Wednesday 24 December 2014

23.) ஆவிகளுக்கோர் அழைப்பு...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               நமது கடந்த பதிவில் ஆவிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் என நம்பப்படும் சில விஞ்ஞானப்பூர்வமான  தகவல்களைக் கண்டோம். இப்பதிவில் அவ்வாறான ஆவிகள் இருந்தால் அவற்றோடு பேசுவதற்காக மனிதகுலம் மேற்கொண்ட பிரயத்தனங்களையும், வழிமுறைகளையும், அதற்காக உருவாக்க முனைந்த கருவிகள் / இயந்திரங்கள் (Devices / Machines) குறித்தும் இப்பதிவில் காண்போம்.

               ஆதிகாலந்தொட்டே ஆவிகளுடன் உரையாடுவதில் ஒரு அலாதியான ஈடுபாடு இருந்துவருகிறது. ஆரம்பகாலத்தில், ஆவிகளுடன் தொடர்புகொள்ள மந்திரவாதிகள் (Wizards), சூனியக்காரிகள் (Witches) போன்ற நபர்களை நாடுவதென்பது விட்டலாச்சாரியார் காலந்தொட்டு தற்கால ஹாரி பாட்டர் யுகம் வரை தொடர்கிறது. அதிலும் மந்திரவாதிகள் என்றால் (நம்மூரில்) சடைபிடித்த முடி, நீண்ட தாடி, மந்திரங்களை உச்சரிக்கும் உதடுகள், கையில் மந்திரக்கோல், கணீரென்ற குரல், (பெரும்பாலும்) சாத்தானை (சமயங்களில் காளியை) வணங்குதல் போன்ற பணிகளையும்(!), பில்லி. சூனியம், ஏவல், மாந்திரீகம் போன்றவற்றை தொழிலாகவும்(!!!) செய்யும் குகை / மலைவாசிகள் போன்றும், அதுவே சூனியக்காரிகள் என்றால் (மேலை நாடுகளில்) பெரும்பாலும் கிழவிகளாகவும், கர்ண கொடூரமான குரலும், கூரிய வளைந்த மூக்கும், அருவருப்பான முகமும், பாதி விழுந்த பற்களும், மீதி பொக்கை வாயும், தோல் சுருங்கிய கைகளும், அதில் அழுக்கு படிந்த கூரிய, வளைந்த நகங்களும், தலைவிரி கோலமாய், தலைமேல் கருப்பு நிறத் தொப்பியும், கைகள் மட்டும் வெளியில் தெரியுமளவிற்கு கருப்பு நிற அங்கியும், கையில் ஒரு நுனி வளைந்த தடியோ அல்லது பறக்கும் சக்திவாய்ந்த துடைப்பமோ வைத்துக் கொண்டு, ஊரின் ஒதுக்குப்புறத்தில், வௌவால்கள் வாழும் பாழடைந்ததோர் தனி வீட்டில் வசிப்பது போன்றும், அவர்கள் தீயவர்கள், பல உருவங்கள் எடுப்பவர்கள், நம்மை அடிமையாக மாற்றிவிடுவர், விலங்குகளாக உருமாற்றிவிடுவர், என நமது பாட்டி காலந்தொட்டே நம்மிடையே உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். (அடேங்கப்பா...எவ்ளோ நீ...ளமான வாக்கியம்!) நமக்கும் அது பழகிவிட்டது. (ஆனால் உண்மையில் ஹாரி பாட்டரும் (Harry Potter), நார்நியாவும் (Narnia) இத்தகு அடிப்படை உருவகங்களைத் தகர்த்தெறிந்தன. [ஹாரிபாட்டர் புத்தகத்தை முதன்முதலாக வெளியிடும் முன் அக்கதையின் ஆசிரியரான J.K.ரௌலிங் (J.K.Rowling) ஒரு கைரேகை ஜோதிடரிடம் கூறி, தான் புத்தகம் எழுதினால் நன்றாக விற்குமா? எனக் கேட்க, அந்த ஆசாமியோ, நிச்சயம் விற்காது என அடித்துக் கூறியுள்ளான். இப்போது அவர்கள் புத்தக விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. 'அப்படியானால், ஜோதிடம் பொய்யா?' (அ.இ.ப.கா.-[அதுபற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்])]) எனினும் ஆவிகளுடன் பேசவேண்டுமென்பது இவர்கள் இருவரின் (அல்லது இரு பிரிவினரின்) உதவியின்றி தனியொருவராக, சாதாரண நபராக செய்ய வேண்டும் என்கிற பல முயற்சிகளில் நிறைய வழிகளைக் கையாண்டனர். அவற்றுள் சிலவற்றை இனி காண்போம்.


(நம் நாட்டு மந்திரவாதி, ஒரு உதாரண உருவகம்)


(மேலைநாட்டு மந்திரவாதி, ஒரு உதாரண உருவகம்)


(துடைப்பத்தில் பறக்கும் மேலை நாட்டு சூனியக்காரி, ஒரு உதாரண உருவகம்)


(மேலை நாட்டு சூனியக்காரியின் விகார முகம், ஒரு உதாரண உருவகம்)
(ப்ப்பா...!!!)

1.) கிறிஸ்டல் பந்து: (Crystal Gazing)
               ஒரு கிறிஸ்டல் பந்தின் மீது கை வைத்து, ஆவிகளை மனதில் நினைத்து அவற்றோடு பேசுவது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இவ்வகையில் மீடியம்களாக செயலாற்றுகின்றனர். (ஆவிகளைத் தொடர்புகொள்ள  உதவும் மனிதர்கள், 'மீடியம்கள்' (Medium) என அழைக்கப்படுகின்றனர்). இவ்வாறு அவர்கள் கூறுவது பலிக்குமா? பலித்திருக்கிறதா? (அ.இ.ப.கா.)


(கிறிஸ்டல் பந்து)


(ஆண் - பெண் கிறிஸ்டல் பந்து ஞானிகள்)


2.) ஒய்ஜா பலகை: (Ouija Board)
               ஜூலை-1, 1890-ம் ஆண்டு அமெரிக்க ஆவியுலக ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான எலிஜா பாண்ட் (Elijah Bond) என்பவரால் வணிக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட, எண்களும் எழுத்துகளும் அடங்கிய பலகையே "ஒய்ஜா பலகை" (Ouija Board) என அழைக்கப்படுகிறது. ஆவிகளுடன் இதன் மூலம் சில வழிமுறைகளைப் பின்பற்றி பேச இயலும் என இன்றளவும் பல ஆவியுலக ஆராய்ச்சியாளர்களும், நம்பிக்கையாளர்களும் கூறுகின்றனர். அவை கூறும் பதில்களை, அப்பலகையோடு இணைப்பாக வரும் 'பிளாஞ்செட்' (Planchette) எனும் ஒரு நகர்த்தி, ஆவிகளிடம் நாம் கேள்வி கேட்கும்போது தானாக நகர்ந்து சரியான பதிலைக் காட்டும் எனவும் தெரிவிக்கின்றனர். (இதுபோன்ற ஆவிகளை அழைப்பதிலோ, அல்லது ஆவிகள் குறித்து அறிந்துகொள்வதிலோ எனக்கு ஆர்வமில்லாத காரணத்தால், இவற்றை இங்கு நான் விரிவாக விளக்கவில்லை. ஆனால் பின்னிணைப்புகள் செய்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் அதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.)


(ஒய்ஜா பலகை)


(பிளாஞ்செட்)


(பதில் கிடைக்கும் விதம்)


(விதிமுறைகள்)


(பயன்படுத்தும் முறை)
(பின்குறிப்பு: (^)இந்தப் படத்துல பேயைக் காட்டல!)


3.) மந்திரக் குறியீடுகளும், அது சார்ந்த புத்தகங்களும்: (Witchcrafts and Black Magic)
               இது பொதுவாக பலருக்கும் தெரிந்த வழிமுறை தான். மந்திரங்கள் மூலமோ, மந்திரக்குரியீடுகள் மூலமோ ஆவிகளை அழைத்து, அழைத்ததன் தலையாய நோக்கமான வருங்கால நிகழ்வுகளையும், நிகழ்கால சம்பவங்களின் காரணங்களையும், கடந்தகால வரலாறுகளையும் கேட்பது. இதில் ஒவ்வொரு விதமான பேய்க்கும் ஒரு குறியீடு உண்டு என்றும் சொல்கிறார்கள். (ஆதாரத்திற்கு, "ஆவிகள் ஆயிரம்" பகுதியில் பதிவிட்ட, சாலமன் மன்னர் குறிப்பிட்ட 72 ஆவிகளின் அடையாளக் குறியீடுகளைக் கீழே காண்க.)


(சாலமன் மன்னர் குறிப்பிட்ட 72 ஆவிகளின் அடையாளக் குறியீடுகள்)

                 இம்முறையில், லண்டனுக்கு (London) அருகாமையிலுள்ள மோர்ட்லேக் (Mortlake) எனும் கிராமத்தில், ஜூலை-13, 1527-ல் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த "ஜான் டீ" (John Dee) என்பவர் சிறந்த வல்லுனராகத் திகழ்ந்தார். சிறுவயது முதலே படிப்பார்வமுள்ள ஜான், 15 வயதில் கேம்ப்ரிட்ஜ் கல்லூரியிலும் (Cambridge &University), 20 வயதில் ட்ரினிட்டி கல்லூரியிலும் (Trinity College) பயின்றார். 1554-ல், அப்போதைய ராணியான மேரி ட்யூடர் (Mary Tudor) விரைவில் இறந்துவிடுவார் என்றும், அதன்பின் மகாராணியின் தங்கை முறையான, முதலாம் எலிசெபத் (Queen Elizabeth I) பட்டத்திற்கு வருவார் என்றும் சொன்னார். இவ்வாறான வெளிப்படையான அறிவிப்பு, ராணியை பீதிக்குள்ளாக்க, எதிரி நாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின்பேரில் 1554-ல் கைது செய்யப்பட்டார். இவ்வாறான அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்கள் அக்காலத்தில் உயிருடன் கொளுத்தப்படுவார்கள். நல்ல வேளையாக, இவர் நிரபராதி என தெரிந்ததால், 1555-ல் உயிருடன் விடுதலையானார். பின்னர் இளவரசிக்கு தனது ஆரூடம் குறித்து எழுதிய தனிப்பட்ட கடிதம், உளவாளிகள் மூலமாக, ராணியின் கைக்குச் செல்ல, மீண்டும் சிறை அவரை வரவேற்றது. ஏனோ சில காலத்திலேயே காரணமேதுமின்றி விடுவிக்கப்பட்டார். இது இன்றுவரை புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. (எப்படி  எந்த நிபந்தனையும், தண்டனையும் இல்லாம, அவரை விடுதலை பண்ணினாங்க..?!) சில காலங்களில் இவர் கூறியது போலவே நடந்துவிட, முதலாம் எலிசெபெத், பன்முகத் திறமையாளரான இவரை அரசாங்கத்தின் ஆஸ்தான ஜோதிடராகவும், தனது தனிப்பட்ட உளவாளியாகவும் சகலவித மரியாதைகளுடன் வலம் வந்தார். அப்போதுதான் எட்வார்ட் கெல்லி (Edward Kelly) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இருவரும் ஆவிகளை மந்திரக் குறியீடுகள் மூலம் வரவழைத்து குறி கேட்பர். பின்னாளில், ஏதோ சில கருத்து வேறுபாடு காரணமாக கெல்லி, ஜானை 1587-ல் பிரிந்து சென்றுவிட்டார். இவர் தனது தீர்க்கதரிசனங்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், உலகில் மிக சிலருக்கு மட்டுமே தெரியும் வண்ணம், வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட தீர்க்கதரிசிகளில் முக்கியமானவர், இந்த ஜான் டீ. 


(அரசவையில் ஜான் டீ)


(மந்திர வளையத்தினுள் நின்றவாறு ஆவிகளுடன் பேசும் எட்வார்டு கெல்லியும், கையில் தீப்பந்தத்துடன் ஜான் டீயும்)


                இவரைப்பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவெனில், ஜான் உளவாளியாக வேலைபார்த்த போது அவருக்கு ஒரு ரகசியக் குறியீடு எலிசெபெத் ராணியால் வழங்கப்பட்டது. அது, தற்போது மிகப் பிரபலமான 007..! இவரது வரலாற்றைப் படித்த பின்னர்தான், தனது கற்பனைக் கதாப்பாத்திரமான, இங்கிலாந்து உளவாளி ஜேம்ஸ் பாண்டிற்கு (James Bond), அந்த என்னையே ரகசிய எண்ணாக வைக்க அப்புனைகதையின் ஆசிரியரான இயன் ஃபிளெமிங் (Ian Fleming) முடிவு செய்தார்.


              மேலும் அவரது 'ஈசொடெரிக்' (Esoteric) குறியீடை ஒத்த ஒரு உருவமைப்பு ('வென்லாக்' [Wenlock]), தற்போது நடைபெற்ற 2012-ம் ஆண்டு (உலகம் அழியப்போகிறது, என பீதியைக் கிளப்பிய ஆண்டு) ஒலிம்பிக் போட்டியின் அடையாளமாக வெளியிடப்பட்டது. (ஆனால், உண்மையில் அவ்வுருவம், இவரது அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை).


(ஜான் டீ உருவாக்கிய குறியீடு, அவரது கண்ணோட்டத்தில்)


(ஈசோடெரிக் குறியீடும், வென்லாக் பொம்மையும் ஒரு ஒப்பீடு)


(2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக உருவாக்கப்பட்ட 'மாஸ்காட்' [Mascots] பொம்மைகள்)

4.) ஆவிகளுடன் பேச உதவும் இயந்திரங்கள் / கருவிகள்:
               
                ஆவிகள் உண்மையில் சைக்கான்கள் (Psychons) என்கிற செல் (Cell) போன்ற அமைப்பால் உருவான ஒன்றாக இருந்தால், நிச்சயம் அதை காணவோ, உணரவோ, தொடர்புகொள்ளவோ இயலும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அவ்வாறு எண்ணம் உதித்த நாள்முதல், வெப்பசலனக் கருவி (Thermal Detector), மின்காந்த அலை உணர்வி (Electromagnetic Sensors), இருட்டிலும் படமெடுக்கும் கருவி (Night Vision Cameras) என சகலத்தையும் முதுகில் சுமக்க ஆரம்பித்தது மனிதகுல ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குழு.

