Tuesday 12 August 2014

4.) பிரணவம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          அது என்ன மாயமோ தெரியவில்லை! எப்போதெல்லாம் நான் வேற்றுகிரகவாசிகளைப் பற்றியோ, அல்லது கடவுளைப் பற்றியோ பதிவிடலாம் என எண்ணுகிறேனோ, அப்போதெல்லாம் அப்பதிவை தள்ளிப்போடும் அளவிற்கு சூழ்நிலையும், அதற்கு முன்னர் கூறப்படவேண்டிய சில விஷயங்களும் தற்செயலாக அமைகின்றன. ( இதற்கு நிச்சயமாக கடவுளோ, வேற்றுகிரகவாசிகளோ காரணமாக இருக்கக்கூடும் என எனக்குத் தோன்றவில்லை! அவ்வாறு நான் கூறவும் இல்லை!!! )

           நான் கடந்த பதிவில் எனது கோணத்தில், 'ஸ்ரீ சக்கரத்தின் மறைமுக நோக்கம் இதுவாக இருக்கலாம்' என பதிவிட்டிருந்தேன். அப்பதிவிற்க்குப்பின் எனது நண்பர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு, "அது நம்பும்படி இல்லையே..!" என தெரிவித்தனர். அது முழுக்க முழுக்க எனது யூகமே தவிர, 'அதற்கு ஆதாரம் உள்ளது' என நான் தெரிவிக்கவில்லை.

          ஆனாலும் எனக்கு மனதில் தோன்றும் சில விவரிக்க இயலாத யூகங்களின் மீது எனக்கு சிறிது நம்பிக்கை உண்டு. நான் செல்லும் பாதை சரியாக இருக்கும் என்கிற தன்னம்பிக்கையும் உண்டு. இருப்பினும், எனது பதிவிற்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே, நான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த சில தகவல்களைத் துழாவினேன்.

          அப்போது எனக்கு கிடைத்த ஒரு தகவல், என்னை உங்கள் முன் ஒரு குற்றவாளியாக நிறுத்தக்கூடிய, தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து விடுவிக்க வழி செய்தது. அதற்கு எனது முந்தைய பதிவில் நான் கூறிய ஒரு தகவலும் உதவியது என்பதும் உண்மை..!

          அது TONOSCOPE...! ( 'ஆமா... இவனுக்கு வேற வேலை இல்ல...எதாவது கேட்டா, புரியாத ஒரு வார்த்தைய சொல்லி குழப்பி விட்டுடுறது '-னு நீங்க திட்டுறது எனக்கு கேட்குது..!)


          ஆனால், நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை 'நிச்சயம் அப்படி ஒன்று இருக்க முடியாது' என வாதிடுவதும், தவறாக முடிவெடுப்பதும் முட்டாள்தனமன்றி வேறில்லை. சரி. "Tonoscope என்றால் என்ன?" என்று முதலில் காண்போம். 

          சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஒலி அதிர்வியலின் (Cymatics) தந்தை என்றழைக்கப்படும், Dr.Hans Jenny என்பவர் உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு முறை அல்லது கருவிதான், Tonoscope என்றழைக்கப்படுகிறது. இதை, ஒரு பொருளுக்கும், ஆற்றலுக்குமான தொடர்பை விளக்குவதற்காக அவர் உருவாக்கினார். இதில், ஒரு வட்ட வடிவ, பலூனின் தடிமனையொத்த மெல்லிய சவ்வுபடலம் ஒன்றை ஒரு குழாய் போன்ற அமைப்பில் இணைத்து, அதன் மேல் உப்பு அல்லது மணல் போன்ற துகள்களைப் பரப்பி, அதில் ஒலியைப் பரப்புவதன் மூலம் ஏற்படும் அதிர்வின் மூலம், ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவத்தைக் கொடுக்கலாம் என நம்பினார்; சாதித்தும் காட்டினார். 
          

( ஒரு எளிமையான Tonoscope செய்வதற்கான வழிமுறைகள் )
[இதைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்]


( Tonoscope-ல் உருவாக்கப்பட்ட வேறு பல ஒலிகளின் அதிர்வலைகள் )


          இவ்விளைவின்மூலம் 'ஒரு பொருளின் வடிவத்தையும், தன்மையையும் அதைச் சுற்றியுள்ள அதிர்வலைகளே நிர்ணயிக்கின்றன', என்பதை நிரூபித்தார். ( இதற்காகத்தான் 'நல்லவற்றையே நினையுங்கள் ' என முன்னோர்களும், "நீ எதுவாக ஆக நினைக்கிறயோ, அதுவாகவே ஆகிறாய் " என விவேகானந்தரும் கூறினார்களோ என்னவோ..! )

         [ மேலும், நமது வேதங்களில் கூறப்பட்டுள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கும் இத்தகு ஆற்றல்கள் இருக்கலாம்! ஆகவேதான், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களும் கூட ( மொழி பேதத்தை உருவாக்கி அரசியல் செய்யாமல்! ), கோவில்களில் அர்ச்சனையை சம்ஸ்கிருதத்தில் செய்வதற்கு அனுமதித்தனர் போலும். மேலும் இதுபற்றிய விவாதங்களையும், விவரங்களையும் இனிவரும் தொடர்களில் காண்போம்.]

         சரி. 'இதற்கும், வாசகர்களால் என்னிடம் கேட்கப்பட்ட ஆதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?' என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது. 

         Dr.Hans Jenny-ன் கூற்றின்படி, " 'ஓம்' என்ற ஒலியானது, ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கியது"!
         எனது கூற்றின்படி, "ஸ்ரீ சக்கரமானது, பெருவெடிப்புக் கோட்பாட்டைக் (Bigbang Theory) குறிக்க வாய்ப்புள்ளது".
         ஸ்கந்த புராணத்தின்படி, "இப்பிரபஞ்சமானது 'ஓம்' என்ற பிரணவ ஒலியுடன் உருவானது". இதைப் பெருவெடிப்புக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டால், எனது கூற்று சரியெனக் கருதும் அளவிற்கு வலுவாகிறது. ஆனால், அதுதான் நிதர்சனமான உண்மை என நான் கூறவில்லை. எமது இப்பக்கத்தின் நோக்கமான, "இப்படியும் இருக்கலாம்" என்ற விளிம்பின் ஓரத்திலேயே பயணிக்க விரும்புகிறேன்.

          இதில் ஆச்சரியம் என்னவென்றால், "Dr.Hans Jenny இருபதாம் நூற்றாண்டில் கண்டறிந்து உலகிற்கு உணர்த்திய உண்மையை, நம் முன்னோர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வாறு கண்டறிந்தனர்?" என்பதே..!

         { எனது முகநூல் (Facebook) நண்பர் திரு."Dhrona Charya" அவர்கள், இந்த ஸ்ரீ சக்கரம், Fibonacci தொடர்களைக் குறிக்க வாய்ப்பிருப்பதாக, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.}

         மேலும் விவரங்களறிய, பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடவும்.

         இதேபோல, "ஓம்" என்ற மந்திரத்தை ( அல்லது வார்த்தையை), 'பிரணவம்' என்றும் குறிப்பிடுவர். இதன் வார்த்தையை ஒத்த சில சொற்கள் பின்வருமாறு :

பிராணன் - மூச்சு, உயிர்.
பிராணி - உயிரி (அல்லது) உயிரினம்.
பிராணவாயு - மூச்சுக்கற்று, உயிர் வாழத் தேவையான வாயு (Oxygen).

         இவை ஏனோ உயிர்களை அல்லது அதன் உருவாக்கத்தைக் குறிப்பதைப் போல தெரிகிறது. இவற்றில் என்னென்ன மர்மங்கள் மறைந்துள்ளனவோ என்றும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால், நிச்சயம் நம் அறிவுக்கண்ணில் அகப்படும், விரைவில்...!

         எனது நண்பர்கள் என்னிடம் முன்வைத்த இன்னொரு வேண்டுகோள் அல்லது உரிமையான கோபம் என்னவென்றால், "கன்னித்தீவு படக்கதை மாதிரி 'டக்'குனு  முடிச்சிடுற..!!!" என்பது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், என் எழுத்தின்பால் கொண்டுள்ள அபிமானத்திற்கும் எவ்வாறு கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு புதன்கிழமையும் உங்களை ஆச்சர்யப்படுத்த என்னை ஆயத்தப்படுத்திக்கொள்வேன் என உறுதியாகத் தெரிவித்துகொள்கிறேன்.

        உங்களுக்காக, அடுத்த வார பதிவின் ஒரு சிறு Trailer இதோ..!

        நான் சென்ற பதிவில் கொடுத்த வாக்கிற்கு ஏற்ப, பிரபஞ்சம் தோன்றிய பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளை இனி காண்போம்.

        பிரபஞ்ச தோற்றத்தின்போது உருவான கோள்களும், நட்சத்திரங்களும், மேகக்கூட்டங்களும் உச்சபட்ச வெப்பநிலையைக் கொண்டிருந்தன. அதன்பின் அவற்றிலிருந்து பிரிந்த சிறு பகுதிகள், ஈர்ப்பு விசையினால் ஆட்கொள்ளப்பட்டு, பின் அது எதிலிருந்து பிரிந்ததோ, அப்பெரும்பகுதியை சுற்றி வரத் தொடங்கின. அவ்வாறு பிரிந்த ஒரு பகுதியான நமது சூரியக்குடும்பம் (Solar System), பால்வெளி அண்டத்தின் (Milkyway Galaxy) மையப் பகுதியையும்; நமது கிரகங்கள், சூரியனையும் சுற்றி வர ஆரம்பித்தன. கால ஓட்டத்தில், வெப்பம் குறைந்து குளிர ஆரம்பித்தது.


          அதன்பின் நடந்த சுவாரஸ்யங்கள் என்ன? அறிய காத்திருங்கள், அடுத்த புதன்கிழமை வரை...!

அதுவரை நன்றிகளுடன்,
                        - அயலான்.



Photo Courtesy : Google.

1 comment: