின்பற்றுகின்றனர். (சந்தனமரக்கடத்தல் வீரப்பன், தான் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னும் சோ ழிபோட்டுப் பார்த்து, தனக்கு சாதகமான சூழ்நிலை எனத் தோன்றினால் மட்டுமே, அதை செய்வாராம், என்பது கொசுறுத்தகவல்!)


(சோழிகளில் 3 விழுந்துள்ளது)


(இதில் 6 விழுந்துள்ளது)


(சோழியினுள் கடல்வாழ் உயிரி)


(வீரப்பன்)

         சோழிகளுக்கு மாற்றாக புளியங்கோட்டைகளும், சொக்கட்டான்களும், பகடைகளும், தாயம், பரமபதம் போன்றவற்றில் பயன்படுகிறது. இத்தகு தாயம் விளையாட்டு, உலகெங்கிலும் முற்காலம்தொட்டே நமது பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்றாக இருந்ததை, மாயன்களின் ஓவியங்களில் இருந்து அறியலாம்.


(புளியங்கொட்டைகளில் 3 விழுந்துள்ளது)


(புளியங்கொட்டைகளில் 6 விழுந்துள்ளது)


(சொக்கட்டான்)


(பகடை)


(2 வகை தாயம் விளையாட்டு முறைகள்) 


(தாயத்தில் காய்கள் நகரும் முறைகள்)



(பரமபதம்)


(மாயன்கள் காலத்தில் தாயம் விளையாட்டு)

         இதில் நாம் பெரும் நிகழ்தகவின் அடிப்படையில் மட்டுமே குறி சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (சகுனி வைத்திருந்த பகடைகள், அவரது தந்தை சுபாலரின் எலும்பிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்றும், அதில் விளையாடும்போது சகுனி நினைக்கும் எண்களே விழும் என்பதும் மகாபாரதத்தில் காணக்கிடைக்கும் செய்தி. அதன் மூலம் சூதாடியே, தருமனிடமிருந்து அனைத்தும் வாரிச்சுருட்டினர் துரியோதனனும், சகுனியும் என்பது கொசுறுத்தகவல்)


(சகுனி)


(துரியோதனன்)

5.) கிளிஜோசியம், எலி ஜோசியம், எண்கணிதம், மற்றும் பல:

         இதுவும் நாம் பொதுவாக காணும் ஜோதிட முறைகளுள் ஒன்று. இதில் பயிற்சியளிக்கப்பட்ட கிளியோ, எலியோ முன்னரே வரையறுக்கப்பட்ட புகைப்படங்களடங்கிய பல சீட்டுகளுள் ஒன்றை எடுத்து, ஜோதிடம் சொல்பவரிடம் தரும். அதில் வரும் படத்திற்கேற்ப, கணிப்புகள் அமையும். ஆனால் இம்முறையில், ஜோதிடரின் விரல் அசைவுகளைக் கவனித்தே கிளியோ, எலியோ சீட்டுகளை எடுப்பதாகவும், விலங்குகளுக்கு அப்படி யாதொரு கணிக்கும் திறனோ, சக்தியோ கிடையாது என்கிற கருத்தும் நிலவுகிறது. விலங்குகளின் குறித்த மனிதர்களின் இப்பகுத்தறிவுப் பார்வையை சற்றே உலுக்கிய சம்பவம், 'பால்' (Paul) என்கிற (சாக்குக்கணவாய் எனப்படும்) எட்டுக்கால் கடல் விலங்கின் (Octopus) ஆச்சர்யத்தக்கத் துல்லிய கணிப்புகள்.



(கிளி ஜோசியம்)


(பால் வெற்றியாளரை கணிக்கும் விதம்)

         ஜெர்மனி (Germany)-யிலுள்ள, ஒபர்ஹௌசன் (Oberhausen) மாகாணத்தின் கடல்வாழ் விலங்குகள் அருங்காட்சியகத்தில் வளர்க்கப்பட்ட, பால் எனும் ஆக்டோபஸ், இதுவரை நடந்த உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெல்லும் என்பதை மிகத் துல்லியமாக. கணித்திருக்கிறது. (14 ஆட்டங்களில் 12 ஆட்டங்களை சரியாகவும், இரண்டை தவறாகவும்) நிகழ்தகவு அடிப்படையில் பார்த்தாலும், பாலின் கணிக்கும் திறன், தோராயமாக 85%-ஐத் தாண்டுகிறது. எவ்வாறு இவற்றைக் கணித்தது என்பது இன்றும் புதிரே! (நீரினுள் வைக்கப்படும் பெட்டியிலிருந்து வரும் வாசனை மூலம் கணித்ததாக சிலரால் கூறப்பட்டாலும், உண்மை இதுவென யாராலும் நிரூபிக்க இயலவில்லை). ஜனவரி-26, 2008-ம் ஆண்டு பிறந்த இந்த ஜோதிடர், தனது இரண்டாம் வயதில் அக்டோபர்-26, 2010-ல் இயற்கை எய்தினார். இவரது நினைவாக புத்தகங்கள் வெளியிடப்பட்டதோடு, உலகின் சில இடங்களில் சிலைகளும், கல்லறைகளும் நிறுவப்பட்டுள்ளன. பொதுவாக ஆக்டோபஸிடம் நான் வியக்கும் திறமைகளுள் ஒன்று, அதன் அசாத்திய நிற மற்றும் உருவ மாற்றம். அதன் சூழ்நிலையிலிருந்து சற்றும் பிரித்துணரவியலா மற்றம். அதேசமயம், எலும்புகளற்ற உயிரினம் என்பதால், ஒரு கண்ணாடி குடுவைக்குள்ளும் அடங்கும், வளர்ந்தபின், ஒரு படகை விழுங்கும் அளவிற்கு பெரிதும் ஆகும்.