               இதே போல, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் ஆவிகளுடன் தொடர்புகொள்ள ஒரு இயந்திரத்தை உருவாக்க முயன்றார். அவர், வேறு யாருமல்ல, இருளைப் போக்க உதவிய, தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alwa Edison) தான்..! இருளைப் போக்கிய அவரே, இருட்டில் இருக்குமென, நம்மில் பலர் அஞ்சும் ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் இயந்திரத்தை வடிவமைக்க முயன்றார். ஏனோ, அவரது ஆசை முழுமையடையும் முன் இறந்து அவரும் ஆவியாகிவிட்டார். (ஆவி நம்பிக்கையாளர்களின் கண்ணோட்டத்தில்!) எடிசனின் வடிவமைப்பு வரைபடங்களின் சிறப்பு என்னவெனில், அவர் குறித்துக்கொடுத்ததை அவ்வாறே செய்தால், அது நிச்சயம் முழுமைபெறும்; மிகத்துல்லியமாக இயங்கும். சிக்கல் என்னவென்றால், இப்போது அவ்வரைபடம் எங்கிருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. எடிசன் காப்பீடு பெற்ற கண்டுபிடிப்புகள் மொத்தம் 1093. அதுமட்டுமல்லாது, காப்பீட்டிற்காக பதிந்திருந்தது, காப்பீடு பெறாதது, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக ரகசியமாக வைக்கப்பட்டது (அப்புறம் இது மட்டும் எப்படி தெரிஞ்சுது-னு கேக்குறீங்களா? நான் சொன்னது அந்த கண்டுபிடிப்போட வரைபடம், அடிப்படைக் கூறுகள் மாதிரியான விஷயத்த; கண்டுபிடிப்பை இல்ல), என அவரது கண்டுபிடிப்புகளின் (உண்மையில் அவர் கண்டுபிடிப்பு என நாம் நம்பிப் புகழும் பலவற்றை அவர் கண்டுபிடிக்காவிட்டாலும்!) பட்டியல் மிக நீ...ள...ம்...!


(தாமஸ் ஆல்வா எடிசன்)


(எடிசனின் நம்பிக்கை)


(எடிசனின் அவ்வியந்திரம் குறித்த செய்தித்துளிகள்)




(எடிசனின், அக்கருவியின் வரைபடம் எனக் கருதப்படும் வரைபடம்)


(அவ்வரைபடத்தினடிப்படையில் உருவாக்கப்பட்ட மாதிரி இயந்திரம்)

            இதேபோல, எடிசன் மற்றும் நிக்கோலா டெஸ்லாவுடன் (Nikola Tesla) இணைந்து பணியாற்றிய A.D.கான்ரோவ் (A.D.Conrow) என்பவர் ஆவிகளின் இருப்பிட உணர்தல் அறிவிப்புக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். (அப்போ உண்மையான வரைபடம் எங்க இருக்குனு எடிசனோட ஆவிய மீடியம் மூலமா கேட்டு, அந்த இயந்திரத்த உருவாக்க வேண்டியதுதானே-னு புத்திசாலித்தனமா ஏதும் கேள்வி கேட்டா, பதில் சொல்ல வேண்டியது ஆவியுலக நம்பிக்கையாளர்களோட கடமை. ஆனா, இதுவரைக்கும் யாரும் பதில் சொன்ன மாதிரி தெரியல.)

5.) தன்னிச்சையான எழுத்துகள்: (Auto[matic] Writing)
            மனதை ஒருமுகப்படுத்தி ஆவிகளை  (பெரும்பாலும் இறந்த முன்னோர்கள் அல்லது தாத்தா-பாட்டி போன்ற ரத்த சொந்தங்களையோ, நண்பர்களையோ) நினைத்து கைகளில் எழுதுகோலை தளர்வாக காகிதத்தின் மீது வைக்க அவைகள் நமது கையை யாரோ பற்றுவது போல தானாக எழுதத் துவங்கும்; கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதேபோல சம்பவங்களை, முன்பொரு பதிவில் கணிதமேதை இராமானுஜன், இரவில் தூக்கத்தில் எழுந்து தனது குறிப்பேட்டில், கனவில் தோன்றுவதை அனாயாசமாக எழுதுவது குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். இதுவும் ஏறத்தாழ அதுபோலத்தான். ஆனால் இது விழிப்புநிலையில் நிகழ்கிறது. கையெழுத்து நம்மூர் மருத்துவர்களின் கையெழுத்து போல, பல சமயங்களில் புரியாதவாறே இருக்கிறது. (இதைப் படிக்கும் மருத்துவ நண்பர்கள் மன்னிப்பார்களாக!)



(சில தன்னிச்சை எழுத்துகள்)


                      சரி. இவ்வாறான ஆவிகள் மூலம் நமது வாழ்க்கை பற்றி மட்டும்தான் கேள்வி எழுப்ப முடியுமா? விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் கேட்கக்கூடாதா? ஏனெனில் ஆவிகள் சக்தி படைத்தவை என்கிறார்களே! அந்த சக்தியின் மூலம் ஏதேனும் அறிவியல் ரீதியான, மருத்துவ ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படுத்த இயலுமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில்கள், அடுத்த பதிவில் வர இருக்கின்றன. அதற்கு முன், அடுத்த பதிவிற்கான ஒரு சிறு துவக்கம். இவ்வாறான தன்னிச்சை எழுத்துகள் எழுதும் ஒருவர் ஒருமுறை எழுதிய எழுத்துகள் விஞ்ஞான உலகையே குழப்ப ஆரம்பித்தது. அது என்ன? அறிந்துகொள்ள அடுத்தவாரம் வரை காத்திருங்கள்.

அதுவரை நன்றிகளுடன்,
                         - அயலான்.



துணை நின்ற நூல்: World-Famous Prophesies & Predictions - Ashok Kumar Sharma.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Crystal_gazing
http://en.wikipedia.org/wiki/Ouija
http://en.wikipedia.org/wiki/Elijah_Bond
http://www.ghostwalks.com/ouijahowto-article.htm
http://en.wikipedia.org/wiki/Wenlock_and_Mandeville
http://en.wikipedia.org/wiki/List_of_Olympic_mascots
http://en.wikipedia.org/wiki/Thomas_Edison

Thursday 18 December 2014

22.) பேய்கள் பலவிதம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               நமது கடந்த பதிவில் ஆவிகள் மற்றும் அதன் வகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம், அதுபற்றிய மேலும் சில தகவல்களையும், விஞ்ஞானம் அதற்குத் தரும் விளக்கங்களையும் காண்போம்.

               நமது உடலில் நமது கண்களுக்கு (நுண்ணோக்கியில் காணுமளவிற்கு) புலப்படும் வண்ணம் செல்கள் (Cells) எவ்வாறு அமைந்துள்ளதோ, அதேபோல 'சைக்கான்கள்' (Psychons) என்கிற ஆற்றல் செல்களும் நமது உடலில் உண்டு என்கின்றனர் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் (Paranormal Researchers).


               சிலருக்கு அவ்வாற்றல் மூலமானது, தன்னிச்சையாகவோ, அவர்களையறியாத ஏதேனுமோர் விபத்திலோ விழிப்புற்று இயங்கத் தொடங்கும் (அவ்வாறு நடப்பது சாத்தியமா என்பதை வரும் பதிவுகளில் காண்போம்). அத்தகு கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒரு மனிதன் கற்றுக்கொண்டால், அவன் தற்போது அமானுஷ்யமாகக் கருதப்படும் பலவற்றையும், திறமையாகக் கற்றுக்கொண்ட ஒரு கலையைப் போல கையாள்வான். பலருக்கும் அது வசப்படும்போது, அது சக்தியாகத் தெரியாது, அறிவாகத் தெரியும், என்பதும் அவர்களது நம்பிக்கை. இதுநாள்வரையில் கற்பனையாகவும், மந்திரம் போலவும், அமானுஷ்யம் போலவும் தோன்றிய பல விஷயங்களும் பின்னாளில் அறிவியலால் நிரூபிக்கப்பட்டபின், சாத்தியமான ஒன்றாகவும், அறிவியலின் ஒரு கூறாகவும் மாறிய கதை அனைவரும் அறிந்ததே. உதாரணம், மனிதன் பறக்கக் கற்றது. ஆரம்பகாலத்தில் மந்திரவாதிகளால் மட்டுமே (சரி, சக்தி பெற்றவர்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்) சாத்தியம் எனக் கருதப்பட்ட மனிதனின் ஆழ்மன ஆசை, கைவந்த பின் அது அறிவியலயாகி, இன்று மனிதகுலத்தின் அத்தியாவசியத் தேவையுமாகிவிட்டது. (இவ்வாறான ஆற்றலை, தியானத்தின் மூலம் வெளிக்கொணர முடியுமென்றும், சித்தர்களும், ஜீவசமாதியடைந்த மகான்களும் இவ்வாறு செய்யவல்லவர்கள் என்பதும் ஆன்மீக நம்பிக்கையாளர்கள் கருத்து. எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தைக் கேட்டால், "எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், அது நம்மைப்போன்ற சக மனிதனுக்கும் கிடைக்கும் சாத்தியக்கூறுள்ள சக்தி/கலை என்கிற அளவில் மகிழ்ச்சியே!")


               மூளையின் பலகூறுகளை மனிதஇனம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதபோது, இவர்களின் கூற்று உண்மையாக இருந்தால், உண்மையில் நன்றாக இருக்கும். அவர்களுமேகூட இவ்வாறு நம்பக்காரணம், நமது மூளையிலுள்ள (ஏறத்தாழ) 200 கோடி செல்களில் (சராசரியாக) 3000 செல்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அந்த 200 கோடி செல்களையும் தூண்டிவிட்டால், மேற்கூறிய திறன்கள் கைவரப்பெறலாம் என்றும் நம்புகின்றனர். மேலும், இதுவரை உலகிலேயே மூளையின் அதிக பகுதிகளை உபயோகித்த மனிதர் என ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைக் (Albert Einstein) குறிப்பிடுகின்றனர். அத்துடன், ஐசக் நியூட்டனோடு (Isaac Newton) ஒப்பிட்டால் ஐன்ஸ்டீன் ஒன்றும் அவ்வளவு திறமையானவர் அல்ல என்றும் குறிப்பிடுகின்றனர். (இவைகுறித்த விரிவான விளக்கங்களை இனிவரும் பதிவுகளில் காண்போம், இப்போது நம் கதைக்கு வருவோம்.)


(நியூட்டனும், ஐன்ஸ்டீனும்)

                பொதுவாகவே ஆவிகள் அல்லது பேய்கள் குறித்து பல்வேறுவிதமான கருத்துகளும், அவற்றின் உருவமைவு குறித்த அனுமானங்களும் மனித இனம் பயத்தை உணர்ந்த காலந்தொட்டே பல்வேறு விதத்திலும் வளர்ந்து வருகிறது. அவற்றில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பொதுவான அம்சங்கள் என எடுத்துக்கொண்டால்,
  1. ஆவி என்பது முப்பரிமாண [3 Dimensional] தோற்றமுடைய, மங்கலான [Out-of-focused] ஒரு உருவம்.
  2. அவைகளுக்குக் கதவு, சுவர் போன்ற எவ்வித தடையும் ஒரு பொருட்டல்ல, எதனுள்ளும் புகுந்து வரும் சக்தியுடையவை/தன்மையுடையவை. (இருந்தாலும் ராத்திரி நேரத்துல பேய் பயம் வந்தா, போர்வையால முகத்த முழுசா மூடிகிட்டு ஏன் தூங்குறாங்கனு எனக்கு இன்னும் புரியல!)
  3. அதன் கால்கள் தரையில் படாது அல்லது அதற்கு கால்கள் கிடையாது என சொல்லப்பட்டாலும், சிலசமயங்களில் கால்கள் கண்களுக்குத் தெரியும்.
  4. சிலசமயங்களில் அவை பேசும். உதடுகளில் அசைவில்லாவிட்டாலும் நமது காதில் ஒலி கேட்கும்.
  5. மனிதனின் கண்களுக்குத் தெரியும் முன்பே, நாய், பூனை, குதிரை போன்ற விலங்கின் கண்களுக்குத் தெரியும். அவை எழுப்பும் வினோத ஒலி மற்றும் நிலைகொள்ளாமல் அலைவது போன்றவற்றின்மூலம் இதை அறியலாம்.
  6. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தோன்றும். (சினிமாக்களில், அதை வெள்ளை உடையாகக் காட்சிப்படுத்தியிருப்பர்
  7. ஆவிகள் 'பெரும்பாலும்' பலரின் கண்களுக்கு ஒரே சமயத்தில் தோன்றுவதில்லை.
  8. சுற்றுப்புற வெப்பநிலை திடீரென குறைந்து, ஒருவித குளிர்ச்சி பரவும். (மல்லிகைப்பூ வாசனையெல்லாம் நம்ம ஊர்ல சொல்ற கதை.)

                    சரி, இனி அதன் கருத்து குறித்த இரு தரப்பு விவாதங்கள்.
  • அது என்ன பேய் ராத்திரில மட்டும் வருது? அதோட ஷிப்டு அப்போதான் ஸ்டார்ட் ஆகுதா?
  • மனிதனின் ஆதிபயம், "இருட்டு". எனவே, இருட்டில் பெரும்பாலும் நம்முள் ஏற்படும் பயத்தை பேயுடன் தொடர்புபடுத்தி இருட்டு இருந்தால் பேய் இருக்கும் என்கிற குழந்தைத்தனமான மனநிலையுடனும், நாம் கேட்டுவளர்ந்த கதைகளின் கற்பனையான விஷயங்களை நிஜவாழ்வில் உருவகப்படுத்தி நம்மை நாமே இரவில் அல்லது இருட்டில் பயமுறுத்திக்கொள்கிறோம். (நம்மளுக்கு இப்படிலாம் கதைசொல்லி [சாப்பிடுறதுக்கும்,தூங்குறதுக்கும்] பயமுறுத்தின கிழடுகள சொல்லணும்...!) ஒருவேளை ஆவிகள் இருந்தாலும், அவைகளை பகலில் கண்டதாகக் கூறப்படும் ஆதாரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும், நம் மனம் இரவில் மட்டும் சற்று உதறக் காரணம், நாம் நம்மைப் பகலுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டோம், அவ்வளவே.
  • அதெப்படி உதடு அசையலேனாலும் சத்தம் கேட்கும்?
  • இதை ஒரு 'தொலைவில் உணர்தல்' [Telepathy] போன்ற சக்தியாகக் கொள்ளலாம். (அதுபற்றி விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்.)
  • அதெப்படி விலங்குகள் கண்ணுக்கு மட்டும் (எப்பவும்) பேய் தெரியும்? இத்தனைக்கும் ஆந்தைய தவிர மத்த விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ நீல நிறம் தெரியாது. எல்லாமே கறுப்பு-வெள்ளை தான். அப்படி இருக்கும்போது, வெள்ளை நிறத்துல இருக்குற பேய, எல்லா நிறத்தையும் பாக்கமுடிஞ்ச மனுஷன் பாக்குறதுக்குள்ள, விலங்குகள் எப்படி பாக்குது?
  • மனிதனால் புறஊதாக் கதிர்களையோ, அகச்சிவப்புக் கதிர்களையோ வெறும் கண்களால் பார்க்க இயலாது. ஆனால், தேனீக்களால் புறஊதாக்கதிர்களைக் காண இயலும். அதேபோல் பேய்கள் என்கிற விஷயம் ஒருவேளை உண்மையாக இருந்து, அது மேற்கூறிய சைக்கான்களின் கட்டமைப்பாக இருந்து, அவற்றைக்காணும் திறனை விலங்குகள் பெற்றிருந்தால்? நமக்கும் கூட அத்தகு திறன்கள் இருந்திருந்து, நாமும் பரிணாம வளர்ச்சியின் பாதையில் அத்தகைய திறன்களை (அவசியப்படாததால்) தவறவிட்டிருக்கலாம். உதாரணம், விலங்குகளின் கண்களில் ஒளி பாய்ச்சும்போது தோன்றும் ஒருவித மினுமினுப்பு மனிதனின் கண்களில் தெரிவதில்லை. (புகைப்பட வெளிச்சத்தில் சில சமயம் சிவப்பு நிறத்தில் கண்கள் [Red Eye] தோன்றும்.) அவ்வாறான ஒளிர்தலுக்குக் காரணம், விலங்குகளின் விழித்திரையின் [Retina] பின்புறமுள்ள "டேப்பிடம் லூசிடம்" [Tapetum Lucidum] என்றழைக்கப்படும் ஒருவித சவ்வுப்படலம் ஆகும். மேலும் நிறக்குருடு [Colour-Blindness] குறைபாடுடைய மனிதர்களும் பேய்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளனரே. (அலெக்ஸாண்டரின் [Alexander The Great] ஆசிரியரான அரிஸ்டாட்டில் [Aristotle] நிறக்குருடு குறைபாடுடையவர். அலெக்ஸ்ண்டருக்கு வலது கண் நீல நிறத்திலும், இடது கண் கருப்பு நிறத்திலும் இருக்குமாம். [அதுபோன்ற மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். விலங்குகளுக்கும்கூட இவ்வாறு ஏற்படுமாம்.] மேலும், நீல நிறக் கண்களுடையவர்களுக்கு, கறுப்பு நிறக் கண்களுடையவர்களை விட இருளில் பார்க்கும் திறன் அதிகமாம்.) 


(இருளில் ஒளிரும் புலியின் கண்கள்)


(நீல நிற கண்கள்)


[Red-Eye]


(தனது குருவான பிளாட்டோவுடன், அரிஸ்டாட்டில்)


(அலெக்ஸாண்டரின் கண்கள்)

                 இவ்வாறு ஒரு கண் மட்டும் நிறம் மாறுவதை "ஹெட்டிரோக்ரோமியா" [Heterochromia] என்றழைக்கின்றனர். இது பிறவியிலேயே இருக்கவேண்டிய அவசியமில்லை. வளர்ந்தபின் ஏற்படும் விபத்துகளாலும் இவ்வாறாகலாம். மேலும், இது விலங்குகளுக்கும் கூட ஏற்படும்.


(ஹெட்டிரோக்ரோமியா கண்கள்)


(பிரபல ஆங்கில ராக் பாடகர், டேவிட் போவி)


(ஹெட்டிரோக்ரோமியா கண்களுடைய பூனை)
  • பேய் ஏன் வெள்ளை நிறத்துலேயே தெரியுது / திரியுது?
  • ஆவிகள் அல்லது பேய்களின் உருவத்தின் நிறமானது அதன் தன்மைக்கேற்ப வெண்மை, பழுப்பு, கருப்பு என மாறுபடுவதாக ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் [Vikravandi Ravichandran] ஒரு பத்திரிகையில் பேட்டியளித்திருந்ததாக ஞாபகம். அவை புண்ணிய ஆத்மாக்களாய் இருப்பின் வெண்மை நிறமும், துர் ஆத்மாக்களாய் இருப்பின் கருமை நிறத்திலும், அதன் தன்மைக்கு ஏற்ப இவ்விரண்டின் பொதுவான நிறத்திலும் தோன்றுமெனவும் குறிப்பிடிருந்தார்.

(விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்)
(இதவிட பெரிய படம் கிடைக்கலங்க)
             

               ('என்ன இவன், பேய்-னு சொல்லிட்டு, யாரோ வாளோட நிக்குறமாதிரி படம் போட்டிருக்கானே! பேய் என்ன வாளோடயா நிக்கும்?' என உங்களுக்குத் தோன்றலாம். நாம் கடந்த பதிவில் பார்த்த, சாலமன்  மன்னன் விவரித்த பேய்களைப் பற்றிப்பார்க்கும்போது இதன் அர்த்தம் புரியும்.)
  • நான் ஒரு பேயைப் பாக்கணும்னு நினைக்குறேன். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன், மிரட்டிப் பார்த்தேன், சவால் விட்டேன், கேவலமா திட்டுனேன் எதுக்குமே வரல. அப்போ அப்படி ஒண்ணு இல்ல-னுதானே அர்த்தம். இருந்தா நான் கூப்பிட்டப்போ ஏன் வரல? என்னயப் பாத்து அது பயந்திடுச்சா?
  • பேயைப் பார்க்க நீங்கள் மட்டும் மனது வைத்தால் போதாது. அதுவும் மனதுவைக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களைவிட உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு அதிகாரியைப் பார்க்க, உங்கள் விருப்பத்தைவிட முக்கியமாக அவரின் விருப்பமும் அவசியம் என்பதுபோல. எனது நண்பன் அருண் குமார் என்பவனுடன் ஒரு முறை விவாதித்தபோது அவன் கூறிய ஒரு விஷயம். "இப்போ ஒரு எறும்ப எடுத்துக்கோ. அது பாதைல நீ நின்னாலும், உன் முகத்த அது பாக்கணும்னா, ஒண்ணு நீ அத உன் உயரத்துக்கு தூக்கணும், இல்லேனா நீ அது மட்டத்துக்கு இறங்கணும். பேய், கடவுள் எல்லாம் அப்டித்தான். ஒண்ணு அது உயரத்துக்கு நாம போகணும், இல்ல அத நம்ம உயரத்துக்கு இழுக்கணும். இங்க உயரம்னா Height இல்ல, நிலை-னு (Level / Stage) வச்சுக்கலாம்." என்றான். ஆவிகளுடன் பேசக்கூடியவர்களாக நம்பப்படும் மீடியம்களான (Medium) விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் போன்றோர் இவ்வாறுதான் செய்கின்றனர் என்பதும் ஆவியுலக நம்பிக்கையாளர்களின் கருத்து.
  • சரி செத்தவங்கதான் ஆவியா அலையுறாங்க. அவங்க போட்டிருந்த துணியுமா ஆவியா மாறும்? அப்போ நாம கிழிக்குற துணியெல்லாம் எங்க பேயா சுத்துது? ஏன் மனுஷன் மட்டும் பேயாகுறான்? விலங்குகள், பறவைகள், தாவரங்கள்-லாம் பேயாகுமா? (அப்படிமட்டும் ஆச்சு-னா ஒருத்தன் சாப்பிட முடியாது! யாரும் மரத்த வெட்டவோ, விலங்குகள பலி கொடுக்கவோ முடியாது!)
  • 'இப்படியெல்லாம் கேட்பது அபத்தம். ஆவிகள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதன் உண்மைத்தன்மை ஒருநாள் வெளிப்படும்' என முடிக்கின்றனர் நம்பிக்கையாளர்கள். (ஹ்ம்...பாப்போம்)

                சரி. உலகின் சில முக்கியமான மதத்திலும் இதுகுறித்த நம்பிக்கைகளைப் பற்றிப்பார்த்தால்,
  1. இந்து மதம் - ஆவிகள் உண்டு. துர்மரணத்தைத் தழுவியவர்கள் பேயாக அலைவர். சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் உண்டு. ஒருவரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறுஜென்மமும், மோட்சமும் கிட்டும். 
  2. கிறிஸ்தவ மதம் -  பரிசுத்த ஆவி (!) உண்டு. பேய்கள் சாத்தானின் வேலை. துர்மரணத்தைத் தழுவியவர்கள் பேயாக அலைவர். சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் கிடையாது. (இப்போதுள்ள பைபிளின் படி. 'அப்போ பழைய பைபிள்-னு ஒண்ணு இருக்கா?' அதுபற்றி வரும் பதிவுகளில்!) தீர்ப்புநாளில் இறந்தவர்களனைவரும் உயிர்ப்பிக்கப்படுவர்.
  3. இஸ்லாமிய மதம் - ஆவிகள் கிடையாது. சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் கிடையாது. இறந்தபின் ஒருவரின் உயிர் திரைமறைவிலுள்ள அல்லாவின் (இறைவனின்) கைகளுக்குச் சென்றுவிடும்; தீர்ப்புநாளில் இறந்தவர்களனைவரும் உயிர்ப்பிக்கப்படுவர். (கிறிஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் இறந்தவர்களைப் புதைக்க இந்நம்பிக்கையே காரணம்.)
  4. பௌத்த மதம் - சொர்க்கம், நரகம் உண்டு. மறுஜென்மம் உண்டு. (தலாய் லாமாக்கள் இந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.) ஒருவரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறுஜென்மமும், மோட்சமும் கிட்டும்.

                இங்கு வேடிக்கை என்னவென்றால், ஆவிகள் குறித்த நம்பிக்கைகளை மறுக்கும் மதத்தினரும், ஆவிகள் குறித்து நம்புவதே. உண்மையோ பொய்யோ, வாழ்க்கையில் அனைவரும் ஒரு சுவாரஸ்யத்தையே விரும்புகிறோம். நேர்மின்முனைக்கு எதிரான எதிர்மின்முனை ஒரே மின்கலத்தில் இருப்பதுபோல்தான் இதுவும் என்கின்றனர்.

                சரி. உண்மையில் இறந்தவர்களின் ஆவிகளுடன் பேச முடியுமா? அவ்வாறு நடப்பது சாத்தியம் என வைத்துக்கொண்டாலும், அவை நமக்கு உதவுமா? அவ்வாறு உதவிய சம்பவங்கள் உண்டா? எனத் தேடும்போது சம்பவங்கள் நிறையக் கிடைத்தன. அதுவும் நமது பதிவின் அடிப்படை நோக்கமான, மறைமுக இணைப்புகளுடன்! அனைத்திற்கும் உச்சமாக, ஆவிகளுடன் பேசுவதற்கான கருவியை/இயந்திரத்தை கண்டுபிடிக்க முயன்ற ஒரு சம்பவமும் அடங்கும். மேலும் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஒரு அறிவுரை, பேயை நீங்கள் நேரில் கண்டால், பயப்படாமல் இருக்கவேண்டும். காரணம், உங்கள் பயமே அதன் சக்தியையும், உங்களை மேலும் பயமுறுத்துவதற்கான நிலைப்பாட்டையும் அதிகரிக்கச்செய்யும் என்கின்றனர். தைரியமானவர்களை பேய்கள் தாக்குவதோ பீடிப்பதோ இல்லை எனக் கூறுகின்றனர். (இங்க அவன் அவன் வீட்டுக்கார அம்மாவ நேர்ல பார்த்தே பயப்படுறான். இதுல ஆவியா வேற வந்தாங்கன்னா வெளங்கிடும்!) அப்படியானால் பேய் பீடிப்பது, தாக்குவது எல்லாம் உண்மையா? 

                மேற்கூறிய கேள்விகளுடன் காத்திருங்கள் அடுத்தவாரம் வரை. (நண்பர்களே, சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பதிவில் இத்தனை தாமதம். உங்களை காக்கவைத்தற்காக மன்னிப்புக் கோருகிறேன். அநேகமாக, புத்தாண்டிலிருந்து பதிவிடும் காலத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதை உறுதிபடுத்தியபின் தெரிவிக்கிறேன். உங்களது காத்திருப்புக்கும், பொறுமைக்கும் தலைவணங்குகிறேன். தங்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி! உங்களுக்காகவே, இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பதிவு!)

அதுவரை நன்றிகளுடன்,
                        - அயலான்.



