Tuesday 26 August 2014

6.) சூட்சுமம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

         சென்ற பதிவில் ஆர்ச்சியாவையும், சயனோ பாக்டீரியாவையும் கண்டோம். இன்று மேலும் நுணுகிக் காண்போம்; நுண்ணோக்கியின் துணையின்றி..!

         உயிர். இன்றளவிலும், யாராலும் இங்குதான் உள்ளது என அறுதியிட்டுக் கூறமுடியாத (கடவுள், பேய், அமானுஷ்யம், அதிசயம், வேற்றுகிரக உயிரினங்கள், இதுபோல இன்னும் பல) விஷயங்களுள் முக்கியமான ஒன்று. சரி. அந்த உயிரைப் பற்றி சிறிது பார்த்துவிட்டு, பின் Jurassic Park-க்கு போகலாம்.

          இன்றைய விஞ்ஞானம் காண இயலா உண்மைகளைக் கண்டவர்கள், நம்மவர்கள். உயிர் எங்கிருக்கிறது எனத்தெரியாது அறிவியலுலகம் விழிக்கும்போது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருமூலர் தனது பாடலில்,

"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
 கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
 மேவியது கூறது ஆயிரமானால்
 ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே"

         என்று கூறியுள்ளார். இதன் பொருள், ஒரு பசுவின் முடியை, நூறாகக் கூறிட்டு, அதில் ஒன்றை எடுத்து அதையும் ஆயிரமாகக் கூறிட்டு, அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து அதையும் நூறாயிரமாக(லட்சம்)க் கூறிட்டபின் அதிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரே ஒரு கூறின் அளவே இவ்வுயிரின் அளவு எனக் கூறியுள்ளார். (இத வச்சுக்கிட்டே நாம இவ்ளோ ஆட்டம்...!)

         தற்கால அறிவியல் கண்டறிந்த ஒரு விஷயம், ஒரு மனிதன் இறந்த பின் அவனது எடையிலிருந்து 21 கிராம் குறைகிறதாம். இதுவே உயிரின் எடையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதைக் கண்டறிந்து, உலகிற்கு வெளிக்கொணர்ந்தவர், அமெரிக்க உயிரியலாளர், Dr.டங்கன் மேக்டக்கல் (Dr.Duncan MacDougall) இவரது முழுப்பெயர் Dr.Duncan "Om" MacDougall. (இதுலயும் "ஓம்"-ஆ...?!). மற்றபடி, ஆன்மா, சொர்க்கம், நரகம் இவற்றையெல்லாம் அறிவியலுலகம் இன்னும் ஏற்கவில்லை.



( Dr.Duncan MacDougall )



( உயிரின் எடை குறித்த ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளின் ஒரு பகுதி )

         நாம் அவ்வாறு கண்டறிந்து கூறிய, இன்றைய நானோ டெக்னாலஜி (Nano Technology)-யின் முன்னோடியான விஷயங்களைப் பற்றி மேலும் அறிய, எனது நண்பர் திரு.செந்தில் குமரனின் வலைத்தளமான "www.vetrupakkam.com"-ஐப் பார்வையிடவும்.

         இன்றைய விஞ்ஞானம், ' "உயிர்" இதில் இருக்க வாய்ப்பு அதிகம்' என சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், DNA (De-oxyribo Nucleic Acid). இவற்றை மேலும் பிரித்தால் கிடைப்பது வெறும் அமினோஅமிலங்கள் (Amino Acids). ஒரு வீட்டில் செங்கல்லின் அடிப்படைப் பணியைப் போன்றது, ஒரு DNA-ல் அமினோஅமிலத்தின் பணி; அதாவது இதுவே DNA உருவாக்கத்தின் மூலம். மொத்தம் 21 அமினோ அமிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


( DNA )



( அமினோ அமிலத்தின் வகைகள் )

         இத்தகைய அமினோ அமிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாவது, கொலாஜென் (Collagen). இது ஒரு எளிய வகைப் புரோட்டீன். இதை உருவாக்க, 1055 அமினோ அமிலங்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்பாடு செய்ய வேண்டும். Statistics விதிகளின்படி, இவ்வாறு ஒரு ஒழுங்கமைவில் உருவாவதற்கான வாய்ப்பு, 1-க்குப் பின் 260 சைபர் போடுங்கள். அத்தனை சாத்தியக்கூறுகளில் ஒன்று...!!! (தலையில் அதிகம் முடி இருப்பவர்கள் இந்தத் தொகைக்கு ஒரு பெயர் வைத்து எனக்குக் கூறவும்...!) இது பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

         நமது ரத்தத்தில் உள்ள "ஹீமோகுளோபின்" ஒரு புரோட்டீன். இதை உருவாக்க, 146 அமினோஅமிலங்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே கூட எந்த அளவிற்கு அரிதான சாத்தியக்கூறு என்றால், 'ஒரு காயலான் கடையில் புயல் காற்று அடித்து, தானாக ஒரு "கார்" உருவாவதைப் போல...!'

        இத்தகைய DNA-வில்தான், ஒரு மனிதனின் உயிரியல் ஜாதகமே உள்ளது. இவற்றை ஜீன்கள் (Genes) என்பர். இதைப்பற்றிய படிப்பு, "ஜெனடிக்ஸ்" (Genetics) என்றழைக்கப்படுகிறது. இதில்தான் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின், நிறம், குணம், நோயின் அறிகுறி, ஆயுள், போன்று ஜோசியக்காரன் கூறும் அனைத்தும் அடக்கம். (ஆனா, இந்த Coding-அ உருவாக்கின Programmer யாருன்னுதான் இன்னும் தெரியல..!) 

         அவற்றை நான்கே எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட ஒரு மிகப்பெரிய நாவலாக இன்றைய அறிவியல் உலகம் காண்கிறது. அவை A, T, C மற்றும் G ஆகும். இதில் A, T-யோடு மட்டும்தான் சேரும். அதேபோல, C, G-யோடு மட்டும்தான் சேரும். (காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஈர்ப்பது போல அல்லது ஒரு Zip போல.) இதிலுள்ள A, T, C ,G எவ்வகை அமிலங்களைக் குறிக்கும் என்பதைப் பின்வரும் படங்களில் காண்க.

          இத்தகைய DNA-க்கள் ஒரு செல் உயிரினம் பிரிந்து, பல ஒரு செல் உயிரினங்கள் உருவாகக் காரணமாகின்றன. இது "இரட்டிப்பாதல்" (Replication) எனப்படுகிறது.




(  DNA இரட்டிப்பாதல் )

   [ இவற்றைப் பற்றி ஆழமாக ஆராயாமல் அடுத்த பகுதிக்குச் செல்வோம். ]

("இப்போ என்னதான்யா சொல்ல வர்ற...?" அப்டின்னு நீங்க புலம்புறது எனக்கு கேக்குது...!)

         காரணம் இருக்கிறது. இந்தத் தற்செயல் எவ்வாறு சாத்தியமானது? 'அதிசயம்தான்' என்று மட்டுமே பதிலளிக்கிறது அறிவியல். காரணம், இத்தகைய அமினோ அமிலங்களை நாம் செயற்கையாக உருவாக்க முனைந்தாலும், உருவாக்க இயலாது. ஏனெனில், அப்போதைய சூழ்நிலையை ஒருவரும் அறியார். அத்தகைய சூழ்நிலையை, மனித மனத்தின் அனுமானம் கொண்டு உருவாக்க இயலாது என்றே தோன்றுகிறது.

          சரி, 'இதில் நமது பதிவிற்கு சம்பந்தமான விசித்திரம் ஏதேனும் உண்டா?' என நோக்கும்போது, இவ்வாறு முறுங்கிய நூலேணி போல உள்ள ஒரே ஒரு மனித DNA-வை நீட்டினால், சராசரியாக 6 அடி நீளம் வருமாம். [ ஒரு மனிதனின் சராசரி உயரமாகக் கொள்ள உகந்த அளவு ]. அதே போல, ஒரு மனிதனின் உடலிலுள்ள அனைத்து DNA-க்களையும் இதேபோல நீட்டினால் வரும் நீளம், 15 கோடி கிலோ மீட்டர். [ சூரியனுக்கும், நமது பூமிக்கும் இடையே உள்ள தொலைவு ]. இது ஏதோ திட்டமிட்ட கணக்கீடு போலவே (எனக்குத்) தோன்றுகிறது. அச்சூட்சுமத்தை விரைவில் அறிவோம்; வரும் பதிவுகளில்.


          'நமது பிரபஞ்சம் முழுவதுமே கணக்கீடுகளால் ஆனவை' என்பன சார்ந்த பதிவுகளில் இவற்றைப் பற்றி மேலும் அறிவோம். இவற்றை விட மேலானதோர் ஆச்சர்யம், ஜுராசிக் யுகத்தில் காத்திருக்கிறது. அதையும் காண்போம் அடுத்த வாரம்.

அதுவரை நன்றிகளுடன்,
                 - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:



துணைநின்ற நூல்கள்:

உயிரின் ரகசியம்.    --சுஜாதா.


Photo Courtesy : Google.


Tuesday 19 August 2014

5.) "நீர்" இன்றி அமையாது உலகு...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவில் கண்ட முன்னோட்டத்தின் தொடர்ச்சியை, இந்த வாரம் காண்போம். நாம் வாழும் இப்புவி, சூரியனிலிருந்து பிரிந்து, சூரியனைச் சுற்றிவர ஆரம்பித்து, காலப்போக்கில் குளிர ஆரம்பித்தது. உண்மையில் அப்போதைய பூமி, எரிமலைக் குழம்பைக் கடலாகக் கொண்டிருந்தது. (அப்போது சுனாமி வந்தால், அதன் விளைவை சற்று எண்ணிப்பாருங்கள்...!)


( அன்றைய பூமி )


         அப்போதைய பூமி, தற்போது இருப்பதுபோல் வளிமண்டலக் கவசம் ஏதுமின்றி இருந்ததால், விண்கல் (Asteroid), எரிகல் (Shooting Star), வால்நட்சத்திரம் (Comet) போன்றவைகள், இந்தியாவின் மீது படையெடுத்த அன்னியர்களைப் போல் சரமாரியாக மோதல் மழை பொழிந்தன.

         அதன் விளைவாக இன்றைய பூமியின் புறப்பரப்பில் மேடு பள்ளங்கள் தோன்றின. ( தற்போதைய கடல் பகுதிகள், அவற்றை நிரப்பி, முழுமையான உருண்டை வடிவக் காட்சியை ஏற்படுத்தின. இன்று கடலடியிலுள்ள பெரும்பாலான பள்ளங்களும், அகழிகளும் அவ்வாறு உருவானவைகளே! ) புவியின் புறப்பரப்பில் நீர் அதிகமாகக் காட்சியளித்தாலும், உண்மையில் நிலப்பரப்பே உலகில் அதிகம்.

         நம்மிடையே காலம்காலமாக நிலவிவரும், "பூமி குளிர்ந்து, பின் ஏற்பட்ட நீராவி, மழையாய்ப் பொழிந்து, பின்புதான் நமது புவியில் நீர் தோன்றியது" என்ற கருத்து தவறானது. நீராவி உருவாகவும் நீர் வேண்டும். அந்த அடிப்படை நீர், நமக்கு வால்நட்சத்திரங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றதே..!
  • அப்படி, நமக்கு அத்தியாவசியமான நீரை, நமக்கு வால்நட்சத்திரம் மூலம் Courier செய்தது யார்?
  • அவ்வாறு அனுப்பப்பட்ட நீர் எப்படி இவ்வளவு பத்திரமாக மற்ற கோள்களைப் போலல்லாமல் நமது பூமியில் மட்டும் தேக்கி, பாதுகாக்கப்பட்டது?
         முதலாவது கேள்விக்கான பதில் :
          அப்போது மோதிய வால்நட்சத்திரங்கள் மட்டுமல்ல, தற்போது நாம் வான்வெளியில் கண்டு ரசிக்கும் வால்நட்சத்திரங்கள் அனைத்தும், நமது சூரியக்குடும்பத்தின் எல்லை எனக் கருதப்படும், "குயிப்பர் பெல்ட்" (Kuiper Belt) எனும் ஒரு வெளிவட்டப்பதையில் இருந்தே வருகின்றன. அப்பாதையைச் சுற்றிலும் உள்ள மேகங்கள் போன்ற பனித்திரள்கள் "ஊர்ட் மேகங்கள்" (Oort Cloud) என்றழைக்கப்படுகின்றன. இங்குதான் வால்நட்சத்திரங்கள் உருவாகின்றன.



         "உண்மையில் அந்த நீர் நமக்காக அனுப்பி வைக்கப்பட்டனவா?" என்றால், 'தெரியாது' என்பதே எனது பதிலாக இருக்கும். காரணம், அக்கேள்விக்கும் பதில் கூறுவதற்கான தகுந்த சாத்தியக்கூறுகள் இருப்பதால்தான்..!

         இரண்டாவது கேள்விக்கான பதில் :
         "புவிஈர்ப்புவிசை". இது நம்மைச் சுற்றியுள்ள பிற கோள்களைக் காட்டிலும் நமது புவியில், நீரைத் தக்கவைக்கும் அளவிற்கு இருக்கிறது. பிற கோள்கள், சூரியனிலிருந்து சரியான தொலைவில் (அதாவது, நீரை நீராக வைத்திருக்கும் தொலைவில் இல்லாததால், அவ்வாறு பெறப்பட்ட நீரை, பனிக்கட்டியாகவோ, அல்லது நிரந்தர நீராவியாகவோ வைத்திருக்கின்றன. 

