Tuesday 9 December 2014

21.) ஆவிகள் ஆயிரம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               நமது கடந்த பதிவில் ஆவிகள் கனவில் வந்து வரும்பொருள் உரைப்பது குறித்த மிகச்சிறிய பதிவிட்டிருந்தேன். (கடந்த பதிவு உண்மையில் மிகச் சிறியதுதான். ஒப்புக்கொள்கிறேன்; அதற்காக மன்னிப்பும் வேண்டுகிறேன். பணிச்சுமையே அதற்குக் காரணம் நண்பர்களே. பதிவிட இயலாத சூழ்நிலை. இருப்பினும், என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, இன்றும் தொடர்கிறேன்; இனியும் தொடர்வேன். ஒருவேளை எனது பதிவிடும் காலத்தில் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதுகுறித்து முன்னரே  உங்களிடம் தெரிவித்துவிடுவேன் எனவும் உங்களுக்கு வாக்களிக்கிறேன்! ஒத்துழைப்பும் ஆதரவும் நல்குவீர்கள் என நம்புகிறேன். இனி நம் கதைக்கு வருவோம்.) 'ஆவிகள் கனவில் வருமா?' என்பது குறித்து ஆராயவேண்டுமானால் முதலில் ஆவிகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, 'இறந்த மனிதர்களின் ஆத்மாவே (உயிர்) ஆவியாக அலையும்' என்பது ஆவி சார்ந்த நம்பிக்கையுடைய மக்களின் அனுமானமாக இன்றளவும் உள்ளது. ஆனால் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் 4 பிரிவுகளில் ஆவிகளை வகைப்படுத்தியுள்ளனர். இது குறித்து 1951-ல் ஜி.என்.எம்.டைரல்  (G.N.M.Tyrrell) என்கிற பிரபல ஆவி ஆராய்ச்சியாளர் எழுதிய ஒரு புத்தகம், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப் பட்டதோடு, அறிவுப்பூர்வமான ஒன்றாகவும் இன்றளவும் கருதப்படுகிறது(!).


(ஜி.என்.எம்.டைரல்)


(டைரல் எழுதிய 'அப்பாரிஷன்ஸ்' [ஆவிகள்] என்கிற புத்தகம்)

                அவை,
  1. உயிரோடு இருப்பவர்களின் ஆவி,
  2. ஆபத்து நேர ஆவிகள்,
  3. சராசரி ஆவிகள்,
  4. நீண்டகால ஆவிகள்.

1.) உயிரோடு இருப்பவர்களின் ஆவி:
          அதாவது, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே, அவரது ஆவி ('பிம்பம்' என்றும் வைத்துக்கொள்ளலாம்), எங்கோ இருக்கும் இன்னொருவர் முன் தோன்றுவது. இதெப்படி சாத்தியம் எனத் தோன்றலாம். ஆனால், இவ்வாறான சம்பவங்கள் நடந்ததற்கு ஆதாரங்கள் உலகெங்கும் உள்ளன. 


              அவற்றில் முக்கியமான ஓர் உதாரண சம்பவம். 1993-ல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஒதுக்குப்புறமான ஒரு நகரிலுள்ள ஒரு பழைய பங்களாவில், ஒரு பெண்மணியின் ஆவி உலவுவதாகத் தகவல் வர, ஒரு ஆராய்ச்சிக்குழு அங்கு முகாமிட்டு ஆராய்ந்தது. அங்கிருந்த பலரும் ஒரு ஆவி, அங்கிருந்த வராண்டாவிலும், மாடிப் படிக்கட்டுகளிலும், படுக்கை அறையில் வளைய வந்ததையும், சில சமயங்களில் அப்பங்களாவின் அருகிலிருந்த ஏரியின் மேற்பரப்பில் மிதந்து மறைந்ததையும் கண்டனர்.

