Wednesday 24 December 2014

23.) ஆவிகளுக்கோர் அழைப்பு...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               நமது கடந்த பதிவில் ஆவிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் என நம்பப்படும் சில விஞ்ஞானப்பூர்வமான  தகவல்களைக் கண்டோம். இப்பதிவில் அவ்வாறான ஆவிகள் இருந்தால் அவற்றோடு பேசுவதற்காக மனிதகுலம் மேற்கொண்ட பிரயத்தனங்களையும், வழிமுறைகளையும், அதற்காக உருவாக்க முனைந்த கருவிகள் / இயந்திரங்கள் (Devices / Machines) குறித்தும் இப்பதிவில் காண்போம்.

               ஆதிகாலந்தொட்டே ஆவிகளுடன் உரையாடுவதில் ஒரு அலாதியான ஈடுபாடு இருந்துவருகிறது. ஆரம்பகாலத்தில், ஆவிகளுடன் தொடர்புகொள்ள மந்திரவாதிகள் (Wizards), சூனியக்காரிகள் (Witches) போன்ற நபர்களை நாடுவதென்பது விட்டலாச்சாரியார் காலந்தொட்டு தற்கால ஹாரி பாட்டர் யுகம் வரை தொடர்கிறது. அதிலும் மந்திரவாதிகள் என்றால் (நம்மூரில்) சடைபிடித்த முடி, நீண்ட தாடி, மந்திரங்களை உச்சரிக்கும் உதடுகள், கையில் மந்திரக்கோல், கணீரென்ற குரல், (பெரும்பாலும்) சாத்தானை (சமயங்களில் காளியை) வணங்குதல் போன்ற பணிகளையும்(!), பில்லி. சூனியம், ஏவல், மாந்திரீகம் போன்றவற்றை தொழிலாகவும்(!!!) செய்யும் குகை / மலைவாசிகள் போன்றும், அதுவே சூனியக்காரிகள் என்றால் (மேலை நாடுகளில்) பெரும்பாலும் கிழவிகளாகவும், கர்ண கொடூரமான குரலும், கூரிய வளைந்த மூக்கும், அருவருப்பான முகமும், பாதி விழுந்த பற்களும், மீதி பொக்கை வாயும், தோல் சுருங்கிய கைகளும், அதில் அழுக்கு படிந்த கூரிய, வளைந்த நகங்களும், தலைவிரி கோலமாய், தலைமேல் கருப்பு நிறத் தொப்பியும், கைகள் மட்டும் வெளியில் தெரியுமளவிற்கு கருப்பு நிற அங்கியும், கையில் ஒரு நுனி வளைந்த தடியோ அல்லது பறக்கும் சக்திவாய்ந்த துடைப்பமோ வைத்துக் கொண்டு, ஊரின் ஒதுக்குப்புறத்தில், வௌவால்கள் வாழும் பாழடைந்ததோர் தனி வீட்டில் வசிப்பது போன்றும், அவர்கள் தீயவர்கள், பல உருவங்கள் எடுப்பவர்கள், நம்மை அடிமையாக மாற்றிவிடுவர், விலங்குகளாக உருமாற்றிவிடுவர், என நமது பாட்டி காலந்தொட்டே நம்மிடையே உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். (அடேங்கப்பா...எவ்ளோ நீ...ளமான வாக்கியம்!) நமக்கும் அது பழகிவிட்டது. (ஆனால் உண்மையில் ஹாரி பாட்டரும் (Harry Potter), நார்நியாவும் (Narnia) இத்தகு அடிப்படை உருவகங்களைத் தகர்த்தெறிந்தன. [ஹாரிபாட்டர் புத்தகத்தை முதன்முதலாக வெளியிடும் முன் அக்கதையின் ஆசிரியரான J.K.ரௌலிங் (J.K.Rowling) ஒரு கைரேகை ஜோதிடரிடம் கூறி, தான் புத்தகம் எழுதினால் நன்றாக விற்குமா? எனக் கேட்க, அந்த ஆசாமியோ, நிச்சயம் விற்காது என அடித்துக் கூறியுள்ளான். இப்போது அவர்கள் புத்தக விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. 'அப்படியானால், ஜோதிடம் பொய்யா?' (அ.இ.ப.கா.-[அதுபற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்])]) எனினும் ஆவிகளுடன் பேசவேண்டுமென்பது இவர்கள் இருவரின் (அல்லது இரு பிரிவினரின்) உதவியின்றி தனியொருவராக, சாதாரண நபராக செய்ய வேண்டும் என்கிற பல முயற்சிகளில் நிறைய வழிகளைக் கையாண்டனர். அவற்றுள் சிலவற்றை இனி காண்போம்.


(நம் நாட்டு மந்திரவாதி, ஒரு உதாரண உருவகம்)


(மேலைநாட்டு மந்திரவாதி, ஒரு உதாரண உருவகம்)


(துடைப்பத்தில் பறக்கும் மேலை நாட்டு சூனியக்காரி, ஒரு உதாரண உருவகம்)


(மேலை நாட்டு சூனியக்காரியின் விகார முகம், ஒரு உதாரண உருவகம்)
(ப்ப்பா...!!!)

1.) கிறிஸ்டல் பந்து: (Crystal Gazing)
               ஒரு கிறிஸ்டல் பந்தின் மீது கை வைத்து, ஆவிகளை மனதில் நினைத்து அவற்றோடு பேசுவது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இவ்வகையில் மீடியம்களாக செயலாற்றுகின்றனர். (ஆவிகளைத் தொடர்புகொள்ள  உதவும் மனிதர்கள், 'மீடியம்கள்' (Medium) என அழைக்கப்படுகின்றனர்). இவ்வாறு அவர்கள் கூறுவது பலிக்குமா? பலித்திருக்கிறதா? (அ.இ.ப.கா.)


(கிறிஸ்டல் பந்து)


(ஆண் - பெண் கிறிஸ்டல் பந்து ஞானிகள்)


2.) ஒய்ஜா பலகை: (Ouija Board)
               ஜூலை-1, 1890-ம் ஆண்டு அமெரிக்க ஆவியுலக ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான எலிஜா பாண்ட் (Elijah Bond) என்பவரால் வணிக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட, எண்களும் எழுத்துகளும் அடங்கிய பலகையே "ஒய்ஜா பலகை" (Ouija Board) என அழைக்கப்படுகிறது. ஆவிகளுடன் இதன் மூலம் சில வழிமுறைகளைப் பின்பற்றி பேச இயலும் என இன்றளவும் பல ஆவியுலக ஆராய்ச்சியாளர்களும், நம்பிக்கையாளர்களும் கூறுகின்றனர். அவை கூறும் பதில்களை, அப்பலகையோடு இணைப்பாக வரும் 'பிளாஞ்செட்' (Planchette) எனும் ஒரு நகர்த்தி, ஆவிகளிடம் நாம் கேள்வி கேட்கும்போது தானாக நகர்ந்து சரியான பதிலைக் காட்டும் எனவும் தெரிவிக்கின்றனர். (இதுபோன்ற ஆவிகளை அழைப்பதிலோ, அல்லது ஆவிகள் குறித்து அறிந்துகொள்வதிலோ எனக்கு ஆர்வமில்லாத காரணத்தால், இவற்றை இங்கு நான் விரிவாக விளக்கவில்லை. ஆனால் பின்னிணைப்புகள் செய்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் அதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.)


(ஒய்ஜா பலகை)


(பிளாஞ்செட்)


(பதில் கிடைக்கும் விதம்)


(விதிமுறைகள்)


(பயன்படுத்தும் முறை)
(பின்குறிப்பு: (^)இந்தப் படத்துல பேயைக் காட்டல!)


3.) மந்திரக் குறியீடுகளும், அது சார்ந்த புத்தகங்களும்: (Witchcrafts and Black Magic)
               இது பொதுவாக பலருக்கும் தெரிந்த வழிமுறை தான். மந்திரங்கள் மூலமோ, மந்திரக்குரியீடுகள் மூலமோ ஆவிகளை அழைத்து, அழைத்ததன் தலையாய நோக்கமான வருங்கால நிகழ்வுகளையும், நிகழ்கால சம்பவங்களின் காரணங்களையும், கடந்தகால வரலாறுகளையும் கேட்பது. இதில் ஒவ்வொரு விதமான பேய்க்கும் ஒரு குறியீடு உண்டு என்றும் சொல்கிறார்கள். (ஆதாரத்திற்கு, "ஆவிகள் ஆயிரம்" பகுதியில் பதிவிட்ட, சாலமன் மன்னர் குறிப்பிட்ட 72 ஆவிகளின் அடையாளக் குறியீடுகளைக் கீழே காண்க.)


(சாலமன் மன்னர் குறிப்பிட்ட 72 ஆவிகளின் அடையாளக் குறியீடுகள்)

                 இம்முறையில், லண்டனுக்கு (London) அருகாமையிலுள்ள மோர்ட்லேக் (Mortlake) எனும் கிராமத்தில், ஜூலை-13, 1527-ல் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த "ஜான் டீ" (John Dee) என்பவர் சிறந்த வல்லுனராகத் திகழ்ந்தார். சிறுவயது முதலே படிப்பார்வமுள்ள ஜான், 15 வயதில் கேம்ப்ரிட்ஜ் கல்லூரியிலும் (Cambridge &University), 20 வயதில் ட்ரினிட்டி கல்லூரியிலும் (Trinity College) பயின்றார். 1554-ல், அப்போதைய ராணியான மேரி ட்யூடர் (Mary Tudor) விரைவில் இறந்துவிடுவார் என்றும், அதன்பின் மகாராணியின் தங்கை முறையான, முதலாம் எலிசெபத் (Queen Elizabeth I) பட்டத்திற்கு வருவார் என்றும் சொன்னார். இவ்வாறான வெளிப்படையான அறிவிப்பு, ராணியை பீதிக்குள்ளாக்க, எதிரி நாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின்பேரில் 1554-ல் கைது செய்யப்பட்டார். இவ்வாறான அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்கள் அக்காலத்தில் உயிருடன் கொளுத்தப்படுவார்கள். நல்ல வேளையாக, இவர் நிரபராதி என தெரிந்ததால், 1555-ல் உயிருடன் விடுதலையானார். பின்னர் இளவரசிக்கு தனது ஆரூடம் குறித்து எழுதிய தனிப்பட்ட கடிதம், உளவாளிகள் மூலமாக, ராணியின் கைக்குச் செல்ல, மீண்டும் சிறை அவரை வரவேற்றது. ஏனோ சில காலத்திலேயே காரணமேதுமின்றி விடுவிக்கப்பட்டார். இது இன்றுவரை புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. (எப்படி  எந்த நிபந்தனையும், தண்டனையும் இல்லாம, அவரை விடுதலை பண்ணினாங்க..?!) சில காலங்களில் இவர் கூறியது போலவே நடந்துவிட, முதலாம் எலிசெபெத், பன்முகத் திறமையாளரான இவரை அரசாங்கத்தின் ஆஸ்தான ஜோதிடராகவும், தனது தனிப்பட்ட உளவாளியாகவும் சகலவித மரியாதைகளுடன் வலம் வந்தார். அப்போதுதான் எட்வார்ட் கெல்லி (Edward Kelly) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இருவரும் ஆவிகளை மந்திரக் குறியீடுகள் மூலம் வரவழைத்து குறி கேட்பர். பின்னாளில், ஏதோ சில கருத்து வேறுபாடு காரணமாக கெல்லி, ஜானை 1587-ல் பிரிந்து சென்றுவிட்டார். இவர் தனது தீர்க்கதரிசனங்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், உலகில் மிக சிலருக்கு மட்டுமே தெரியும் வண்ணம், வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட தீர்க்கதரிசிகளில் முக்கியமானவர், இந்த ஜான் டீ. 


(அரசவையில் ஜான் டீ)


(மந்திர வளையத்தினுள் நின்றவாறு ஆவிகளுடன் பேசும் எட்வார்டு கெல்லியும், கையில் தீப்பந்தத்துடன் ஜான் டீயும்)


                இவரைப்பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவெனில், ஜான் உளவாளியாக வேலைபார்த்த போது அவருக்கு ஒரு ரகசியக் குறியீடு எலிசெபெத் ராணியால் வழங்கப்பட்டது. அது, தற்போது மிகப் பிரபலமான 007..! இவரது வரலாற்றைப் படித்த பின்னர்தான், தனது கற்பனைக் கதாப்பாத்திரமான, இங்கிலாந்து உளவாளி ஜேம்ஸ் பாண்டிற்கு (James Bond), அந்த என்னையே ரகசிய எண்ணாக வைக்க அப்புனைகதையின் ஆசிரியரான இயன் ஃபிளெமிங் (Ian Fleming) முடிவு செய்தார்.