         ( "இன்னைக்கு இவன் 'சயின்ஸ் புக்'க கையில குடுத்துட்டான்" அப்டினு நீங்க புலம்புறது எனக்கு கேட்குது...! ஆனால், அடுத்த கட்டத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல இவ்வறிமுகம் அவசியமாகிறது.)

         உண்மையில் நமது பூமி மட்டும்தான் நீரைத்தேக்கும் சரியான தொலைவில் அமைந்துள்ளதா?

"இல்லை"

'அப்படியானால், நமது சக போட்டியாளன் யார்...?'

         அவன், நமக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள, பூமியின் இரட்டைச் சகோதரன் என்றழைக்கப்படும் "செவ்வாய்". இன்றும்கூட அங்கு நீர்நிலைகள் இருந்ததற்கும், ஏரிகள் உருவாகியிருந்ததற்க்குமான ஆதாரங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.


( செவ்வாயில் நீர் இருந்ததற்க்கான ஆதாரங்கள் )


         "எங்கே ஓடி மறைந்தன அவ்வளங்கள்...?!" என்கிற நமது நியாயமான கேள்விக்கு, அறிவியலின் தற்போதைய பதில், "நிச்சயமாகத் தெரியாது". ஆனால், அதைப்பற்றிய யூகங்கள் அதிகம் உலவுகின்றன.

        சரி. இப்போது நாம் பூமிக்கு வருவோம். உலகின் முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது, பூமி குளிர்ந்த பின்பே என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில் பூமி தீக்கோளமாய் தகிக்கும்போதே அதில் ஊர் உயிரினம் வாழ்ந்துவந்தது. அதன் பெயர் "ஆர்ச்சியா" (Archaea).


( ஆர்ச்சியா )

         இது ஏறத்தாழ முப்பது கோடி ஆண்டுகள் இப்பூமியில் தனது சந்ததியைப் பெருக்கியது; வெறும் இரும்பு மற்றும் நச்சுப்பொருட்களை உண்டு, உலகை பலவகை உயிரினங்கள் தோன்ற ஏற்ற இடமாக மாற்றியது. இதன் விசித்திர தன்மை என்னவென்றால், மனிதனை சாம்பலாக்கும் அளவிற்கு வெப்பம் இருந்தால் மட்டுமே, இவை உயிர் வாழும். இன்றும் கூட, எரிமலைக் குழம்புகளில் இவை வாசம் செய்கின்றன.

[ பைபிளிலும், குரானிலும் அவர்களது மத நம்பிக்கையின்படி, மனிதனைப் படைக்கும் முன்னரே, கடவுள் "சாத்தானை"ப் படைத்தார். நரகத்தின் ஆட்சியாளனாக வர்ணிக்கப்படும் "சாத்தான்" அல்லது "சைத்தான்", நெருப்பின் சூழ்நிலையில் வாழ்வதுபோல "Tom and Jerry" உட்பட அனைத்து வித ஊடகங்களும் காட்சிப்படுத்துகின்றன; கையில் இரும்பாலான சூலத்தோடு. ஆனால், பெரும்பாலும் இவ்வுருவகங்கள், நரகத்தில் தண்டனை வழங்க நியமிக்கப்பட்ட,  ஒரு எம-கிங்கரர்களைப் போன்றும் காட்சிப்படுத்தப் படுகின்றன.


( சாத்தானின் கற்பனை உருவம் )

குரானில், 'ஜின்'கள் நெருப்பினால் படைக்கப்பட்டவை என்ற ஒரு நம்பிக்கை உண்டு. (ஆனால், இந்த ஜின்கள் பூதாகரமானவை, என்றும் நம்பப்படுகிறது.)

  • மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்டது,
  • நெருப்பில் வாழும் சூழ்நிலை,
  • கையில் இரும்பு, ( அதுவும் 'குத்தி' உண்ணக்கூடிய "Fork"-ஐ நினைவுபடுத்துவது போல )
  • இன்றும் மனிதர்கள் வாழும் சூழ்நிலையில், (அதாவது இன்னும் பூமியில்) வாழ்கின்றது!

போன்ற விஷயங்கள், ஆர்ச்சியாவையும், சாத்தானையும் ஏதோ ஒருவகையில் குறிப்பது போலவே தோன்றினாலும், 'நிச்சயமாக சாத்தானின் உருவகம் இந்நுண்ணுயிரியைத்தான் குறிக்கிறது' என்று நான் சொல்லவில்லை. ]

          முப்பது கோடி ஆண்டுகளில் பூமி குளிர்ந்ததால், அச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆர்ச்சியா, சயனோபாக்டீரியாவாக (Cyano Bacteria) உருவெடுத்தது. உலகின் முதல் பரிணாம வளர்ச்சி இங்கிருந்து துவங்குகிறது. இவைதான், கரியமில வாயுவை (Carbon-di Oxide [கார்பன்-டை ஆக்சைடு] ) கிரகித்து, பிராணவாயுவை (ஆக்சிஜன் [Oxygen]) உற்பத்தி செய்த பிரம்மா..!
(ஐயா சயனோபாக்டீரியா...உண்மையிலேயே "நீர்" இன்றி அமைந்திருக்காது இவ்வுலகு...!)


(சயனோபாக்டீரியா)

          இதற்குமேலும், இந்நுண்ணுயிர்களைப் பற்றி நுணுகி ஆராய்ந்தால், நாம் அடுத்த பதிவிற்குச் செல்வதற்குள், மனித இனம் மற்றுமொருமுறை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். ஆகவே, நாம் நேரடியாக அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்.
  • நமது பூமியிலேயே இத்தகைய பரிணாமம் நிகழ்ந்திருந்தால், நம் பூமியின் இரட்டைச் சகோதரனும், நமக்கு முன்னரே குளிர ஆரம்பித்தவனுமான, செவ்வாயின் நிலை என்ன?
  • ஒருவேளை அந்தப் பரிணாமம் அங்கேயும் நிகழ்ந்திருந்தால், அவ்வுயிரினங்கள் தற்போது எங்கே?
  • நமது பூமியில் அடுத்து எவ்வகை உயிரினங்கள் தோன்றின?

காத்திருங்கள், கேள்விகளுடன்..!

அடுத்த வாரம் அழைத்துச்செல்கிறேன் Jurassic யுகத்திற்கு, Steven Spielberg-ன் ஒத்துழைப்புடன்...!

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க :



துணைநின்ற நூல்கள் :

  • உயிரின் ரகசியம்.  --சுஜாதா.
  • விஞ்ஞானம் : நேற்று-இன்று-நாளை.   --தமிழ் உத்தம்சிங்.


Photo Courtesy : Google


சிறப்பு நன்றி: 
இன்று எனது மடிக்கணினி பழுதானபோது, தனது மடிக்கணினியை பயன்படுத்த அனுமதியளித்த K.காமராஜ்-க்கு.

Tuesday 12 August 2014

4.) பிரணவம்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          அது என்ன மாயமோ தெரியவில்லை! எப்போதெல்லாம் நான் வேற்றுகிரகவாசிகளைப் பற்றியோ, அல்லது கடவுளைப் பற்றியோ பதிவிடலாம் என எண்ணுகிறேனோ, அப்போதெல்லாம் அப்பதிவை தள்ளிப்போடும் அளவிற்கு சூழ்நிலையும், அதற்கு முன்னர் கூறப்படவேண்டிய சில விஷயங்களும் தற்செயலாக அமைகின்றன. ( இதற்கு நிச்சயமாக கடவுளோ, வேற்றுகிரகவாசிகளோ காரணமாக இருக்கக்கூடும் என எனக்குத் தோன்றவில்லை! அவ்வாறு நான் கூறவும் இல்லை!!! )

           நான் கடந்த பதிவில் எனது கோணத்தில், 'ஸ்ரீ சக்கரத்தின் மறைமுக நோக்கம் இதுவாக இருக்கலாம்' என பதிவிட்டிருந்தேன். அப்பதிவிற்க்குப்பின் எனது நண்பர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு, "அது நம்பும்படி இல்லையே..!" என தெரிவித்தனர். அது முழுக்க முழுக்க எனது யூகமே தவிர, 'அதற்கு ஆதாரம் உள்ளது' என நான் தெரிவிக்கவில்லை.

          ஆனாலும் எனக்கு மனதில் தோன்றும் சில விவரிக்க இயலாத யூகங்களின் மீது எனக்கு சிறிது நம்பிக்கை உண்டு. நான் செல்லும் பாதை சரியாக இருக்கும் என்கிற தன்னம்பிக்கையும் உண்டு. இருப்பினும், எனது பதிவிற்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே, நான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த சில தகவல்களைத் துழாவினேன்.

          அப்போது எனக்கு கிடைத்த ஒரு தகவல், என்னை உங்கள் முன் ஒரு குற்றவாளியாக நிறுத்தக்கூடிய, தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து விடுவிக்க வழி செய்தது. அதற்கு எனது முந்தைய பதிவில் நான் கூறிய ஒரு தகவலும் உதவியது என்பதும் உண்மை..!

          அது TONOSCOPE...! ( 'ஆமா... இவனுக்கு வேற வேலை இல்ல...எதாவது கேட்டா, புரியாத ஒரு வார்த்தைய சொல்லி குழப்பி விட்டுடுறது '-னு நீங்க திட்டுறது எனக்கு கேட்குது..!)


          ஆனால், நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை 'நிச்சயம் அப்படி ஒன்று இருக்க முடியாது' என வாதிடுவதும், தவறாக முடிவெடுப்பதும் முட்டாள்தனமன்றி வேறில்லை. சரி. "Tonoscope என்றால் என்ன?" என்று முதலில் காண்போம். 

          சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஒலி அதிர்வியலின் (Cymatics) தந்தை என்றழைக்கப்படும், Dr.Hans Jenny என்பவர் உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு முறை அல்லது கருவிதான், Tonoscope என்றழைக்கப்படுகிறது. இதை, ஒரு பொருளுக்கும், ஆற்றலுக்குமான தொடர்பை விளக்குவதற்காக அவர் உருவாக்கினார். இதில், ஒரு வட்ட வடிவ, பலூனின் தடிமனையொத்த மெல்லிய சவ்வுபடலம் ஒன்றை ஒரு குழாய் போன்ற அமைப்பில் இணைத்து, அதன் மேல் உப்பு அல்லது மணல் போன்ற துகள்களைப் பரப்பி, அதில் ஒலியைப் பரப்புவதன் மூலம் ஏற்படும் அதிர்வின் மூலம், ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவத்தைக் கொடுக்கலாம் என நம்பினார்; சாதித்தும் காட்டினார். 
          

( ஒரு எளிமையான Tonoscope செய்வதற்கான வழிமுறைகள் )
[இதைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்]


( Tonoscope-ல் உருவாக்கப்பட்ட வேறு பல ஒலிகளின் அதிர்வலைகள் )


          இவ்விளைவின்மூலம் 'ஒரு பொருளின் வடிவத்தையும், தன்மையையும் அதைச் சுற்றியுள்ள அதிர்வலைகளே நிர்ணயிக்கின்றன', என்பதை நிரூபித்தார். ( இதற்காகத்தான் 'நல்லவற்றையே நினையுங்கள் ' என முன்னோர்களும், "நீ எதுவாக ஆக நினைக்கிறயோ, அதுவாகவே ஆகிறாய் " என விவேகானந்தரும் கூறினார்களோ என்னவோ..! )

         [ மேலும், நமது வேதங்களில் கூறப்பட்டுள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கும் இத்தகு ஆற்றல்கள் இருக்கலாம்! ஆகவேதான், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களும் கூட ( மொழி பேதத்தை உருவாக்கி அரசியல் செய்யாமல்! ), கோவில்களில் அர்ச்சனையை சம்ஸ்கிருதத்தில் செய்வதற்கு அனுமதித்தனர் போலும். மேலும் இதுபற்றிய விவாதங்களையும், விவரங்களையும் இனிவரும் தொடர்களில் காண்போம்.]

         சரி. 'இதற்கும், வாசகர்களால் என்னிடம் கேட்கப்பட்ட ஆதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?' என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது. 

         Dr.Hans Jenny-ன் கூற்றின்படி, " 'ஓம்' என்ற ஒலியானது, ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கியது"!
         எனது கூற்றின்படி, "ஸ்ரீ சக்கரமானது, பெருவெடிப்புக் கோட்பாட்டைக் (Bigbang Theory) குறிக்க வாய்ப்புள்ளது".
         ஸ்கந்த புராணத்தின்படி, "இப்பிரபஞ்சமானது 'ஓம்' என்ற பிரணவ ஒலியுடன் உருவானது". இதைப் பெருவெடிப்புக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டால், எனது கூற்று சரியெனக் கருதும் அளவிற்கு வலுவாகிறது. ஆனால், அதுதான் நிதர்சனமான உண்மை என நான் கூறவில்லை. எமது இப்பக்கத்தின் நோக்கமான, "இப்படியும் இருக்கலாம்" என்ற விளிம்பின் ஓரத்திலேயே பயணிக்க விரும்புகிறேன்.

          இதில் ஆச்சரியம் என்னவென்றால், "Dr.Hans Jenny இருபதாம் நூற்றாண்டில் கண்டறிந்து உலகிற்கு உணர்த்திய உண்மையை, நம் முன்னோர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வாறு கண்டறிந்தனர்?" என்பதே..!

         { எனது முகநூல் (Facebook) நண்பர் திரு."Dhrona Charya" அவர்கள், இந்த ஸ்ரீ சக்கரம், Fibonacci தொடர்களைக் குறிக்க வாய்ப்பிருப்பதாக, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.}

         மேலும் விவரங்களறிய, பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடவும்.

         இதேபோல, "ஓம்" என்ற மந்திரத்தை ( அல்லது வார்த்தையை), 'பிரணவம்' என்றும் குறிப்பிடுவர். இதன் வார்த்தையை ஒத்த சில சொற்கள் பின்வருமாறு :

பிராணன் - மூச்சு, உயிர்.
பிராணி - உயிரி (அல்லது) உயிரினம்.
பிராணவாயு - மூச்சுக்கற்று, உயிர் வாழத் தேவையான வாயு (Oxygen).

         இவை ஏனோ உயிர்களை அல்லது அதன் உருவாக்கத்தைக் குறிப்பதைப் போல தெரிகிறது. இவற்றில் என்னென்ன மர்மங்கள் மறைந்துள்ளனவோ என்றும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால், நிச்சயம் நம் அறிவுக்கண்ணில் அகப்படும், விரைவில்...!

         எனது நண்பர்கள் என்னிடம் முன்வைத்த இன்னொரு வேண்டுகோள் அல்லது உரிமையான கோபம் என்னவென்றால், "கன்னித்தீவு படக்கதை மாதிரி 'டக்'குனு  முடிச்சிடுற..!!!" என்பது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், என் எழுத்தின்பால் கொண்டுள்ள அபிமானத்திற்கும் எவ்வாறு கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு புதன்கிழமையும் உங்களை ஆச்சர்யப்படுத்த என்னை ஆயத்தப்படுத்திக்கொள்வேன் என உறுதியாகத் தெரிவித்துகொள்கிறேன்.

        உங்களுக்காக, அடுத்த வார பதிவின் ஒரு சிறு Trailer இதோ..!

        நான் சென்ற பதிவில் கொடுத்த வாக்கிற்கு ஏற்ப, பிரபஞ்சம் தோன்றிய பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளை இனி காண்போம்.

        பிரபஞ்ச தோற்றத்தின்போது உருவான கோள்களும், நட்சத்திரங்களும், மேகக்கூட்டங்களும் உச்சபட்ச வெப்பநிலையைக் கொண்டிருந்தன. அதன்பின் அவற்றிலிருந்து பிரிந்த சிறு பகுதிகள், ஈர்ப்பு விசையினால் ஆட்கொள்ளப்பட்டு, பின் அது எதிலிருந்து பிரிந்ததோ, அப்பெரும்பகுதியை சுற்றி வரத் தொடங்கின. அவ்வாறு பிரிந்த ஒரு பகுதியான நமது சூரியக்குடும்பம் (Solar System), பால்வெளி அண்டத்தின் (Milkyway Galaxy) மையப் பகுதியையும்; நமது கிரகங்கள், சூரியனையும் சுற்றி வர ஆரம்பித்தன. கால ஓட்டத்தில், வெப்பம் குறைந்து குளிர ஆரம்பித்தது.


          அதன்பின் நடந்த சுவாரஸ்யங்கள் என்ன? அறிய காத்திருங்கள், அடுத்த புதன்கிழமை வரை...!

அதுவரை நன்றிகளுடன்,
                        - அயலான்.



Photo Courtesy : Google.

Tuesday 5 August 2014

3.) பிரபஞ்ச வரலாறு...!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          'நாளை தேர்வு' என்றால் கூட பயப்படாமல், நிம்மதியோடு தூங்கப் போகும், லட்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன். இருப்பினும், முதன்முதலில், பத்தாம் வகுப்பு தேர்வின் முதல் நாள் இரவில் உள்ளூர ஒருவித பயம் போன்ற உணர்வு. 'நாளை நல்லபடியாக தேர்வை முடிப்போமா?' என்கிற கவலை, பதட்டம். இது போன்ற ஒரு உணர்வை ஒவ்வொரு நாள் செவ்வாய்க்கிழமை இரவிலும் எனக்கு வரச் செய்த உங்கள் ஆதரவிற்கு, நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

          நாம், கடந்த பதிவுகளில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்க வாய்ப்புடைய கோட்பாடுகளைப் பார்த்தோம். இனி, கிரகங்கள் தோன்றிய விதத்தையும், அவற்றில் உயிரினங்கள் தோன்றியதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்வோம்.

         அதற்கு முன், இந்து மத நம்பிக்கையில் காணப்படும் 'ஸ்ரீ சக்கரம்' பற்றி எனது கண்ணோட்டத்தை, இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


                                                                     (ஸ்ரீ சக்கரம்)

         இதைப் பார்க்கும்  போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோன்றும், இது ஒரு ஓவியம் என்பதால்.

        எனக்கு இது 'பெருவெடிப்புக் கொள்கை'(BIG BANG THEORY)யைக் குறிப்பதைப் போலத் தோன்றியது. இதிலுள்ள ஒவ்வொரு முக்கோணமும் ஒரு திசையைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால், அது பெருவெடிப்பின் போது அணுத்துகள்கள் சிதறிய திசைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும், அதை சுற்றிலும் காணப்படும் தாமரை இதழ்கள் போன்ற அமைப்பு, அப்போது வெளிப்பட்ட வெப்பத்தையும், அதைச் சுற்றிலும் உள்ள வட்டங்கள், அது சீராக அனைத்து திசையிலும், ஒரே வேகத்தில் பரவுவதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும், அதன் நடுவில் அமைந்த 'தலைகீழ் முக்கோணம்' மற்றும் அதன் மையத்தில் அமைந்த ஒற்றைப் புள்ளி போன்றவை எனது இக்கருத்தை மேலும் பலப்படுத்தின.

         அதைக் காணும் முன், பிரபல அமெரிக்க எழுத்தாளர் Dan Brown அவரது கதைக்காக உருவாக்கிய  Robert Langdon எனும் ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.

         அவரது சர்ச்சைக்குரிய கதைகளான, "The Da Vinci Code" மற்றும் "Angels and Demons" போன்றவை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பிரதான கதாப்பாத்திரமான "Robert Langdon", அவரைச் சுற்றிலும் காணக் கிடைக்கும் குறியீடுகளைக் கொண்டு, அடுத்த துப்புகளைக் கண்டறிவது போல அதன் கதை செல்லும். நிஜ உலகிலும் அவ்வாறான உண்மைகள் கலந்துள்ளன (!) அவற்றைப் பற்றி விரிவாக இனி வரும் 'குறியீடுகள்' பற்றிய பதிவுகளில் காணலாம்.


(Dan Brown)



        இவற்றை நான் இங்கு குறிப்பிடக் காரணம், "The Da Vinci Code"-ல் சொல்லப் படும் ஒரு விஷயம். அது, 'தலைகீழ் முக்கோணம்' பெண் தன்மையைக் குறிக்கும் என்பதாகும். மிகச்சரியாக, ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் தலைகீழ் முக்கோணம் அமைந்துள்ளது. அதோடு ஒரு மையப் புள்ளியும். 'இப்பிரபஞ்சம் உருவாவதற்கு முன் அது ஒரு புள்ளி போன்ற பொருளாக இருந்தது ' என்று நாம் நமது முந்தைய பதிவில் கண்டோம்!

        மேலும், 'படைக்கப்படுதல்' என்ற ஒரு விஷயம், பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒன்றாக இந்து மதத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என அனைவரும் 'சக்தி'யால் படைக்கப்பட்டவர்களே, என்பது சக்தி வழிபாட்டைப் பின்பற்றுவோரின் நம்பிக்கை.
        

        இந்த ஸ்ரீ சக்கரத்தை நாம் பெரும்பாலும், ஒரு அம்மனின் பாதத்தின் அருகில் பிரதிஷ்டை செய்திருப்பதைக் காணலாம். நம் முன்னோர்கள், விஞ்ஞானத்தை ஆன்மீகத்தின் வாயிலாக தெரிவிக்க முயன்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.


( 'லலிதாம்பிகை'யின் காலடியில் 'ஸ்ரீ சக்கரம்' )

       இப்போது, உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கான சில வாய்ப்புகளைக் காண்போம்.

  1. பூமி குளிர்ந்த பின்பு ஏற்பட்ட இரசாயன மாற்றங்களினால் நிகழ்ந்திருக்கலாம்.
  2. கடவுள் படைத்திருக்கலாம்.
  3. வேற்றுக்கிரகவாசிகள் படைத்திருக்கலாம்.

        இம்மூன்றைத் தவிர வேறு சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதுவரையில் தெரியவில்லை. இவற்றை விரிவாக அடுத்த வாரம் அலசுவோம். நிச்சயம் வெளுக்கப் பட வேண்டிய சாயங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அதுவரை காத்திருங்கள், எதிர்பார்ப்புகளுடன்.

அதுவரை நன்றிகளுடன்,
                - அயலான்.


Photo Courtesy : Google.