               அப்பங்களாவின் அருகில் வசித்த சிலரும், அவ்வாராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக உடனிருந்தனர். அதிலிருந்த சில முதியவர்கள், அவ்வுருவம் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்த ஒரு பெண்மணியின் சாயலில் இருப்பதாக அடித்துச் சொன்னார்கள். எனவே, ஆராய்ச்சியாளர்கள் அப்பெண்மணி குறித்து மேலும் விசாரித்ததில், அதிர்ச்சிகரமான ஒரு உண்மை தெரிய வந்தது. அது, அப்பெண்மணி அப்போது அப்பங்களாவிலிருந்து 500 மைல் தொலைவிலுள்ள  ஒரு வீட்டில் உயிரோடு இருந்தார்! ஆனால், நோய்வாய்ப்பட்டு, கோமா நிலையில்! 

                அப்பெண்மணியின் குடும்பம் குறித்து விசாரித்தபோது, அவர்களது குடும்பம் வாழ்ந்து கேட்ட குடும்பம். அவர் பிறந்து வளர்ந்த அந்த பங்களாவை விட்டு, குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழ்நிலை. இருப்பினும் அவர் அவ்வீட்டின் மீது கொண்ட அன்பு, அவரது எண்ண அலைகளை அவரது ஆழ்மனம் அவரது ஆவியை அவர் விரும்பிய பங்களாவில் உருவாக்கியிருக்கிறது. உண்மையில் அது சாத்தியமா?! சாத்தியம் என்றே சொல்கின்றனர், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள். (அதன் விளக்கங்கள் குறித்து பின்னர் காண்போம்.)

2.) ஆபத்து நேர ஆவிகள்: (Crisis Apparitions)
                 நமக்கு பரிச்சயமான ஒருவர் இறக்கும் தருணத்திலோ, அல்லது இறந்த உடனோ நம்முன் ஆவியாகத் தோன்றுவது. கடந்த பதிவில் கண்ட, திருமதி.ஸ்பியர்மேனின் (Mrs.Spearman) சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

3.) சராசரி ஆவிகள்:
                 பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலான ஆவி. இறந்த ஒருவரின் ஆவி. எப்போதாவது தோன்றுவது, நடமாடுவது போன்ற வகை.


4.) நீண்டகால ஆவிகள்:
                 பாழடைந்த வீடுகள், பழைய கோட்டைகள் போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக உலவும், வேறெங்கும் செல்லாத புராதான பேய்கள். நமது நாட்டு மன்னர்களின் ஆன்மாக்கள் சில கோட்டைகளில் உலவுவதாகவும் நம்பிக்கைகள் உண்டு. எகிப்திலுள்ள பிரமிடுகளிலும் அந்நாட்டு அரசர்கள் உலவுவதாக அவர்களும் நம்புகின்றனர். ஹிட்லரின் (Hitler) ஆவி இன்னும் ஜெர்மனியின் சில இடங்களில் உலவுவதாக உலகில் பெரும்பாலான ஆவி நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மைக்கேல் ஜாக்சனும் (Michael Jackson) இந்த வரிசையில் புதுவரவாக(!) இணைந்துள்ளார். (ஐயா... அப்டியே எங்க ஊருக்கும் வந்து ஒரு ஆட்டம் போடுங்க... நாங்களும் எவ்ளோ நாளைக்குதான் இந்த மோகினிப் பிசாசுங்களோட ஒரே மாதிரியான பேயாட்டத்தையே பாக்குறது..!!!)


                 அவைகளைப் (அதாவது, ஆவிகளைப்) பற்றிய விமர்சனங்கள் குறித்து அடுத்த பதிவில் காண்போம். இப்பதிவில், மேற்கண்ட சில சம்பவங்களுக்கான காரணங்கள் என ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றிக் காண்போம். அதற்குமுன், தற்கால ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளை நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரித்ததுபோல், விவிலியப் (பைபிள்) பிரசித்தி பெற்ற மன்னர் சாலமன் ஆவிகளை 72 வகைகளாகப் பிரித்துள்ளார். தனது "லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்" (Lesser Key of Solomon) என்கிற புத்தகத்தில் அது பற்றி விவரிக்கிறார். (அப்புத்தகம் இன்னும் என் கைகளில் கிடைக்கவில்லை... கிடைத்தால் இன்னும் நிறைய பகிரலாம்..!)

