Tuesday 29 July 2014

2.) நாம் தோன்றிய வரலாறு...!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!
     கடந்த ஒருவார காலம் காத்திருந்தமைக்கும், எனது பதிவிற்குத் தந்த ஆதரவிற்கும், எனது பதிவுகளின் மூலமும், எழுத்துக்களின் மூலமும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
     ஒரு மனிதனுக்குத் தனது பெற்றோரின் பெயர் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியமான ஒன்று, நாம் கடந்து வந்த வரலாறு...!
     அதிலும் மிக முக்கியமாக, பன்னெடுங்காலமாக மனிதகுலமே விவாதித்துக்கொண்டிருக்கும் சர்ச்சையான விஷயம், மனித இனம் மட்டுமல்லாது, பிற உயிரினங்களும் இப்புவியில் தோன்றிய வரலாறு.
     முதலில் நாம் உயிரினங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன், இவ்வுயிரினங்களை உள்ளடக்கிய புவி தோன்றிய வரலாறு, அப்புவி சார்ந்திருக்கும் சூரியக்குடும்பத்தின் வரலாறு, சூரியக்குடும்பம் வலம் வரும் பால்வெளி அண்டத்தின் வரலாறு, பால்வெளி மண்டலத்தை உள்ளடக்கிய நம் பிரபஞ்சத்தின் வரலாறு, என நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய, திருப்பிப் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பக்கங்கள் ஏராளம். அத்தகைய பக்கங்களில் ஒளி பாய்ச்சும் கடமையை, ‘அயலான்’ கையில் எடுத்துள்ளான்.

     மூலமுதலான இப்பிரபஞ்சம் தோன்றிய வரலாற்றை முதலில் காண்போம். இதுவரையில் அறிவியலின் பார்வையில் இப்பிரபஞ்சம் மூன்று வழிகளில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.

முதலாவது கோட்பாடு : பெருவெடிப்புக் கோட்பாடு. (BIG BANG THEORY)


     காலமும் கூட தோன்றாத காலத்தில் அடர்த்தி நிறைந்த ஓர் பொருள் வெடித்ததன் மூலம் ஏற்ப்பட்ட, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் சங்கிலித் தொடர் செயல்முறையின் விளைவாக, அணுக்களும், வாயுக்களும், பின் திடப்பொருட்களும் உருவானதாக சொல்லப்படும் கோட்பாடே, ‘பெருவெடிப்பு’ கோட்பாடாகும். இதன் பின்னரே, சூரியனும், அதைச் சுற்றியுள்ள கோள்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது கோட்பாடு : நிலைப்புக் கோட்பாடு (STEADY-STATE THEORY)


      இந்தப் பிரபஞ்சம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இதற்கு முன்னரும் இருந்தது; இனிமேலும் இப்படியேதான் இருக்கும். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது. இதுவே நிலைப்புக் கோட்பாடு.

மூன்றாவது கோட்பாடு : துடிப்புக் கொள்கை (PULSE THEORY)

      இதன்படி, விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம், ஒரு கட்டத்திற்குப் பின் சுருங்கத் தொடங்கும். அது ஒரு எல்லைவரை சுருங்கிய பின் மீண்டும் விரியத் தொடங்கும். இதுவரையில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, பிரபஞ்சம் விரிவடைவதாக அறியப்பட்டதே தவிர, சுருங்குவதற்க்கான ஆதாரங்கள் இன்னும் கிட்டவில்லை. (ஒருவேளை, எதிர்காலத்தில் நிகழ்ந்தாலும் நிகழலாம்!)

இம்மூன்றில் முதலாவதாகக் கூறப்பட்ட, பெருவெடிப்புக் கொள்கை அதிக சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதால், அதுவே இப்பிரபஞ்ச தோற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரையில் நம்பப்பட்டுவருகிறது.

சரி, உருவான பிரபஞ்சத்தில் உயிர்கள் எப்படி உருவானது?
இது, ஆராய்ச்சியளர்களுக்கு மேலும் பைத்தியம் பிடிக்கக் காரணமான கேள்வி..!

வழக்கம்போலவே, ஒவ்வொரு கருத்துக்களுக்கும் எதிர்க்கருத்துக்கள் கூறும் சாரார், அன்று முதல் இன்று வரை, உலகெங்கிலும் உண்டு.
விஞ்ஞானத்தின் ஒவ்வொரு புதிய பரிணாமத்தையும், அது பரிணமிக்கும்போதே முட்டுக்கட்டையிட்ட பல கூட்டங்கள், விஞ்ஞானிகளை சூனியக்காரர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும், பைத்தியக்காரர்கள் என்றும் முத்திரையிட்டு, அவர்களைத் துன்புறுத்தியும், சித்ரவதை செய்தும், கொலை செய்தும்(!) வந்துள்ளதற்கான ஆதாரங்கள், அவ்விஞ்ஞானிகளின் ரத்தத்தில் தோய்க்கப்பட்டு காய்ந்து போன வரலாற்றுப் பக்கங்களாய் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில், அனைத்து மதங்களிலும் மறைமுகமாக சொல்லப் பட்டுள்ள அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி விஷயங்களை, ஆராய்ச்சியாளர்கள் வலுப்படுத்தவே முயன்றுள்ளனர். ஆனால், அவ்வறிவியல் உண்மைகள் பொதிந்த விஷயங்களை மதச் சாயம் கொண்டு மறைத்து, மேற்கொண்டு ஆராய விடாமல் செய்தனர்.

நான் இதில் இனி பதிவிடும் பதிவுகள், நான் கடவுள் நம்பிக்கை ‘உள்ளவனா?’, ‘அற்றவனா?’ என்ற சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடும்.
உண்மையில், மேற்கூறிய இரண்டு பிரிவுகளில், ‘ஒன்றில்’ நான் இல்லை. ‘இன்னொன்றில்’ நான் இருக்க விரும்பவில்லை.
இதில் நான் எதை ‘ஒன்று’, எதை ‘இன்னொன்று’ எனக் கூறினேன் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

மேலே பிரபஞ்சம் உருவான வரலாற்றை நம் நாட்டின் ‘திருமூலர்’, “நாமெல்லாம் மேகக்கூட்டத்திலிருந்து பிறந்தவர்கள்” என்று பாடியுள்ளார்.
உண்மையில் கோள்கள் உருவாவதற்கு முந்தைய நிலையான, தூசுகள் நிரம்பிய மேகக்கூட்டம் போன்ற(!) நிலைக்கு, “நெபுலா” என்று பெயர்.
எப்படிக்கூறினார் இத்தனை தெளிவாக...?! (அதுவும் TELESCOPE இல்லாத அந்தக் காலத்தில்..! இனி வரும் பதிவுகளில் நான் குறிப்பிடப்போகும், நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை ஒப்பிடும்போது, 'இது ஒன்றுமே இல்லை' என்றுகூட சொல்லலாம்..! [இங்கு நான் 'முன்னோர்' எனக் குறிப்பிட்டது, ஒட்டுமொத்த மனித இனத்தையே ஆகும்])



(திருமூலர்)



                (இது 'CRAB NEBULAE' என அழைக்கப்படுகிறது)


                (இது 'HELIX NEBULAE' என அழைக்கப்படுகிறது)

மேலும், “ஓம்” எனும் பிரணவ ஒலியுடன், இப்பிரபஞ்சம் தோன்றியது என ‘ஸ்கந்த புராணம்’ கூறுகிறது.
இந்த “ஓம்” ஒலியை ஒத்த “ஆமென்” வார்த்தை “கிறிஸ்தவத்திலும்”, “ஆமீன்” என்கிற வார்த்தை “இஸ்லாத்திலும்” இருப்பதைக் காணலாம்.

கிறிஸ்தவ மத நம்பிக்கையின்படி, கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்து, ஏழாம் நாள் ஓய்வேடுத்தாகக் கூறுவர். இந்த ஆறு நாட்களுக்கும் சேர்த்து, இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் கூறிய நான், இன்றிலிருந்து ஏழாம் நாளில், உயிரினங்களின் தோற்றம் பற்றிக் கூற உள்ளேன்.


  • உண்மையில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின?
  • மனிதனைப் படைத்தது யார்?
  • இப்பிரபஞ்சத்தில் மனித இனம் மட்டும்தான் அறிவுலக ஆட்சியாளனாக உள்ளதா?

போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுடன் காத்திருங்கள், அடுத்த புதன்கிழமை வரை...!

அதுவரை நன்றிகளுடன்,
              -அயலான்.

No comments:

Post a Comment