(ஆக்டோபஸின் உருவ மற்றும் வடிவ மாற்றம்)


(குடுவைக்குள் ஆக்டோபஸ்)

         இதுபோன்ற நிகழ்தகவுக் கணிப்புகள் விலங்குகளை வைத்து மட்டுமல்ல, மனிதர்களை வைத்தும் நடத்தப்படுகிறது. அதுவும் ஜோதிடம் பார்க்க செல்பவரைக் கொண்டே. ஆம், டாரட் அட்டைகள் (Tarot Cards) எனப்படும், ஏறத்தாழ கிளிஜோசிய அட்டைகளைப்போல் சிலவற்றை நம்முன் பரப்பிவிடுவர். அதில் நம் மனப்போக்கில் எடுத்துத்தரும் ஏதேனுமொரு சீட்டின் அடிப்படையில் கணிப்புகள் அமையும். (கிளாமர்-அப்பீல்..?? சேம் அப்பீல்...!!!) 


(டாரட் அட்டைகள்)





(டாரட் அட்டைகளின் பலன்கள்)



(டாரட் அட்டைகள் மூலம் குறி சொல்பவரின் கற்பனை உருவகம்)


         இவ்வாறான, தர்க்க ரீதியில் சாத்தியமற்ற வரிசையில் வருவதுதான் 'எண்கணிதம்' (Numerology). இதன் நதிமூலம், ரிஷிமூலம் என சகலமும் இணையத்தில் உலாவுவதால், இதனை மேலோட்டமாக மட்டும் பார்க்கலாம். ஊரில் பலபேர் தங்கள் பெயரை எழுத்துப்பிழையோடு எழுத முக்கியக் காரணம் இதுவுமே. பெயரை மாற்றினால் வாழ்வு மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. (கண்ணாடிய திருப்பினா எப்படிப்பா ஆட்டோ மூவ் ஆகும்...?!) இருப்பினும், அதுகுறித்த விஷயங்களைக் கீழே படங்களாகத் தருகிறேன்.



(எண்கணித பலன்களும், விளக்கங்களும்)


         எண்கணிதத்திற்கு தர்க்க ரீதியில் சாத்தியமில்லை என்று நான் கூறியதால், மற்றவற்றிற்கு (கைரேகை அமைப்பு, ஜாதகம், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவை) தர்க்கரீதியிலான விளக்கங்கள் இருக்கிறதா? என்கிற கேள்வி உங்களுள் எழலாம். அதற்கு என்னுடைய வழக்கமான பதில்......... காத்திருங்கள், அடுத்த பதிவுவரை..! (யாருப்பா அங்க..? இல்லப்பா, அடுத்த பதிவு, உண்மையிலேயே சீக்கிரம் வந்திரும் பா... நம்புங்க...!!!) இத்தனை நாள், பொறுமை காத்து, தினமும் எனது பக்கத்திற்கு வருகைபுரிந்த பொறுமைமிகு வாசகர்கள் அனைவருக்கும் எனது சிரம்பணிந்த நன்றிகள்..!

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.


(மிக மிக தாமதமான பதிவு என்பதால், உங்களில் பலர் என் மீது கடுங்கோபத்தில் இருக்கலாம். மன்னிக்கவும். இம்முறையும்,  கட்டுரையின் நீளம் எனது முயற்சியை உணர்த்தும் என நம்புகிறேன். இத்தனை மாதங்கள் காத்திருக்க வைத்தமைக்கு, சேர்த்துவைத்து படியுங்கள். நீ....ண்....ட நாட்களுக்குப்பின் மனச்சோர்வு நீங்கி, மீண்டும் இப்பதிவுத்தளத்தைக் கையிலெடுத்து, தற்போது உங்கள்முன் இக்கட்டுரையை சமர்ப்பிக்க முக்கிய காரணம், எனது உயிர்த்தோழி "வான்மதி". அடுத்த பதிவு எப்போது என துளைத்து எடுத்த எனக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர். அவரது பிறந்தநாள் [டிசம்பர்-27] வெளியீடாக இதை வெளியிடலாம் எனக் கையிலேடுத்துமே இத்தனை நாட்களாகிவிட்டது. அவர் மன்னிப்பாராக...! கடைசியாக அவருக்காக ஒரு வரி. "வான்மதி, இது உனக்காக..!"  தாமதமானாலும் உங்கள் அனைவரின் வாழ்த்தும் அவருக்குக் கிடைக்கப்பெற ட்டும். நன்றி நண்பர்களே! - அயலான்)

துணை நின்ற நூல்:
  1. மகாபாரத உபகதைகள் - அரவிந்தன்.
இப்பதிவுத்தளத்தை ஆங்கிலத்தில் பார்வையிட: 
          www.charismaticenigma007.blogspot.in

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
          www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:
Finger Printing.
Types of Finger prints.
Finger Prints.
100000-year-old-astronomical-map.
Signs of the Stars
10 ways to tell future through palms.
Visoko
Orion constellation
Oracular Animals