                 மன்னர் சாலமன் சாமான்யமானவர் அல்ல. அவரது பெயரை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நமது வருங்கால பதிவு ஒன்றில் ஏற்படப்போகும் மாபெரும் திருப்பத்தின் மிகமுக்கிய காரணகர்த்தாக்களில் இவரும் அதிமுக்கியமானவர். (கவனிக்க: நான் இப்பதிவுகளில் பதிவிடும் ஒவ்வொரு படங்களிலும் நிச்சயம் ஒரு குறியீடுகள் அல்லது அடையாளங்கள் இடம்பெறும். இதுநாள்வரையிலான பதிவுகளிலும் அவ்வாறே! ஒருவேளை, இதுநாள் வரை கவனிக்காதவர்கள் யாரேனும் இருந்தால், மீண்டும் ஒருமுறை அனைத்து பதிவுகளின் படங்களையும் பார்த்துவிடுங்கள். இன்று இல்லாவிட்டாலும், மிகமுக்கிய பதிவுகளில் அவை சுட்டிக் காட்டப்படும். அதேபோல், எனது பதிவில் இடம் பெற்ற அனைத்து படங்களிலும் அத்தகைய துப்புகள் இருக்கும் என்றும் நான் கூறவில்லை. மனதில் வைத்து மேலும் தொடருங்கள்.)


(மன்னர் சாலமன்)


(விவிலியத்தில் மன்னர் சாலமன் குறித்து)


('லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்' புத்தகம்)


('லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவிகள்)

                 அதெல்லாம் இருக்கட்டும். இப்படி பேய்களைப் பற்றிப் பக்கம் பக்கமாகக் கதை சொல்வது காலம் காலமாக இருந்து வருகிறது. தற்காலத்தில் விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகள் ஏதேனும் ஆவிகள் குறித்த சாத்தியக்கூறுகளுக்கு வித்திட்டனவா? என்கிற உங்களின் கேள்விக்கு, ஒரு சர்வதேச கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியையே பதிலாக வைக்கிறேன். அதற்கு முன் வாசகர்களின் நலம் கருதி ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு. நீங்கள் இதயம் பலவீனமானவராக இருந்தாலோ, பயந்த சுபாவமுடையவராக இருந்தாலோ, இதற்குப் பின் வரும் தகவல்களை, இரவிலோ அல்லது தனியாக இருக்கும்போதோ படிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன். இது மிரட்டல் அல்ல, உங்கள் நலன் சார்ந்த அக்கறை மட்டுமே. (நீங்கள் தற்போது வாசிக்கும் இவ்வரியை நான் தட்டச்சு செய்யும்போது, இரவு 1 மணி 40 நிமிடம்.)

"நீங்கள் விழிப்போடு தனியாக இருக்கும்போது, என்றைக்காவது, எங்கேயாவது, யாரேனும் அல்லது ஏதேனும் உங்களைத் தொடுவது போலவோ, அருகில் நடமாடுவது போலவோ, உங்களிடம் மட்டும் யாரோ பேசுவது போலவோ உணர்ந்திருக்கிறீர்களா?
வேறு காரணங்கள் எதுவுமில்லாமல்  (External Cause) அது தானாகவே நிகழ்ந்ததுபோல அந்த 'அனுபவம்' இருக்க வேண்டும். அவசரப்படாமல் நன்றாக யோசியுங்கள்!"

                 இப்படி ஒரு கேள்வியை, லண்டனில் உள்ள, பரவலான மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இயக்கமான SPR (Society for Psychical Research), (1882-லேயே) 17,000 நபர்களுக்கு அனுப்பி, ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 15,316 நபர்கள் பதிலனுப்பியிருந்தனர். அதில் 10 சதவிகிதத்தினர் "ஆமாம்" என பதிலளித்திருந்தனர். (வாசகர்களும் இதை உங்கள் முன் வைக்கப்பட்ட கேள்வியாக எண்ணி, இப்பதிவின் கீழ் பதிலளித்தாலும் மகிழ்ச்சிதான்!) "அட போப்பா... அதான் 90 சதவீதம் பேரு இல்ல-னு சொல்லிட்டாங்கல்ல... அப்புறம் என்ன..?!" என நீங்கள் கேட்கலாம். கேட்கப்பட்ட கேள்வி சாதாரணமான சம்பவத்தைப் பற்றியது அல்ல; அசாதாரணமான நிகழ்வு பற்றியது என்பதை நினைவில் கொள்க. மேலும், இத்தகைய ஒன்று அனைவருக்கும் நடந்தால் அது சுவாரஸ்யமானதாகவோ அல்லது அசாதாரணமானதாகவோ இருக்காது என்பதையும் கருத்தில் கொள்க. அத்துடன் இத்தகைய அரிதானதோர் அனுபவத்தைப் பற்றிய கேள்விக்கு சாதகமாகக் கிடைத்துள்ள 10 சதவிகித வாக்குகள் உண்மையில் குறைந்த எண்ணிக்கை அல்ல! இன்னொரு முக்கியமான விஷயம், அவ்வாறு "ஆமாம்" என பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்! ஆவிகளிடம் பேசக்கூடியவர்களாக நம்பப்படும் மீடியம்-களில் (Medium) ஆண்களை விட பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ("இனம் இனத்தைச் சேரும்"-னு நீங்க நினைக்குறது எனக்குப் புரியுது... நீங்கபாட்டுக்கு நினைச்சுட்டு போய்டுவீங்க... இப்போ இத நானே இட்டுகட்டி எழுதின மாதிரி-ல நினைப்பாங்க!!!) 

                  அப்படியானால், ஆவிகள் உண்மையா? பேய் இருக்கிறதா? (கதை மட்டும் கேக்கணும்...நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்..!) ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போதே ஆவியாக முடியுமா? போன்ற பல தலைசுற்றும் கேள்விகளோடு காத்திருங்கள், அடுத்த வாரம் வரை. (இதைப் படிக்கிற ஆர்வத்துல உங்க பின்னாடி நிக்கிற உருவத்த கண்டுக்காம இருந்திடாதீங்க..! அவசரப்பட்டு திரும்பிடாதீங்க, அது மறைஞ்சிடும்...!!!)

அதுவரை நன்றிகளுடன்,
                      - அயலான்.



துணை நின்ற நூல்:
மனிதனும் மர்மங்களும் - மதன்.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:
http://es.wikipedia.org/wiki/George_NM_Tyrrell
http://paranormalistics.blogspot.in/p/types-of-ghosts-and-spirits.html
http://en.wikipedia.org/wiki/Solomon

2 comments:

  1. Never. I dint experience. . .neraya try paniruken. Bt cant find. . Macha I m 100% sure AAVI PEI lam ilada. . Dont waste time. . .

    ReplyDelete
    Replies
    1. //இத்தகைய ஒன்று அனைவருக்கும் நடந்தால் அது சுவாரஸ்யமானதாகவோ அல்லது அசாதாரணமானதாகவோ இருக்காது என்பதையும் கருத்தில் கொள்க. //

      This line is for the people whoever have the similar thoughts like you mapla... I know that how deeply you tried.. and I'm not doing any researches related to any Paranormal activities like this... But My blog lead me to make my visitors to know also about this, for the necessary upcoming uploads... This is not the major area I' trying to cover... But it'll give an another vision to the AYALAANATORS to guess and also to know some new ways... Thats it my pal..!

      Delete