துணை நின்ற நூல்கள்:

  1. மனிதனும் மர்மங்களும் - மதன்.
  2. நாஸ்டர்டாமஸ் சொன்னார், நடந்தது - டாக்டர்.கிருஷ்ணகாந்த்.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:

Tuesday 9 December 2014

21.) ஆவிகள் ஆயிரம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

               நமது கடந்த பதிவில் ஆவிகள் கனவில் வந்து வரும்பொருள் உரைப்பது குறித்த மிகச்சிறிய பதிவிட்டிருந்தேன். (கடந்த பதிவு உண்மையில் மிகச் சிறியதுதான். ஒப்புக்கொள்கிறேன்; அதற்காக மன்னிப்பும் வேண்டுகிறேன். பணிச்சுமையே அதற்குக் காரணம் நண்பர்களே. பதிவிட இயலாத சூழ்நிலை. இருப்பினும், என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, இன்றும் தொடர்கிறேன்; இனியும் தொடர்வேன். ஒருவேளை எனது பதிவிடும் காலத்தில் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதுகுறித்து முன்னரே  உங்களிடம் தெரிவித்துவிடுவேன் எனவும் உங்களுக்கு வாக்களிக்கிறேன்! ஒத்துழைப்பும் ஆதரவும் நல்குவீர்கள் என நம்புகிறேன். இனி நம் கதைக்கு வருவோம்.) 'ஆவிகள் கனவில் வருமா?' என்பது குறித்து ஆராயவேண்டுமானால் முதலில் ஆவிகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, 'இறந்த மனிதர்களின் ஆத்மாவே (உயிர்) ஆவியாக அலையும்' என்பது ஆவி சார்ந்த நம்பிக்கையுடைய மக்களின் அனுமானமாக இன்றளவும் உள்ளது. ஆனால் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் 4 பிரிவுகளில் ஆவிகளை வகைப்படுத்தியுள்ளனர். இது குறித்து 1951-ல் ஜி.என்.எம்.டைரல்  (G.N.M.Tyrrell) என்கிற பிரபல ஆவி ஆராய்ச்சியாளர் எழுதிய ஒரு புத்தகம், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப் பட்டதோடு, அறிவுப்பூர்வமான ஒன்றாகவும் இன்றளவும் கருதப்படுகிறது(!).


(ஜி.என்.எம்.டைரல்)


(டைரல் எழுதிய 'அப்பாரிஷன்ஸ்' [ஆவிகள்] என்கிற புத்தகம்)

                அவை,
  1. உயிரோடு இருப்பவர்களின் ஆவி,
  2. ஆபத்து நேர ஆவிகள்,
  3. சராசரி ஆவிகள்,
  4. நீண்டகால ஆவிகள்.

1.) உயிரோடு இருப்பவர்களின் ஆவி:
          அதாவது, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே, அவரது ஆவி ('பிம்பம்' என்றும் வைத்துக்கொள்ளலாம்), எங்கோ இருக்கும் இன்னொருவர் முன் தோன்றுவது. இதெப்படி சாத்தியம் எனத் தோன்றலாம். ஆனால், இவ்வாறான சம்பவங்கள் நடந்ததற்கு ஆதாரங்கள் உலகெங்கும் உள்ளன. 


              அவற்றில் முக்கியமான ஓர் உதாரண சம்பவம். 1993-ல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஒதுக்குப்புறமான ஒரு நகரிலுள்ள ஒரு பழைய பங்களாவில், ஒரு பெண்மணியின் ஆவி உலவுவதாகத் தகவல் வர, ஒரு ஆராய்ச்சிக்குழு அங்கு முகாமிட்டு ஆராய்ந்தது. அங்கிருந்த பலரும் ஒரு ஆவி, அங்கிருந்த வராண்டாவிலும், மாடிப் படிக்கட்டுகளிலும், படுக்கை அறையில் வளைய வந்ததையும், சில சமயங்களில் அப்பங்களாவின் அருகிலிருந்த ஏரியின் மேற்பரப்பில் மிதந்து மறைந்ததையும் கண்டனர்.

               அப்பங்களாவின் அருகில் வசித்த சிலரும், அவ்வாராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக உடனிருந்தனர். அதிலிருந்த சில முதியவர்கள், அவ்வுருவம் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்த ஒரு பெண்மணியின் சாயலில் இருப்பதாக அடித்துச் சொன்னார்கள். எனவே, ஆராய்ச்சியாளர்கள் அப்பெண்மணி குறித்து மேலும் விசாரித்ததில், அதிர்ச்சிகரமான ஒரு உண்மை தெரிய வந்தது. அது, அப்பெண்மணி அப்போது அப்பங்களாவிலிருந்து 500 மைல் தொலைவிலுள்ள  ஒரு வீட்டில் உயிரோடு இருந்தார்! ஆனால், நோய்வாய்ப்பட்டு, கோமா நிலையில்! 

                அப்பெண்மணியின் குடும்பம் குறித்து விசாரித்தபோது, அவர்களது குடும்பம் வாழ்ந்து கேட்ட குடும்பம். அவர் பிறந்து வளர்ந்த அந்த பங்களாவை விட்டு, குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழ்நிலை. இருப்பினும் அவர் அவ்வீட்டின் மீது கொண்ட அன்பு, அவரது எண்ண அலைகளை அவரது ஆழ்மனம் அவரது ஆவியை அவர் விரும்பிய பங்களாவில் உருவாக்கியிருக்கிறது. உண்மையில் அது சாத்தியமா?! சாத்தியம் என்றே சொல்கின்றனர், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள். (அதன் விளக்கங்கள் குறித்து பின்னர் காண்போம்.)

2.) ஆபத்து நேர ஆவிகள்: (Crisis Apparitions)
                 நமக்கு பரிச்சயமான ஒருவர் இறக்கும் தருணத்திலோ, அல்லது இறந்த உடனோ நம்முன் ஆவியாகத் தோன்றுவது. கடந்த பதிவில் கண்ட, திருமதி.ஸ்பியர்மேனின் (Mrs.Spearman) சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

3.) சராசரி ஆவிகள்:
                 பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலான ஆவி. இறந்த ஒருவரின் ஆவி. எப்போதாவது தோன்றுவது, நடமாடுவது போன்ற வகை.


4.) நீண்டகால ஆவிகள்:
                 பாழடைந்த வீடுகள், பழைய கோட்டைகள் போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக உலவும், வேறெங்கும் செல்லாத புராதான பேய்கள். நமது நாட்டு மன்னர்களின் ஆன்மாக்கள் சில கோட்டைகளில் உலவுவதாகவும் நம்பிக்கைகள் உண்டு. எகிப்திலுள்ள பிரமிடுகளிலும் அந்நாட்டு அரசர்கள் உலவுவதாக அவர்களும் நம்புகின்றனர். ஹிட்லரின் (Hitler) ஆவி இன்னும் ஜெர்மனியின் சில இடங்களில் உலவுவதாக உலகில் பெரும்பாலான ஆவி நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மைக்கேல் ஜாக்சனும் (Michael Jackson) இந்த வரிசையில் புதுவரவாக(!) இணைந்துள்ளார். (ஐயா... அப்டியே எங்க ஊருக்கும் வந்து ஒரு ஆட்டம் போடுங்க... நாங்களும் எவ்ளோ நாளைக்குதான் இந்த மோகினிப் பிசாசுங்களோட ஒரே மாதிரியான பேயாட்டத்தையே பாக்குறது..!!!)


                 அவைகளைப் (அதாவது, ஆவிகளைப்) பற்றிய விமர்சனங்கள் குறித்து அடுத்த பதிவில் காண்போம். இப்பதிவில், மேற்கண்ட சில சம்பவங்களுக்கான காரணங்கள் என ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றிக் காண்போம். அதற்குமுன், தற்கால ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளை நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரித்ததுபோல், விவிலியப் (பைபிள்) பிரசித்தி பெற்ற மன்னர் சாலமன் ஆவிகளை 72 வகைகளாகப் பிரித்துள்ளார். தனது "லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்" (Lesser Key of Solomon) என்கிற புத்தகத்தில் அது பற்றி விவரிக்கிறார். (அப்புத்தகம் இன்னும் என் கைகளில் கிடைக்கவில்லை... கிடைத்தால் இன்னும் நிறைய பகிரலாம்..!)

                 மன்னர் சாலமன் சாமான்யமானவர் அல்ல. அவரது பெயரை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நமது வருங்கால பதிவு ஒன்றில் ஏற்படப்போகும் மாபெரும் திருப்பத்தின் மிகமுக்கிய காரணகர்த்தாக்களில் இவரும் அதிமுக்கியமானவர். (கவனிக்க: நான் இப்பதிவுகளில் பதிவிடும் ஒவ்வொரு படங்களிலும் நிச்சயம் ஒரு குறியீடுகள் அல்லது அடையாளங்கள் இடம்பெறும். இதுநாள்வரையிலான பதிவுகளிலும் அவ்வாறே! ஒருவேளை, இதுநாள் வரை கவனிக்காதவர்கள் யாரேனும் இருந்தால், மீண்டும் ஒருமுறை அனைத்து பதிவுகளின் படங்களையும் பார்த்துவிடுங்கள். இன்று இல்லாவிட்டாலும், மிகமுக்கிய பதிவுகளில் அவை சுட்டிக் காட்டப்படும். அதேபோல், எனது பதிவில் இடம் பெற்ற அனைத்து படங்களிலும் அத்தகைய துப்புகள் இருக்கும் என்றும் நான் கூறவில்லை. மனதில் வைத்து மேலும் தொடருங்கள்.)


(மன்னர் சாலமன்)


(விவிலியத்தில் மன்னர் சாலமன் குறித்து)


('லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்' புத்தகம்)


('லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவிகள்)

                 அதெல்லாம் இருக்கட்டும். இப்படி பேய்களைப் பற்றிப் பக்கம் பக்கமாகக் கதை சொல்வது காலம் காலமாக இருந்து வருகிறது. தற்காலத்தில் விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகள் ஏதேனும் ஆவிகள் குறித்த சாத்தியக்கூறுகளுக்கு வித்திட்டனவா? என்கிற உங்களின் கேள்விக்கு, ஒரு சர்வதேச கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியையே பதிலாக வைக்கிறேன். அதற்கு முன் வாசகர்களின் நலம் கருதி ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு. நீங்கள் இதயம் பலவீனமானவராக இருந்தாலோ, பயந்த சுபாவமுடையவராக இருந்தாலோ, இதற்குப் பின் வரும் தகவல்களை, இரவிலோ அல்லது தனியாக இருக்கும்போதோ படிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன். இது மிரட்டல் அல்ல, உங்கள் நலன் சார்ந்த அக்கறை மட்டுமே. (நீங்கள் தற்போது வாசிக்கும் இவ்வரியை நான் தட்டச்சு செய்யும்போது, இரவு 1 மணி 40 நிமிடம்.)

"நீங்கள் விழிப்போடு தனியாக இருக்கும்போது, என்றைக்காவது, எங்கேயாவது, யாரேனும் அல்லது ஏதேனும் உங்களைத் தொடுவது போலவோ, அருகில் நடமாடுவது போலவோ, உங்களிடம் மட்டும் யாரோ பேசுவது போலவோ உணர்ந்திருக்கிறீர்களா?
வேறு காரணங்கள் எதுவுமில்லாமல்  (External Cause) அது தானாகவே நிகழ்ந்ததுபோல அந்த 'அனுபவம்' இருக்க வேண்டும். அவசரப்படாமல் நன்றாக யோசியுங்கள்!"

                 இப்படி ஒரு கேள்வியை, லண்டனில் உள்ள, பரவலான மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இயக்கமான SPR (Society for Psychical Research), (1882-லேயே) 17,000 நபர்களுக்கு அனுப்பி, ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 15,316 நபர்கள் பதிலனுப்பியிருந்தனர். அதில் 10 சதவிகிதத்தினர் "ஆமாம்" என பதிலளித்திருந்தனர். (வாசகர்களும் இதை உங்கள் முன் வைக்கப்பட்ட கேள்வியாக எண்ணி, இப்பதிவின் கீழ் பதிலளித்தாலும் மகிழ்ச்சிதான்!) "அட போப்பா... அதான் 90 சதவீதம் பேரு இல்ல-னு சொல்லிட்டாங்கல்ல... அப்புறம் என்ன..?!" என நீங்கள் கேட்கலாம். கேட்கப்பட்ட கேள்வி சாதாரணமான சம்பவத்தைப் பற்றியது அல்ல; அசாதாரணமான நிகழ்வு பற்றியது என்பதை நினைவில் கொள்க. மேலும், இத்தகைய ஒன்று அனைவருக்கும் நடந்தால் அது சுவாரஸ்யமானதாகவோ அல்லது அசாதாரணமானதாகவோ இருக்காது என்பதையும் கருத்தில் கொள்க. அத்துடன் இத்தகைய அரிதானதோர் அனுபவத்தைப் பற்றிய கேள்விக்கு சாதகமாகக் கிடைத்துள்ள 10 சதவிகித வாக்குகள் உண்மையில் குறைந்த எண்ணிக்கை அல்ல! இன்னொரு முக்கியமான விஷயம், அவ்வாறு "ஆமாம்" என பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்! ஆவிகளிடம் பேசக்கூடியவர்களாக நம்பப்படும் மீடியம்-களில் (Medium) ஆண்களை விட பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ("இனம் இனத்தைச் சேரும்"-னு நீங்க நினைக்குறது எனக்குப் புரியுது... நீங்கபாட்டுக்கு நினைச்சுட்டு போய்டுவீங்க... இப்போ இத நானே இட்டுகட்டி எழுதின மாதிரி-ல நினைப்பாங்க!!!) 

                  அப்படியானால், ஆவிகள் உண்மையா? பேய் இருக்கிறதா? (கதை மட்டும் கேக்கணும்...நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்..!) ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போதே ஆவியாக முடியுமா? போன்ற பல தலைசுற்றும் கேள்விகளோடு காத்திருங்கள், அடுத்த வாரம் வரை. (இதைப் படிக்கிற ஆர்வத்துல உங்க பின்னாடி நிக்கிற உருவத்த கண்டுக்காம இருந்திடாதீங்க..! அவசரப்பட்டு திரும்பிடாதீங்க, அது மறைஞ்சிடும்...!!!)

அதுவரை நன்றிகளுடன்,
                      - அயலான்.



துணை நின்ற நூல்:
மனிதனும் மர்மங்களும் - மதன்.


இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு: www.facebook.com/ayalaan007


மேலும் விவரங்களுக்கு, காண்க:
http://es.wikipedia.org/wiki/George_NM_Tyrrell
http://paranormalistics.blogspot.in/p/types-of-ghosts-and-spirits.html
http://en.wikipedia.org/wiki/Solomon