              மேலும் அவரது 'ஈசொடெரிக்' (Esoteric) குறியீடை ஒத்த ஒரு உருவமைப்பு ('வென்லாக்' [Wenlock]), தற்போது நடைபெற்ற 2012-ம் ஆண்டு (உலகம் அழியப்போகிறது, என பீதியைக் கிளப்பிய ஆண்டு) ஒலிம்பிக் போட்டியின் அடையாளமாக வெளியிடப்பட்டது. (ஆனால், உண்மையில் அவ்வுருவம், இவரது அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை).


(ஜான் டீ உருவாக்கிய குறியீடு, அவரது கண்ணோட்டத்தில்)


(ஈசோடெரிக் குறியீடும், வென்லாக் பொம்மையும் ஒரு ஒப்பீடு)


(2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக உருவாக்கப்பட்ட 'மாஸ்காட்' [Mascots] பொம்மைகள்)

4.) ஆவிகளுடன் பேச உதவும் இயந்திரங்கள் / கருவிகள்:
               
                ஆவிகள் உண்மையில் சைக்கான்கள் (Psychons) என்கிற செல் (Cell) போன்ற அமைப்பால் உருவான ஒன்றாக இருந்தால், நிச்சயம் அதை காணவோ, உணரவோ, தொடர்புகொள்ளவோ இயலும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அவ்வாறு எண்ணம் உதித்த நாள்முதல், வெப்பசலனக் கருவி (Thermal Detector), மின்காந்த அலை உணர்வி (Electromagnetic Sensors), இருட்டிலும் படமெடுக்கும் கருவி (Night Vision Cameras) என சகலத்தையும் முதுகில் சுமக்க ஆரம்பித்தது மனிதகுல ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குழு.

               இதே போல, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் ஆவிகளுடன் தொடர்புகொள்ள ஒரு இயந்திரத்தை உருவாக்க முயன்றார். அவர், வேறு யாருமல்ல, இருளைப் போக்க உதவிய, தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alwa Edison) தான்..! இருளைப் போக்கிய அவரே, இருட்டில் இருக்குமென, நம்மில் பலர் அஞ்சும் ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் இயந்திரத்தை வடிவமைக்க முயன்றார். ஏனோ, அவரது ஆசை முழுமையடையும் முன் இறந்து அவரும் ஆவியாகிவிட்டார். (ஆவி நம்பிக்கையாளர்களின் கண்ணோட்டத்தில்!) எடிசனின் வடிவமைப்பு வரைபடங்களின் சிறப்பு என்னவெனில், அவர் குறித்துக்கொடுத்ததை அவ்வாறே செய்தால், அது நிச்சயம் முழுமைபெறும்; மிகத்துல்லியமாக இயங்கும். சிக்கல் என்னவென்றால், இப்போது அவ்வரைபடம் எங்கிருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. எடிசன் காப்பீடு பெற்ற கண்டுபிடிப்புகள் மொத்தம் 1093. அதுமட்டுமல்லாது, காப்பீட்டிற்காக பதிந்திருந்தது, காப்பீடு பெறாதது, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக ரகசியமாக வைக்கப்பட்டது (அப்புறம் இது மட்டும் எப்படி தெரிஞ்சுது-னு கேக்குறீங்களா? நான் சொன்னது அந்த கண்டுபிடிப்போட வரைபடம், அடிப்படைக் கூறுகள் மாதிரியான விஷயத்த; கண்டுபிடிப்பை இல்ல), என அவரது கண்டுபிடிப்புகளின் (உண்மையில் அவர் கண்டுபிடிப்பு என நாம் நம்பிப் புகழும் பலவற்றை அவர் கண்டுபிடிக்காவிட்டாலும்!) பட்டியல் மிக நீ...ள...ம்...!


(தாமஸ் ஆல்வா எடிசன்)


(எடிசனின் நம்பிக்கை)


(எடிசனின் அவ்வியந்திரம் குறித்த செய்தித்துளிகள்)




(எடிசனின், அக்கருவியின் வரைபடம் எனக் கருதப்படும் வரைபடம்)


(அவ்வரைபடத்தினடிப்படையில் உருவாக்கப்பட்ட மாதிரி இயந்திரம்)

            இதேபோல, எடிசன் மற்றும் நிக்கோலா டெஸ்லாவுடன் (Nikola Tesla) இணைந்து பணியாற்றிய A.D.கான்ரோவ் (A.D.Conrow) என்பவர் ஆவிகளின் இருப்பிட உணர்தல் அறிவிப்புக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். (அப்போ உண்மையான வரைபடம் எங்க இருக்குனு எடிசனோட ஆவிய மீடியம் மூலமா கேட்டு, அந்த இயந்திரத்த உருவாக்க வேண்டியதுதானே-னு புத்திசாலித்தனமா ஏதும் கேள்வி கேட்டா, பதில் சொல்ல வேண்டியது ஆவியுலக நம்பிக்கையாளர்களோட கடமை. ஆனா, இதுவரைக்கும் யாரும் பதில் சொன்ன மாதிரி தெரியல.)

5.) தன்னிச்சையான எழுத்துகள்: (Auto[matic] Writing)
            மனதை ஒருமுகப்படுத்தி ஆவிகளை  (பெரும்பாலும் இறந்த முன்னோர்கள் அல்லது தாத்தா-பாட்டி போன்ற ரத்த சொந்தங்களையோ, நண்பர்களையோ) நினைத்து கைகளில் எழுதுகோலை தளர்வாக காகிதத்தின் மீது வைக்க அவைகள் நமது கையை யாரோ பற்றுவது போல தானாக எழுதத் துவங்கும்; கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதேபோல சம்பவங்களை, முன்பொரு பதிவில் கணிதமேதை இராமானுஜன், இரவில் தூக்கத்தில் எழுந்து தனது குறிப்பேட்டில், கனவில் தோன்றுவதை அனாயாசமாக எழுதுவது குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். இதுவும் ஏறத்தாழ அதுபோலத்தான். ஆனால் இது விழிப்புநிலையில் நிகழ்கிறது. கையெழுத்து நம்மூர் மருத்துவர்களின் கையெழுத்து போல, பல சமயங்களில் புரியாதவாறே இருக்கிறது. (இதைப் படிக்கும் மருத்துவ நண்பர்கள் மன்னிப்பார்களாக!)



(சில தன்னிச்சை எழுத்துகள்)


                      சரி. இவ்வாறான ஆவிகள் மூலம் நமது வாழ்க்கை பற்றி மட்டும்தான் கேள்வி எழுப்ப முடியுமா? விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் கேட்கக்கூடாதா? ஏனெனில் ஆவிகள் சக்தி படைத்தவை என்கிறார்களே! அந்த சக்தியின் மூலம் ஏதேனும் அறிவியல் ரீதியான, மருத்துவ ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படுத்த இயலுமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில்கள், அடுத்த பதிவில் வர இருக்கின்றன. அதற்கு முன், அடுத்த பதிவிற்கான ஒரு சிறு துவக்கம். இவ்வாறான தன்னிச்சை எழுத்துகள் எழுதும் ஒருவர் ஒருமுறை எழுதிய எழுத்துகள் விஞ்ஞான உலகையே குழப்ப ஆரம்பித்தது. அது என்ன? அறிந்துகொள்ள அடுத்தவாரம் வரை காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.



துணை நின்ற நூல்: World-Famous Prophesies & Predictions - Ashok Kumar Sharma.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Crystal_gazing
http://en.wikipedia.org/wiki/Ouija
http://en.wikipedia.org/wiki/Elijah_Bond
http://www.ghostwalks.com/ouijahowto-article.htm
http://en.wikipedia.org/wiki/Wenlock_and_Mandeville
http://en.wikipedia.org/wiki/List_of_Olympic_mascots
http://en.wikipedia.org/wiki/Thomas_Edison

1 comment: